பல பேர் மனிதர்களை மனிதர்களாக மதிப்பதில்லை . மற்றவர்களின் மனங்களைப் புண் படுத்துவதிலேயே குறியாக இருப்பார்கள் . ஒருவர் புதியதாக ஒரு நாய் வாங்கிக்கொண்டு வந்து தன் வீட்டில் கட்டினார் . அதற்கு மணி என்று பேர் வைத்தார் . அடிக்கடி அதை மணி நாயே மணி நாயே என்று கூப்பிடுவார் . மணி நாயே ஒழுங்கா இரு இல்லாட்டி உதை விழும் என்று திட்டுவார் . மணி நாய்க்கு எச்சிலைப்போடு திங்கட்டும் என்று மனைவியிடம் சொல்வார் . திடீரென்று அவர் நாய் வாங்கிய ரகசியம் பலருக்குத் தெரியவில்லை . ஆனால் எதிர்த்த வீட்டுக்காரருக்குப் புரிந்து விட்டது . அவர் பேர் மணி , தன்னை மறைமுகமாகத் திட்டுவதற்கே இந்த ஏற்பாடு என்று புரிந்து கொண்ட அவர் தன் வீட்டிலும் ஒரு நாய் வளர்க்க ஏற்பாடு செய்தார் .
உயர்வு தாழ்வு என்ற உணர்ச்சிகளை நாம் தான் உற்பத்தி செய்துகொள்கிறோம் . உண்மையில் யாரும் தாழ்ந்தவரில்லை . இதனைச் சரியாகப் புரிந்து கொண்ட எல்லோரையும் மதித்தவர் பெருந்தலைவர் . அதனால்தான் எல்லோராலும் மதிக்கப்பட்டார் . ஒருமுறை பெருந்தலைவரின் கார் கரூரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது . புதிதாக வாங்கிய செருப்பை காலில் போடுவதும் , மாட்டுவதுமாக இருந்தார் அவர் . அது காலுக்குப் பொருந்தவில்லை என்று தெரிந்தது . கரூர் போனதும் வேறு செருப்பு வாங்கி விடலாம் ஐயா , என்று கூடயிருந்தவர்கள்சொன்னார்கள் . கரூரில் காங்கிரஸ் தலைவர் நல்லுசாமியுடன் பேசிக்கொண்டிருந்தார் . அப்போது சாக்குப்பையுடன் ஒரு சிறுவன் உள்ளே நுழைந்தான் . “ தம்பிக்கு என்ன வேணும் ?” என்றார் தலைவர் . ஐயா காலுக்கு செருப்புத் தைக்க அளவெடுக்க வந்தேனுங்க என்றான் பையன் . “ நல்லாத் தைப்பியா ?” என்று தலைவர் கேட்க , “ என்னோட திறமையைப் பாருங்க அப்புறம் ஒவ்வொரு தடவையும் என்னைத்தான் தைச்சுத்தரச் சொல்லுவீங்க ” என்றான் பையன் . தலைவர் அசந்து போனார் . இரவு கூட்டம் முடிந்து தலைவர் அறையில் பேசிக்கொண்டிருந்தபோது அந்தச் சிறுவன் வந்தான் . அதற்குள் எப்படியப்பா தைச்ச என்று வரவேற்றார் தலைவர் . செருப்பை கால்களில் மாட்டினார் . எழுந்து நடந்தார் . செருப்பு கால்களுக்கு கனகச்சிதமாகப் பொருந்தியது .” இந்தாப்பா . இதை நீயா தைச்சே என்று மகிழ்ச்சியோடு ” கேட்டார் தலைவர் . “ ஆமய்யா உங்களுக்கு செருப்பு தைக்க கொடுத்து வைச்சிருக்கணுமே , வேற ஒருத்தருக்கு விட்டுக்கொடுப்பேனா ” என்று படபடவென்று பேசினான் பையன் . தலைவர் தலையணைக்கு அடியிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினார் . பையன் பணத்தை வாங்க மறுத்துவிட்டான் . “ இன்னம் எவ்வளவு வேணும் சொல்லு ” என்று தலைவர்கேட்க , “ பணமே வேண்டாம் . உங்களுக்கு இதைச் செய்ய வாய்ப்புக் கிடைச்சதே பெரும்பாக்கியம் ” என்றான் பையன் . இறுதியில் தலைவரின் வற்புறுத்தலுக்காக ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை மட்டும் பெற்றுக்கொள்ள சம்மதித்தான் . அதைத் தலைவரிடமே கொடுத்து “ அய்யா இதுல உங்க கையெழுத்தைப்போட்டுக் குடுங்க . காலங்காலமா இதைப் பொக்கிஷமா பாதுகாப்பேன் ” என்றான் . தலைவர் உருகிவிட்டார் . மறு வருடம் கரூர் சென்றிருந்தபோது , தலைவரைச் சந்திக்க அந்தச் சிறுவன் வந்தான் . வா … வா … நல்லாயிருக்கியா … என்று தலைவர் அவனை வரவேற்றபோது எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள் .
அன்று ராமருக்கு ஒரு குகன் தலைவருக்கோ ஒரு சிறுவன்
அன்புக்கு முன்னே அனைவரும் சமமே .