|
||||||||
நடுநிலைமை போற்றிய நாயகர் |
||||||||
சிலர் நடுநிலைமையோடு நடப்பதாக நடிப்பார்கள் . தங்கள் சுயநலத்தை அதில் கலந்து விடுவார்கள் . ஒரு வீட்டில் குழந்தை பிறந்தது . அதற்கு என்ன பேர் வைப்பது என்பதில் பெற்றோருக்குள்போட்டி வந்துவிட்டது . தனது தந்தையின் பெயராகிய சிவசாமி என்பதைத் தான் வைக்க வேண்டும் என்று குழந்தையின் தாய் விரும்பினாள் . தனது தந்தையின் பெயராகிய கிருஷ்ணசாமி என்பதைத்தான் வைக்க வேண்டுமென்று அப்பா விரும்பினார் . இருவருக்கும் வாக்குவாதம் முற்றிவிட்டது . எதிர்த்த வீட்டுக்காரர் சமாதானப்படுத்த வந்தார் . இருவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நடுநிலைமையோடு தீர்ப்புச் சொல்வதாக சொன்னார் . இருவரும் சம்மதித்தார்கள் . குழந்தைக்கு சிவராமகிருஷ்ணன் என்று பேர் வைத்தார் . அம்மாவின் அப்பா பெயரிலுள்ள சிவசாமியில் சிவனும் , அப்பாவின் அப்பா பெயரிலுள்ள கிருஷ்ணசாமியில் கிருஷ்ணனும் இருந்தது . பெற்றோருக்கு திருப்தி ஏற்பட்டது . ஆனாலும் ஒரு சந்தேகம் எழுந்தது . இடையில் ராமன் என்று வருகிறதே … என்று இழுத்தார்கள் . அது என்னோட அப்பாவின் பெயர் என்றார் தீர்ப்புக் கூறியவர் . நடுநிலைமை தவறாது நடப்பது நல்ல தலைவனுக்கு மகுடமாக அமையும் . இதனை ஜனநாயக பாரம்பரிய கருத்தோடு பேணியவர் பெருந்தலைவர் காமராசர் . பகைவனுக்கும் அருள்வாய் என்ற ஆன்மீக நெறியை அரசியலுக்கும் ஆக்கிக் காட்டியவர் அவர் . 1954 க்குப் பிறகு கட்சித் தலைமைக்குத் தலைவர் காமராசருக்கும் , சி . சுப்பிரமணியம் அவர்களுக்கும் போட்டி ஏற்பட்டது . காமராசரே வெற்றி பெற்றார் . அவருக்கு 93 வாக்குகளும் சி . எஸ் . அவர்களுக்கு 41 வாக்குகளும் கிடைத்தன . ஆனால் கொஞ்சநாளில் அந்தப் போட்டி முனைப்புகளையெல்லாம் பெருந்தலைவர் மறந்தார் . 8 பேர் அடங்கிய தமது அமைச்சரவையில் சி . சுப்பிரமணியம் அவர்களையும் சேர்த்துக்கொண்டார் . அது மட்டுமல்ல , அந்தப்போட்டியில் சி . எஸ் . அவர்களை முன்மொழிந்த பக்தவச்சலம் அவர்களையும் சேர்த்துக்கொண்டார் . தந்தை பெரியாரோடு கொள்கை அடிப்படையில் கருத்து வேற்றுமை இருந்த போதும் , அவரோடு நல்லுறவு கொண்டிருந்தார் . காமராஜ் என்றிருந்த பெருந்தலைவரின் பெயரை மேடைகள் தோறும் ‘ காமராசர் ’ என்ற நல்ல தமிழில் குறிப்பிட்டு அப்பெயரை மக்கள் நடுவே புழக்கத்தில் கொண்டு வந்தவர் பெரியார் . ‘ பச்சைத்தமிழன் ’ ன்று அவரைக் குறிப்பிட்டார் பெரியார் . ஊர்மேடைகளில் வேறுபட்டு நின்றாலும் உள்ள மேடைகளில் ஒன்றாய் விளங்கினார்கள் அறிஞர் அண்ணாவும் , பெருந்தலைவரும் . அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே மூன்றுபடி அரிசி கேட்டுப் போராட்டம் வெடித்தது . “ புது அரசாங்கத்திற்கு 6 மாத கால அவகாசம் போதுமானதல்ல . திட்டங்களை நிறைவேற்ற மக்கள்மேலும் அவகாசம் தர வேண்டும் ” ன்னு அறிக்கை விட்டுப் போராட்டத்திற்கு முடிவு கண்டார் பெருந்தலைவர் . போட்டியாக வந்தவர் என்ற பொறாமைக் குணம் பெருந்தலைவரிடம் தோன்றவே இல்லை . “ தமர் எனக்கோல் கோடாது பிறர் எனக்குணங்கொள்ளாது ” செயல்படுவது சிறந்த நடுநிலையாளருக்கு அழகு என்று புறநானூறு கூறும் . அதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர் . |
||||||||
by Swathi on 02 Sep 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|