LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம் - 3

உடம்பின் கட்டமைப்பு என்ற தலைப்பின் கீழ் ஏழு அடிப்படைத் திசுக்களை ஒவ்வொன்றாகப் பார்த்து வருகின்றோம்.


மூன்றாவது அடிப்படைத் திசு தசை (Muscle) ஆகும். உடலில் உள்ள உறுப்புக்களின் உருவத்தை அவற்றின் செயல்களுக்குத் தகுந்தாற்போல அமைத்து உடல் அழகையும் ஏற்படுத்துவது தசையாகும். உடல் உறுப்புக்களில் விசையினை உருவாக்கி இயக்கத்தைக் கொடுக்கும். இது உணவு ஊட்டம் அதிகமானால் விரிந்தோ ஊட்டக்குறைவினால் மிகவும் சுருங்கியோ மாறிவிடுவதால் உடல் உறுப்புக்களின் உருவமும் அதற்கேற்றாற்போல் மாறிவிடுகின்றது. இக்கால அறிவியல் வன்தசை (Skeletal Muscle) மென்தசை (Smooth Muscle) இதயத்தசை (Cardiac Muscle) என மூன்று வகைகளாகப் பிரித்து விளக்குகின்றது. இவற்றில் மென்தசையும் இதயத்தசையும் அனிச்சைத் தசைகளாகும் (Involuntary Muscles). வன் தசைகள் எலும்புகளுடன் பிணைக்கப்பட்டு உடலின் இச்சைக்குட்பட்ட (Voluntary) இயக்கங்களுக்குக் காரணமாகின்றன. உணவுக்குழாய், இரைப்பை (Stomach), குடல், மூச்சுக்குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீர்க்குழாய், கர்ப்பப்பை (Uterus), இரத்தக்குழாய் ஆகியவை மென்தசைகளால் ஆக்கப்பட்டவை.


எனவே இவற்றின் இயக்கங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. இதயத் தசை வன்தசை போன்ற அமைப்பினைப் பெற்றிருந்தாலும் அதன் இயக்கம் தனிச் சிறப்பானது. இதன் நுட்பமான இயக்கமே உச்சி முதல் பாதம் வரை இரத்தம் சீராகப் பாய்வதற்க அடிப்படையாகின்றது.


மூச்சுக்குழல் மற்றும் நுரையீரல் இயக்கம் தானியங்கித் தசைகளால் நிகழ்வதாக இருந்தாலும் பிராணாயாமம் என்கிற யோகப்பயிற்சியின் மூலம் மூச்சின் இயக்கத்தினை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இதனைக் கட்டுப்படுத்தி முறைப்படுத்துவதன் மூலமாக உடலின் பிற இயக்கங்களையும் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரமுடியும் என்பது சித்தர்களின் கருத்து. இவற்றைப் பின்பு யோகப் பயிற்சியின் கீழ் விரிவாகப் பார்க்கலாம்.


அடுத்த திசுவாகிய கொழுப்பு மிக முக்கியமானதாகும். இது உடல் உறுப்புகள் இயக்கத்தின் போது அவை ஒன்றிற்கொன்று உராய்ந்து தேய்வு ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு ஒரு விதமான நெய்ப்புத் தன்மையை ஏற்படுத்தி அவற்றைப் பாதுகாக்கும். இரு எலும்புகள் பொருந்தும் மூட்டுக்கள், வயிற்றின் உள் உறுப்புக்கள், நுரையீரல் சவ்வுகள் போன்றவற்றில் கொழுப்புத்திசுக்கள் நிறைந்து அவற்றைப் பாதுகாக்கும். உடல் உறுப்புகள் தசையால் உருவாக்கப்பட்டது எனப் பார்த்தோம். இருந்தாலும் அவற்றிற்குள்ளே நுட்பமாகக் கொழுப்புத் திசுக்கள் பரவியிருக்கும். அவை உறுப்புகளுக்கு மெத்தென்ற தன்மையைக் கொடுத்து சூடு, குளிர்ச்சி போன்ற புறச்சூழல்களால் உறுப்புகள் பாதிக்கப்படாமல் காக்கும். உச்சி முதல் பாதம் வரை உள்ள உறுப்புக்களின் நுட்பமான இயக்கங்களுக்கு கொழுப்புத்திசுக்கள் காரணமாகின்றன.


இக்கால அறிவியல்படி இதனைக் கொழுப்பு இழையத்துடன் (Adipose tissue) ஒப்பு நோக்கலாம். தற்கால ஆய்வுகள் இதனை ஒரு நாளமில்லாச் சுரப்பியாகக் (Endocrine gland) குறிப்பிடுகின்றன. இவற்றிலிருந்து உருவாகும் பல இயக்குநீர்கள் (Hormones) உடலின் பல வளர்சிதை மாற்ற நிகழ்வுகளுக்கு அடிப்படையாகின்றன.


கொழுப்பு என்கிற உடற்திசுவின் வலு குறைந்தால் உறுப்புக்களிடையே உராய்வு கூடி அவற்றின் இயக்கம் தடைபடும். உதாரணமாக மூட்டுவலி தசைவலி ஏற்படும். மூளை, நுரையீரல், இதயம் போன்ற முக்கிய உறுப்புக்களின் இயக்கம் பாதிக்கப்படும். ஞாபக ஆற்றலும் நோய் எதிர்ப்பாற்றலும் குறையும். இது போன்ற உடலின் நுட்பமான பல செயல்கள் சீரற்ற நிலையை அடைவதற்கு கொழுப்புத்திசுவின் குறைவு காரணமாகின்றது.


நல்லெண்ணெய், தேங்காய் நெய், பசு நெய், தேங்காய்ப்பால், உணவில் உள்ள நெய்ப்புப் பொருட்கள் இந்தத் திசுவினை வலுப்படுத்தும்.


தேங்காய்ப்பால் அறிவுக் கூர்மையை ஏற்படுத்தி உடலை வலுவாக்கும் அமிர்தமாக சித்தர் நூல்கள் கூறுகின்றன.


அடுத்து எலும்பு என்கிற உடற்திசுவினைப் பார்க்கலாம். இந்தத் திசு பிற உடற்திசுக்களை விட கடினமானது. உறுப்புகளுக்குத் தசை உருவத்தைக் கொடுப்பது போல் எலும்பு ஒட்டுமொத்த உடலிற்கு அடிப்படை உருவத்தைக் கொடுத்து உடலை ஒழுங்குபட நிறுத்திவைக்கும். எலும்புகள் உடல் இயக்கத்தினைக் கொடுப்பதோடு உள் உறுப்பகளுக்குப் பாதுகாப்பு அரணாக அமையும். உடல் உறுதியாக இருப்பதை எலும்பு உறுதியினை வைத்துக் கணிக்கலாம்.


இக்கால அறிவியல் எலும்பினை அனேக தாதுப் பொருட்களின் சேமிப்பிடமாகப் பார்க்கின்றது. எலும்பு உடலின் அமிலகார சமநிலையினைச் (Acid-base balance) சீராக்க உதவுகின்றது. உடலில் நச்சுப் பொருட்கள் ஏதேனும் ஒருவழியில் அதிகம் சேரும்போது அவற்றை மொத்தமாக எலும்புகள் உறிஞ்சிக் கொண்டு சிறிது சிறிதாக வெளியேற்றுகிறது. இந்தச் செயலால் நச்சின் வேகம் உடலைத் தாக்காமல் தடுக்கப்படுகின்றது. எலும்பே ஒரு நாளமில்லாச் சுரப்பியாகச் செயல்பட்டு ஆஸ்டியோ காஸ்சின் என்கிற இயக்கு நீரினை (Osteocalcin - Hormone) உற்பத்தி செய்கின்றது. இந்த இயக்குநீர் பிற இயக்குநீர்களின் செயல்பாட்டினை ஒழுங்குபடுத்துகின்றது. குறிப்பாக இன்சுலின் சுரப்பினைச் சீராக்கி நீரழிவு நோய்வராமல் தடுக்கின்றது. மேலும் இனப்பெருக்கத்திற்கு அடிப்படையான சுரப்பிகளை (Testosterone) சீராக்கி குழந்தைப்பேற்றிற்கு அடிப்படையாக ஆஸ்டியோகால்சின் இருப்பதாக இக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வுகள் சித்தர்களின் கருத்துக்களுக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளன. அதாவது எலும்பு உறுதி உடலின் ஒட்டுமொத்த உறுதிக்கு அடிப்படையாகும்.


அடுத்ததாக மூளை என்கிற உடல்திசுவைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மூளை என்பது எலும்பிற்குள் நிறைந்திருக்கும் மச்சை, மூளை என்பது எலும்பிற்குள் நிறைந்திருக்கும் மச்சை, மூளை, தண்டுவடம் நரம்புமண்டலத்தை உள்ளடக்கிய திசுவாகும்.


மச்சை நோய் எதிர்ப்பாற்றலுக்கும் எலும்பின் உறுதிப்பாட்டிற்கும் அடிப்படையாக அமையும். அதாவது இரத்தச் சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், தட்டணுக்கள் (Red blood cells, white blood, platelets) ஆகியவை எலும்பு மச்சையில் உருவாகி உடல் எதிர்ப்பாற்றலுக்குக் காரணமாகின்றது.


மூளை மற்றும் நரம்பு மண்டலம் இச்சை வழி இயக்கங்களுக்கும் அனிச்சை இயக்கங்களுக்கும் (Voluntary & Involuntary) காரணமாகின்றன. உடலின் பல்வேறு இடங்களில் நிகழ்வுகளை ஒன்றிற்கொன்று தொடர்புபடுத்தி அவற்றை ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்தும். இவற்றிற்கெல்லாம் சிக்கலான நரம்பிழைகளும் நரம்பு வேதிப்பொருட்களும் உதவுகின்றன. இவற்றால் ஓரிடத்தில் நிகழும் நிகழ்வுகளின் மூலம் பெறப்படும் தகவல்களைக் கொண்டு வேறு ஒரு இடத்தில் மாற்றங்களை நிகழ்த்தும்.


மச்சையும் (Bone marrow) மூளையும் வெவ்வேறு திசுக்கள். இவை இரண்டையும் மூளை என்கிற ஒரே பெயர் கொண்டு எவ்வாறு சித்தர்கள் அழைத்தார்கள்? என்ற கேள்விக்கு ஓர் இக்கால அறிவியல் ஆய்வு விடையளிப்பதாய் உள்ளது. எலும்பு மச்சையின் குருத்தணுக்கள் (Mesenchymal stem cells or marrow stromal cells) பன்முகத் தன்மை கொண்டவை. அவை நரம்பு அணுக்களாக (Brain cells) மாறக்கூடிய ஆற்றல் பெற்றவை என்று அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது. இது போன்ற ஏராளமான உள்ளன. ஆனாலும் சித்தர்களின் மெய்ஞானத்திற்கு இக்கால அறிவியலால் முழுமையாக விளக்கமளிக்க இயலவில்லை.


அடுத்தது ஏழாவது உடல்திசு. அதற்கு சுக்கிலம் என்று பெயர். இது ஆண்களின் விந்தணுவினையும் பெண்களின் சூல்முட்டையினையும் (sperm & ovum) குறிக்கும். இது இனப்பெருக்கத்திற்கு அடிப்படையான முக்கியமான உடல்திசுவாகும். மற்ற ஆறு உடல்திசுக்களும் வலுவாக இருந்தால்தான் சுக்கிலம் வலுவாகி குழந்தைப்பேற்றினை உண்டாக்கும். சுக்கிலம் குழந்தைப் பேற்றினை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல் பல நுட்பமான ஆற்றல்களை உள்ளடக்கியது. இதனை பாதுகாத்துப் போற்றுதல் என்பது உயிரினைப் பாதுகாப்பதற்கு ஒப்பானதாகும். இந்த உடற்கட்டு நன்னிலையில் இருந்தால் உடல் நீண்டகாலம் நலநிலையோடு இருக்கும். இதனைப் பாதுகாப்பது தொடர்பான நுட்பமான கருத்துக்களைப் பின்பு விரிவாகப் பார்க்கப் போகிறோம். இப்போது ஒரு இக்கால ஆய்வு விளக்கத்தினை மட்டும் காணப் போகின்றோம். அது சித்தர்களின் கருத்திற்கு ஆதாரமாக உள்ளது.


விந்தணுக்களின் எண்ணிக்கையும் குணமும் (Sperm concentration and Quality) நல்ல நிலையில் இருப்பவர்களிடம் நோய் எதிர்ப்பாற்றல் அதிகம் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகின்றது. அவர்களிடம் நோய் ஏற்படுவது குறைந்து காணப்படுகிறது. ஒட்டு மொத்தத்தில் அவர்களின் நல நிலை பாதகாக்கப்பட்டு ஆயுள் நீட்டிக்கப்படுகின்றது. எனவே விந்துவின் தன்மை உடல் நலத்தினை அளவிடும் அடிப்படை உயிர்க் குறியீடாக விளங்குவதாக அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. (Semen is a Fundamental Biomarker of Overall male health - Good Semen Quality & Life expectancy: A Cohort study of 43, 277 men. American journal of Epidemiology.2009; 170(5): 559-565) இந்த ஆய்வு 1963 முதல் 2001 வரை நடைபெற்றுள்ளது. மொத்தம் 43,277 ஆண்களில் மேற்கண்ட பரிசோதனையைச் செய்தபின் இந்த முக்கியத்துவம் வாய்ந்த முடிவினை நமக்குத் தெரிவிக்கின்றது.


ஏழு உடற்கட்டுக்களாகிய உடலின் அடிப்படைத்திசுக்களை நாம் தெரிந்து கொண்டோம். இவை உடலின் கட்டமைப்பு (Structure) ஆகும். இவை எப்படி இயங்குகின்றன? இவற்றை இயக்கும் ஆற்றல் எது? போன்ற உடலியக்கத்தின் (Functions) நுட்பங்களை சித்தர் இலக்கியங்கள் வாயிலாக அடுத்த வாரம் பார்க்கப் போகிறோம். உடலின் நுட்பங்கள் தொடர்கின்றன.

by Swathi   on 30 Sep 2014  0 Comments
Tags: Siddha Maruthuvam   Muscles   Skeletal Muscle   Cardiac Muscle   Smooth Muscle   Involuntary Muscles   Bone marrow  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51 நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51
நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50 நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50
நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49 நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை  அடக்கினால் வரும் துன்பங்கள் - 46 நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 46
நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43 நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43
நலம் காக்கும் சித்த மருத்துவம் : கொட்டாவியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 42 நலம் காக்கும் சித்த மருத்துவம் : கொட்டாவியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 42
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.