|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம் : பேதி மருத்துவம் – அறிமுகம் – 23 |
||||||||
பேதி மருத்துவம் – அறிமுகம் குடலைக் கழுவி உடலை வளர் ‘ என்பது தமிழர் பழமொழி. குடல் தூய்மையாய் இருப்பதன் முக்கியத்துவத்தை சித்தர்கள் உணர்ந்து பேதி மருத்துவத்தை 4 மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளச் சொல்லியுள்ளார்கள்.
சித்த மருத்துவத்தை மேற்கொள்ள வரும் ஒவ்வொருவருக்கும் முதலில் பேதி மருத்துவத்தைக் கொடுத்து விட்டுதான் மற்ற மருத்துவ முறைகளை மேற்கொள்ளச் செய்வோம். ஏனெனில் பல காலமாக அந்த நோயர்கள் பேதி மருத்துவத்தை மேற்கொண்டிருப்பதில்லை. சிலர் பிறந்ததிலிருந்தே இந்த மருத்துவமுறையை நான் கேள்விப்பட்டது கூடக் கிடையாது எனக் கூறுகின்றனர். பாரம்பரியம் மிக்கதான தமிழரின் நோய்வராமல் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை ஒரு தமிழன் கேள்விப்பட்டதுகூட கிடையாது என்பது வியப்பான உண்மை. அதிலும் ஒருபடி மேலே போய் சிலர் இந்த மருத்துவ முறையினை ஏளனம் செய்வதும் இந்த முறையால் யாதொரு நன்மையும் கிடையாது என்று கூறுவதும் வேதனையாகும். இதனைப் படிக்கும் ஒவ்வொருவரும் அதனைத் தாம் பின்பற்றுவதோடு தமக்குத் தெரிந்தவர்களுக்கும் இதனை அறிமுகப் படுத்த வேண்டுகிறேன்.
பேதி மருத்துவம் என்று முதலில் கேள்விப் படுபவர்கள் அதனை மேற்கொள்ள தயங்குவர். ஆனால் ஒருமுறை அம்மருத்துவத்தை மேற்கொண்டவர்கள், தம் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேருக்கும் அம் மருந்தினை பெற்றுச் செல்வார்கள். அவர்களும் அடுத்த நான்காவது மாதம் அவர்களுக்கும் பெற்றுச் செல்வார்கள்.
பலர் இந்த உயரிய மருத்துவ முறையினை மேற்கொண்டு வந்தாலும் இன்னும் சிலருக்குத் தயக்கம் இருந்து வருகின்றது. அந்த மருத்துவ முறையினால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சமே தயக்கத்திற்க்குக் காரணம். உடல் சோர்வு, நீர்ச்சத்து குறைவு நிலை (Dehydration), குடல், வயிறு பாதிப்புகள், மயக்கம், படபடப்பு, வயிற்று வலி, உடல் வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வேறு மருந்துகளை நாட வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற அச்சம் பலருக்கு இன்னும் உள்ளது. அவர்களுக்கு இதன் மூலம் தெரிவிப்பது என்னவெனில் இது உடம்பினைத் தூய்மைப் படுத்தி மேன்மையடையச் செய்யும் காய கற்ப முறையாகும். ( காய கற்ப – உடம்பினை கல்சிலை போல் உறுதியாக்கும் மருத்துவமுறை )
முன்பு காலத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூய்மையான விளக் கெண்ணெய்யை அதிகாலையில் குடித்து விட்டு அன்று முழுவதும் பத்தியம் காத்து குடல் முழுவதும் தூய்மையானதும் மதியத்திற்கு மேல் பத்திய உணவு உண்ணும் பழக்கம் இருந்து வந்தது. இன்றும் கிராமங்களில் இந்தப் பழக்கம் இருந்து வருகின்றது. 50 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் கேட்டால் அவர்கள் விளக்கெண்ணை குடித்த அனுபவத்தை அழகாக வர்ணிப்பார்கள். அதனையே இப்போது நாங்கள் சித்தர் நூல்களின் உதவியோடு எங்களை நாடி வரும் நோயர்களுக்கு மருந்துகளாகக் கொடுத்து வருகின்றோம். அப்படிச் செய்யும் போது குடல் தூய்மையாவதுடன் மருந்துப் பொருட்களின் நுட்பமான மூலக்கூறுகள் உட்கிரகிக்கப்பட்டு உடல் முழுவதும் பரவி உச்சி முதல் பாதம் வரை நிரவியுள்ள மாசுக்கள் உடலை விட்டு வெளியேற வழிவகை செய்கின்றன.
உடல் மிகவும் நுட்பமாக இயங்கும் ஓர் அற்புதப் படைப்பு என ஏற்கனவே பார்த்துள்ளோம். உடலில் ஏற்படும் பாதிப்புகளை நீக்கும் ஆற்றல் உடலிற்கே உண்டு. அதே போன்று உடலில் தங்கியுள்ள மாசுக்களை நீக்கும் ஆற்றல் உடலிற்கு உண்டு. என்றாலும் அது தன்னைத்தானே சுத்திகரிக்கும் ஆற்றலை மேம்படுத்தவும் உயிர் ஆற்றலின் ( Life force ) வேகத்தினை மேம்படுத்தவும் பேதி மருத்துவமும் வாந்தி மருத்துவமும் மற்றும் நசிய மருத்துவமும் ( மூக்கில் மருந்திடல் ) உதவியாகின்றது.
மேலும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உடல் முழுமையும் நச்சுத்தன்மை உருவாக வாய்ப்புள்ளதாக இக்கால பல ஆய்வுகள் கூறுகின்றன. அந்த நஞ்சுக்கள் இரத்த ஓட்டக் குறைப்பட்டையும் குடல் இயக்கக் குறைபாட்டையும் நிணநீர் ஓட்டக் குறைப்பாட்டையும் ஏற்படுத்தும். இதனால் சாதாரண பசிமந்தம், சுரம், தலைவலி முதல் புற்று நோய், இதய நோய்கள் வரை ஏற்பட வாய்ப்புள்ளன. அதாவது இந்த நச்சுப் பொருட்கள் ஒருவரின் வாழ்நாளைக் குறைக்கச் செய்வதோடு நல வாழ்வையும் சீர் குலைக்கும்.
பேதி மருத்துவத்தின் அவசியத்தை பல இக்கால ஆய்வுகள் ஏற்றுக் கொள்ளவில்லை.
பேதி மருத்துவம் எப்படிச் செய்ய வேண்டும் ? அதன் பலன்கள் என்னென்ன ? என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.
நலப்பயணம் தொடரும்............ |
||||||||
by Swathi on 16 Feb 2015 0 Comments | ||||||||
Tags: சித்த மருத்துவம் Siddha Maruthuvam Purgative Treatment Bethi Marunthu பேதி பேதி மருந்து | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|