நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
வினை செய்வான் கோடாமை உலகு கோடாது - வினை செய்வான் கோடாது ஒழிய உலகம் கோடாது, மன்னன் நாள்தோறும் நாடுக - ஆதலால் அரசன் அவன் செயலை நாள்தோறும் ஆராய்க. (அஃது ஒன்றனையும் ஆராயவே அதன் வழித்தாய உலகம் எல்லாம் ஆராய்ந்தானாம், அதனால் அவன் உரிமை அழியாமல் தன்னுள்ளே ஆராய்ந்து போதுக என்பதாம். இதனான் ஆண்டவழிச் செய்வது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
வினை செய்வான் கோடாதொழிய உலகம் கோடாது செவ்வையிலே நிற்கும், ஆதலான் அவன் செயலை மன்னவன் நாடோறும் ஆராய வேண்டும்.
இது வினைசெய்வார் செயலை நாடோறும் ஆராய வேண்டுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
வினைசெய்வான் கோடாமை உலகு கோடாது - அரசியல் வினைசெய்வான் நெறிதவறாவிடின் நாடு கெடாது ; மன்னன் நாள்தோறும் நாடுக - ஆதலால் , அரசன் நாள்தோறும் அவனை ஆராய்க.
ஆராய்க என்று பொதுப்படச் சொல்லினும் , திறமையும் அண்மையும் ஒருங்கே யுடையாரை மறைவாகவும் , அவையில்லாதாரை வெளிப்படையாகவும் , ஆராய்தல் வேண்டுமென்பது அறியப்படும் . அரசன் எப்போதும் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமுமாகிய வினைசெய்வாரைக்கொண்டே ஆட்சி நடாத்துதலால் , 'வினைசெய்வான் கோடாமை கோடாதுலகு' என்றார் . மன்னன் இங்குக் குறுநில மன்னன் என்னும் சிறப்புப் பொருள் குறியாது , அரசன் என்னும் பொதுப்பொருள் குறித்தது. வினைசெய்வான் வகுப்பொருமை. 'உலகு' உலகின் பகுதியாகிய நாட்டைக் குறித்தலால் முதலாகுபெயர்.
கலைஞர் உரை:
உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின்
செழிப்பும் வாடாமல் இருக்கும். எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு
நாளும் அரசினர் ஆய்ந்தறிந்து ஆவன செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Translation
Let king search out his servants' deeds each day;
When these do right, the world goes rightly on its way.
Explanation
Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly.