LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

ந.சி.கந்தையா பிள்ளை

"கண்ணுதற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணுறத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ''
என்று ஆன்றோர் கூறிய பொருள் சிற்சில மொழிகளை ஒப்பிட்டு நோக்குவார்க்கும் இனிது விளங்கும். பண்டைக் காலந்தொட்டு நூல் வழக்கினும் உலக வழக்கினும் திருத்தமடைந்து மக்களறிவின் முதிர்ச்சிக்குப் பெரிதும் உதவி செய்வனவாய்ப் போதரும் பழைய மொழிகள் சிலவேயாம். இப்பழைய மொழிகளுள் தமிழ்மொழியை ஒழித்து ஒழிந்தவற்றிற் பெரும்பாலன உலகவழக்கின்றி இறந்தொழிந்தன. தீஞ்சுவை விளைக்கும் முப்பழத்தினும் இனிய மெல்லிய ஓசை இன்பம் வாய்ந்த செந்தமிழ் மொழியோ, எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் தன் இளமை கெடாது கழிபெரு மகிழ்ச்சியோடும் உலவி வருதலை உற்று நோக்குங்கால் அதனை வழங்கிவந்த நன் மக்கள் எவ்வளவு நுண்ணறிவும், எவ்வளவு அமைதியான தன்மையும், எவ்வளவு நாகரிகமும் உடையவர்களாய் இருந்திருக்க வேண்டுமென்பதை அறிகின்றோம்.


பழைய நாள்களில் வேறு பல மொழிகளைப் பேசி வந்த மக்கள், நுண்ணறிவிலும் அமைந்த குணத்திலும் நாகரிகச் சிறப்புள்ளவர்களாக யில்லாமையினால், அவர்கள் வழங்கிய மொழிகள் எல்லாம் ஆண்டுகடோறும் மாறுதல்கள் பல எய்தி, இலக்கண வரம்பில் அகப்படாவாய்ப் பயனின்றிக் கழிந்தன. தமிழைச் சூழ இஞ்ஞான்று நடைபெறும் பல மொழிகளை ஆராய்ந்து பார்ப்பவர்க்கு அம்மொழிகள் ஓர் இலக்கண வரம்பில்லாமல் பலபடச் சிதறி ஒழுங்கின்றிக் கிடத்தல் தெள்ளிதிற் புலனாகும்.

""தமிழ் கிரேக்க மொழியினும் நயமான செய்யுள் நடையுடையது;
லத்தீன் மொழியினும் பூரணமானது'' (வின்ஸ்லோ)
""மனிதராற் பேசப்படுகின்ற மிகப் பொலிவும் திருத்தமும்
சீருமுடைய மொழிகளுள் தமிழும் ஒன்று'' (டெய்லர்)
தமிழின் சிறப்பை உணர்த்தும் செய்யுட்கள்:
""பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்
திருப்பிலே யிருந்து வைகை யேட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோ ரேன
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்''
(வில்லிபாரதம்)

"" கடுக்கவின்பெறு கண்டனுந் தென்றிசை நோக்கி
அடுக்கவந்துவந் தாடுவா னாடலி னிளைப்பு
விடுக்கவாரமென் கால்திரு முகத்திடை வீசி
மடுக்கவுந்தமிழ் திருச்செவி மாந்தவு மன்றோ''
""தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்தது முதலை
உண்ட பாலனை யழைத்தது மெலும்பு பெண்ணுருவாக்
கண்டதும் மறைக்கதவினைத் திறந்ததுங் கன்னித்
தண்டமிழ்ச் சொல்லோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்''
(திருவிளையாடற் புராணம்)

""தமரநீர்ப் புவன முழுதொருங் கீன்றாள்
தடாதகாதேவி யென் றொருபேர்
தரிக்கவந் ததுவுந் தனிமுத லொருநீ
சவுந்தர மாறனா னதுவுங்
குமரவேள் வழுதி யுக்கிரனெப்பேர்
கொண்டதுந் தண்டமிழ் மதுரங்
கூட்டுண வெழுந்த வேட்கையா லெலிலிக்
கொழிதமிழ்ப் பெருமையா ரறிவார்''
(மதுரைக் கலம்பகம்)

""ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருள்கடியும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனி யாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்''
(தண்டி-உரை-மேற்கோள்)

""வேலையில் வீழ்த்த கல்லு மென்குடம் புகுத்த வென்புஞ்
சாலையிற் கொளுவுந் தீயுந் தரங்கநீர் வைகை யாறுஞ்
சோலையாண் பணையும் வேதக் கதவமுந் தொழும்பு கொண்ட
வாலையாந் தமிழ்ப்பூஞ் செல்வி...''
(திருக்குற்றாலத் தலபுராணம்)

""நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநற் றிருநாடும்
அத்தில வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே''
(மனோன்மணீயம்)

இவ்வகைப் பாடல்கள் எழுதற்குரிய காரணங்கள்: தாசுக்கள், ஆரியர் எனப்படும் மக்களிடையே நடந்த யுத்தங்களைப் பற்றி வேத பாடல்கள் கூறுகின்றன. தாசுக்கள் எனப்பட்டோர் தமிழர். இவ்வுணர்ச்சியின் வேகம் நீண்டகாலம் இருந்து வந்தது. இதனால் தமிழை ஆரியத்திலும் தாழ்ந்ததாகக் கூறும் கட்சியொன்றும் தமிழ்நாட்டில் நீண்டகாலம் தொட்டு இருந்து வருவதாயிற்று. சமயகுரவர் காலத்தும் இவ்வகை உணர்ச்சி யிருந்தமையினாலேயே இரு கட்சியினரையும் சந்து செய்தற் பொருட்டுத் தேவாரத்தில், ""ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்'' எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழை இழிவுபடுத்தும் கொடுமை நாளுக்கு நாள் வளர்வதாயிற்று. அதில் பட்டு மயங்கிய மக்கள் தமிழின் உயர்வையும் அதன் இன்றியமையாமையும் அறியாது அதனை இகழ்வாராயினர். கல்வியிற் பெரிய கம்பனே ""தேவ பாடையின் இக்கதை செய்தவர்'' எனக் கூறி வடமொழிக்குப் பணிகின்றமை காண்க. பரஞ்சோதி முனிவர், சிவஞான முனிவர், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை முதலானோர் அம்மக்களின் அறியாமைக்கு இரங்கி, அவர்கள் மனங்கொண்டு தமிழில் பற்று உண்டாகுமாறு அதன் பெருமையை உரைத்து வந்தனர். இம்மாறுபட்ட உணர்ச்சி இன்றும் முற்றாக அவிந்துவிடவில்லை. நீறு பூத்த நெருப்புப்போல் அடங்கிக் கிடக்கின்றது எனலாம்.
தொல்காப்பியப் பொருளதிகார உரையில் (தொல்.பொருள்-490)
""ஆரிய நன்று தமிழ்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டானைச்-சீரிய
அந்தண் பொதியில் அகத்தியனா ராணையால்
செந்தமிழே தீர்க்க சுவா''
எனக் காட்டியுள்ள உதாரணச் செய்யுளாலும் இவ்வுணர்ச்சி தமிழ்நாட்டில் நீண்டநாள் உள்ளதென்பது நனி விளங்கும்.

by Swathi   on 10 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.