|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உறக்கமின்மை – தீர்வுகள் – 21 |
||||||||
உறக்கமின்மை – தீர்வுகள்
உறங்கும் நேரம், உறங்கும் முறை பற்றி சென்ற வாரம் பார்த்தோம். உறக்கமின்மை பற்றி இந்த வாரம் பார்க்கப் போகின்றோம். உறக்கம் வராமல் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. மன அழுத்தம், உடல் நோய்கள், உறங்கும் இடம் ( சூழல் ) சரியில்லாமலிருத்தல், நேரம் தவறி உறங்கச் செல்லுதல், உறங்கச் செல்வதற்கு முன்பாக அதிக உடல் உழைப்பில் ஈடுபடுதல், அதிகமாக சிந்தித்தல், உறங்குமிடம் அதிக வெளிச்சத்த்துடன் இருத்தல் போன்றவை முக்கிய காரணங்களாகும்.
ஏதேனும் ஒரு காரணத்தால் உறக்கம் இல்லாவிட்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுமென்று சித்தர்கள் கூறியுள்ளனர்.
நித்திரை யடங்கிப் போக நிகழ்ந்திடுங் கருமங்கேளாய்
நித்தமும் தலைக்கனப்பு நின்ற கண்ணோதலாகி
சித்தத்தில் செவிடுவுண்டாகி தெளிவற பேசலன்றி
வைத்ததோற் உறக்கம் தன்னில் உண்டதோர் வாயுவின் கூறே !
உறக்கம் இல்லாவிட்டால் தலை கனம், வலி, உடல் சோர்வு, உடல்வலி, கண் வலி, கண்ணில் பாரமாக ஏதோ அழுத்துவது போன்ற உணர்ச்சி போன்றவை ஏற்படும். மேலும் சித்தத்தில் செவிடு உண்டாகும் என இந்த சித்தர் பாடல் கூறுகின்றது. அதாவது காது இயல்பான நிலையில் இருக்கும். ஆனால் சத்தங்களையோ, இசையை யோ, பேச்சினையோ கேட்டு மூளையால் புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்காது.
இதனையே சித்தத்தில் செவிடு என அந்த சித்தர் கூறுகின்றார். இதன் தொடர்ச்சியாக தெளிவில்லாத பேச்சும் உண்டாகும். நாம் பேச நினைப்பதை முழுமையாகத் தெரிவிக்கும் ஆற்றல் படிப்படியாகக் குறையும். உடலில் வளி ஆற்றலில் ஏற்படும் மாறுபாடே இவற்றிற்கு காரணமாக உள்ளது.
இவற்றைத் தவிர தலைசுற்றல், வாய்க்கசப்பு, வாந்தி, குமட்டல் (Nausea & Vomiting), உணவு செரிக்காத நிலை, சோம்பல், பயம், மனச் சலனம், கோபம் ஏற்படும்.
உறக்கம் இல்லாவிட்டால் ஏற்படும் உடல் பாதிப்புகளும் மன பாதிப்புகளும் ஏராளம். இவற்றில் மிகவும் முக்கியமானவை சித்தத்தில் செவிடும் தெளிவற்ற பேச்சுமாகும். இதனை இக்காலத்தின் பல ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
உறக்கம் குறைவதால் மூளையின் இயக்கம் பெருமளவு பாதிக்கப்படுகின்றது. இதனால் நினைவாற்றல் குறைந்து மனப்பதற்றமும், மனச் சோர்வும் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொடர் உறக்கமில்லா நிலையினால் தாய்மொழியிலேயே தெளிவாகப் பேசும் ஆற்றல் குறையும். கால நிலை மாறுபாடுகளை உணரும் ஆற்றலும் முடிவெடுக்கும் ஆற்றலும் மிக மோசமாகப் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கின்றது. இவற்றால் மன அழுத்தமும் ( Stress ) அதி இரத்த அழுத்தமும் ( Hypertension ) தொடரும். உடல் இயங்கியல் மாற்றங்களால் உடல் பருமன் ( Obesity ) ஏற்படுகின்றது.
உறங்கும் போது ஏற்படும் உடல் இயங்கியல் மாற்றங்களை உலகின் பல ஆய்வாளர்கள் அறிந்துள்ளனர். ஆழ்ந்து உறங்கும் பழக்கத்தினால் நினைவாற்றல் மேம்படும், புதிய மொழியினையும், புதிய தொழில் நுட்பத்தினையும் கற்றுக் கொள்ளும் ஆற்றல் மேம்படுகின்றது. மனக்குவிப்புத்திறனும், குறிக்கோளை நோக்கி மனதைச் செலுத்தும் ஆற்றலும், விழிப்புடன் செயல்படும் அறிவும், எச்சரிக்கை உணர்வும் தெளிவும் ஆழ்ந்த உறக்கத்தால் மேம்படுவதே மேற்கண்ட நல்ல குணங்கள் ஏற்படுவதற்கு அடிப்படையாகின்றன.
உறக்கமின்மையாலோ பிரச்சனைகளுடன் கூடிய உறக்கத்தலோ மேற்கண்ட நன்மைகள் கிடைபதில்லை. நவீன வேதி மருந்துகளால் உண்டாகும் ஆழ்ந்த உறக்கத்தாலும் நன்மைகள் இல்லை.
உறக்க்மின்மைக்காக இயற்கையான வழிகளைத் தேடுவதே சிறந்தது.
இயல்பான ஆழ்ந்த உறக்கம் உண்டாகும் வழிகள்:
1. அதிகாலை 4 மணியிலிருந்து 5.30 மணிக்குள் விழிக்க வேண்டும். அப்போதுதான் புத்திக் கூர்மையும் மனத் தெளிவும் சுறு சுறுப்பும் உண்டாகும். இரவு உறக்கமும் தடையின்றி அமைதியாக அமையும். ( துயில் எழுதல் பகுதியை பார்க்கவும் ).
2. பகல் உறக்கம் கூடாது. இரவு 6 மணி நேரத்திற்க்குக் குறைவாக உறங்குபவர்களுக்கு சில அறிவுரைகளுடன் விதிவிலக்குண்டு.
3. பகலில் ஈடுபாட்டுடன் எந்த வேலையையும் செய்தல் வேண்டும். அன்று நாம் செய்ய எண்ணிய வேலைகளை முழுமையாகவும் மன நிறைவுடன் செய்தல் வேண்டும். அந்த வேலை தாமதமாவதற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது.
4. அன்று நாம் செய்யும் செயல்களினாலோ சொற்களாலோ யாரையேனும் மனம் புண்படுத்தியிருந்தால் அதற்காக மனதால் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். முடிந்தால் தொலைபேசியில் பேசிவிடலாம். இந்த மன்னிப்புக் கேட்கும் மனப்பான்மையால் வரும் காலங்களில் நாம் செய்யும் தவறுகள் குறையும். நம்மைச் சுற்றி அன்பு ஆற்றல் உருவாகும். இயல்பான உறக்கத்திற்கு இது வழிவகுக்கும்.
5. விவாதத்திற்குரிய பிரச்சனைகளை உறங்கும் முன் பேசக் கூடாது. மிகவும் முக்கியமாக இல்லாவிடில் மறுநாளிற்கு தள்ளிவிடல் வேண்டும்.
6. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்வுடனிருக்கிறார்களா என உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
7. இரவு உணவினை 7 மணிக்குள் முடித்துக் கொள்ளல் வேண்டும். காபி, தேநீர் போன்ற மன ஊக்கி பானங்களை தவிர்க்க வேண்டும். இரவு உணவில் காரம், புளிப்பு, உப்பு அளவோடு இருக்க வேண்டும். எண்ணெய் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
8. இரவு உணவிற்குப் பின்பாக அரை மணிநேரம் கழித்து மெதுவாக நடை பயிற்சி செய்ய வேண்டும். இனிமையாக நிகழ்ந்த அன்றைய நிகழ்வுகளை அப்போது மனதில் அசைபோட்டுக் கொள்ளலாம்.
9. மூச்சுப் பயிற்சியும், மனப் பயிற்சியும் ஆழ்ந்த உறக்கத்திற்கு வழி வகுக்கும். ( இவற்றை யோகப் பயிற்சி என்ற தலைப்பில் பின்பு காணப் போகின்றோம். அதுவரை அமைதியாகக் காற்றோட்டமான பகுதியில் அமர்ந்து ஆழ்ந்து மூச்சு விடுங்கள். மூச்சு உள்ளே செல்லும் போது நல்ல ஆற்றல் உடலிற்குள் செல்வதாகவும் மூச்சு வெளியே செல்லும் போது உடலின் உள்ளே உள்ள கேட்ட ஆற்றல் வெளியே செல்வதாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்படி செய்வதால் இயல்பான உறக்கம் ஏற்படும்).
10. உறங்கும் அறை காற்றோட்ட முடையதாக இருத்தல் வேண்டும். இயற்கையான மூலிகைக் காற்று நிறைந்திருந்தால் இன்னும் நலம். துளசி, மல்லிகை போன்றவற்றிலிருந்து வரும் மணம் இயற்கையான ஆழ்ந்த உறக்கத்திற்கு வழி வகுக்கும். சுவாசித்து விடும் மூச்சு வெளியேறவும் புதிய காற்று அறைக்குள் வரவும் வசதியானதாக படுக்கை யறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
11. இரவு சிறுநீர், மலம் கழித்து விட்டு உறங்கச் செல்ல வேண்டும்.
12. உறங்குவதற்கு ஏற்ற படுக்கைகள் ஏராளம் உள்ளன. அவை ஒவ்வொன்றின் குணங்களும் சித்தர்களால் விளக்கப்பட்டுள்ளன. (கோரைப்பாய், மூங்கில் பாய், மரக்கட்டில்கள், பருத்தித் துணி போன்றவை) அவற்றை உடல் வாகிற்கு ஏற்றவாறும் பருவ மாற்றங்களுக்கு ஏற்றவாறும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். உடல் சூடு உடனடியாக மாறாதவாறு படுக்கையையும் உடலை மூடிக் கொள்ளும் துணியையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.
13. உறங்கச் செல்லும் நேரமும் துயில் எழும் நேரமும் நாளுக்கு நாள் மாறக் கூடாது. விடுமுறை நாட்களில் அதிக நேரம் விழித்திருப்பதும் காலை அதிக நேரம் உறங்குவதும் கூடாது.
14. உறங்கும் போது ஏற்படும் பெரிய ஒலியால் உறக்கம் கலையும். இதனால் இதயம் முதலான பல உறுப்புகள் பாதிப்புக் குள்ளாகின்றன. ஒலியால் இரவு உறக்கம் கலையாதது போன்ற அமைப்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இரவில் அதிக நேரம் கண் விழிப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் ?
இரவில் அதிக நேரம் கண் விழித்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் பகலில் உறங்கலாம். அப்படி உறங்கப் போகும் போது உண்ணக் கூடாது. ஒருவேளை பசி இருந்தால் குளித்து விட்டு உண்ண வேண்டும். பின்பு ஒன்றிலிருந்து இரண்டு மணிநேரம் கழித்து உறங்கலாம். இரவு எவ்வளவு நேரம் உறக்கம் குறைந்ததோ அதை விட பாதியளவு மட்டுமே பகலில் உறங்க வேண்டும். அதன் பின்பாக எழுந்து மீண்டும் ஒரு முறை குளிக்க வேண்டும்.
தொடர்ச்சியாக இரவு விழித்திருக்க வேண்டியிருந்தால் எண்ணெய் தேய்த்து உடலைத் தொக்கணம் ( Massage ) செய்து கொள்ள வேண்டும். வேறு யாராவதுதான் தொக்கணம் செய்தல் வேண்டும். அப்போது ஒன்பது வாயில்களிலும் எண்ணெய் விட்டு ஊறவிடல் வேண்டும் (எண்ணெய் இட்டு குளித்தல் என்ற தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது)
உறக்கமின்மைக்கான எளிய தீர்வுகள்
1. இரவு உணவு 7 மணிக்குள் முடித்துவிட வேண்டும். இரவு உணவு எளிதில் செரிக்கும் படியானதாக இருக்க வேண்டும்.
2. இரவு உறங்கும் முன் தேன் கலந்த குளிர்ந்த நீர் பருகலாம்.
3. மாலையில் அல்லது எல்லா முக்கியமான வேலைகள் முடிந்த உடன் தூய நீரினால் குளிக்க வேண்டும்.
4. துளசி இலை, சீரகம் – ஒரு தேக்கரண்டி, மல்லி விதை – ஒரு தேக்கரண்டி கலந்து 300 மி. லி. நீர்விட்டு 150 மி. லி. யாக வற்றும் படியாக காய்ச்சி வடிகட்டி தேன் அல்லது பனை வெல்லம் கலந்து மாலையில் அல்லது உணவிற்குப் பின் 2 மணி கழித்து பருக வேண்டும்.
5. கசகசா 1 பங்கு, சோம்பு 2 பங்கு பொடி செய்து கொண்டு அந்தப் பொடியில் 1 தேக்கரண்டியளவு வெந்நீரில் கலந்து பனை வெல்லம் சேர்த்து பருகலாம்.
6. அதிமதுரம், சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய் சம அளவு பொடி செய்து கலந்து கொண்டு தேக்கரண்டி 200 மி. லி. நீரில் போட்டு கொதிக்க விட்டு 100 மி. லி. யாக வற்றும்படி காய்ச்சி வடிகட்டி இரவு குடிக்க வேண்டும்.
7. துளசியை பருத்தித் துணியில் கட்டி தலையணைக்கு மேல் தலைக்கு அடியில் வைத்துப் படுத்தால் உறக்கம் வரும். துளசி இலையை தேங்காய் நெய்யில் போட்டுக் காய்ச்சி உச்சியிலும் பாதத்திலும் 4 சொட்டு விட்டு நனராகத் தேய்த்து விட்டு படுத்தால் உறக்கம் வரும்.
8. பஞ்ச கல்பப் பொடி ( குளியல் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது ) போட்டு குளித்து வந்தால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். உடல் சோர்வு, வலி இருந்தால் எண்ணெய் தேய்த்து குளியல் பொடி போட்டு வெந்நீரில் குளித்தல் வேண்டும்.
9. அமுக்கரச் சூரணம் ( சித்த மருந்து கடைகளில் கிடைக்கும் ) 1/2 தேக்கரண்டி தேன் அல்லது வெந்நீரில் கலந்து இரவு அருந்துவதால் இயல்பான உறக்கம் ஏற்படும். உடல் வலுவாகும். எந்த கெடும் ஏற்படாது.
மேலே கூறியவை அனைத்துமே எந்த பக்க விளைவுகளும் ஏற்படுத்தாத தீர்வுகளாகும். ஏதேனும் ஒரு நோய் காரணமாக உறக்கமின்மை ஏற்பட்டால் உங்கள் மருத்துவரை ஆலோசிக்கவும்.
நலப்பயணம் தொடரும்............ |
||||||||
by Swathi on 02 Feb 2015 0 Comments | ||||||||
Tags: சித்த மருத்துவம் Siddha Maruthuvam Thookam Inmai Insomnia Treatment தூக்கமின்மை உறக்கமின்மை | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|