|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம் : பல் தூய்மை – 6 |
||||||||
பல் தூய்மை சென்ற வாரம் துயில் எழுதல் பற்றிய விளக்கங்களை அறிந்தோம். இப்போது பல் தூய்மை பற்றிய கருத்துக்களை தெளிவாக அறிய உள்ளோம்.
ஒரு வேண்டுகோள் இத்தொடரினைப் படிக்கும்போது அதன் கருத்துக்களை நாம் முழுமையாக உள்வாங்கி அதனை நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். அவற்றில் ஏற்படும் ஐயப்பாடுகள் எதுவாக இருந்தாலும் வினாக்கள் மூலம் தெரிவித்தால் அவற்றைத் தீர்க்கும் விதமாக விளக்கங்கள் அடுத்தடுத்த வாரங்களில் உங்களுக்கு இந்தத் தொடர்மூலம் தெரிவிக்கப்படும். அன்றாட வாழ்வில் சித்த மருத்துவ வாழ்வியல் முறைகளைப் பின்பற்றி நலமான வாழ்வு எல்லோரும் வாழவேண்டும் என்பதே இத் தொடரின் முக்கியக் குறிக்கோள் என்பதை மீண்டும் இவ்விடத்தில் உங்களுக்கு நினைவுபடுத்தித் தொடர்கிறேன்.
பல் தூய்மைப்படுத்துவது பற்றி பல்வேறு பல் ஆய்வு நிறுவனங்கள், பல் மருத்துவ நூல்கள், பல்பசை தயாரிக்கும் நிறுவனங்கள் வேறுபட்ட பல கருத்துக்களைத் தெரிவிக்கின்றன. தமிழர்களின் பாரம்பரிய முறை, சித்தர் நூல்கள் கூறும் முறை, நவீன ஆய்வுகளின் கருத்துக்கள் இவற்றின் அடிப்படையில் பல்தூய்மைப்படுத்தும் முறைகளை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
பொதுவாக பல்துலக்கும் தூரிகையில் (Tooth Brush) ஏதேனும் ஒரு பற்பசையை வைத்து பல் துலக்குவது என்பது இன்றைய காலத்தில் வழக்கமாக உள்ளது. இதுவே பெரு நகரங்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானோரின் பயன்பாடாக இருப்பது புள்ளிவிபரத்தில் நமக்குத் தெரிய வருகின்றது. இது சரிதானா? என்ற கேள்விக்கு பின்வரும் விளக்கங்கள் பதிலாக அமையப் போகின்றது.
முதலில் தற்போது சந்தையில் விற்பனையாகும் பல் பசையைப் பற்றி அறிந்து கொள்வோம். பல் பசையின் பயன்பாடு கடந்த 30 ஆண்டுகளில்தான் அதிகமாகியுள்ளது. அதன் முக்கியக் காரணம் விளம்பரங்கள்தான். அவைதான் பற்பசைப் பயன்பாட்டினை பெருவாரியான மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது. பலதரப்பட்ட மக்களும் அதனை ஆராயாமல் பயன்படுத்தி வருகின்றனர்.
பெரும்பாலான முன்னணி பற்பசை தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் தயாரிப்பில் கலந்துள்ள வேதிப் பொருட்களின் கேடுகளை மறைத்து விளம்பரப்படுத்தி விற்பனையைப் பெருக்கிக் கொள்கின்றன. இதில் மூலிகை கலந்துள்ளதாகக் கூறும் நிறுவனங்களும் விதிவிலக்கல்ல. சில முன்னணி நிறுவனத் தயாரிப்பில் கலந்துள்ள வேதிப்பொருட்களின் கேடுகளை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
1. ஃப்ளோரைடு (FLOURIDES) இந்த வேதிப்பொருள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் உடலுக்குள் சென்றால் கேட்டினை விளைவிக்கும். உடலுக்கு உள் சென்றால்தானே? நாம்தான் துப்பிவிடுவோமே எனச் சிலர் எண்ணலாம். வாயின் உட்புறம், நாவின் கீழ்புறம் உள் அடுக்குகளில் உள்ள நுண் இரத்தக் குழாய்கள் வழியே இந்த வேதிப்பொருள் வேகமாக உறிஞ்சப்படும். மாரடைப்பு நோய்க்கு பயன்படுத்தப்படும் நைட்ரோகிளிசரின் (Nitroglycerin) என்ற மருந்துப்பொருள் நாவின் கீழ் வைத்து உடலிற்குள் வேகமாக செலுத்தப்படுவதை நாம் அறிவோம். அதுபோன்றே பற்பசையில் உள்ள வேதிப்பொருட்களும் வேகமாக உட்கிரகிக்கப்படும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இது தவிர தவறுதலாக 20கிராம் முதல் 30 கிராம் வரை ஃப்ளோரைடு கலந்த பற்பசையினை உட்கொண்ட 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பலர் உயிரிழந்த்தை நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்திருக்கிறோம். சிறிது சிறிதாக இந்த வேதிப்பொருள் உடலில் கலப்பதால் தசைத் தளர்வு (Weakness of Muscles) ஏற்படுவதும் சிறிது அதிகமாக உடலில் கலந்தால் வயிற்றுவலி, வாந்தி, மயக்கம், பேதியாவதும் ஆய்வு மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
2. டிரைகுளோசான் (TRICLOSAN) இது மிகவும் மோசமான வேதிப்பொருளாகத் தற்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை சிறிது சிறிதாக உடலில் கலந்தால் நோய் எதிர்ப்பாற்றல் குறையும் இயக்கு நீர்களின் (Hormones) செயல்பாட்டு மாற்றம் ஏற்படும். குறிப்பாக தைராய்டு செயல் மாற்றமும் மகப்பேற்றினை உண்டாக்கும் இயக்குநீர் மாறுபாடுகளும் (Reproductive hormones) முக்கியமானவை. இதயத் தசை இயக்கத்தினைக் குறைக்கும். சிலருக்குப் புற்று நோயும் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
3. நிகோடின் (NICOTINE) இரத்தக் குழாய்களை முதலில் பாதித்து பல உள் உறுப்புகளையும் கெடுக்கக் கூடியது. புகைப் பழக்கத்தால் உடலில் சேரும் முக்கிய நச்சுப் பொருள் இது. இதன் பிற கேடுகள் என்னென்னவென்று நம்மில் பலருக்குத் தெரியும்.
4. செயற்கை இனிப்புகள் (ARITIFICIAL SWEETENERS)
நுண் பற்சிதைவிற்கு இவை காரணமாகும். வேதி இனிப்புகளால் உடலிற்குள் பல கேடுகள் உண்டாகும்.
5. செயற்கை நிறமிகள் (ARTIFICIAL COLOURING AGENTS) சாதாரண ஒவ்வாமை (Allergies) முதல் புற்று நோய் வரை ஏற்படுத்தும் பல நிறமிகள் பற்பசையில் கலக்கப்படுகின்றன. தவிர சோடியம் லாரில் சல்பேட் (Sodium Lauryl Sulfate), சோடியம் சாக்கரின், ஹைட்ரேட்டட் சிலிகா (Hydrated Silica), Carrageenan, Titanium dioxide போன்ற பற்பசையில் கலந்துள்ள வேதிப்பொருட்கள் பல், எயிறு (ஈறு – Gums), நாக்கு போன்றவற்றிற்கு கேட்டினை விளைவிக்கக் கூடியனவாக உள்ளன.
இந்த நச்சு வேதிப்பொருட்களெல்லாம் உடனே கேட்டினை விளைவிக்காமல் சிறிது சிறிதாக உடலில் கலந்து நாட்பட்ட நச்சு நோய்களை ஏற்படுத்துகின்றன. இவை பரவலாக பெரும்பாலான பற்பசையில் கலந்திருக்கின்றன. பிறகு வேறு எதனைக் கொண்டு பல் துலக்குவது? சித்தர்களைக் கேட்போம். மூலிகைகள் மட்டுமே பல்துலக்கப் பயன்படும் பொருட்கள் என்பது சித்தர் நூல்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். துகளிலை காட்டமிவை தொட்டுத் துலக்கில் துகளிலை காட்டாது தோடந் – துகளிலைகண் மெய்த் துவரை யொத்திருக்கின் மேனாள் வரை மூரல் மெயத்துவரை யொத்திருக்குமே - பதார்த்த குண சிந்தாமணி மூலிகைகளின் பொடி, இலை, தண்டு, காய்ந்த குச்சி இவைகளால் பல் துலக்கினால் பற்களில் உள்ள குறைகள் நீங்கி இறுதி நாள் வரை பல்லும் எயிறும் மலையைப் போல் அசைவற்றிருக்கும். பயன்படுத்தும் மூலிகைகள் துவர்ப்பு சுவையுடையனவாக இருக்க வேண்டும். ஆல், வேம்பு, அசோகு, ஆத்தி, இத்தி, கடம்பு, கருங்காலி, நாவல், நாயுருவி, மருது, மா, என சித்தர்கள் பல்துலக்கப் பயன்படுத்தக் கூறும் மூலிகை பட்டியல் மிகவும் நீளமானது. அக்காலத்தில் இவற்றில் ஏதேனும் ஒரு சிறு குச்சியை எடுத்து மிருதுவான முனையை பற்களால் சிறிது சிதைத்து தூரிகை போலாக்கிக் கொண்டு பல்லின் ஈறுகள் துன்புறாமல் பல் துலக்கியுள்ளார்கள். இக்காலத்தில் அதற்கு வாய்பில்லாதவர்கள் மூலிகைகளால் ஆன பல் பொடியினை இக்கால மென்மையான பல் தூரிகை (Tooth brush) கொண்டு பல் துலக்கலாம். எந்த மூலிகைப் பொடியினை பயன்படுத்துவது? ஒரு எளிய மூலிகைப் பொடி முறையினை மட்டும் இங்கே பார்ப்போம். திரிபலைச் சூரணம் 100 கிராம் (கடுக்காய், நெல்லிவற்றல், தான்றிக்காய் அடங்கிய பொடி. இது எல்லா சித்த மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்). வேம்புப்பட்டை பொடி 20 கிராம் கிராம்புப்பொடி 10 கிராம் கல் உப்பு அல்லது படிகாரம் 10 கிராம். இவற்றைக் கலந்து கொண்டால் தரமான பல் பொடி கிடைக்கும். இதனைக் கொண்டு விரலால் பல், ஈறு முழுவதும் நன்றாகத் துலக்கி பின்பு தூரிகையினைப் பயன்படுத்தித் துலக்கலாம். இதன் முக்கியப் பயன் பல், ஈறு,வாய் போன்றவற்றைத் தூய்மைப்படுத்துவதாக இருந்தாலும் மூலிகையின் நுண் துகள்கள் வாய், நாவின் கீழ்புறம் வழியே உடலிற்குள் உறிஞ்சப்பட்டு பல நன்மைகளை விளைவிக்கும்.
1. முக்கியமா உடல் உற்சாகம், மன மகிழ்ச்சி, புத்துணர்ச்சி ஏற்படும்.
2. சீரணம், உடலின் வளர்சிதை மாற்றம் சீராகும். உடல் கழிவுகள் வெளியேறும். பசி உண்டாகும். உடல் பருமன் குறைந்து கட்டுடல் ஏற்படும்.
3. புகை பழக்கம், போதைப்பழக்கம், குடிப்பழக்கத்திலிருந்து சிறிது சிறிதாக விடுபடலாம்
4. உடல் உள் உறுப்புகளின் இயக்கம் சீராகும் உடல் சுரப்புகள் சீராகி இரத்த ஓட்டமும் ஒழுங்குபடும். பல் துலக்கும் சில குறிப்புகளோடு இந்தப் பகுதியை நிறைவு செய்யலாம்.
1. பல்துலக்க அடுப்புக்கரி, மணல், பட்டுப் போன மரக்குச்சிகள் மரப்பட்டை, வைக்கோல் இவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
2. பல் குச்சியோ தூரிகையையோ 45° கோணத்தில் வைத்து பல் துலக்க வேண்டும். மென் தூரிகை கொண்டே பல்துலக்க வேண்டும். மேல் கீழாகவும் பல் ஈறு, பல் சேருமிடங்களை ஒட்டி சுழற்சி முறையாகவும் மென்மையாகத் துலக்க வேண்டும். அழுத்தம் கூடாது.
3. ஒரு நாளிற்கு இருமுறை பல்துலக்க வேண்டும். (நாளின் தொடக்கத்திலும் உறங்கும் முன்பும்) உணவிற்குப்பின் குறிப்பாக இனிப்பு உணவிற்குப் பின் குறிப்பாக இனிப்பு உணவிற்குப்பின் தூய நீர் கொண்டு வாய் கொப்புளித்து விரலால் சிறிது தேய்த்து விட்டால் போதும். சிலவகையான உணவு நச்சுக்கிருமிகள் பல் இடுக்குகளில் தங்கி பல்லை சேதப்படுத்தும் அமிலங்களை சில நிமிடங்களில் உருவாக்கிவிடும். இதற்காக ஒவ்வொரு வேளையும் பல்துலக்க வேண்டாம். நீரினைக் கொண்டு தூய்மைப்படுத்துதலே போதுமானது. காலையில் துலக்கிய மூலிகைப் பொடியின் ஆற்றலே ஈறுகளில் தங்கியிருக்கும்.
4. பல் துலக்கிய பின்பு பல், ஈறு பகுதிகளை மென்மையாகத் தேய்த்து, ஆள்காட்டிவிரல் பெருவிரல்களைக் கொண்டு பற்களின் உள்புறமும் வெளிப்புறமும் ஈறு பகுதிகளை மென்மையாக அழுத்திவிடல் வேண்டும். இங்கே குறிப்பிட்டவை அனைத்துமே எளிதாகப் பின்பற்றக் கூடியவை. சில முன்னேற்பாடுகள் செய்து கொண்டால் போதுமானது. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி உடல் நலப் பயணம் தொடரும்……
|
||||||||
by Swathi on 21 Oct 2014 0 Comments | ||||||||
Tags: Dental Care Tips பல் தூய்மை பல் மருத்துவம் பல் விலக்குவது எப்படி பல் விலக்கும் முறை சித்த மருத்துவம் Siddha Maruthuvam | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|