LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki )- மகுடபதி

நடுச்சாலைச் சம்பவம்

                                 நடுச்சாலைச் சம்பவம்

 மகுடபதிக்கு மறுபடியும் நினைவு வந்தபோது, தான் ஒரு மோட்டார் வண்டியின் பின் சீட்டில் படுத்திருப்பதை அறிந்தான். வண்டி வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. அவனுடைய தலையில் ஏதோ ஈயக் குண்டை வைத்தது போல் கனத்தது. வண்டி மோதிக் கீழே தள்ளியது அவனுக்கு நினைவு வந்தது. தலையில் நல்ல அடிபட்டிருக்க வேண்டும். அதனால் தான் அப்படிக் கனக்கிறது. இன்னும் முழங்காலிலும், முழங்கையிலும், தோளிலும் காயம் பட்ட வலியின் உணர்ச்சியும் உண்டாயிற்று. மிகவும் பிரயத்தனப்பட்டுச் சிறிது தலையைத் தூக்கி முன் சீட்டைக் கவனித்தான். நன்றாக இருட்டியிருந்ததாயினும் வண்டி ஓட்டியது கார்க்கோடக் கவுண்டர்தான் என்பது தெரிந்தது. இந்த வண்டியேதான் தன்னை மோதிக் கீழே தள்ளியது. தான் கீழே விழப்போகும் தறுவாயில், டிரைவர் சீட்டில் இருப்பது கார்க்கோடக்கவுண்டர் போலிருக்கிறதே என்று எண்ணியதும் நினைவுக்கு வந்தது.

     தன்னைப் போலீஸார் கொண்டுபோய் நடுச்சாலையில் விடப்போவதைத் தெரிந்து கொண்டுதான் கவுண்டர் பின்னால் தொடர்ந்து வந்திருக்கவேண்டும். வேண்டுமென்றுதான் காரைத் தன்மேல் மோதியிருக்க வேண்டும். ஆனால், இப்போது எங்கே தனனைக் கொண்டு போகிறார்? - ஏதோ கொடிய நோக்கத்துடன் தான் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. தான் பிழைத்திருக்கும் விஷயம் அவருக்குத் தெரியுமா, தெரியாதா? செத்துப் போனதாக நினைத்துக் கொண்டு தன் உடலை எங்கேயாவது யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் கொண்டு போய்ப் போட்டுவிட எடுத்துப் போகிறாரா? அல்லது உயிர் இருக்கிறதென்று தெரிந்துதான் வேறு ஏதாவது தீய நோக்கத்துடன் கொண்டு போகிறாரா? ஒருவேளை அவர் தன்னை உயிரோடேயே புதைத்து விடக்கூடும் என்று எண்ணியபோது, மகுடபதியின் தேகமாத்தியந்தம் ரோமங்கள் குத்திட்டு நின்றன. அந்த நினைப்பினாலேயே அவனுக்கு மூச்சுத் திணறிற்று.

     இந்த ராட்சதனுடைய வசத்திலிருந்து எப்படியாவது தப்பித்துக்கொள்ள வேண்டும். தனக்காக இல்லாவிட்டாலும், செந்திருவுக்காகவும் பெரியண்ணனுக்காகவும் தப்பிப் பிழைக்க வேண்டும். ஆனால், எப்படி? அதி வேகமாய்ப் போய்க் கொண்டிருக்கும் காரிலிருந்து எப்படி இறங்கித் தப்பிச் செல்வது?

     இவ்விதம் மகுடபதி யோசித்துக் கொண்டிருக்கும் போதே, வண்டியின் போக்கு மெதுவாயிற்று. என்ஜினிலிருந்து பட், பட் என்ற சத்தம் கேட்டது. இரண்டு மூன்று தடவை முக்கி முனகிவிட்டு 'கர்ர்ர்' என்ற சத்தத்துடன் கார் நின்றுவிட்டது.

     வண்டியை மறுபடி கிளம்புவதற்குக் கவுண்டர் ஆனமட்டும் முயற்சி செய்து பார்த்தார். ஒன்றும் பலிக்காமற் போகவே, வண்டியிலிருந்து கீழே இறங்கி, மகுடபதி படுத்திருந்த பின் சீட்டின் பக்கம் வந்து கதவைத் திறந்தார். மகுடபதி கண்களை இறுக மூடிக் கொண்டான். மூச்சுக் கூட மெதுவாக விட்டான். கவுண்டன் குனிந்து எதையோ எடுத்தார். அவர் எடுத்தது டார்ச் லைட் என்பதாக அடுத்த நிமிஷம் தன் முகத்தின் மேல் வீசிய ஒளியினால் மகுடபதி ஊகித்துக் கொண்டான். அப்போதும் அவன் கண்களைத் திறக்கவில்லை. கவுண்டர் டார்ச் லைட்டுடன் முன் பக்கம் போனார்.

     சற்று நேரத்துக்கெல்லாம் மகுடபதி கண்ணை விழித்துப் பார்த்தான். அவன் படுத்திருந்த பின் சீட்டின் கதவு திறந்திருந்தது. பின்னால் என்ஜின் மூடியைத் திறந்து வைத்துக் கொண்டு, கவுண்டர் கையில் டார்ச்சுடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

     சரி, தப்புவதற்கு இதுதான் சமயம் என்று மகுடபதி தீர்மானித்தான். சத்தம் செய்யாமல் கீழே இறங்கினான். சாலைக்குப் பக்கத்தில் மரங்களும் புதர்களும் அடர்ந்த காடு. நல்ல இருட்டு, உடம்பின் வலியையும் தலைக்கனத்தையும் சிறிதும் பொருட்படுத்தாமல் மகுடபதி மெள்ள மெள்ள நடந்து அந்தக் காட்டுக்குள் புகுந்தான். புகுந்த பிறகு திரும்பிக்கூடப் பார்க்காமல் போய்க் கொண்டேயிருந்தான். சுமார் அரை பர்லாங்கு தூரம் போன பிறகு நின்றான்.

     கவுண்டர் என்ஜினை ரிப்பேர் செய்துவிட்டுத் திரும்பி வந்து பார்க்கும் போது தன்னைக் காணாமல் எவ்வளவு ஏமாற்றமடைவார். எவ்வளவு கோபம் அவருக்கு வரும் என்று எண்ணினான். அப்போது கவுண்டரின் கோபக் குரல் போல், மோட்டார் கார் டர்ர் என்று கர்ஜனையுடன் கிளம்பும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் தூரத்தில் மறையும் வரையில் மகுடபதி பேசாமலிருந்தான். பிறகு மெள்ள மெள்ள நடந்து சாலைக்கு வந்து சேர்ந்தான்.

     சாலையில் ஈ காக்காய் கிடையாது. இருட்டோ கேட்க வேண்டியதில்லை. நடுக்காட்டின் தனிமையைக் காட்டிலும் இந்தச் சாலையின் தனிமை அதிக பயங்கரத்தை யளித்தது.

     மகுடபதி சற்று நடந்து பார்த்தான். களைப்பினால் நடக்க முடியவில்லை. ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டான். "கடவுளே! நீயே துணை!" என்று மனதிற்குள் எண்ணினான். இங்கே, இந்த மரத்தடியிலேயே கடவுள் நமக்கு மரணத்தை விதித்திருக்கிறாரா. இராது, ஒரு நாளும் இராது. இவ்விதம் அனாதையாக மரத்தடியில் சாவதற்காகவா பகவான் இத்தனை அபயாங்களிலிருந்து தன்னைக் காப்பாற்றுவித்தார்? இல்லை, தன் மூலமாகக் கடவுள் நிறைவேற்ற விரும்பும் காரியங்கள் இன்னும் இருக்கின்றன. முக்கியமாக, செந்திருவைக் கார்க்கோடக் கவுண்டரிமிருந்து காப்பாற்றும் வேலையைக் கடவுள் தனக்கு அளித்திருக்கிறார். அந்த வேலை நிறைவேறும் வரையில் தனக்குச் சாவு வராது. சீக்கிரத்தில் கடவுள் ஏதேனும் உதவி அனுப்பத்தான் செய்வார்.

     ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகமாக மகுடபதிக்குப் போய்க் கொண்டிருந்தது. இவ்வாறு அரைமணி நேரம் ஆகியிருக்கும். தூரத்தில் மாட்டு வண்டிகள் வரும் சத்தம் கேட்டது. அவற்றில் தொங்கிய விளக்குகள் வரிசையாக ஆடிக்கொண்டு வரும். அலங்காரக் காட்சியும் தென்பட்டது. அவை கோயமுத்தூருக்குச் சாமான் ஓட்டிச் செல்லும் பார வண்டிகளாய்த் தானிருக்க வேண்டும். வண்டிகள் அருகில் வந்தபோது மகுடபதி முன் ஜாக்கிரதையாக ஒரு மரத்தின் பின்னால் தங்கி வருவதைக் கவனித்தான். முன் வண்டிகள் எல்லாம் போன பிறகு, மறைவிலிருந்து வெளிவந்து, கடைசி வண்டியின் அருகில் வந்தான்.

     அரைத் தூக்கமாயிருந்த வண்டிக்காரன், திடுக்கிட்டு "யாரப்பா, அது?" என்றான். "நீதானா அண்ணே!" என்றான் மகுடபதி. அவன் வேங்கைப்பட்டிக்குப் பக்கத்து ஊரான காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவன். செங்கோடக் கவுண்டன் என்று பெயர். மகுடபதியை இந்த இடத்தில் இந்தக் கோலத்தில் கண்டு அவன் அதிசயித்து வண்டியில் ஏறிக்கொள்ளச் சொன்னான். வண்டியில் தானிய மூட்டை ஏற்றியிருந்தது. மகுடபதி படுத்துக்கொள்ளச் சௌகரியமாயிருந்தது.

     மகுடபதி காங்கிரஸ் தொண்டன் என்பது செங்கோடக் கவுண்டனுக்குத் தெரியும். கோயமுத்தூரில் நடத்த தடியடி கலாட்டாவைப் பற்றியும் அவன் கேள்விப்பட்டிருந்தான். ஆகவே மகுடபதி தன்னைப் போலீஸார் இப்படித் தனிக் காட்டில் கொண்டு வந்து அடித்துப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள் என்று சொன்னதை அவன் உடனே நம்பினான். மகுடபதியினிடம் பூரண அனுதாபம் காட்டியதுடன், போலீஸ் இலாகாவைப் பலமாகத் திட்டவும் தொடங்கினான்.

     "அண்ணே! சத்தம் போடாதே!" என்றான் மகுடபதி.

     "சத்தம் போட்டால் என்ன? எந்தப் பயல் என்னை என்ன செய்து விடுவான்? சிகப்புத் தலைப்பாகையைக் கண்டு, பயப்படுகிறவன் செங்கோடக் கவுண்டன் அல்ல. எந்தப் பயலாவது என்மேல் கையை வைக்க வந்தால் ஒரே குத்தாய்க் குத்திப் போட்டு விடுவேன்" என்று செங்கோடன் மடியிலிருந்து கத்தியை எடுத்தான். மகுடபதி அவனுக்கு மகாத்மாவின் அஹிம்சையைப் பற்றிச் சொன்னதெல்லாம் ஒன்றும் பயன்படவில்லை. கடைசியாக, மகுடபதி, "இன்னொரு காரணம் இருக்கிறது, அண்ணே! இந்தக் கலாட்டாவில் என்னை வேலை தீர்த்து விடுவதென்று கள்ளுக்கடைக் கவுண்டர் கங்கணம் கட்டியிருக்கிறார். என்னைத் தேடிக் கொண்டு ஒருவேளை எதிரே வந்தாலும் வருவார். நான் இந்த வண்டியிலிருக்கிறது தெரிந்தால்..."

     "யார், கள்ளிப்பட்டிக் கவுண்டரா?" என்று செங்கோடன் கேட்டபோது, அவனுடைய குரலில் கவலை தொனித்தது.

     "ஆமாம்" என்றான் மகுடபதி.

     "ஐயையோ! அந்த ராட்சதன் கிட்டவா நீ விரோதம் பண்ணிக்கொண்டாய்?" என்றான் செங்கோடக் கவுண்டன்.

     போலீஸாரைப் பற்றி அவ்வளவு அலட்சியமாய்ப் பேசிய செங்கோடக் கவுண்டன். கள்ளிப்பட்டிக் கவுண்டர் என்ற பெயரைக் கேட்டதுமே நடுங்கியதைப் பார்த்து மகுடபதிக்கு ஆச்சரியமாயிருந்தது.

     "கள்ளிப்பட்டிக் கவுண்டரை உனக்குத் தெரியுமா அண்ணே?" என்று கேட்டான்.

     "ஏன் தெரியாது? நல்லாத் தெரியும். நானும் அவரும் ஒரே வீட்டிலே தான் பெண் கட்டினோம்..."

     "என்ன?"

     "ஆமாம்; என் மச்சினியை அவர் இரண்டாந்தாரமாய்க் கட்டியிருந்தார்."

     "அப்படியா?"

     "ஆனால் எங்களுக்குள்ளே வெகு நாளாய்ப் போக்கு வரவு இல்லை. பாவாயி செத்துப் போன அப்புறம்..."

     "யார் பாவாயி?"

     "என் மச்சினிதான். அவளுக்கு ஒரு ஆண்பிள்ளைக் குழந்தை பிறந்தது. மூன்று வயதிருக்கும். பாவாயி செத்துப் போன சமயத்தில், அந்தப் பிள்ளையும் காணாமல் போய்விட்டது. பிள்ளையை நான் தான் ஏதோ பண்ணிப்பிட்டேன் என்று கள்ளிப்பட்டிக் கவுண்டருக்குச் சந்தேகம். ஐயையோ? என்னைப் படாதபாடு படுத்திவிட்டார். கொதிக்கிற எண்ணெயிலே கையை வைத்துச் சத்தியம் செய்த அப்புறந்தான் விட்டார். இதோ பார்!" என்று செங்கோடன் கையைக் காட்டினான். கை வெந்து போய்த் தோலுரித்திருந்தது.

     "பதினைந்து வருஷம் ஆச்சு! அப்போதிருந்த ராட்சதத் தனம் அந்த மனுஷனுக்கு இன்னும் போகவில்லை" என்றான் செங்கோடன்.

     மகுடபதி இந்த விவரத்தைக் கேட்டு, மிக்க ஆச்சரியமும் அருவருப்பும் அடைந்ததுடன், கள்ளிப்பட்டிக் கவுண்டரிடம் தான் சிக்கிக் கொண்டால் என்ன பாடுபடுத்துவாரோ என்று எண்ணினான். அவன் அடிவயிற்றை என்னமோ செய்தது.

     இச்சமயத்தில் தூரத்தில் மோட்டார் வரும் சத்தம் கேட்டது. அதே ஹாரன் தான்!

     அந்த ஹாரன் சத்தத்தைக் கேட்டதுமே வண்டிக்காரர்கள் மளமளவென்று வண்டிகளைத் திருப்பிச் சாலையில் ஒரு ஓரமாகக் கொண்டு போகத் தொடங்கினார்கள். வருகிறது யார் மோட்டார் என்று அந்த வண்டிக்காரர்களுக்குத் தெரியும் என்று தோன்றிற்று.

     "நீ பயந்தாப் போலேயே ஆச்சு, தம்பி! கப்சிப் பேசாமல் துணியைப் போர்த்துக் கொந்து படுத்துக்கோ!" என்றான் செங்கோடன்.

     கட்டை வண்டிகளுக்கு எதிரே கொஞ்ச தூரத்திலேயே மோட்டார் நின்றுவிட்டது. அதில் இப்போது நாலுபேர் இருந்தார்கள். கள்ளிப்பட்டிக் கவுண்டர் கையில் துப்பாக்கியுடன் காரிலிருந்து இறங்கியபோது அவ்வளவு வண்டிக்காரர்களுக்கும் குலைநடுக்கம் எடுத்திருக்க வேண்டும். மகுடபதிக்குக்கூட, "என்ன விபரீதம் நடக்கப் போகிறதோ?" என்று தத்தளிப்பாயிருந்தது.

     கவுண்டர் துப்பாக்கியைப் பக்கத்திலிருந்த காட்டுப் பக்கமாய்த் திருப்பிச் சுட்டார்.

     'டுடும்' 'டுடும்' என்று இரண்டு வேட்டுச் சத்தம் அந்த நள்ளிரவின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு கேட்டது.

by C.Malarvizhi   on 01 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.