|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம் – 39 |
||||||||
உடலிலிருந்து வெளியேறும் காற்றினை அடக்குவதால் வரும் துன்பங்கள் – தீர்வுகள்
உடலின் இயற்கையான வேகங்கள் எனப்படும் இயக்கங்களைத் தடுக்கக் கூடாது என சென்ற வாரம் பார்த்தோம். அதில் முதன்மையான உடலிலிருந்து வெளியேறும் காற்றுகளைப் பற்றி இவ்வாரம் பார்க்கப் போகின்றோம்.
செரிமானத்தின் போது
வயிறு, குடல் பகுதியில் இயற்கையாக உருவாகும் காற்று வாய் வழியாக வெளியேறும் . (மேல்க்காற்று, ஏப்பம்) அல்லது மலவாயின் வழியே வெளியேறும் மலக்காற்று - (கீழ்க் காற்று, அபான வாயு). இந்த இரு வகையான காற்றுக்களையும் வெளியேற்றாமல் தடுத்தால் பல துன்பங்கள் ஏற்படும் என சித்தர் நூல்கள் தெரிவிக்கின்றன.
“வாதத்தைத் தடை செய்தாலோ
மார்பினோய் குன்ம வாயு
பேதித்த வுதர வாதம்
பெருகிடும் உடம்பு நோதல்
வாதைகள் திரட்டும் வல்லை
மலசலங் கட்டுப் பட்டுப்
பேதையே பசித்தீ மந்தம்
பெருகியே மலித லுண்டே”
உடம்பிலிருந்து இயற்கையாக வெளியேறும் வாயுவை முழுவதுமாகத் தடை செய்தாலும் சிறிது சிறிதாகத் தடை செய்து வெளி ஏற்றுவதாலும் மார்புப் பகுதியில் காற்று சேர்ந்து கொண்டு குத்தல் வலி ஏற்படும். இந்த நிலை தொடர்ந்தால் வயிற்றுப் பகுதியில் செரிக்கும் தன்மை குறைந்து புளிப்புத் தன்மை மிகுந்து அழற்சி (Inflammation – Gastritis) ஏற்படும். குடல் பகுதியிலும் வாயு தங்கித் துன்பம் விளைவிக்கும். பின்பு உடல் முழுமையும் குத்தல் வலி ஏற்படும். மலமும் சிறுநீரும் வெளியேறுவதில் தடை ஏற்பட்டுத் துன்பமுண்டாகும். பின்பு பசி உணர்வு சிறிது சிறிதாகக் குறையும்.
இப்படி வெளியேற்றாமல் தடுக்கப்பட்ட வாயு இறுதியில் புத்தியையும் மந்தப்படுத்தும்.
மொத்தத்தில் வயிற்றின் உள் உறுப்புகள் (கல்லீரல், மண்ணீரல் போன்றவை), மார்பு உறுப்புகள் (இதயம், நுரையீரல்), மூளை போன்ற முக்கிய உறுப்புகளின் இயக்கங்கள் மாறுபாடடைகின்றன.
மேலும் விதை வாதம் (Inflammation of Scrotum), குடலிறக்கம் (Inguinal and Umbilical hernia), குடல் தளர்வு (Diverticular disease of intestine – creating pockets in the intestinal wall), வயிற்று உப்பிசம் (Floating abdomen) போன்ற பல் நோய்கள் தொடரும்.
வயிற்றில் எப்படி அதிகப்படியான காற்று தோன்றுகிறது?
முக்கியமான இரண்டு காரணங்களால் வயிற்றில் காற்று சேருகின்றது.
1. வாயின் வழியே காற்று உள் செல்லுதல் (aerophagia)
2. உணவின் மீது நுண் கிருமிகள் (Bacteria) வினைபுரிதல்.
வாய் வழியே காற்று உட்செல்லக் காரணங்கள் (புறக் காரணம்)
1. பேசும் போது அவர்களை அறியாமல் உட்செலுத்தப் படுத்தல்.
2. உணர்வு மாறுபட்ட நிலைகளில் – கவலை, அதிக மகிழ்ச்சி, படபடப்பு.
3. உணவு, நீர் போன்றவற்றை வேகமாக உட்செலுத்துவதால்.
4. தேவையில்லாமல் சில பொருட்களை வில் வைத்து சுவைத்துக் கொண்டோ கடித்துக் கொண்டோ இருத்தல் – Chewing gum.
5. புகைப் பிடித்தல்.
6. காற்று கலந்த செயற்கைக் குளிர்பானங்கள் (Carbonated beverages)
வயிற்றினுள் அதிகப்படியாக காற்று உருவாகக் காரணங்கள் (அகக் காரணம்) :
வாயில் உணவை நன்கு மெல்லாமல் அரைகுறையாக வயிற்றுக்குள் அனுப்புவதாலும் வயிற்றுப் பகுதியில் ஏதேனும் ஒரு காரணத்தால் சரியாகச் செரிமானம் நடக்காததாலும் அரைகுறையாகச் செரிமானமான உணவு குடலைக் கடக்கும் போது குடலில் உள்ள நுண்கிருமிகள் (Bacteria) அந்த உணவின் மீது வினைபுரிந்து அதிகப்படியான வாயுவை உண்டாக்குகின்றன.
மேலும் சில காரணங்கள்:
1. பழக்கமில்லாத நார்ச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுதல்.
2. அரைகுறையாக மென்று சாப்பிட்ட சில பழங்கள் (கொய்யா, பேரீச்சை, அத்தி, திராட்சை ) இவற்றில் உள்ள பழச் சர்க்கரை (Fructose) அதிகப்படியான வாயுவை உண்டாக்கும்.
3. முட்டைக்கோஸ், காலி பிளவர் போன்ற காய்கள் இயற்கையாகவே அதிகம் வாயுவை உண்டாக்கும். அதற்கு அவற்றில் உள்ள Raffinose என்கிற ஒருவகையான சர்க்கரை காரணமாக உள்ளது. அது போன்றே பாசிப்பயிறு, கொண்டைக் கடலை, கடலை மாவு, கிழங்குகள், வாழைக்காய், கொத்தவரங்காய் போன்ற பல உணவுப் பொருட்கள் வாயுவை உண்டாக்கும். அவற்றையெல்லாம் முறைப்படி பக்குவப்படுத்தி சமைக்க வேண்டும்.
4. செயற்கை இனிப்புகள் (Artificial sweeteners’) வயிற்றில் நச்சுக் காற்றினை உண்டாகும். அதே போன்று சில மருந்துகளில் கலக்கப்படும் இனிப்புகளும் (Sorbital – Cough syrup) காற்று உண்டாக்கும்.
5. பால் பொருட்களில் மோரும் நெய்யும் மட்டும்தான் வயிற்றில் காற்று உண்டாக்காமல் வயிற்றைப் பாதுகாக்கும். பால், பாலாடைக்கட்டி, குழைவு (Cream) போன்ற பிற பால் பொருட்கள் வயிற்றில் காற்றினை உண்டாக்கும்.
எனவே தான் சித்தர்கள் மோர் பெருக்கி நெய்யுருக்கி உண்ண வேண்டும் எனக் கூறியுள்ளார்கள்.
பொதுவாக ஒரு நாளில் (24 மணியில்) வயிற்றில் உருவாகும் காற்று 450 மி.லி யிலிருந்து 1500 மி.லி வரை உருவாகி வெளியேறும். அதிகப்படியாக உருவாகும் காற்று வெளியேறாமல் இருப்பதால்தான் பல கேடுகள் உண்டாகின்றன.
வயிற்றில் தேவையில்லாமல் அதிகப்படியாக காற்று உருவாகாமல் தடுக்க பல உபாயங்கள் உள்ளன. எளிய 2 முறைகளை மட்டும் பார்ப்போம்.
1. அன்னப்போடி
சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு (பெருஞ்சீரகம்), ஓமம், பெருங்காயம், இந்துப்பு (அல்லது கல் உப்பு) ஆகிய 7 பொருட்களையும் சம அளவு எடுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் கலந்த கலவைக்கு சம அளவு காய்ந்த கறிவேப்பிலைப் பொடியும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு அன்னப் பொடி என்று பெயர். இதனை சோறுடன் கலந்தோ அல்லது மோருடன் கலந்தோ உண்ண அதிகப்படியான காற்று கட்டுப்படும்.
2. சுக்கு, மிளகு, கிராம்பு, கல் உப்பு ஆகிய நான்கையும் சம அளவு கலந்து பொடித்துக் கொண்டு அதில் 8 சிட்டிகை அளவு (pinch) 3 வேளை உணவிற்கு முன் வெந்நீருடன் கலந்து சாப்பிட்டால் வாயு கட்டுப்படும்.
நலப்பயணம் தொடரும்............... |
||||||||
by Swathi on 08 Jun 2015 0 Comments | ||||||||
Tags: Siddha Maruthuvam சித்த மருத்துவம் வாயு வாயு வெளியேற வாயு தொல்லை நீங்க Gas Trouble Gas Trouble Treatment | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|