நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அகத்து நாண் இல்லார் இயக்கம் - தம் மனத்தின்கண் நாண் இல்லாத மக்கள் உயிருடையார் போன்று இயங்குகின்ற இயக்கம்; மரப்பாவை நாணால் உயிர் மருட்டியற்று - மரத்தாற் செய்த பாவை இயந்திரக் கயிற்றினானாய தன் இயக்கத்தால் உயிருடைத்தாக மயங்கினாற்போலும். (கருவியே கருத்தாவாயிற்று. நாணில்லாத மக்கள் இயக்கம், நாணுடைய பாவை இயக்கம் போல்வதல்லது, உயிரியக்கம் அன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் நாணில்லாரது இழிவு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
மனத்தின்கண் நாணமில்லாதார் இயங்குதல், மரப்பாவை கயிற்றினாலே இயங்கி உயிருள்ளதுபோல மயக்குமதனை ஒக்கும். இது நாணமில்லாதார் மக்களல்லரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
அகத்து நாண் இல்லார் இயக்கம் - தம் மனத்தில் நாணில்லாத மாந்தர் நாணுடையார் போன்றே நடமாடும் நடமாட்டம்; மரப்பாவை நாணால் உயிர் மருட்டிய அற்று - மரத்தினாற் செய்த சிறு படிமை, தன்னை யாட்டும் பொறிக்கயிற்றா லேற்பட்ட தன் ஆட்டத்தினால், தான் உயிருள்ளது போல் தோன்றுமாறு பார்ப்பவர் கண்களை மயக்கினாற் போலும். நாணில்லாதவன் செத்தவனை யொத்தவன் என்பது கருத்து. 'உயிர் மருட்டி யற்று' என்பதால் , பாவையின் அழகும் உயிரோவிய வேலைப்பாடும் அக்காலத் தமிழரின் படிமைக் கலைத் தேர்ச்சியும் உணரப்படும்.இம்மூன்று குறளாலும் நாணில்லாரின் இழிவு கூறப்பட்டது.
கலைஞர் உரை:
உயிர் இருப்பது போலக் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும் மரப்பொம்மைக்கும், மனத்தில் நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
மனத்துள் வெட்கம் இல்லாதவர்களின் நடமாட்டம், மரத்தால் செய்த பொம்மைக்கு உயிர் ஊட்டியிருப்பதாகக் காட்டி மயக்கியது போலாம்.
Translation
'Tis as with strings a wooden puppet apes life's functions, when
Those void of shame within hold intercourse with men.
Explanation
The actions of those who are without modesty at heart are like those of puppet moved by a string.