LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம் : கழிவு நீக்கம் – 9

கழிவு நீக்கம்


வளர் சிதை மாற்றத்தின் கழிவுப் பொருட்களும் பிற பயனற்ற பொருட்களும் ஓர் உயிரினத்திலிருந்து வெளியேற்றப்படுவதை பொதுவாகக் கழிவுநீக்கம் எனலாம்.

 

உடற் கழிவுகள் நீக்கப்படுவதில் திடக்கழிவாக மலமும் நீர்க்கழிவாக சிறுநீரும் முக்கியமாகும். நுரையீரல் வழியாகவும் தோலின் வழியாகவும் உடற்கழிவுகள் வெளியேறும்.

 

இந்த வாரம் மலம் கழித்தலைப் பற்றி மட்டுமே முக்கியமாகத் தெரிந்து கொள்ள உள்ளோம்.

 

அதிகாலையிலேயே துயிலெழுவதால் மலம் கழித்தல் நிகழ்வு முழுமையாகவும் கடினமின்றியும் நிகழும். செரிமானப் பாதையாகிய ( Digestive tract ) குடலிலிருந்து குதம் எனப்படுகின்ற மலக்குடல் ( Rectum ) வழியே திடக் கழிவுகள் வெளியேற்றப் படுவதையே மலம் கழித்தல் என்கிறோம். உடல் நலத்தைப் பாதுகாப்பதற்காக அன்றாடம் செய்யும் செயல்களில் இது மிகவும் முக்கியமானது.

 

இது ஒரு நாளிற்கு இருமுறை நிகழ்வதையே நலமாகச் சித்தர்கள் கூறுகின்றனர். குறைந்தது ஒரு நாளிற்கு ஒரு முறையாவது கழிவுகள் வெளியேற்றப்படும் பழக்கத்தை சிறு குழந்தைகளுக்குக் கற்றுத் தரல் வேண்டும்.

 

ஒரு முறை எங்கள் மருத்துவமனைக்கு வந்த எட்டு வயதுச் சிறுமியை நான் பரிசோதித்துக் கொண்டிருந்த போது அச்சிறுமியின் தாத்தா என்னிடம் “அவள் காலையில் எழுந்ததும் மலம் கழிப்பதில்லை. மதியம், மாலை என வழக்கத்திற்கு மாறாகச் செய்கிறாள்” எனக் கூறியபோது அந்தச் சிறுமி “தாத்தா அசிங்கமாகப் பேசாதீர்கள்” எனக் கூறினாள். இது அந்தப் பெண்ணின் பெற்றோர்களின் தவறு.

 

இது போன்ற பழக்க வழக்கங்களை முறையாக நாம் அடுத்த தலைமுறைக்குக் கற்றுத்தராமல் விட்டு விட்டால் நலக் கருத்துக்கள் மறைந்து போய்விடும். காலை துயில் எழுந்ததிலிருந்து ஒரு மணிநேரத்திற்குள்ளாக மலம் கழித்தல் வேண்டும். நலமாக உடலைப் பாதுகாத்துக் கொண்டிருப்பவர்கள் முழுமையாகக் கழிக்க ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். 10 நிமிடங்களுக்கு மேல் தேவைப்பட்டால் உடல் இயக்கத்தில் சிக்கல் இருப்பதாகத் தெரிந்து கொள்ளலாம். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கழியுமானால் உடலில் சிக்கல் அதிகமாகி பல நோய்கள் உடலில் உருவாக வழியாகும்.


“மலச்சிக்கல் உண்டானால் வரும் நலச் சிக்கல்கள் பல” என்று முன்னோர்கள் கூறுவதை நாம் கேட்டிருப்போம்.


நாம் உண்ணும் உணவு செரிமானமான பின்பு அதன் சத்து ஏழு உடற்கள் அடங்கிய உடலில் சென்று சேர்ந்து அதனை வலிமைப்படுத்தும். வலிமையான உடல் கழிவுகளால் பாதிக்கப் படாமலிருப்பதற்குக் கழிவு நீக்கம் மிகவும் அவசியம். திருமூலர் ஒரு பாடலில்

 

         அருந்திய அன்னம் அவை மூன்று கூறாம்

         பொருந்தும் உடல் மனம் போ மலம் என்னைத்

         திருந்தும் உடல் மனம் ஆங்கூறு சேர்ந்திட்டு

         இருந்தன முன்னாள் இரதமாகுமே

                                   - (திருமந்திரம் 1933)

என்று கூறுகிறார்.

 

அதாவது உண்ட உணவு மூன்று கூறாக மாறும். அதில் ஒருபகுதி உடலை வளர்க்கும். இரண்டாம் பகுதி உயிர், மனம் போன்ற நுட்பமான உடலின் பகுதிகளுக்கு உணவாகும் ( Subtle body ). மூன்றாம் பகுதி சக்கையாக உடலில் உற்பத்தியாகும் கழிவுகளோடு மலமாக வெளியேறும். இந்தப் பகுதியே உடலைத் தூய்மையாக்கும் பகுதியாகும் எனக் குறிப்பிடுகின்றார். ( உடல், உயிர் பற்றிய விளக்கங்கள் தொடரின் முதல் நான்கு பகுதிகளில் கொடுக்கப் பட்டுள்ளன.) உடல் வலிமையாக இருப்பதற்கு இந்த மூன்று நிகழ்வுகளுமே சீராக நடக்க வேண்டும் என்பது அவருடைய கருத்து.

 

மலங்கழித்தலில் திடக்கழிவுகள் 100 கிராம் முதல் 400 கிராம் வரை வெளியேற வேண்டும். அதில் கிட்டத்தட்ட முக்கால்வாசி ( 75% ) நீர்மமும் கால்வாசி ( 25% ) திடப் பொருட்களும் அடங்கியிருக்கும். திடப் பொருளில் பெரும்பாலும் சீரணிக்க இயலாத உணவுப் பொருட்களும் இறந்த நுண் கிருமிகளும் ( Dead Bacteria ), கொழுப்புப் பொருட்களும், புரதமும், சில வேதிப் பொருட்களும் (Inorganic Substances calcium, phosphorus etc;) குடலின் உட்புறச் சவ்வின் உதிர்ந்த செல்களும் அடங்கியிருக்கும்.

 

மலங்கழித்தல் என்பது நம் உடலில் நடக்கும் செரிமானத்தின் இறுதி நிகழ்வு என்பதை நாம் தெரிந்து கொள்ளல் வேண்டும். பெருங்குடலிருந்து மலக்குடலுக்கு (Rectum) கழிவுகள் சிறிது சிறிதாகத் தள்ளப்படும். அங்குள்ள தற்காலிக அமைப்பில் ( Rectal ampulla ) அவை சேகரிக்கப்படும். அந்த பகுதி நிரம்பியவுடன் மலக்குடல் தசை நீட்சியடைகிறது. அங்குள்ள சிறப்பான நரம்பு மண்டலம் நீட்சி ஏற்பிகள் ( Stretch receptors ) மூலம் தூண்டப்படுவதால் மலம் கழிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படும். அப்போது உள் மலத் துளையின் தசை ( Internal anal sphincter ) தளர்ந்து வெளி தசை விரிவடைந்து மலக்கழிவு வெளியேறுகிறது. இந்த மொத்த நிகழ்விற்கும் குடலின் முன்னோக்கிய சுருங்கி விரியும் இயக்கமே (Peristalsis) காரணமாகின்றது.

 

இதுபோன்ற மலம் கழிக்கும் எண்ணம் ஏற்பட்டவுடன் கழிக்காவிடில் மலக்குடலிலிருந்து கழிவானது குடலிற்கு மீண்டும் தள்ளப்படும். இதற்கு குடலின் பின் இயக்கம் (Reverse Peristalsis ) என்று பெயர். பின்புறமாக சென்ற மலக்கழிவில் உள்ள 75%  நீர்மம் குடலால் உறிஞ்சப்படும், இதனால் கழிவின் அளவு குறைந்த கடின நிலையை அடைகிறது. இது மலச்சிக்கல் ( Constipation ) எனப்படுகிறது. இதுவே நீரினை முழுவதும் உறிஞ்சும் முன் கழிவு வெளியேற்றப்பட்டால் மலம் அதிக நீருடன் நீர் பேதியாகும் ( Diarrhoea ).

 

மலக்கழிவு வெளியேறும்போது மூச்சை அடக்குவது உதவியாக இருக்கும். அப்போது சுவாசத் தசைகள், உதர விதானம் ( Diaphragm ), வயிற்றுத் தசைகள் சீரணப் பாதையில் கொடுக்கும் அழுத்தத்தால் அழுத்த ஆற்றல் கீழ்நோக்கி நகர்கிறது. இந்த ஆற்றலை சித்தர்கள் கீள்நோக்குங் காற்று ( அபான வாயு ) என்றழைக்கின்றனர். இந்த வாயுவின் ஆற்றல் இயல்பாக கீழ்நோக்கியே இருக்கும். மலச்சிக்கலால் இந்த ஆற்றல் மேல்நோக்கி நகரும். அது பல உடல் இயக்கச் சீர்கேட்டிற்குக் காரணமாகும்.

 

மலம் சீராகக் கழிக்கும் வழிகள்: 

 

    காலை 4 மணி முதல் 5 மணிக்குள் எழுதல் வேண்டும். ஒருமுகப்பட்ட மன நிலையுடன் பல், வாய் தூய்மை (தொடரின் முன் பகுதிகளைப் பார்க்க ) செய்து விட்டு ஏதேனும் ஒரு பானகத்தினை அருந்த வேண்டும். காலையில் எழுந்தவுடன் அருந்தும் பானங்கள் பற்றி அடுத்து வரும் பகுதிகளில் குறிப்பிடுகின்றேன். இப்போது நீராகாரத்தினைப்பற்றி மட்டும் குறிப்பிடுகின்றேன். பழைய சாதம் மூழ்கும் அளவு நீருற்றி இரவு முழுவதும் ஊறவிட்டு பெற்ற நீரே நீராகாரம் அல்லது நிசி நீர் எனப்படும். இதனை காலையில் 500 மி.லி. முதல் 1 லிட்டர் வரை அருந்தினால் உறக்கத்தால் ஏற்படும் உடம்பின் ஆற்றல் மாற்றங்கள் சமப்படும். அதன் பின்பு 10 நிமிட நேரம் சிறு நடை பயிற்சி செய்தால் மலமும் சிறுநீரும் சீராக வெளியேறும்.

 

மலம், சிறுநீர் சீராக வெளியற்ற எளிய வழிமுறைகள்: 

 

    சிறு நடை, நீராகாரம் உண்ட பின்பும் மலம் வெளியாகாவிடில் இடது புறமாகச் சாய்ந்துபடுத்துக் கொண்டு வலது கையால் கீழ்வயிற்றின் இடப்பகுதியை மென்மையாக அழுத்திக் கொடுத்தல் வேண்டும். அப்போது மூச்சுக் காற்று வலது மூக்குத் துளை வழியே சென்று வர வேண்டும். ( மூச்சுப் பயிற்சி செய்முறையின் போது மூச்சு இயக்கம் மாறி நடத்தல் பற்றிய விளக்கத்தினை நாம் தெளிவாகப் பார்க்கப்போகின்றோம் ) அப்போது மலம் சிக்கலின்றி வெளியேறும். இதே போல் சிறுநீர் சரியாகப் பிரியாவிட்டால் வலதுபுறமாகச் சாய்ந்து படுத்து இடது கையால் வலது கீழ் வயிற்றை மென்மையாக அழுத்திக் கொடுத்தல் வேண்டும். அப்போது மூச்சு இடது மூக்குத் துளை வழியே சென்று வர வேண்டும். இதுவே சித்தர்கள் கூறும் எளிய வழியாகும்.

 

எந்த அமர்வு முறை மலம் கழிக்கச் சிறந்தது:   (Posture for defecation)

குந்தி உட்கார்ந்து மலம் கழிப்பதே சிறந்த முறை. (Squatting posture) தொடையானது வயிற்றுப் பகுதியில் அழுத்தப் படுதல், வயிற்றுப் பகுதியின் உள் அமைப்பு மலம்கழிக்க வசதியாய் இருத்தல் போன்றவற்றால் மலம் முழுமையாக வெளியேறும். மலச்சிக்கல் ஏற்படாது. இது முழங்கால் மூட்டிற்குச் சிறந்த பலத்தைக் கொடுத்து மூட்டு வலி ஏற்படுவதைத் தடுக்கும்.


மலச்சிக்கலுக்கான எளிய தீர்வு முறைகளை நாம் வேறு ஒரு பகுதியில் பார்க்கப் போகின்றோம்.


நலப்பயணம் தொடரும்.....

by Swathi   on 11 Nov 2014  2 Comments
Tags: Siddha Maruthuvam   Selva Shunmugam   சித்த மருத்துவம்   செல்வ சண்முகம்   கழிவு நீக்கம்   Defecation     

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51 நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51
நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50 நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50
நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49 நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை  அடக்கினால் வரும் துன்பங்கள் - 46 நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 46
நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44 நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44
நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43 நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43
கருத்துகள்
10-Mar-2016 03:09:42 திர.த.சதீஷ் KUMAR said : Report Abuse
வெரி இண்டேறேச்டிங் டோபிஸ் அண்ட் அன்ச்வேர்ஸ்.
 
11-Nov-2014 23:37:40 கார்த்திக் said : Report Abuse
இந்த பதிவு இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்று....
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.