|
|||||
இயற்கை விவசாயத்தை கையில் எடுத்து சாதித்து காட்டிய நல்ல கீரை அமைப்பினர் !! |
|||||
விவசாயிகளே தங்களின் பிரதான தொழிலான விவசாயத்தை தலைமுழுகி விட்டு தொழிற்சாலைக்கு வேலைக்கு போகும் இந்த கால கட்டத்தில்.... விவசாயம் பற்றி சிறிதும் தெரியாமல், பன்னாட்டு நிறுவனங்களில் பல லட்சம் மாத ஊதியமாக வாங்கும் இளைஞர்கள் சிலர், தங்களின் ராஜபோக வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு இயற்கை விவசாயத்தை கையில் எடுத்ததோடு மட்டுமலாமல் அதில் சாதித்தும் காட்டியுள்ளனர் என்றால் அது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் தானே. இந்த இளைஞர்களில் ஒருவர் பன்னாட்டு நிதி ஆலோசகர், மற்றொருவர் போர்ட் கம்பெனியின் ஊழியர், இன்னொருவர் அண்ணா பல்கலைக்கழக மாணவர், ஒருவர் பொறியாளர், ஒருவர் உலக வங்கித் திட்டப் பணியாளர், ஒருவர் வக்கீல், ஒருவர் பேராசிரியர் என்பது முதலில் குறிப்பிடபட வேண்டிய ஒன்று. இப்படி பல துறையை சேர்ந்த 14 பட்டதாரி இளைஞர்கள்(ஜெகன்னாதன், கௌதம், ராதாகிருஷ்ணன், சலோமி, ஏசுதாஸ், ராமு, விசு, திருமலை, புனிதா, ஷாம், சிவகுமார், ராஜமுருகன், அறிவரசன், பிரபாகரன், திருமலை) ஒன்று சேர்ந்து "நல்ல கீரை" என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி தங்களின் இயற்கை விவசாய பயணத்தை தொடங்கியிருக்கிறார்கள். திருநின்றவூர்(திருவள்ளூர் மாவட்டம்) அருகே பெரியபாளையம் செல்லும் வழியில் பாக்கம் என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தான் நல்ல கீரை அமைப்பினர் இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்து... அதை சென்னை மக்களுக்கு அனுப்புகிறார்கள். நல்ல கீரை அமைப்பினரின் பண்ணையில் நாம் நுழைந்தவுடன், அங்கே இயற்கை விவசாயத்தால் காய்த்து தொங்கும், தக்காளி, வெண்டை, கத்தரி, மிளகாய், பூசணி என பலவகையான காய்கறிகள் நம்மை புத்துணர்ச்சியுடன் வரவேற்றன. அடுத்ததாக நல்ல கீரை பண்ணையில் முழுநேர பணியில் ஈடுபட்டுள்ள ஜெகன்னாதன் அவர்களுடன் பேசியபோது, நல்ல கீரை பண்ணையில் காய்கறிகள் மட்டுமல்ல. தூய மல்லி, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்களையும் பயிரிடுகிறோம். எது இருந்தாலும் எங்கள் நோக்கமெல்லாம் முதலில் கீரைகளின் மீதுதான். இப்போது 30 வகையான கீரைகளை இங்கு பயிரிட்டு வருகிறோம். அதை விரைவில், 45 வகையாக அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இது தவிர, எதிர்காலத்தில் அறிய பல மூலிகைகளையும் சாகுபடி செய்ய திட்டம் வகுத்துள்ளோம். பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருந்த ஜெகன்னாதன், ஜே.சி குமரப்பாவின் நீடித்த பொருளாதாரம் போன்ற பல புத்தகங்களால் கவரப்பட்டு கிராமப் பொருளாதாரத்தின் பக்கம் தன கவனத்தை திருப்பியுள்ளார்.. இவர் ஒரு கிராமத்தில் 250 குடும்பங்களை ஓராண்டு ஆய்வு செய்தபோது, அவர்களின் வருமானத்தில் பெரும்பகுதி உரங்கள், பூச்சிகொல்லி, மது, மருத்துவம் போன்றவற்றிற்கே செலவிடப்படுவது தெரிய வந்துள்ளது. படாதபாடுபட்டு இந்தக் குடும்பங்கள் சம்பாதிக்கற பணம்... சம்பந்தமில்லாத யாருக்கோ போறத நினைக்கறப்ப... ரொம்ப வருத்தமா இருந்துச்சு. இந்தச் செலவைக் குறைக்கறதுக்கும், இவங்கள இதுல இருந்து மீட்டெடுக்கறதுக்கும் என்ன வழினு யோசிச்சப்பதான்... இயற்கை விவசாயத்தால உரம், பூச்சிக்கொல்லிச் செலவை சுத்தமா ஒளிச்சுடலாம்னு தோணுச்சு. இதுக்காகவே நம்மாழ்வார் அய்யா நடத்துன பல கூட்டங்கள்ல கலந்துகிட்டேன். இயற்கை விவசாயிகள் பலரையும் சந்திச்சேன். அவங்ளோட தங்கி, அவங்க செய்ற விவசாயத்தப் பாத்து, தொழில்முறையா எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுகிட்டேன். சில நண்பர்களோட பேசினதுல... நிறைய பேருக்கு இயற்கை விவசாயத்துல ஆர்வம் இருக்கறது தெரிஞ்சது. அவங்களையெல்லாம் இணைச்சு... இந்த அமைப்பைத் தொடங்கினோம். முதல் கட்டமா, சென்னை மக்களுக்கு ரசாயனம் தெளிக்காத கீரையை உற்பத்தி செஞ்சு கொடுக்கலாம்னு முடிவு செஞ்சோம். அதுக்காக, இந்த 5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கீரை சாகுபடியைத் தொடங்கினோம். விளையற கீரையை சென்னையில வாடிக்கையாளர்களுக்கு நேரடியா விற்பனை செய்றோம். கீரையை ஏன் தேர்வு செய்தீர்கள்? ஆண்டாண்டு காலமாக ரசாயனத்தையும், பூச்சிக் கொல்லி மருந்தையும் கொட்டி, மண்ணைக் கெடுத்த பின் திடீரென இயற்கை விவசாயத்திற்கு மாறும் போது, எதிர்பார்த்த மகசூல் கிடைப்பதில்லை. இதனாலேயே பெருபாலான விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறத் தயங்குகிறார்கள். இதைத் தவிர்க்கவும் இயற்கை விவசாயிக்கு உடனடியாக வருமானம் கிடைக்கவும் என்ன வழி என்று யோசித்தபோது, கீரைகளும் மலர்களும் நல்ல வழியாகத் தெரிந்தது. ஆனால், இவர்கள் கீரைகளை தேர்வு செய்தனர். அதற்கு காரணம் கேட்டபோது, மலர் என்பது வெளிப்பயன்பாடு. ஆனால் கீரை என்பது உணவுப் பொருள். மலரை விட கீரைக்குதான் முதலில் ரசாயனப் பயன்பாட்டிலிருந்து விடுதலை அளிக்க வேண்டும் என்று நினைத்தோம். மேலும் கீரைகளை பயிரிடும் போது குறைந்த பட்சம் 20 நாட்களிலேயே விவசாயி வருமானம் ஈட்ட முடியும். திட்டமிட்டபடி கீரை சாகுபடி செய்தால், அரை ஏக்கர் நிலத்தில் கூட மாதம் 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வருமானம் ஈட்டலாம் என்கிறார்கள் இந்த சாதனையாளர்கள். உரத் தேவைக்கு என்ன செய்வீர்கள் : இயற்கை உரத் தேவைக்காகவே நாட்டு மாடுகளை வளர்க்கிறோம். இந்த மாடுகளின் கழிவுகளில் இருந்துதான் இயற்கை உரங்கள் தயாரிக்கப்பட்டு அவை நிலத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. எனென்ன வகையான கீரைகளை நீங்கள் விளைவிக்கிறீர்கள் : அரைக்கீரை, சிறுகீரை, பசலைக் கீரை, முளைக்கீரை, சிகப்பு முளைக்கீரை, சுக்கான், சக்கரவர்த்தினி, கொத்துமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, சிகப்புப் பொன்னாங்கன்னி, கோங்கூரானு சொல்லற சீமைக் காசினி, கொம்புக் காசினி, அகத்தி, முருங்கை, வல்லாரை, தூதுவளை, முடக்கத்தான், வெந்தயக் கீரை, கல் இளக்கி, காசினி, கறிவேப்பிலை, மணத்தக்காளி, தண்டுக் கீரை, பருப்புக் கீரை, தவசிக் கீரை, சிலோன் கீரை, திருநீற்றுக் கீரை என முப்பது வகையான கீரைகளை சாகுபடி செய்கின்றனர் இந்த நல்ல கீரை அமைப்பினர். கீரை விவசாயத்திற்கு நிலத்தை எவ்வாறு தயார் செய்வீர்கள் : 50 சென்ட் நிலத்தை பாத்தி பாத்தியாக பிரித்து கீரைகளை சாகுபடி செய்கிறோம். அதாவது, 50 சென்ட் நிலத்துல 300 பாத்திகளை அமைக்க முடியும். ஒரு முறை பாத்தி அமைச்சா.... மூணு, நாலு தடவை சாகுபடி செய்யலாம். ஒரு பாத்தியில அதிகபட்சம், 100 கட்டு கீரை பறிக்க முடியும். ஒரு கட்டுக்கு 5 ரூபாய்க்கு குறையாம விலை கிடைக்கும். பாத்திகளோட இடைவெளியில அகத்தி, வல்லாரை, தூதுவளை, பிரண்டை மாதிரியான பயிர்களைப் போட்டிருக்கோம். வேலைக்கு 2 பேர் இருந்தாலே போதுமானது. 300 பாத்தியிலிருந்தும் மாசத்துக்கு 30 ஆயிரம் ரூபா வரை வருமானம் கிடைக்கும். பாத்திகளுக்கு இடைவெளியில ஏன் அகத்தி கீரைகளை பயன்படுத்துகிறீர்கள் : ஒரு முறை எங்களது பண்ணைக்கு வருகை புரிந்தார் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார். அவர் பண்ணைகளை முழுமையாக பார்வையிட்டு, பாத்திகளுக்கு இடையே அகத்தி கீரையை நடச் சொன்னார். ஏன் எதற்கு என்கின்ற கேள்வி கேட்காமல் நட்டுவிட்டு, அதை கூர்ந்து கவனித்தபோது, அதன் பலன்கள் பெரிதாக இருந்தது. அகத்தி கீரையில் வேர் முடிச்சு இருப்பதால் அவை காற்றின் நைட்ரஜனை நிலைப்படுத்தி மண்ணுக்கு வளம் சேர்த்தன. பூச்சிகளும் முதலில் அகத்தியை தாக்குவதால், மற்ற பயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. மாலை நேரத்தில் அகத்தியில் வந்து அமரும் பறவைகள் அந்தப் பூச்சிகளைப் பிடித்து உண்கின்றன. மேலும் அகத்தி கீரையின் குளிர்ந்த நிழல், கீரைகளுக்கு இதமான் ஒரு சூழலை ஏற்படுத்துகின்றன. இதனால் கீரைகள் செழித்து வளர்கின்றன. விளைவித்த கீரைகளை எவ்வாறு சந்தை படுத்துவீர்கள் : நம் மக்களிடையே கீரைகளுக்கு தட்டுப்பாடு இருந்தாலும், லாப நோக்கில் நாங்கள் கீரைகளை விற்பதில்லை. எங்களிடம் ஆரம்பத்தில் கொள்முதல் செய்தவர்கள் அதனை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தார்கள். இதனை ரகசியமாக கண்காணித்த நாங்கள் அதனை உடனடியாக நிறுத்தி விட்டோம். அவர்கள் அதிகப் தர முயன்ற போதும் நாங்கள் மறுத்து விட்டோம். நாங்கள் இயற்கை முறையில் கீரைகளை பயிர் செய்வது நமது மக்களுக்கு ரசாயன ஆபத்திலாத உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதால் அதிக பணம் கிடைக்கலாம். அதனால் நம் மக்களுக்கு என்ன பயன்? இந்த மண் இந்தியாவுடையது நீர் இந்தியாவுடையது. பின் ஏன் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்? குறைந்த விலை கிடைத்தாலும் சத்தான கீரைகளை நம் மக்களிடம் கொடுப்பதில்தான் எங்கள் அமைப்பினருக்கு மனதிருப்தி என்கின்றனர் நல்ல கீரை அமைப்பினர். எங்களைப் பொறுத்தவரை விவசாயிகளும், வாடிக்கையாளர்களும் பயனடைய வேண்டும். அதனால் தான் பெரும்பாலும் நாங்களே நேரடியாக விற்பனை செய்கிறோம். அதுபோல அதிக விலைக்கு விற்பனை செய்யாத சில இயற்கை அங்காடிகளுக்கு மட்டுமே கீரைகளை விற்பனைக்கு தருகிறோம். விரைவில் தமிழகம் முழுவதும் விற்பனை மையத்தை தொடங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். அதிக சம்பளம் கிடைக்கிறது என ஐடி நிறுவனங்களில் வேலையை தேடி ஓடும் நம் இளைஞர்கள், இயற்கை விவசாயம் மூலம் மாதமாதம் லட்ச கணக்கில் சம்பாதிக்கும் இவர்களை பார்த்தாவது விவசாயத்தை கையில் எடுத்தால், நம் நாடே பசுமையாகும், நம் மக்களின் வாழ்வும் ஆரோக்கியம் பெரும்.....
தொடர்புகொள்ள: ஜெகன்: 9042011768 மின்னஞ்சல்: farm2consumer@gmail.com |
|||||
by Swathi on 27 May 2014 6 Comments | |||||
Tags: நல்ல கீரை Nalla Keerai Good Greens Nalla Keerai Farm இயற்கை விவசாயம் Nalla Keerai Organic Farming | |||||
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|