LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1133 - களவியல்

Next Kural >

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
('நாணேயன்றி நல்லாண்மையும் உடைமையின் முடியாது' என்றாட்குச் சொல்லியது.) நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன் - நாணும் மிக்க ஆண் தகைமையும் யான் பண்டு உடையேன்; காமுற்றார் ஏறும் மடல் இன்று உடையேன் - அவை காமத்தான் நீங்குதலான், அக்காமமிக்கார் ஏறும் மடலினை இன்று உடையேன். (நாண்: இழிவாயின செய்தற்கண் விலக்குவது. ஆண்மை: ஒன்றற்கும் தளராது நிற்றல். 'அவை பண்டு உள்ளன: இன்று உள்ளது இதுவேயாகலின் கடிதின் முடியும்', என்பதாம்.)
மணக்குடவர் உரை:
நாணமிக்க நிலைமையும் சிறந்த ஆண்மையும் யான் பண்டுடையேன்; காமமிக்கார் ஏறும் மடலினை இன்றுடையேனானேன்.
தேவநேயப் பாவாணர் உரை:
( நாண் மட்டுமின்றி நல்லாண்மையு முடையையாதலின் மடலேற முடியாதென்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது . ) நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன் - நாணும் சிறந்த ஆண்டகைமையும் பண்டை நாளிற் கொண்டுதாணிருந்தேன் ; காமுற்றார் ஏறும் மடல் இன்று உடையேன்- ஆயின் அவை காமத்தால் நீங்கிவிட்டமையால் காமம் மிக்கார் ஏறும் மடலினையே இன்று உடையவனாயிருக்கின்றேன் . என் உயிர் உடலோடு நிற்கவேண்டுமாயின் மடலேறுதல்லது வேறுவழியில்லை யென்றானாம் . நான் என்பது இழிசெயலைத் தடுக்கும் மானம் . ஆண்மையென்பது ஒன்றற்குந் தளராத உரம் .
கலைஞர் உரை:
நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்.
சாலமன் பாப்பையா உரை:
நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.
Translation
I once retained reserve and seemly manliness; To-day I nought possess but lovers' 'horse of palm'.
Explanation
Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful.
Transliteration
Naanotu Nallaanmai Pantutaiyen Indrutaiyen Kaamutraar Erum Matal

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >