நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும், குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் - ஒருவன் தனக்கு நலனுடைமையை வேண்டுவானாயின், தான் நாணுடையன் ஆதலை வேண்டுக; குலம் வேண்டின் யாரக்கும் பணிவு வேண்டுக - குலனுடைமையை வேண்டுவானாயின், பணியப்படுவார் யாவர் மாட்டும் பணிதலை வேண்டுக. (நலம் - புகழ் புண்ணியங்கள். 'வேண்டும்' என்பது. விதிப் பொருட்டாய் நின்றது. 'வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்' (தொல்.சொல்.கிளவி.33) என்புழிப்போல,'அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம்முன்னோர் தந்தை தாய் என்றிவர்' எல்லாரும் அடங்க 'யாரக்கும்' என்றார். பணிவு - இருக்கை எழலும் எதிர் செலவும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் குடிமைக்கு வேண்டுவன கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
ஒருவர் தமக்கு நலத்தை வேண்டுவாராயின் நாணுடமையை விரும்புக: அவ்வண்ணமே குலத்தை விரும்புவாராயின் யாவர்மாட்டும் தாழ்ந்தொழுகுதலை விரும்புக. இது பணிந்தொழுக வேண்டு மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் - ஒருவன் தனக்கு இம்மை மறுமை நன்மைகளை வேண்டுவானாயின்; தான் நாணமுடையவனா யிருத்தல் வேண்டும்; குலம். வேண்டின் யார்க்கும் பணிவு வேண்டுக - தன் உயர்குடிப் பிறப்பைக் காத்துக் கொள்ள விரும்புவானாயின், பெரிய ரெல்லாரிடத்தும் பணிவுடைய வனாயிருத்தல் வேண்டும். இம்மை நன்மை புகழும், மறுமை நன்மை அறப்பயனுமாம். 'வேண்டும்' என்பது கட்டாயம் பற்றிய நெறியீடு (விதி). 'நாண்' என்றது கருமத்தால் நாணுதலை (குறள் 1091). ஐங்குரவர், அந்தணர், சான்றோர், அடியார் முதலிய அனைவரும் அடங்க 'யார்க்கும்' என்றார். 'பணிவு' இருக்கை விட்டெழுதலும் எதிர்செலவும் கை குவிப்பும் முதலியன. இவ்விரு குறளாலும் உயர் குடிப்பிறப்பைக் காத்துக் கொள்ளும் வகை கூறப்பட்டது.
கலைஞர் உரை:
தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் தனக்கு நன்மை வேண்டும் என்று எண்ணினால் அவனிடம் நாணம் இருக்க வேண்டும். நற்குடும்பத்தவன் என்ற பெயர் வேண்டும் என்றால், எல்லாரிடமும் பணிவு இருக்க வேண்டும்.
Translation
Who seek for good the grace of virtuous shame must know;
Who seek for noble name to all must reverence show.
Explanation
He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all.