|
||||||||
முப்பெரும் பாடல்கள் - பாஞ்சாலி சபதம் - முதற்பாகம் பகுதி - 3 |
||||||||
22. தருமபுத்திரன் தீர்மானம்
தருமனும் இவ்வ ளவில்-உளத்
தளர்ச்சியை நீக்கியொர் உறுதி கொண்டே
பருமங்கொள் குரலின னாய்-மொழி
பதைத்திட லின்றிஇங் கிவைஉரைப் பான்;
மருமங்கள் எவைசெயி னும்-மதி
மருண்டவர் விருந்தறஞ் சிதைத்திடி னும்,
கருமமொன் றேஉள தாம்-நங்கள்
கடன்;அதை நெறிப்பட புரிந்திடு வோம். 130
தந்தையும் வரப்பணித் தான்;-சிறு
தந்தையும் தூதுவந் ததைஉரைத் தான்;
சிந்தை யொன்றினி இல்லை,-எது
சேரினும் நலமெனத் தெளிந்துவிட் டேன்;
முந்தையச் சிலைரா மன்-செய்த
முடிவினை நம்மவர் மறப்பது வோ?
நொந்தது செயமாட் டோம்;-பழ
நூலினுக் கிணங்கிய நெறிசெல் வோம். 131
ஐம்பெருங் குரவோர் தாம்;-தரும்
ஆணையைக் கடப்பதும் அறநெறி யோ?
வெம்பொரு மத யானை -பரி
வியன்தேர் ஆளுடன் இருதினத் தில்
பைம்பொழில் அத்தி நகர்-செல்லும்
பயணத்திற் குரியன புரிந்திடு வாய்,
மொய்ம்புடை விறல் வீமா!-என
மொழிந்தனன் அறநெறி முழுதுணர்ந் தான். 132
23. வீமனுடைய வீரப்பேச்சு
வீமனும் திகைத்துவிட் டான்;-உள
விசயனை நோக்கிஇங் கிதுசொலு வான்;
மாமனும் மருகனு மா-நமை
மழிததிடக் கருதிஇவ் வழிதொடர்ந் தார்;
தாமதஞ் செய்வோ மோ?-செலத்
தகுந்தகு மெனஇடி யுறநகைத் தான்;
கோமகன் உரைப்படியே-படை
கொண்னடுசெல் வோமொரு தடையிலை காண்! 133
நெடுநாட் பகைகண் டாய்!-இந்த
நினைவினில் யான்கழித் தனபல நாள்;
கெடுநாள் வருமள வும்-ஒரு
கிருமியை அழிப்பவர் உலகிறுண்டோ,
படுநாட் குறி அன் றோ-இந்தப்
பாதகம் நினைப்பவர் நினைத்தது தான்
விடுநாண் கோத்திட டா!தம்பி!
வில்லினுக் கிரைமிக விளையு தடா! 134
போரிடச் செல்வ மடா!-மகன்
புலைமையும் தந்தையின் புலமைக ளும்
யாரிடம் அவிழ்க்கின் றார்?-இதை
எத்தனை நாள்வரை பொறுத்திருப் போம்?
பாரிடத் திவரொடு நாம்-எனப்
பகுதியிவ் விரண்டிற்கும் காலமொன் றில்
நேரிட வாழ்வுண் டோ?-இரு
நெருப்பினுக் கிடையினில் ஒருவிற கோ? 135
24. தருமபுத்திரன் முடிவுரை
வேறு
வீமன் உரைத்தது போலவே-உளம்
வெம்பி நெடுவில் விசயனும்-அங்கு
காமனும் சாமனும் ஒப்பவே-நின்ற
காளை இளைஞர் இருவரும்-செய்ய
தாமரைக் கண்ணன் யுதிட்டிரன்- சொல்லைத்
தட்டிப் பணிவொடு பேசினார்;தவ
நேமந் தவறலும் உண்டுகாண்,-நரர்
நெஙசம் கொதித்திடு போழ்திலே. 136
அன்பும் பணிவும் உருகொண்டார்-அணு
வாயினும் தன்சொல் வழாதவர்-அங்கு
வுன்பு மெமாழிசொல்லக் கேட்டனன்;-அற
மன்னவன் புன்னகை பூத்தனன்;-அட!
முன்பு சுயோதனன் செய்ததும்-இன்று
மண்டிருக் குங்கொடுங்கோல மும்-இதன்
பின்பு விளைவதும் தேர்ந்துளேன்;-எனைப்
பித்தனென் றெண்ணி உரைத்திடீர்! 137
கைப்பிடி கொண்டு சுழற்றுவோன்-தன்
கணக்கிற் சுழன் றிடும் சக்கரம்-அது
தப்பி மிகையுங் குறையுமாச்-சுற்றும்
தன்மை அதற்குள தாகுமோ?-இதை
ஒப்பிட லாகும் புவியின்மேல்-என்றும்
உள்ள உயிர்களின் வாழ்விற்கே,-ஒரு
செப்பிடு வித்தையைப் போலவே-புவிச்
செய்திகள் தோன்றிடு மாயினும், 138
இங்கிவை யாவுந் தவறிலா-விதி
ஏற்று நடக்குஞ் செயல்களாம்;-முடி
வெங்கணு மின்றி எவற்றினும்-என்றும்
ஏறி இடையின்றிச் செல்வதாம்-ஒரு
சங்கிலி யோக்கும் விதி கண்டீர்;-வெறுஞ்
சாத்திர மன்றிது சத்தியம்;-நின்று
மங்கியொர் நாளில் அழிவதாம்-நங்கள்
வாழ்க்கை இதனைக் கடந்ததோ? 139
தோன்றி அழிவது வாழ்க்கைதான்;-இங்குத்
துன்பத்தொ டின்பம் வெறுமையாம்-இவை
மூன்றில் எதுவரு மாயினும்.-களி,
மூழ்கி நடத்தல் முறைகண்டீர்!-நெஞ்சில்
ஊன்றிய கொள்கை தழைப்பரோ,-துன்பம்
உற்றிடு மென்பதொர் அச்சத்தால்?-விதி
போன்று நடக்கும் உலகென்றே-கடன்
போற்றி ஒழுகுவர் சான்றவர். 140
சேற்றில் உழலும் புழுவிற்கும்,-புவிச்
செல்வ முடைய அரசர்க்கும்.-பிச்சை
ஏற்றுடல் காத்திடும் ஏழைக்கும்,-உயிர்
எத்தனை உண்டவை யாவிற்கும்,-நித்தம்
ஆற்றுதற் குள்ள கடமைதான்-முன்வந்து
அவ்வக் கணந்தொறும் நிற்குமால்-அது
தோற்றும் பொழுதிற் புரிகுவார்-பல
சூழந்து கடமை அழிப்பரோ? 141
யாவருக் கும்பொது வாயினு-சிறப்
பென்பர் அரசர் குலத்திற்கே-உயர்
தேவரை யொப்ப முன்னோர் தமைத்-தங்கள்
சிந்தையிற் கொண்டு பணிகுதல்;-தந்தை
ஏவலை மைந்தர் புரிவதற்கே-வில்
இராமன் கதையையும் காட்டினேன்;-புவிக்
காவலர் தம்மிற் சிறந்தநீர்-இன்று
கர்மம் பிழைத்திடு வீர்கொலோ? 142
25. நால்வரும் சம்மதித்தல்
வேறு
என்றினைய நீதிபல தரும ராசன்
எடுத்துரைப்ப,இளைஞர்களுந் தங்கை கூப்பிக்
குன்றினிலே ஏற்றிவைத்த விளக்கைப் போலக்
குவலயத்திற் கறங்காட்டத் தோன்றி னாய் நீ!
வென் றிபெருந் திருவடியாய்!நினது சொல்லை
மீறிஒரு செயலுண்டோ? ஆண்டான் ஆணை
யன்றி அடி யார்தமக்குக் கடன்வே றுண்டோ?
ஐயனே! பாண்டவர்தம் ஆவி நீயே! 143
துன்பமுறும் எமக்கென்றே எண்ணி நின்வாய்ச்
சொல்லைமறுத் துரைத்தோமோ? நின்பா லுள்ள
அன்புமிகை யாலன்றே திருவு ளத்தின்
ஆக்கினையை எதிர்த்துரைத்தோம் அறிவில்லாமல்
மன்பதையின் உளச்செயல்கள் தெளியக் காணும்
மன்னவனே!மற்றதுநீ அறியா தொன்றோ?
வன்புமொழி பொறுத்தருள்வாய்,வாழி!நின்சொல்
வழிச்செல்வோம்,எனக்கூறிவணங்கிச் சென்றார் 144
26. பாண்டவர் பயணமாதல்
ஆங்கதன்பின் மூன்றாம்நாள் இளைஞ ரோடும்
அணியிழையப் பாஞ்சாலர் விளக்கி னோடும்
பாங்கினுறு பரிசனங்கள் பலவி னோடும்
படையினொடும் இசையினொடும் பயண மாகித்
தீங்கதனைக் கருதாத தருமக் கோமான்
திருநகர்விட் டகல்கின்றான் தீயோர் ஊர்க்கே!
நீங்கி அகன் றிடலாகுந் தன்மை உண்டோ.
நெடுங்கரத்து விதிகாட்டும் நெறியில் நின்றே? 145
நரிவகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம்
நழுவிவிழும்;சிற்றெறும்பால் யானை சாகும்;
வரிவகுத்த உடற்புலியைப் புழுவுங் கொல்லும்;
வருங்கால முணர்வோரும் மயங்கி நிற்பார்;
கிரிவகுத்த முந்நூலார் புலையர் தம்மைப்
போற்றிடுவார் விதிவகுத்த போழ்தி னன்றே. 146
27. மாலை வருணனை
மாலைப்போ தாதலும்,மன்னன் சேனை
வழியிடைஓர் பூம்பொழிலின் அமர்ந்த காலை,
சேலைப்போல் விழியாளைக் பார்த்தன் கொண்டு
சென்றாங்கோர் தனியிடத்தே பசும்புல் மேட்டில்
மேலைப்போம் பரியினைத் தொழுது கண்ன்
மெல்லியலும் அவன்தொடைமேல் மெல்லச் சாய்ந்து
பாலைப்போல் மொழிபிதற்ற அவளை நோக்கிப்
பார்த்தனும்அப் பரிதிஎழில் விளக்கு கின்றான். 147
பாரடியோ!வானத்திற் புதுமை யெல்லாம்,
பண்மொழீ! கணந்தோறும் மாறி மாறி
ஓரடிமற் றோரடியோ டொத்த லின்றி
உவகையுற நவநவமாத் தோன் றுங் காட்சி;
யாரடிஇங் கிவைபோலப் புவியின் மீதே
எண்ணரிய பொருள்கொடுத்தும் இயற்ற வல்லார்!
சீரடியால் பழவேத முனிவர் போற்றுஞ்
செழுஞ்சோதி வனப்பையெலாம் சேரக் காண்பாய். 148
கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்;
கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்;
கணந்தோறும் நவநவமாய் களிப்புத் தோன்றும்;
கருதிடவும் சொல்லிடவும் எளிதோ? ஆங்கே,
கணந்தோறும் ஒருபுதிய வண்ணங் காட்டிக்
காளிபரா சக்திஅருள் களிக்குங் கோலம்
கணந்தோறும் அவள்பிறப்பாள் என்று மேலோர்
கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய். 149
அடிவானத் தேஅங்கு பரிதிக் கோளம்
அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்;
இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி
எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து,
முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே,
மொய்குழலாய், சுற்றுவதன் மொய்ம்பு காணாய்!
வடிவான தொன்றாகத் தகடி ரண்டு
வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய். 150
அமைதியோடு பார்த்திடுவாய் மின்னே!பின்னே
அசைவுமோர் மின்செய்த வட்டு;முன்னே,
சமையுமொரு பச்சைநிற வட்டங் காண்பாய்;
தரணியிலிங் கிதுபோலார் பசுமை உண்டோ?
இமைகுவிய மின்வட்டின் வயிரக் கால்கள்
எண்ணில்லா திடையிடையே எழுதல் காண்பாய்;
உமை கவிதை செய்கின்றாள்,எழுந்து நின்றே
உரைத்திடுவோம்,பல்லாண்டு வாழ்க!என்றே. 151
வேறு
பார்;சுடர்ப்பரிதியைச் சூழவே படர்முகில்
எத்தனை தீப்பட் டெரிவன!ஓகோ!
என்னடீ!இந்த வன்னத் தியல்புகள்!
எத்தனை வடிவம்! எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்!-செழும்பொன் காய்ச்சி
விட்ட ஓடைகள்!-வெம்மை தோன்றாமே
எரிந்திடுந் தங்கத் தீவுகள்!-பாரடீ!
நீலப் பொய்கைகள்!-அடடா,நீல
வன்ன மொன்றில் எத்தனை வகையடீ!
எத்தனை செம்மை!பசுமையுங் கருமையும்
எத்தனை!-கரிய பெரும்பெரும் பூதம்!
நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்
தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட
கருஞ்சிக ரங்கள்!-காண்டி,ஆங்கு
தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும்
இருட் கடல்!-ஆஹா!எங்கு நோக்கிடினும்
ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்! 152
வேறு
செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினை தேர்கின்றோம்-அவன்
எங்க ளறிவினைத் தூண்டி நடத்துக என்பதோர்-நல்ல
மங்களம் வாய்ந்த சுருதி மொழிகொண்டு வாழ்த்தியே-இவர்
தங்க ளினங்க ளிருந்த பொழி லிடைச்சார்ந்தனர்-பின்னர்
அங்கவ் விரவு கழிந்திட,வைகறை யாதலும் -மன்னர்
பொங்கு கடலொத்த சேனைக ளோடு புறப்பட்டே,-வழி
எங்குந் திகழும் இயற்கையின் காட்சியில் இன்புற்றே,-கதிர்
மங்கிடு முன்னொளி மங்கு நகரிடை வந்துற்றார். 153
(துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம் முற்றும்)
சூதாட்டச் சருக்கம்
28. வாணியை வேண்டுதல்
தெளிவுறவே அறிந்திடுதல்;தெளிவுதர
மொழிந்திடுதல்;சிந்திப் பார்க்கே
களிவளர உள்ளத்தில் ஆநந்தக் கனவுபல
காட்டல்,கண்ணீர்த்
துளிவரஉள் ளுருக்குதல்,இங் கியெல்லாம்
நீ அருளும் தொழில்க ளன்றோ?
ஒளிவளருந் தமிழ்வாணீ! அடியனேற்
கிவையனைத்தையும் உதவு வாயே. 154
29. பாண்டவர் வரவேற்பு
அத்தின மாநக ரத்தினில் வந்தனர்
ஆரியப் பாண்டவர் என் றது கேட்டலும்,
தத்தி எழுந்தன எண்ணருங் கூட்டங்கள்;
சந்திகள்,வீதிகள்,சாலைகள்,சோலைகள்;
எத்திசை நோக்கினும் மாந்தர் நிறைந்தனர்;
இத்தனை மக்களும் எங்கண் இருந்தனர்
இத்தின மட்டும் எனவியப் பெய்துற
எள்ளும் விழற்கிட மின்றி யிருந்தார். 155
மந்திர கீதம் முழுங்கினர் பார்ப்பனர்;
வன்தடந் தோள்கொட்டி ஆர்த்தனர் மன்னவர்;
வெந்திறல் யானையும் தேரும் குதிரையும்
வீதிகள் தோறும் ஒலிமிகச் செய்தன;
வந்தியர் பாடினர்,வேசையர்.ஆடினர்;
வாத்தியங் கோடி வகையின் ஒலித்தன;
செந்திரு வாழும் நகரினில் அத்தினஞ்
சேர்ந்த ஒலியைச் சிறிதென லாமோ! 156
வாலிகன் தந்ததொர் தேர்மிசை ஏறி,அம்
மன்னன் யுதிட்டிரன் தம்பியர் மாதர்கள்
நாலிய லாம்படை யோடு நகரிடை
நல்ல பவனி எழுந் பொழுதினில்,
சேலியல் கண்ணியர் பொன்விளக் கேந்திடச்
சீரிய பார்ப்பணர் கும்பங்கள் ஏந்திடச்
கோலிய பூமழை பெய்திடத் தோரணம்
கொஞ்ச நகரெழில் கூடிய தன்றே. 157
வேறு
மன்னவன் கோயிலிலே-இவர்
வந்து புகுந்தனர் வரிசை-யொடே
பொன்ன ரங் கினிலிருந் தான்-தண்ணில்
புலவனைப் போய்நின்று போற்றியபின்
அன்னவன் ஆசிகொண் டே,-உயர்
ஆரிய வீட்டுமன் அடி வணங்கி,
வின்னய முணர் கிருபன்-புகழ்
வீரத் துரோணன் அங்கவன் தல்வன் 158
மற்றுள பெரியோர் கள்-தமை
வாழ்த்தி உள்ளன்பொடு வணங்கிநின் றார்;
கொற்றமிக் குயர்கன் னன்-பணிக்
கொடியோன் இளையவர் சகுனியோ டும்
பொற்றடந் தோள் சருவப்-பெரும்
புகழினர் தழுவினர்,மகிழ்ச்சிகொண் டார்;
நற்றவக் காந்தா ரி-முதல்
நாரியர் தமைமுறைப் படிதொழு தார். 159
குந்தியும் இளங்கொடி யும்-வந்து
கூடிய மாதர் தம்மொடு குலவி
முந்திய கதைகள் சொல்லி-அன்ஹப
மூண்டுரை யாடிப்பின் பிரிந்து விட்டார்;
அந்தியும் புகுந்தது வால்;-பின்னர்
ஐவரும் உடல்வலித் தொழில் முடித்தே
சந்தியுஞ் சபங்களுஞ் செய்-தங்கு
சாருமின் னுணவமு துண்டதன் பின். 160
சந்தன மலர்புனைந் தே,-இளந்
தையலர் வீணைகொண் டுயிருருக்கி
விந்தைகொள் பாட்டிசைப் ப,-அதை
விழைவொடு கேட்டனர் துயில்புரிந் தார்;
வந்ததொர் துன்பத் தினை-அங்கு
மடித்திட லன்றிப் பின்வருந் துயர்க்கே
சிந்தனை உழல்வா ரோ?-உளச்
சிதைவின்மை ஆரியர் சிறப்பன் றோ? 161
30. பாண்டவர் சபைக்கு வருதல்
பாணர்கள் துதிகூ ற-இளம்
பகலவன் எழுமுனர்த் துயிலெழுந் தார்;
தோணலத் திணையில் லார்-தெய்வந்
துதித்தனர்;செய்யபொற் பட்டணிந்து
பூணணிந் தாயுதங் கள்-பல
பூண்டுபொற் சபையிடைப் போந்தன ரால்;
நாண மில் கவுரவ ரும்-தங்கள்
நாயக னொடுமங்கு வீற்றிருந் தார். 162
வீட்டுமன் தானிருந் தான்;-அற
விதுரனும்,பார்ப்பனக் குரவர்களும்,
நாட்டுமந் திரிமா ரும்,பிற
நாட்டினர் பலபல மன்னர்க ளும்,
கேட்டினுக் கிரையா வான்-மதி
கெடுந்துரி யோதனன் கிளையின ரும்,
மாட்டுறு நண்பர்களும்-அந்த
வான்பெருஞ் சபையிடை வணங்கிநின் றார். 163
31. சூதுக்கு அழைத்தல்
புன்தொழிற் கவறத னில்-இந்தப்
புவிமிசை இணையிலை எனும்புக ழான்
நன்றறி யாச்சகு னி,-சபை
நடுவினில் ஏறெனக் களித்திருந் தான்;
வென்றிகொள் பெருஞ்சூ தர்-அந்த
விவிஞ்சதி சித்திர சேனனு டன்
குன்றுசத் தியவிர தன்-இதழ்
கூர்புரு மித்திரன் சய னென்பார். 164
சாலவும் அஞ்சு தரும்-கெட்ட
சதிக்குணத் தார்பல மாயம் வல்லோர்
கோலநற் சபைதனி லே-வந்து
கொக்கரித் தார்ப்பரித் திருந்தனரால்,
மேலவர் தமை வணங்கி-அந்த
வெந்திறற் பாண்டவர் இளைஞர் தமை
ஆல முற்றிடத் தழுவிச்-செம்பொன்
ஆதனத் தமர்ந்தவப் பொழுதினி லே. 165
சொல்லுகின் றான்சகு னி:-அறத்
தோன்றல்!உன் வரவினைக் காத்துளர் காண்
மல்லுறு தடந் தோளார் இந்த
மன்னவ ரனைவரும் நெடும்பொழு தா;
வில்லுறு போர்த்தொழி லாற்-புவி
வென்றுதங் குலத்தினை மேம்படுத் தீர்!
வல்லுறு சூதெனும் போர்-தனில்
வலிமைகள் பார்க்குதும் வருதிஎன்றான் 166
32. தருமன் மறுத்தல்
தருமனங் கிவைசொல் வான்-ஐய!
சதியுறு சூதினுக் கெனை அழைத் தாய்;
பெருமைஇங் கிதிலுண்டோ?-அறப்
பெற்றிஉண் டோ?மறப் பீடுள தோ?
வருமம் நின் மனத்துடை யாய்!-எங்கள்
வாழ்வினை உகந்திலை என லறிவேன்;
இருமையுங் கெடுப்பது வாம்-இந்த
இழிதொழி லாலெமை அழித்த லுற் றாய். 167
33. சகுனியின் ஏச்சு
கலகல வெனச்சிரித் தான்-பிழக்
கவற்றையொர் சாத்திர மெனப்பயின் றோன்;
பலபல மொழிகுவ தேன்?-உனைப்
பார்த்திவன் என்றெணி அழைத்துவிட்டேன்,
நிலமுழு தாட்கொண் டாய்-தனி
நீ எனப் பலர்சொலக் கேட்டதனால்,
சிலபொருள் விளையாட் டிற்-செலுஞ்
செலவினுக் கழிகலை எனநினைத் தேன். 168
பாரத மண்டலத் தார்-தங்கள்
பதிஒரு பிசுனனென் றறிவே னோ?
சோரமிங் கிதிலுண் டோ?-தொழில்
சூதெனி லாடுநர் அரசரன் றோ?
மாரத வீரர்முன் னே?-நடு
மண்டபத் தே,பட்டப் பகலினி லே,
சூரசி காமணி யே,-நின்றன்
சொத்தினைத் திருடுவ மெனுங்கருத் தோ? 169
அச்சமிங் கிதில்வேண் டா,-விரைந்
தாடுவம் நெடும்பொழு தாயின தால்;
கச்சையொர் நாழிகை யா-நல்ல
காயுடன் விரித்திங்கு கிடந்திடல் காண்?
நிச்சயம் நீவெல் வாய்;-வெற்றி
நினக் கியல் பாயின தறியா யோ?
நிச்சயம் நீவெல் வாய்;-பல
நினைகுவ தேன்? களி தொடங்குகென்றான். 170
34. தருமனின் பதில்
வேறு
தோல் விலைக்குப் பசுவினைக் கொல்லும்
துட்டன் இவ்வுரை கூறுதல் கேட்டே,
நூல்வி லக்கிய செய்கைக ளஞ்சும்
நோன்பி னோனுளம் நொந்திவை கூறும்;
தேவ லப்பெயர் மாமுனி வோனும்
செய்ய கேள்வி அசிதனும் முன்னர்
காவ லர்க்கு விதித்த தந்நூலிற்
கவறும் நஞ்செனக் கூறினர்,கண்டாய்! 171
வஞ்ச கத்தினில் வெற்றியை வேண்டார்.
மாயச் சூதைப் பழியெனக் கொள்வார்,
அஞ்ச லின்றிச் சமர்க்களத் தேறி
ஆக்கும் வெற்றி அதனை மதிப்பார்.
துஞ்ச நேரினுந் தூயசொல் லன்றிச்
சொல்மி லேச்சரைப் போலென்றுஞ் சொல்லார்,
மிஞ்சு சீர்த்திகொள் பாரத நாட்டில்
மேவு மாரியர் என்றனர் மேலோர் 172
ஆத லாலிந்தச் சூதினை வேண்டேன்!
ஐய,செல்வம் பெருமை இவற்றின்
காத லாலர சாற்றுவ னல்லேன்;
காழ்த்த் நல்லறம் ஓங்கவும் ஆஙகே
ஓத லானும் உணர்த்துத லானும்
உண்மை சான்ற கலைத்தொகை யாவும்
சாத லின்றி வளர்ந்திடு மாறும்,
சகுனி யானர சாளுதல்,கண்டாய்! 173
என்னை வஞ்சித்தென் செல்வத்தைக் கொள்வோர்
என்ற னக் கிடர் செய்பவ ரல்லர்
முன்னை நின்றதொர் நான்மறை கொல்வார்
மூது ணர்விற் கலைத்தொகை மாய்ப்பார்,
பின்னை என்னுயிர்ப் பாரத நாட்டில்
பீடை செய்யுங் கலியை அழைப்பார்;
நின்னை மிக்க பணிவோடு கேட்பேன்;
நெஞ்சிற் கொள்கையை நீக்குதிஎன்றான். 174
35. சகுனி வல்லுக்கு அழைத்தல்
வேறு
சாத்திரம் பேசுகின் றாய்-எனத்
தழல்படு விழியொடு சகுனிசொல் வான்;
கோத்திரக் குலமன் னர்-பிறர்
குறைபடத் தம்புகழ் கூறுவ ரோ?
நாத்திறன் மிகஉடை யாய்!-எனில்
நம்மவர் காத்திடும் பழவழக் கை
மாத்திரம் மறந்துவிட் டாய்;-மன்னர்
வல்லினுக் கழைத்திடல் மறுப்பதுண்டோ 175
தேர்ந்தவன் வென்றிடு வான்;-தொழில்
தேர்ச்சி இல் லாதவன் தோற்றிடு வான்;
நேர்ந்திடும் வாட்போரில்-குத்து
நெறி அறிந் தவன்வெலப் பிறனழி வான்;
ஓர்ந்திடு சாத்திரப் போர் தனில்
உணர்ந்தவன் வென்றிட,உணரா தான்
சோர்ந்தழி வெய்திடு வான்;இவை
சூதென்றும் சதிஎன்றும் சொல்வா ரோ? 176
வல்லவன் வென்றிடு வான்:-தொழில்
வன்மை இலாதவன் தோற்றிடு வான்;
நல்லவ னல்லா தான்-என
நாண மிலார்சொலுங் கதைவேண் டா;
வல்லமர் செய்திட வே-இந்த
மன்னர் முன்னேநினை அழைத்துவிட்டேன்;
சொல்லுக வருவதுண் டேல்-மனத்
துணி விலை யேலதுஞ் சொல்லுகென் றான். 177
36. தருமன் இணங்குதல்
வேறு
வெய்ய தான விதியை நினைந்தான்
விலக்கொ ணாதறம் என்ப துணர்ந்தோன்;
பொய்ய தாகுஞ் சிறுவழக் கொன்றைப்
புலனி லாதவர் தம்முடம் பாட்டை
ஐயன் நெஞ்சில் அறமெனக் கொண்டான்
ஐயகோ!அந்த நாள்முத லாகத்
துய்ய சிந்தைய ரெத்தனை மக்கள்
துன்பம் இவ்வகை எய்தினர் அம்மா! 178
முன்பி ருந்ததொர் காரணத் தாலே,
மூடரே,பொய்யை மெய்என லாமோ?
முன்பெனச் சொலுங் கால மதற்கு,
மூடரே,ஓர் வரையறை உண்டோ,
முன்பெனச் சொலின் நேற்றுமுன் பேயாம்;
மூன்று கோடி வருடமும் முன்பே
முன்பிருந் தெண்ணி லாது புவிமேல்
மொய்த்த மக்க ளெலாம்முனி வோரோ? 179
நீர்பி றக்குமுன் பார்மிசை மூடர்
நேர்ந்த தில்லை எனநினைந் தீரோ?
பார்பி றந்தது தொட்டின்று மட்டும்,
பலப லப்பல பற்பல கோடி
கார்பி றக்கும் ம்ழைத்துளி போலே
கண்ட மக்க ளனைவருள் ளேயும்,
நீர்பி றப்பதன் முன்பு,மடமை
நீசத் தன்மை இருந்தன வன்றோ? 180
பொய்யொ ழுக்கை அறமென்று கொண்டும்,
பொய்யர் கேலியைச் சாத்திர மென்றும்,
ஐயகோ,நங்கள் பாரத நாட்டில்
அறிவி லாரறப் பற்றுமிக் குள்ளோர்
நொய்ய ராகி அழிந்தவர் கோடி,
நூல்வ கைபல தேர்ந்து தெளிந்தோன்,
மெய்ய றிந்தவர் தம்மு ளுயர்ந்தோன்
விதியி னாலத் தருமனும் வீழ்ந்தான். 181
மதியி னும்விதி தான்பெரி தன்றோ?
வைய மீதுள வாகு மவற்றுள்
விதியி னும்பெரி தோர்பொரு ளுண்டோ?
மேலை நாம்செய்யுங் கர்மமல் லாதே,
நதியி லுள்ள சிறுகுழி தன்னில்
நான்கு தக்கி லிருந்தும் பல்மாசு
பதியு மாறு,பிறர்செய்யுங் கர்மப்
பயனும் நம்மை அடைவ துண்டன்றோ? 182
37. சூதாடல்
வேறு
மாயச் சூதி னுக்கே-ஐயன்,மன மிணங்கி விட்டான்;
தாய முரட்ட லானர்;-அங்கே சகுனி ஆர்ப்ப ரித்தான்!
நேய முற்ற விதுரன்-போலே,நெறி ளோர்க ளெல்லாம்
வாயை மூடி விட்டார்;-தங்கள்,மதி மயங்கி விட்டார். 183
அந்த வேளை யதனில்-ஐவர்க் கதிபன் இஃதுரைப்பான்;
பந்த யங்கள் சொல்வாய்;-சகுனி பரபரத் திடாதே!
விந்தை யான செல்வம்-கொண்ட,வேந்த ரோடு நீ தான்
வந்தெ திர்த்து விட்டாய்;-எதிரே,வைக்க நிதியமுண் டோ? 184
தருமன் வார்த்தை கேட்டே-துரியோதன னெழுந்து சொல்வான்
அருமையான செல்வம்-என்பால்,அளவிலாத துண்டு
ஒரு மடங்கு வைத்தால்-எதிரே,ஒன்ப தாக வைப்பேன்;
பெருமை சொல்ல வேண்டா,-ஐயா!பின் னடக்குகென்றான். 185
ஒருவ னாடப் பணயம்-வேறே,ஒருவன் வைப்ப துண்டோ?
தரும மாகு மோடா!-சொல்வாய்,தம்பி இந்த வார்த்தை?
வரும மில்லை ஐயா;-இங்கு,மாம னாடப் பணயம்
மருகன் வைக் கொணாதோ?-இதிலே வந்த குற்றமேதோ? 186
பொழுதுபோக்கு தற்கே-சூதுப் போர் தொடங்குகின்றோம்;
அழுத லேதிற்கே?-என்றே,அங்கர் கோன் நகைத்தான்.
பழு திருப்ப தெல்லாம்-இங்கே பார்த்திவர்க் குரைத்தேன்;
முழுது மிங் கிதற்கே-பின்னர்,முடிவு காண்பிர்என்றான். 187
ஒளி சிறந்த மணியின்-மாலை,ஒன்றை அங்கு வைத்தான்;
களி மிகுந்த பகைவன்-எதிரே,கன தனங்கள் சொன்னான்;
விழி இமைக்கு முன்னே-மாமன் வென்று தீர்த்து விட்டான்;
பழி இலாத தருமன்-பின்னும்,பந்தயங்கள் சொல்வான்; 188
ஆயிரங் குடம்பொன் -வைத்தே,ஆடுவோமிதென்றான்;
மாயம் வல்ல மாமன்-அதனை,வசம தாக்கி விட்டான்;
பாயுமா வொரெட்டில்-செல்லும்.பார மான பொற்றேர்;
தாய முருட்ட லானார்;-அங்கே,சகுனி வென்று விட்டான். 189
இளைய ரான மாதர்,-செம்பொன்,எழி லிணைந்த வடிவும்
வளை அணிந்த தோளும்-மாலை,மணி குலுங்கு மார்பும்
விளையு மின்ப நூல்கள்-தம்மில்,மிக்க தேர்ச்சி யோடு
களை இலங்கு முகமும்-சாயற்,கவினும் நன்கு கொண்டோர், 190
ஆயிரக் கணக்கா-ஐவர்க்,கடிமை செய்து வாழ்வோர்;
தாய முருட்டலானார்;-அந்தச்,சகுனி வென்று விட்டான்.
ஆயிரங்க ளாவார்-செம்பொன்,னணிகள் பூண்டிருப்பார்
தூயிழைப் பொனாடை-சுற்றுந்,தொண்டர் தம்மை வைத்தான்; 191
சோரனங் கவற்றை-வார்த்தை,சொல்லு முன்னர் வென்றான்.
தீர மிக்க தருமன்-உள்ளத்,திட னழிந் திடாதே,
நீரை யுண்ட மேகம்-போலே நிற்கு மாயிரங்கள்
வாரணங்கள் கண்டாய்-போரில்,மறலி யொத்து மோதும் 192
என்று வைத்த பணயந்-தன்னை,இழிஞன் வென்று விட்டான்;
வென்றி மிக்க படைகள்-பின்னர்,வேந்தன் வைத் திழந்தான்;
நன்றிழைத்த தேர்கள்-போரின்,நடை யுணர்ந்த பாகர்
என் றிவற்றை யெல்லாம்-தருமன்,ஈடு வைத் திழந்தான். 193
எண் ணிலாத,கண்டீர்,-புவியில்,இணை யிலாத வாகும்
வண்ண முள்ள பரிசுகள்-தம்மை,வைத் திழந்து விட்டான்;
நண்ணு பொற் கடாரந்-தம்மில்,நாலு கோடி வைத்தான்;
கண்ணி ழப்பவன் போல்-அவையோர்,கண மிழந்து விட்டான் 194
மாடி ழந்து விட்டான்,-தருமன்,மந்தை மந்தை யாக;
ஆடி ழந்து விட்டான்-தருமன்,ஆளிழந்து விட்டான்;
பீடிழந்த சகுனி-அங்கு,பின்னுஞ் சொல்லுகின்றான்;
நாடிழக்க வில்லை,-தருமா!நாட்டை வைத்திடென்றான். 195
38. நாட்டை வைத்தாடுதல்
வேறு
ஐய கோஇதை யாதெனச் சொல்வோம்?
அரச ரானவர் செய்குவ தொன்றோ?
மெய்ய தாகவோ மண்டலத் தாட்சி
வென்று சூதினி லாளுங் கருத்தோ?
வைய மிஃது பொறுத்திடு மோ,மேல்
வான் பொறுந் திடுமோபழி மக்காள்!
துய்ய சீர்த்தி மதிக்குல மோ நாம்?
தூ! வென் றெள்ளி விதரனும் சொல்வான்,. 196
பாண்ட வர்பொறை கொள்ளுவ ரேனும்,
பைந்து ழாயனும் பாஞ்சாலத் தானும்
மூண்ட வெஞ்சினத் தோடுநஞ் சூழல்
முற்றும் வேர றச் செய்குவ ரன்றோ?
ஈண்டி ருக்குங் குருகுல வேந்தர்
யார்க்கு மிஃதுரைப் பேன்,குறிக் கொண்மின்;
மாண்டு போரில் மடிந்து நரகில்
மாழ்கு தற்கு வகைசெயல் வேண்டா 197
குலமெ லாமழி வெய்திடற் கன்றோ
குத்தி ரத்துரி யோதனன் றன்னை
நலமி லாவிதி நம்மிடை வைத்தான்;
ஞால மீதி லவன் பிறந் தன்றே
அலறி யோர்நரி போற்குரைத் திட்டான்;
அஃது ணர்ந்த நிமித்திகர் வெய்ய
கலகந் தோன் றுமிப் பாலக னாலே
காணு வீரெனச் சொல்லிடக் கேட்டோம். 198
சூதிற் பிள்ளை கெலித்திடல் கொண்டு
சொர்க்க போகம் பெறுபவன் போலப்
பேதை நீயு முகமலர் வெய்திப்
பெட்பு மிக்குற வீற்றிருக் கின்றாய்;
மீது சென்று மலையிடைத் தேனில்
மிக்க மோகத்தி னாலொரு வேடன்
பாத மாங்கு நழுவிட மாயும்
படும லைச்சரி வுள்ளது காணான். 199
மற்று நீருமிச் சூதெனுங் கள்ளால்
மதிம யங்கி வருஞ்செயல் காணீர்!
முற்றுஞ் சாதி சுயோதன னாமோர்
மூடற் காக முழுகிட லாமோ?
பற்றுமிக்க இப்பாண்டவர் தம்மைப்
பாத கத்தி லழித்திடு கின்றாய்;
கற்ற கல்வியும் கேள்வியும் அண்ணே!
கடலிற் காயங் கரைத்ததொப் பாமே? 200
வீட்டு ளேநரி யைவிடப் பாம்பை
வேண்டிப் பிள்ளை எனவளர்த் திட்டோம்;
நாட்டு ளேபுக ழோங்கிடு மாறிந்
நரியை விற்றுப் புலிகளைக் கொள்வாய்;
மோட்டுக் கூகையைக் காக்கையை விற்று
மொய்ம்பு சான்ற மயில்களைக் கொள்வாய்;
கேட்டி லேகளி யோடுசெல் வாயோ?
கேட்குங் காதும் இழந்துவிட் டாயோ? 201
தம்பி மக்கள் பொருள் வெஃகு வாயோ
சாதற் கான வயதினில் அண்ணே?
நம்பி நின்னை அடைந்தவ ரன்றோ?
நாத னென்றுனைக் கொண்டவ ரன்றோ?
எம்பி ரானுளங் கொள்ளுதி யாயின்
யாவுந் தான மெனக்கொடுப் பாரே;
கும்பி மாநரக கத்தினி லாழ்த்துங்
கொடிய செய்கை தொடர்வதும் என்னே? 202
குருகு லத்தலை வன்சபைக் கண்ணே,
கொற்ற மிக்க துரோணன் கிருபன்
பெருகு சீர்த்தி அக் கங்கையின் மைந்தன்
பேதை நானும் மதிப்பிழந் தேகத்
திருகு நெஞ்சச் சகுனி ஒருவன்
செப்பு மந்திரஞ் சொல்லுதல் நன்றே!
அருகு வைக்கத் தகுதியுள் ளானோ?
அவனை வெற்பிடைப் போக்குதி அண்ணே! 203
நெறி இழந்தபின் வாழ்வதி லின்பம்
நேரு மென்று நினைத்திடல் வேண்டா,
பொறி இழந்த சகுனியின் சூதால்
புண்ணி யர்தமை மாற்றல ராக்கிச்
சிறியர் பாதகர் என்றுல கெல்லாம்
சீஎன் றேச உகந்தர சாளும்
வறிய வாழ்வை விரும்பிட லாமோ?
வாழி,சூதை நிறுத்துதிஎன்றான். 204
(சூதாட்டச் சருக்கம் முற்றும்)
முதற்பாகம் முற்றிற்று.
22. தருமபுத்திரன் தீர்மானம் |
||||||||
by C.Malarvizhi on 22 Feb 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|