|
||||||||
மனிதனை பக்குவப்படுத்தும் ரம்ஜான் நோன்பு !! |
||||||||
நோன்பு இருக்கும்போது உணவை மட்டுமல்ல, பொய் மற்றும் புறம் பேசுதல், மோசடி செய்வது, கெட்டதை பார்ப்பது, இல்லறத்தில் ஈடுபடுவது உள்ளிட்டவற்றை விலக்கி வைக்கிறோம்.ஏழையின் பசியை உணர வேண்டும் என்பதற்காக நோன்பு நமக்கு கடமையாக்கப்படவில்லை. அப்படி இருந்தால் ஏழைகளுக்கு நோன்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கும். மனிதன் தன்னைத்தானே வருத்திக் கொள்வதில் இறைவனுக்கு விருப்பமா என்றால் அதுவும் கிடையாது. நபி தோழரான அப்துல்லாஹ் இப்னு அமர், நாள் கணக்கின்றி நோன்பு வைத்து வந்தார்.
மனிதனை பக்குவப்படுத்தும் ரம்ஜான் நோன்பு :
இதை அறிந்த நபிகள் நாயகம், ரம்ஜான் மாதத்தில் நோன்பு வைப்பது கடமை.மற்றபடி நாள், மாதக் கணக்கில் நோன்பு வைக்க வேண்டாம். உங்கள் உடல் நலத்தையும் குடும்பத்தையும் கவனிப்பது அவசியம் என்றார். அதனால் நோன்பின் நோக்கம் மனிதன் பக்குவப்பட வேண்டும் என்பதுதான். அதே நேரம், நோன்பு வைப்பதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள் நமது ஆரோக்கிய வாழ்வுக்கு நலம் தருபவை என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆன்மிக வழிகாட்டுதல் மட்டுமே இஸ்லாத்தின் நோக்கம் கிடையாது. அதையும் தாண்டி பல விஷயங்களை இஸ்லாம் வலியுறுத்துகிறது. தண்ணீரை வீண் விரயம் செய்யக் கூடாது என குர்ஆனில் வசனம் வருகிறது. இந்த வசனத்துக்கும் மனிதனின் பக்குவப்பட்ட செயல்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது. மறுமை நாளில் இறைவன் கேட்கும் பல கேள்விகளில் ஒன்று, உன் கல்வி பிறருக்கு எப்படி பயன்பட்டது? இதில் மார்க்க கல்வியை மட்டுமே இறைவன் குறிப்பிடுகிறான் என நினைத்தால் அது தவறு.
இந்த உலக தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நாம் கற்ற கல்வியையும் சேர்த்தே அந்த கேள்வியை இறைவன் எழுப்புகிறான்.அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் தருகிறார்கள். நீங்கள் கற்ற உலக கல்வியை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பயன்படும் வகையில் மட்டுமே வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருக்க நினைக்காதீர்கள். அந்த கல்வியை பிறருக்கும் கற்றுத் தாருங்கள். அந்த கல்வியால் மற்றவருக்கு நன்மை தரும்படியான செயலை செய்யுங்கள் என்கிறார்.
வட்டியை ஹராமாக இறைவன் அறிவித்திருக்கிறான். இன்றைய வேகமான உலகில் ஒவ்வொருவரும் வெற்றி பெற ஓடிக் கொண்டிருக்கிறார்கள். வட்டியை பற்றியெல்லாம் யோசித்தால் ஆகாது என கூறுபவர்கள் உண்டு. வட்டியை ஏன் இறைவன் தடுத்தான் என்பதை பார்க்க வேண்டும்.ஏழைகளை மேலும் ஏழைகளாக்கி அவர்களை சுரண்டும் கொடூரம்தான் வட்டி என இஸ்லாம் சாடுகிறது. பிறருக்கு உதவி செய்கிறேன் என கூறிக்கொண்டே அந்த நபருக்கு தீங்கானதையும் செய்தால் அதனால் அவர் சந்தோஷப்பட முடியுமா? வட்டி வாங்குவது, கொடுப்பது இரண்டையுமே இஸ்லாம் தடுக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் வட்டி வட்டத்துக்குள் விழாமல்கூட ஒருவரால் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க முடியும். ஜெயிக்க முடியும். அப்படி சந்தோஷமாக இருப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதனால்தான், வட்டி இல்லாத வாழ்க்கை உங்களுக்கு நிம்மதி தரும் என இஸ்லாம் கூறுகிறது. இதிலும் ஆன்மிகத்தை தாண்டிய சமூகப் பார்வை இருப்பதை அறியலாம். |
||||||||
by Swathi on 09 Aug 2012 1 Comments | ||||||||
Tags: Ramzan Ramzan Festival Ramzan Festival History ரம்ஜான் ரம்ஜான் நோன்பு | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|