இங்கு தண்டாயுதபாணி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மாசி 3,4,5 தேதிகளில் சூரியன் மறையும்போது ஒளி சுவாமி மீது விழும். அப்போது சூரியன் அஸ்தமனம் ஆக ஆக சுவாமியின் பாதத்திலிருந்து முகம் வரை சூரிய ஒளிக்கதிர்கள் தொடர்ச்சியாக விழுந்து கொண்டே வரும். இங்குள்ள தண்டாயுதபாணிக் கடவுள் தலையில் முடியுடன் காணப்படுகிறார். இங்குள்ளவர் சுயம்பு மூர்த்தி ஆவார். சுவாமி 4 ஆடி உயரம் இருப்பவராக உள்ளார். கையில் 11 கணுக்களுடைய செங்கரும்பை ஏந்தியபடி காட்சி தருகிறார்.
இது வேறு எந்த முருகன் தலத்திலும் காண முடியாத அரிய சிறப்பு. மதுரையில் இருந்து கோபத்துடன் கிளம்பிய கண்ணகியை, இத்தல முருகன் சாந்தப்படுத்தினார். இதனால், உக்கிரம் குறைந்த அம்பிகை, இவ்வூர் அருகிலுள்ள சிறுவாச்சூரில் மதுரகாளியம்மனாக கோயில் கொண்டுள்ளாள். மலைக்கு ஏறும் படிக்கட்டுகள் 240ம் இறங்கும் படிக்கட்டுகள் 253ம் அமைந்துள்ளது. இம்மலைமீதுள்ள முருகன் செட்டிகுளத்தில், சிவ ஆலயத்தில் உள்ள ஏகாம்பரேசுவரரை அதாவது தனது அப்பாவை பார்த்தபடி உள்ளார் என்பது விசேசம். முருகனின் படைத்தளபதி வீரபாகு இங்கு வீரபத்திரசுவாமியாக விளங்குகிறார். |