LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 520 - அரசியல்

Next Kural >

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
வினை செய்வான் கோடாமை உலகு கோடாது - வினை செய்வான் கோடாது ஒழிய உலகம் கோடாது, மன்னன் நாள்தோறும் நாடுக - ஆதலால் அரசன் அவன் செயலை நாள்தோறும் ஆராய்க. (அஃது ஒன்றனையும் ஆராயவே அதன் வழித்தாய உலகம் எல்லாம் ஆராய்ந்தானாம், அதனால் அவன் உரிமை அழியாமல் தன்னுள்ளே ஆராய்ந்து போதுக என்பதாம். இதனான் ஆண்டவழிச் செய்வது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
வினை செய்வான் கோடாதொழிய உலகம் கோடாது செவ்வையிலே நிற்கும், ஆதலான் அவன் செயலை மன்னவன் நாடோறும் ஆராய வேண்டும். இது வினைசெய்வார் செயலை நாடோறும் ஆராய வேண்டுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
வினைசெய்வான் கோடாமை உலகு கோடாது - அரசியல் வினைசெய்வான் நெறிதவறாவிடின் நாடு கெடாது ; மன்னன் நாள்தோறும் நாடுக - ஆதலால் , அரசன் நாள்தோறும் அவனை ஆராய்க. ஆராய்க என்று பொதுப்படச் சொல்லினும் , திறமையும் அண்மையும் ஒருங்கே யுடையாரை மறைவாகவும் , அவையில்லாதாரை வெளிப்படையாகவும் , ஆராய்தல் வேண்டுமென்பது அறியப்படும் . அரசன் எப்போதும் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமுமாகிய வினைசெய்வாரைக்கொண்டே ஆட்சி நடாத்துதலால் , 'வினைசெய்வான் கோடாமை கோடாதுலகு' என்றார் . மன்னன் இங்குக் குறுநில மன்னன் என்னும் சிறப்புப் பொருள் குறியாது , அரசன் என்னும் பொதுப்பொருள் குறித்தது. வினைசெய்வான் வகுப்பொருமை. 'உலகு' உலகின் பகுதியாகிய நாட்டைக் குறித்தலால் முதலாகுபெயர்.
கலைஞர் உரை:
உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும். எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்ந்தறிந்து ஆவன செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Translation
Let king search out his servants' deeds each day; When these do right, the world goes rightly on its way.
Explanation
Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly.
Transliteration
Naatorum Naatuka Mannan Vinaiseyvaan Kotaamai Kotaa Thulaku

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >