வந்தவாசி. ஜன.31. எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராயம் சார்பில் ஆண்டுதோறும் தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அவ்வகையில் 2017-ஆம் ஆண்டிற்கான ‘புதுமைப்பித்தன் இலக்கிய விருது’க்கு வந்தவாசி அகநி பதிப்பகம் வெளியிட்டுள்ள டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப., எழுதிய ‘வடகரை - ஒரு வம்சத்தின் வரலாறு’ நாவல் தேர்வாகி, விருதும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
இவ்விழா எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்திலுள்ள பேரா. தி.பொ.கணேசன் அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிறுவனரும் வேந்தருமான பாரிவேந்தர் தலைமையேற்றார்.
விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.என்.பாஷா, ‘வடகரை - ஒரு வம்சத்தின் வரலாறு’ நாவலை எழுதிய டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப.,-வுக்கு பரிசுத் தொகை ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை வழங்கி கெளரவித்தார். பாராட்டுக் கேடயத்தை
அமெரிக்க ஹார்வர்டு தமிழ் இருக்கை ஆட்சிக்குழு இயக்குநர் ஆறுமுகம் முருகையா வழங்கினார்.
நூலை வெளியிட்ட அகநி வெளியீட்டிற்கான ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையையும், பாராட்டுக் கேடயத்தையும் அகநி பதிப்பகத்தைச் சேர்ந்த மு.வெ.கவின்மொழி பெற்றுக் கொண்டார்.
|