ஒரு வேளை உண்பவன் யோகி இரு வேளை உண்பவன் போகி மூன்று வேளை உண்பவன் ரோகி
யோகிகள் என்பவர்கள் துறவற வாழ்க்கையை மேற்கொண்டவர்கள். அவர்கள் ஒரு நாளிற்கு ஒருவேளை மட்டுமே உண்ண வேண்டும். அப்போதுதான் யோகத்தின் உயர்ந்த நிலைகளை அடைய முடியும். அதற்கு மேல் உண்டால் அவர்கள் செய்யும் யோகப் பயிற்சிகளுக்கு அது இடையூராக அமையும்.
போகிகள் என்பவர்கள் இல்லற வாசிகள். அவர்கள் ஒரு நாளிற்கு இரு வேளை உண்ண வேண்டும். அவர்களுடைய வேலைகளுக்குத் தகுந்த அளவு உண்ண வேண்டும். இரு வேளை உணவிற்கு மேல் உண்ணக்கூடாது. அதற்கு மேல் மூன்று அல்லது நான்கு வேளை உண்டால் அதுவே நோய் உண்டாகக் காரணமாகும் என்பது சித்தர்களின் கருத்து.
இந்த அடிப்படையில் உண்ண வேண்டும் என்றால் அதற்கு உடம்பைப் பழக்கப்படுத்த வேண்டும். ஏனெனில் பலர் மூன்று வேளை உண்டு உடலைப் பழக்கப்படுத்தி விட்டனர். தற்போதைய வேலைகளும் மக்களின் செயல்களும் மூன்றாவது வேளை உணவு உண்ணக் காரணமாகி விட்டன.
இரண்டு வேளை உணவினை அவரவர் வேலைகளுக்குத் தகுந்தாற்போல் அமைத்துக் கொள்ளல் வேண்டும். அந்த இருவேளை உணவுகளில் கீரை, காய், பயிறு, இஞ்சி, மிளகு போன்ற எல்லா ஊட்டச்சத்துகளும் அறுசுவைகளும் நிறைந்திருக்க வேண்டும். இதனைத் தாண்டி பசி ஏற்பட்டால் மூன்றாம் வேளை எளிதில் சீரணமாகும் உணவு எடுத்துக் கொள்ளலாம். அது பெரும்பாலும் கஞ்சியாகவோ, பழங்களாகவோ இருந்தால் நல்லது.
இரவு உணவு எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும் ?
இரவு உணவு 6.30 pm to 7.30 pm க்குள்ளாக எடுத்துக் கொள்ளல் வேண்டும். இரவு உணவு உண்டபின் குறைந்தது 3 மணி நேரம் கழித்துதான் உறங்க வேண்டும்
சிலர் வீட்டிற்கு வருவதற்கே 9.00 pm ஆகிவிடுகின்றது. அது போன்ற நிலையில் பழங்கள், பயிறு வகைகள் ( வேர்க்கடலை, பாதம் போன்றவை ) போன்றவற்றை 7.00 pm க்குள்ளாக சாப்பிட வேண்டும். வீட்டிற்கு வந்த பின்பு தேன் கலந்த நீர், பழச்சாறு, மிளகு கலந்த மோர் போன்றவற்றை அருந்திய பின்பு 1 மணி கழித்து உறங்கச் செல்லலாம்.
இரவு உணவு உண்டவுடன் உறங்கச் செல்லக் கூடாது. அதனால் பல தீமைகள் விளையும். சிலவற்றைப் பார்க்கலாம்.
1. ஆழ்ந்த உறக்கத்திற்கு இடையூறு ஏற்படும். சாப்பிட்டவுடன் உறக்கம் வரும். ஆனால் சிறு இடையூறுடன் கூடிய உறக்கமே சிறிது நேரத்திற்கு தொடரும். அதனை நம்மால் உணர இயலாது. ஆனால் உள் உறுப்புகளுக்கு அது வேலைப்பளுவினை அதிகரிக்கும்.
2. உடல் வெப்பத்தினை அதிகப்படுத்தும். உயிர் ஆற்றலின் சமச்சீர் நிலை ( Equilibrium of life force ) பாதிக்கப்பட்டு உடலிற்கு குழப்பத்தையும் மனதிற்கு அமைதிக் குலைவினையும் ஏற்படுத்தும்.
3. இரத்த சர்க்கரை அளவினை அதிகப்படுத்தும். கணையம் மற்றும் வயிற்று உறுப்புகளுக்கு வேலைப்பளுவினை அதிகப்படுத்துவதால் அது சர்க்கரை நோய் ஏற்பட வழியாகும்.
4. ஆழ்ந்த இரவு உறக்கத்தால் பல நாளமில்லா சுரப்புகள் ( Hormones ) இயல்பாக உருவாகும். குறிப்பாக மெலடோனின் ( Melatonin ). இது மன அமைதிக்கும் உடலின் பல நன்மைகளுக்கும் காரணமாக அமையும். இடையூருடனான உறக்கத்தால் மெலடோனின் குறைவாகச் சுரந்து பல் நோய்கள் தொடரக் காரணமாகின்றது.
5. தொடர்ச்சியாக இரவு உண்டவுடன் உறங்கும் பழக்கமுள்ளவர்களுக்கு இரத்தக் கொதிப்பு ( Hyper Tension ), இதய நோய்கள் ( Coronary artery heart disease ), உடல் பருமன், வயிறு மற்றும் குடல் சார்ந்த நோய்கள் வருவதாகப் பல தற்கால ஆய்வுகள் கூறுகின்றன.
என்ன சாப்பிடலாம் ?
1. தானியக்கஞ்சி சிறந்த இரவு உணவாகும். தனியாக கேழ்வரகு, உளுந்து, பாசிப்பயிறு, கம்பு, வரகு, சாமை போன்ற வற்றை மாவாக்கிக் கஞ்சியாகச் செய்து பருகலாம் அல்லது இரண்டு மூன்று தானியங்களைக் கலந்தும் கஞ்சியாகச் செய்து பருகலாம். இனிப்புக் கஞ்சி வேண்டுமென்றால் பனை வெல்லமும் காரச்சுவைக் கஞ்சி என்றால் இஞ்சி, பூண்டு, மிளகு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். இனிப்புக் கஞ்சியுடன் பழங்களை மசித்துப் போட்டும் உண்ணலாம்.
2. நன்றாக வேகவிட்ட காய்களுடன் இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து கூழ் போல செய்து சாப்பிடலாம்.
3. தேனும் பழங்களும் கலந்து உண்ணலாம்.
4. நன்றாக வேகவிட்ட வேர்க்கடலையுடன் ஏலக்காய், பனைவெல்லம், தேங்காய்த்துருவல் சேர்த்து கடைந்து ( மசிய வைத்து ) சாப்பிடலாம்.
5. புழுங்கல் அரிசி, பூண்டு, வெந்தயம், சுக்கு, சீரகம், கலந்து நீர்விட்டு நன்றாக வெந்தபின்பு கடைந்து சாப்பிடலாம்.
6. பசி குறைவாக இருந்தால் காய் வேகவிட்ட நீரில் மிளகு, உப்பு சேர்த்தோ தேன் வெந்நீர் கலந்தோ சுக்கு, மிளகு, தனியா, சீரகம் கலந்த சுக்கு வெந்நீரோ பருகலாம்.
7. நீராகாரத்துடன் மோர், உப்பு, சிறிய வெங்காயம் கலந்து பருகலாம்.
8. கூகை மாவு ( Arrow Root ) கஞ்சியுடன் பழங்களை மசித்துப் போட்டு சாப்பிடலாம்.
இவற்றை போன்ற எளிதில் சீரணமாகும் உணவுகளை இரவில் உண்ணலாம். செரிமானத்திற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உணவு பற்றி விரிவாகப் பின்பு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அப்போது இன்னும் சில கருத்துகளை ஆராயலாம்.
நலப்பயணம் தொடரும்..........
|