LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- மற்றவை

நல்லிசைப் புலமை மெல்லியலர்கள்

முன்னுரை
ஒல்காப்பெருமைத் தொல்காப்பியனார், மரபியலில்,

    'மாவு மாக்களு மையறி வினவே.'
    'மக்கள் தாமே யாற்றி வுயிரே.'

என்பனவற்றால், மானிடரை மாக்கள், மக்கள் என இருதிறத்தினராகப் பகுத்தோதினார். மாக்கள் எனப்படுவார், ஐம்பொறியுணர்வுமட்டிற் பெற்று மனவுணர்ச்சி யிலராயினாரெனவும், மக்கள் எனப்படுவார், ஐம்பொறி யுணர்வேயன்றி மனமென்பதோ ரறிவும் உடையரயினர் எனவுங் கூறுவர். இது மானிடரை அறிவுவேற்றுமைபற்றிப் பகுத்த பகுப்பாகும்.

இனி, அவயவவெற்றுமைபற்றி, மானிடர், ஆண் பெண் என இருதிறத்தின ராவர். ஆணியல்பு மிக்க அலி ஆண்பால் எனவும், பெண்ணியல்பு மிக்க பேடி பெண்பால் எனவும் வழங்கப்படுமாதலின், அவயவம்பற்றிய பகுப்பும் இரண்டே என்னலாம். இவ்வாறே, ஒவ்வொரு குறையுடைய ஊமும் செவிடும் குருடும் பிறவும் இவ் விருபாலுள்ளே அடங்குதலுங் காண்க. அவயவ வெற்றுமையான் இருதிறத்தினராய மானிடரே அறிவுவேற்றுமையான் மாக்கள், மக்கள் எனப்பட்டனராதலின், ஆண்பாலினும் மாக்களும் மக்களும் உண்டென்பதும், அவ்வாறே பெண்பாலினும் மாக்களும் மக்களும் உன்டென்பதும அவர்க்கு உடன்பாடாம். இதனால் ஆசிரியர் எத்துணை அறிவுண்மையும் அறிவின்மையும் ஆண்பாற்கு உடன்பட்டாரோ அத்துணையும் பெண்பாற்கும் உடன்பட்டாராதல் தெளியப்படும்.

களவியலுள், 'ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப' என வுரைத்து, அத்தலைவற்கும் தலைவிக்கும் உள்ள ஒப்புமைவகையினை விரித்தோதுவாராய், மெய்ப்பாட்டியலில்,

    'பிறப்பே குடிமை யாண்மை யாண்டோ
    டுருவு நிறுத்த காம வாயில்
    நிறையே யருளே உணர்வொடு திருவென
    முறையுறக் கிளந்த வொப்பினது வகையே'

என்றாராகலின், ஆண்பாற்கொத்த ஆண்மையும், உணர்வும் பிறவும் பெண்பாற்கும் ஒக்கும் என்பதும் உடன்பட்டனராவர். இதனால், ஆண்மையும் அறிவும் ஆண்பாலார்க்கே சிறந்தது என்பது ஆசிரியர்க்கு உடன்பாடன்மை யுணரப்படும். மற்றுக் களவியலுள், 'பெருமையும் உரனும் ஆடூஉ மேன' என்றாராலெனின், அவர் பொருளியலுள்,

    'செறிவும் நிறைவுஞ் செம்மையுஞ் செப்பும்
    அறிவு மருமையும் பெண்பா லான'

எனக் கூறினாராதலின், ஆண்பாலினை உயர்த்துரைக்கு முகத்தாற் பெண்பாலினை இழித்தாரென்றால் பொருந்தாதாகும்.

செறிவாவது அடக்கம்; நிறைவாவது மறை புலப்படாமல் நிறுத்தும் உள்ளம்; செம்மையாவது மனக்கோட்ட மின்மை; செப்பாவது செய்யத் தகுவன கூறுதல்; அறிவாவது நன்மை பயப்பனவும் தீமைபயப்பனவும் அறிதல்; அருமையாவது உள்ளக்கருத்தறித லருமை என்பர். இவ்வறுபெருங் குணங்களும் ஆண்பார் கோதிய பெருமை உரன் என்னும் இரண்டற்குஞ் சிறிதுந் தாழ்ந்தனவாகாமை உய்த்துணர்க. மகளிர்க்கே சிறந்த சில இயற்கை வேற்றுமையினை நன்றாய்ந்து, ஆசிரியர், கிழவோள் பணிவும் கிழவோன் உயர்வும் உடன்பட்டனரல்லது வேறு எவ்வகை அறிவு வேற்றுமையும் உடன்படாமை கண்டுகொள்க. இதுவே தெய்வப்புலமை திருவள்ளுவனார்க்கும் கருத்தென்பது, அவர், 'அறிவறிந்த மக்கட்பேறு', 'நன்மக்கட் பேறு', 'பேதையார் கேண்மை', ' பேதையார் சொன்னோன்றல் ', 'மடவார்ப் பொறை' என்னுமிடங்களில், ஆண் பெண் இருபாலார்க்கும் பொதுப்பட வழங்கிய பெயர்களானே ஆய்ந்தறியத் தக்கது. 'வகைதெரிவான் கட்டே யுலகு' என்பது முதலாக ஆண்பாலாற் கூரியனவெல்லாம் 'நஞ்சுண்டான் சாம்' என்புழிப்போல ஒருபாற் கிளவி எனைப்பாற்கண்ணுஞ் சேறற்குரிய என்பதுபற்றித் தலைமையாற் கூறினாராவர்.

இனி, வடநூலுள் ஒருசாராசிரியர் மதம் பற்றிப் பரிமேலழகர் பெண்பாலாரை ஆண்பாலாரோடு ஒத்த அறிவெய்தற்கு உரியரல்லராகக்கொண்டு,

    'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோ னெனக்கேட்ட தாய்'

என்புழி, 'பெண்ணியல்பாற் றானாக அறியாமையிற் "கேட்ட தாய்" எனக் கூறினார்' என்றார். அவர், ஆடவருடைய அறிவொழுக்கங்களின் அருமையறிதற்கும் உரியரல்லரெனக் கருதியமை காண்க. அந்நிலைய பெண்பாலார் பலருளரால் எனின், அந்நிலைய ஆண்பாலாரும் பலருளர் என்க. தன் மகனென்னுந் தொடர்புபற்றி யுளதாகும் அன்புமேலீட்டாற் குணமும் குற்றமும் நாடுமிடத்துக் குற்றந் தோன்றாது மறையினும் மறையும்; அவற்றை யுள்ளவாறாராய்ந்து குணமிகுதிகண்டு சான்றோரெனவல்லார் பிறரே யாதலானும், தானறிந்ததனோடொப்பத் தன்னையொத்தாரும் மிக்காரும் கூறியவழியே தனக்கு மகிழ்ச்சி யுளதாதலானும், 'கேட்டதாய்' என்றார் எனக்கூறல் ஆண்டைக் கியைபுடைத்தாம். பிறர் கூறியவழித் தன்னறிவு மாறுபடினும், தானறிந்த வழிப் பிறர்கூற்று மாறுபடினும் தனக்கு மகிழ்ச்சியின்றாதலுங் கண்டுகொள்க. 'சான்றோ ரென்கை யீன்றோர்க் கின்பம்' என்பதூஉம் இக்கருத்தேபற்றி வந்தது.

மற்றும் அவ் வடநூலுள் ஒருசாரார், சூத்திரசாதியாரும் பெண்பாலாரும் வேதத்தின் சொல்வழக்கும் பொருளுணர்ச்சியும் மெய்யுணர்தலும் வீடும் எய்தப்பெறார் என்று கூறி, அவரை அறியாமையுள்ளே நிறுத்துப. இஃதெல்லார்க்கும் உடன்பாடன்று. பெரும்பாலார் வேதத்தை முறையே நியமிக்கப்பட்ட ஒலியுடன் ஓதற்கண் சூத்திரசாதியாரையும் பெண்பாலாரையும் விலக்குபவல்லது, அதன் சொல்வழக்கினும் பொருளுணர்ச்சியினும் மெய்யுணர்ந்து வீடுபெறுதலினும் விலக்கார். இதுவே இத் தமிழ்நாட்டுச் சிறந்த சைவ வைணவ நல்லாசிரியர் தொன்னெறி மரபாம். சைன பௌத்தரும் மெய்யுணர்ந்து வீடு பெறுதற்கண் மகளிரை விலக்காரென்பது, அவரவர் நூல்களான் நோக்கித் தெளிக. அவருள் ஆரியாங்கனைகளும், பிக்குணிகளும் எனத் துறவொழிக்கம் பூண்டு வீடுபேறு முயலும் பெண்பாலாரும் உளராதல் அறிந்துகொள்க.

இனி, ஆண்மக்கள் காமத்தாற் கண்மயங்கிப் பிறனில் விழைந்தும் பெண்வழிச்சென்றும் வரைவின்மகளிர்ச் சேர்ந்தும் கேடுறாது பாதுகாத்தற்கண், பெண்பாலைப் பழித்து ஆண்பாற்கு அறிவுறுத்துப. அங்ஙனம் வருமாறு

    'பெண்ணி னாகிய பேரஞர் பூமியு
    ளெண்ண மிக்கவ ரெண்ணினு மெண்ணிலார்.'

    'புரிவளை முன்கைப் புனையிழை நல்லார்
    விரகில ரென்று விடுத்தனர் முன்னே.'

    'பெண்ணெனப் படுவ கேண்மோ பீடில பிறப்பு நோக்கா
    உண்ணிறை யுடைய வல்ல வொராயிர மனத்த வாகும்
    எண்ணிப்பத் தங்கை யிட்டால் இந்திரன் மகளு மாங்கே
    வெண்ணெய்க்குன் றெரியுற் றாற்போன் மெலிந்துபின்னிற்கு மன்றே.'

    'அன்புநூ லாக வின்சொ லலர்தொடுத் தமைந்த காத
    லின்பஞ்செய் காமச் சாந்திற் கைபுனைந் தேற்ற மாலை
    நன்பகற் சூட்டி விள்ளா தொழுகினு நங்கை மார்க்குப்
    பின்செ லும்பிறர்க ணுள்ளம் பிணையனார்க்கடிய தன்றே.'

    'நுண்ணறி வுடையோர் நூலொடு பழகினும்
    பெண்ணறி வென்பது பெரும்பே தைமைத்தே.'

என இவை முதலியன பலவாம். ஆண்மக்களை நோக்கி, காமமாகாதென்றற்கண் பெண்மக்கள் பழிக்கப்படுதல்போல, ஆரியாங்கனைகள், பிக்குணிகள், கைம்மை நோன்பினர் முதலாய பெண்மக்களை நோக்கி, காமமாகா தென்றற்கண் ஆண்மக்களும் இவ்வாறே பழிப்புரை பெறுதற்குரிய ரென்பது ஒருதலையாம். ஆணும் பெண்ணும் அறிவு மயங்கிக் காமவேட்கை மீதூர்ந்து, ஒருவ ரொருவரைக் காமித்து முறை தப்பித் திரிதற்கண், பெண்ணால் எத்துணைக்கேடு ஆணுக்கு எய்துமோ அத்துணையும் பெண்ணுக்கும் எய்துவதேயாகும். இங்ஙனமாகவும், ஒருவர் ஒருவரைப் பழித்து உரைப்பது எவ்வாறு? அவரவர் கேட்டிற்கு அவரவர் அறிவும் செயலும் காரணமாவனவே யன்றிப் பிறவில்லை. இக்கருத்துணர்ந்த நல்லோரெல்லாம் இருபாலார் நல்லொழுக்கமும் வேண்டுப.

    ஆச லம்புரி யைம்பொறி வாளியுங்
    காச லம்பு முலையவர் கண்ணெனும்
    பூச லம்பு நெறியின் புறஞ்செலாக்
    கோச லம்புனை யாற்றணி கூறுவாம்.
    என்றார் கல்வியிற்பெரியாரும்.

    நடுக்கடற் பிறந்த சங்கி னுள்ளி ருந்த பாலினற்
    குடிப்பி றந்த மைந்தர்தங் குழைமு கம்பி றர்மனை
    யிடைக்கண் வைத்த லில்லைகாத லார்கண் மேலு மார்வமூர்
    கடைக்கணோக் கிலாத மாதர் கற்பை யாவர் செப்புவார்.

என்றார் வாமன முநிவரும்.

ஆண்மக்கள், கண்டபக்கமெல்லாம் பேராசை யெழுவிக்கும் தம் பேய்மனத்தைப் பழியாமற் பெண்பாலாரையே பழிப்பது, குருடன் தன்கண்ணைப் பழியாமல் தன்னை யிடறிய வழியைப் பழித்தலையே யொக்கும். கொன்றுதின்பான், தனது தின்றல் வேட்கையே கொலைக்குக் காரணமென்னாது, கொல்லுதற்றொழிற்குரிய கருவிகளும் கொல்லப்படும் யாடு முதலியனவும் உண்மையே காரணமென்னும்; இது, அதுவே போலுமென்க. அன்றியும், மண் பொன் பெண் என உடனெண்ணப்பட்ட மூன்றனுள் முன்னை இரண்டனையும் விழைந்து இவனடையுங் கேடெல்லாம் இவன் வேட்கை முதலியன காரணமாக விளைதல்போலப் பின்னதற்கும் ஆம் என்பது எளிதினுணரப்படும்.

காமம் ஒழியத்தக்கது என்னும் பொதுமொழிக்கண்ணும் ஆண்பாலார்க்குப் பெண்பாலார்பக்கத் துளதாகும் காமவேட்கையும், பெண்பாலார்க்கு ஆண்பாலார்பக்கத் துளதாகுங் காமவேட்கையுமே ஒழியத்தக்கன என்பதே பொருளாதலுங் கண்டுகொள்க. இனி, வீடெய்தற்கட் காமமுதலியன ஒழியற்பாலவாதலால் ஆண்பாலார் பெண்பாலாரை விடுதற்கு எத்துணை அறிவொழுக்கங்களுடையராவரோ அத்துணையும் பெண்பாலார் ஆண்பாலாரைவிடுதற்கும் வேண்டுவ ரென்பது. 'நூலொடு பழகினும் பெண்ணறிவென்பது பெரும் பேதைமைத்தே' என்பார்க்கு, நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தம் உண்மையறிவே மிக்காகும். ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தாமடங்காப் 'பேதையாரும் ஆண்மக்களுள்ளும் பலருளராவராதலால் அப்பேதைமை மகளிர்க்கே சிறந்ததில்லை என்று கூறுக. இவையெல்லாம் வடித்தாராய்ந்தே வடகலை தென்கலைக் கடனிலை கண்ட ஆசிரியர் தொல்காப்பியனார் ஆண்பெண் இருபாலார்க்கும் அறிவொப்புமை கூறியமட்டி லமையாது,

'கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்ற லிறந்ததன் பயனே' என்பதனால், வீடுபெறுதற்கு எமஞ்சான்றவற்றை இருபாலாரும் புரிதற்கு உடன்பட்டனரென வுணர்க. சிறந்தது, சிறப்பு, சிரேயசு என்பன வீட்டின் பெயராம். இத் தொல்காப்பிய நன்னெறி கடைப்பிடித்தொழுகிய பண்டைத் தமிழ்மக்கள் அனைவரும் ஆண் பெண் இருதிறத்தாரையும் நற்றமிழ்க் கல்வியினும் அற்றமிலறிவினும் குற்றமி லொழுக்கினும் வேற்றுமை யின்றிப் பயில்வித்தனராவர். இத்தகைப் பயிற்சி ஒத்திலையாயின் மூன்றுவகைச் சங்கத்து நான்கு வருணத்தொடுபட்ட சான்றோருள்ளும், சைவ வைணவ மெய்யடியருள்ளும் உத்தமக் கல்வி வித்தகர்போற்றும் நல்லிசைப்புலமை மெல்லியலார்கள் பலரை நாம் பெற்றுய்யுமா றெங்ஙனம்! பெண்டிரெல்லாம் அறிவு நிரம்புதல் தண்டமிழ் வரைப்பிற் பண்டே நிகழ்ந்தது என்பதனை, கோப்பெருஞ்சோழற்கு உயிர்த்துணைவராகிய பிசிராந்தையார் என்னும் புலவர்பெருந்தகையார், யாண்டு பலவாகவும் தமக்கு நரையிலவாதற்குக் காரணமாகத் தம் மனைவியும் மக்களும் அறிவு நிரம்பினரா யிருத்தலைக் கூறியதனானும் அறியலாகும். 'இல்லதெ னில்லவண் மாண்பானால்' என்பதனையும் நோக்கிக்கொள்க.

இனி, ஒருசாராசிரியர், பெண்பாலார்க்கு யாழ் முதலிய சில கலைகளே கூறுவர். இவ்வாறு, 'கலைமலிகாரிகை' எனவருந் திருச்சிற்றம்பலக் கோவைக்கும், 'கலைவலார்' என்னுஞ் சிந்தாமணிக்கும் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கூறிய உரைநோக்கித் தெளிக. மகளிராற் பயிலப்படும் யாழ் முதலியன ஆண்மக்களானும் பயிலப்படுமாறுபோல, ஆண்மக்களாற் பயிலப்படுவனவும் மகளிராற் பயிலப்படுமென் றுணர்க. பெண்பாற் கோதிய மடைநூற்செய்தி ஆண்பாலாராலும் பயின்று செய்யப்படுதல்போலக் கொள்க. நளன் வீமன் என்னும் ஆண்பால் நன்மக்கள் மடைத்தொழில் வல்லுநராதலுங் காண்க. இவ்வேற்றுமை யின்மையானன்றே மகளிர்க்கோதிய யாழ் முதலியவற்றிற் றேர்ச்சிமிக்க நல்லாண்மக்களும், இயற்றமி ழறிவிற் சிறந்த நல்லிசைப்புலமை மெல்லியலாரும் இத்தமிழ்நாட்டுப் பலராயினரென்பது.

வீடுபயக்கும் விழுப்பேருணர்வைக் கொள்ளும் வாயெல்லாங் கொளுத்தியது இப்பழைய தமிழ்நாடே. ஆண் பெண் என்னும் வேற்றுமையின்றிப் பிறப்பினிழிபு கருதாது கடைநிலத்தோராயினுங் கற்றறிந்தோரைத் தலைநிலத்து வைத்து மகிழ்ந்தது இத் தண்டமிழ்வரைப்பே. குலத்தினும் பாவினும் குடியினும் தொழிலினும் கொள்கையினும் பல்வேறு வகைப்பட்ட நன்மக்களும் இகலிலராய் ஒருங்கு குழீஇ அறிவான் மகிழ்ந்தது இவ்வருந்தமிழ் நிலமே. 'நன்மக்களெங்கே பிறந்தாலுமென்' என்று அறிவின் பெருமையும் அன்பின் அருமையுமே கருதிப் பெண்டிரும் பிறப்பினிழிந்தாரும் உரைத்தருளிய நன்மொழி யனைத்தையும் வேதமெனப் போற்றி புகழ்ந்து, அவரது அன்புருவாய இன்புறுவடிவைத் திருக்கோயிலில் வைத்து வழிபடுவதும் இத் தென்றமிழ்ப்பொழிலே. 'எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியிற் கற்றோரை வருக' என்றழைத்தது இவ்வண்டமிழுலகே. ஆண்மையில்லென்பார் நாண்கொள முன்னே எண்டிசை வென்று பெண்டரசாண்டதிவ் வொண்டமிழகமே. இவையெல்லாம் நன்காராயின், இத்தமிழர் ஆண் பெண் இருபாலார்க்கும் அவயவவேற்றுமையல்லது அறிவுவேற்றுமை சிறிதுங் கருதினராகார் என்பது தெளிவாம். இக்கூறியவற்றிற்கெல்லாம் சான்றெனச் சிறந்த இத்தமிழ்நாட்டு நல்லிசைப்புலமை மெல்லியலாரைப்பற்றி யானறி யளவை யீண்டெடுத்தோதலுற்றேன். அவர்,

    ஆதிமந்தியார்     குறமகள் இளவெயினி
    வெள்ளிவீதியார்     பேய்மகள் இளவெயினி
    ஔவையார்     காவற்பெண்டு
    பாரிமகளிர்     காரைக்காற்பேயம்மையார்
    பூதப்பாண்டியன்றேவியார்     வில்லிபுத்தூர்க்கோதையார்
    காக்கைபாடினியார்     நச்செள்ளையார்

எனப் பலராவர்.
--------
1. ஆதிமந்தியார்

இவர் பெண்பாலர் என்பதும், இவர் நல்லிசைப்புலமை வாய்ந்தவர் என்பதும்,

    'மக்க ணுதலிய வகனைந் திணையுஞ்
    சுட்டி யொருவர் பெயர்கொளப் பெறாஆ'

என்னும் அகத்திணையியற் சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர்,

    'மள்ளர் குழீஇய விழவி னானும்
    மகளிர் தழீஇய துணங்கை யானும்
    ண்டுங் காணேன் மாண்டக் கோனை
    யானுமோ ராடுகள மகளே யென்கைக்
    கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
    பீடுகெழு குரிசிலு மாடுகள மகனே'. (குறுந் --31)

என்னும் பாடலை எடுத்தோதி, 'இது காதலற் கெடுத்த ஆதிமந்திபாட்டு' எனவுரைத்தமையானும், இச்செய்யுள் சான்றோராற் றொகுக்கப்பட்ட குறுந்தொகையு ளொன்றாதலானும் அறியப்படும். இதனுள், 'காதலற்கெடுத்த' என்றது, கணவனைக் காணப்பெறாத என்றவாறு. ஈண்டு, கெடுத்த என்பதனை 'அரசுகெடுத் தலமரு மல்லற் காலை' (சிலப்-அந்தி) 'எற்கெடுத்திரங்கி' (மணி-5) 'யானைதன் வயப்பிடி கெடுத்து மாழாந்த தொத்து' (சிந். கன-34) 'ஒருபொற் பூங்கொடி யென்னு நீராளை யிங்கே கெடுத்தேன்' (சிந். கன-38) என்னுமிடங்களிற்போலக் கொள்க.

இவர் காதலனைக் காணப்பெறாதவா றென்னையெனிற் கூறுவேன்: இவர், திருமாவளவனெனச் சிறந்த கரிகாற்சோழன் அருமை மகளாவர். சேரநாட்டு மன்னனாகிய ஆட்டனத்தி என்பானை மணந்தவர். இவர், தங்காதலனுடன் கரிகாற்சோழனாற் கழாஅர் என்னும் ஊரிற் காவிரி முன்றுறையிற் சிறப்பித்துக்கொண்டாடப்பட்ட புதுப்புனல் விழவுக்குச் சென்றாராக, ஆங்குக் கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினனாய், இயற்கை வனப்பாலும் செயற்கையணியாலும் கண்டாரனைவரும் விரும்புந் தகையனாய் யாரினும் மேம்பட்டு ஆடுதற் றொழிலாற் சிறந்த தம் உயிர்க்காதலனாகிய அவ் வாட்டனத்தியை நீர்விளையாடுகையிற் காவிரி வவ்வியதனால், அவனை நாட்டிலும் ஊரிலும் சேரியிலும் வீரர்தொக்க வில்விழவுகளிலும் மகளிர் தொக்க துணங்கையா டிடங்களிலும் யாண்டுந் தேடிக் காணப்பெறாது, புனல்கொண் டொளித்ததோ கடல்கொண்டு புக்கதோ என்று கலுழ்ந்த கண்ணராய் மருண்டசிந்தையராய் அலமந்து, அக்காவிரி ஓடும் வழியெல்லாம் ஓடிக் கடல்வாய்ப் புக்கு அவனையே கூவி யரற்றினார்க்கு, அக்கடலே அவ்வாட்டனத்தியைக் கொணர்ந்துவந்து முன்னிறுத்திக் காட்டியவளவில், ஆங்கவனைத் தழுவிக்கொண்டு பொற்கொடிபோலப் போந்தார் என்ப. இதனாற் காதலற்கெடுத்தவாறு உணர்க.

இவ்வரியகதை நெடுந்தொகையினும் சிலப்பதிகாரத்தும் எடுத்தாளப்பட்டுள்ளது. இது பரணர் முதலிய நல்லிசைப்புலவரால் ஆங்காங்கெடுத்துப் பாராட்டப்படுவது. தலைவர் பிரிவுக்குத் தலைவியர் வருந்துமிடனெல்லாம் இவ்வாதிமந்தியார்க்கு நேர்ந்த பெருந்துயரே எடுத்து உவமை கூறப்படுவது. இக் கதையோ டொட்டி ஆராயுமிடத்து, மேற்குறித்த பாடல் இவரது பெருந்துயர்நிலையி லுரைத்த தென்பதும், தம்முடைய நாயகன் நாடுகெழுகுரிசி லாகிய மாண்டக்கோன் என்பதும், அவன், மைந்தர்க்கு மைந்தனாய் மகளிர்க்குச் சாயலாய் இருபாலாராலும் விரும்பப்படுபவனாதலால், மைந்தர் வில்விழவா டிடங்களிலும் மகளிர் துணங்கையாடிடங்களிலும் மற்றுமவன் இருத்தற்குத் தக்குழியெல்லாந் தேடிக் காணாதுழன்றாரென்பதும், வில்விழவாடுகளத்தும் துணங்கையாடுகளத்தும் அவனைத் தேடுதல் காரணமாகப் பல்காற் சுற்றித்திரிதலாற் றாமும் ஆடுகளமளே போறலின், 'யானுமோ ராடுகள மகளே' என்றாரென்பதும், தங்கணவன் ஆடுதற் றொழிலிற் சிறந்தோன் என்பதும், அவனைக் காணாமையாற் றம்மேனி பெரிதுமெலிந்தார் என்பதும் தெளியப்படுதல் காண்க. இவர் தங்கணவன் யாவரும் விரும்பும் பேரழகுடையனாதலால் காவிரி அவனது நலனயந்து வவ்விய தென்று சிறப்பித்துக் கூறுவர். இவர் பெயரும் இவரது காதலன் பெயரும் சிறுபான்மை முதற்சொல்லொழித்து மந்தி எனவும் அத்தி எனவும் வழங்கவும்படும். இவற்றை யெல்லாம்,

    'காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்
    தாதிமந்தி போலப் பேதுற்
    றலந்தனெ னுழல்வேன் கொல்லோ.'
          (வெள்ளி வீதியார் - அகம் - 45)

    'கச்சினன் கழலினன் றெந்தார் மார்பினன்
    வகையமைப் பொலிந்த வனப்பமை தெரியற்
    சுரியலம் பொருநனைக் காண்டி ரோவென
    வாதி மந்தி பேதுற் றினையச்
    சிறைபறைந் துரைஇச் செங்குணக் கொழுகு
    மந்தண் காவிரி போல.'
          (பரணர். அகம் - 76)

    'கழா அர்ப் பெருந்துறை விழவி னாடு
    மீட்டெழிற் பொலிந்த வேந்துகுவவு மொய்ம்பி
    னாட்ட னத்தி நலனயந் துரைஇத்
    தாழிருங் கதுப்பிற் காவிரி வவ்வலின்
    மாதிரந் துழைஇ மதிமருண் டுழந்த
    வாதி மந்தி காதலற் காட்டிப்
    படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின்
    மருதி யன்ன மாண்புகழ் பெறீஇயர்.'
          (பரணர். அகம் - 222)

    'அணிகிளர் சாந்தி னம்பட் டிமைப்பக்
    கொடுங்குழை மகளிரி னொடுங்கிய விருக்கை
    யறியா மையி னழிந்த நெஞ்சி
    னேற்றிய லெழினடைப் பொலிந்த முன்பிற்
    றோட்டிருஞ் சுரியன் மணந்த பித்தை
    பாட்ட னத்தியைக் காணீ ரோவென
    நாட்டி னாட்டி னூரி னூரிற்
    கடல்கொண் டன்றெனப் புனல்கொண் டன்றெனக்
    கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த வாதி மந்தி.'
          (பரணர். அகம் - 236)

    * ... ... ... உரைசான்ற
    மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன்
    றன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று
    கன்னவி றோளாயோ வென்னக் கடல்வந்து
    முன்னிறுத்திக் காட்ட வவனைத் தழீஇக்கொண்டு
    பொன்னங் கொடிபோலப் போதந்தாள்.'
          (சிலப்பதிகாரம், வஞ்சினமாலை)

என்பனவற்றாற் கண்டு ஆராய்ந்து கொள்க. நெடுந்தொகை 41-ம் பாட்டில், நன்னன் ஏற்றை நறும்பூணத்தி முதலிய சிலர், சேரன் படைத்தலைவராகக் கூறப்படுதலால், அத்தியை வஞ்சிக்கோன் என்றலும் பொருந்தும். கரிகால் வளவன் புதுப்புனல் விழவு கொண்டாடுதல் சிலப்பதிகாரத்துக் கடலாடுகாதையினுங் கண்டது. 'விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன், றண்பதங் கொள்ளுந் தலைநாட் போல' என்பதன் உரையானுணர்க. அறிவாற் கலைமகளே எனச் சிறந்த ஔவையார் பாடியருளிய, 'நெடுமலைச் சிலம்பின்' என்னும் நெடுந்தொகையில், 'வெள்ளி வீதியைப் போல 'கன்றுஞ், செலவயர்ந் திசினால் யானே' என வருதலானே வெள்ளிவீதியார் ஔவையாரின் முற்பட்டவராதல் அறியப்படுவது. அவ் வெள்ளிவீதியார்,

    'ஆதி மந்தி போலப் பேதுற், றலந்தனெ னுழல்வேன் கொல்லோ'       (அகம்- 45)

என்றமையானே, இவ்வாதிமந்தியார் அவர்க்கும் முற்பட்டவராதல் தெளியப்படும். செந்தமிழ்ச் சரிதவாராய்ச்சி செவ்விதிற்புரிந்த இக்காலத்தறிஞர் [மகா-100-100-ஸ்ரீ வி. கனகபைப் பிள்ளையவர்களுடைய 'Tamils Eighteen Hundred Years Ago" Madras Review, Page 433.] கரிகாற்சோழன் காலம் கி.பி.55 முதல் 95 இறுதியாமெனத் தெளிவித்தலால், இவ்வாதிமந்தியாரும் அவன்மகளெனல்பற்றி அக்காலத்தவரே யாதல் தெரிந்துகொள்க. இவரது நுண்ணிய அறிவும் திண்ணிய கற்பும் இவற்றான் ஒருவா றறியத்தக்கது. இனி, வெள்ளி வீதியாரைப்பற்றி ஓதுவேன்.

--------------

2. வெள்ளி வீதியார்

இவர் பெண்பாலார் என்பதும், நல்லிசைப் புலமை யுடையார் என்பதும் நச்சினார்க்கினியர், 'மக்க ணுதலிய வகனைந் திணையுஞ், சுட்டி யொருவர் பெயர்கொளப் பெறாஅர்' என்னுந் தொல்காப்பிய அகத்திணையியற் சூத்திரவுரையில்,

    'கன்று முண்ணாது கலத்தினும் படாஅது
    நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்
    கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
    பசலை யுணீஇய வேண்டுந்
    திதலை யல்குலென் மாமைக் கவினே.' (குறுந் - 27)

இது வள்ளி வீதியார் பாட்டு. 'மள்ளர் குழீஇய...மகனே இது காதலற்கெடுத்த ஆதிமந்திபாட்டு. இவை தத்தம் பெயர் கூறிற் புறமாம் என்றஞ்சி வாளாது கூறினார்' எனக் கூறியவாற்றான் நண்குணரலாகும். தம்பெயர் கூறிற் புறமாமென்றஞ்சி வாளாது கூறிய இச்செய்யுள், பெண்பாற் கூற்றாதலுங் கண்டுகொள்க. ஔவையார் பாடியருளிய, 'ஒங்குமலைச் சிலம்பின்' என்னும் அகப்பாட்டில்,

    'நெறிபடு கவலைய நிரம்பா நீளிடை
    வெள்ளி வீதியைப் போல நன்றுஞ்
    செலவயர்ந் திசினால் யானே' (அகம். 147)

என்பதனால், செலவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் நிரம்பா நீளிடையில் யானும் வெள்ளிவீதியைப்போலச் செல்லத் துணிந்தேன் எனக் கூறியவாற்றானும், நச்சினார்க்கினியர்,

    'இதனுள் வெள்ளிவீதியைப் போலச் செல்லத் துணிந்து
    யான் பலவற்றிற்கும் புலந்திருந்து பிரிந்தோரிடத்தினின்னும்
    பிரிந்த பெயர்வுக்குத் தோணலந்தொலைய உயிர்செலச்
    சாஅய் இரங்கிப் பிறிது மருந்தின்மையிற் செயலற்றேனென
    மிகவும் இரங்கியவாறு மெய்ப்பாடு பற்றியுணர்க'
    (தொல்-பொ-அகத்-15)

எனக் கூறியவாற்றானும், இவர் தம் அருமைத்தலைவனைப் பிரிய நேர்ந்துழித் தமித்துயிர்வாழ்த லாற்றாது, அவனுடனுறை வேட்கை மீதூர்ந்து அவன் சென்றுழிச் செல்லவேண்டிக் காடும் பிறவுங் கடந்து சென்றனரென்பது உய்த்துணரப்படுவது. 'முந்நீர் வழக்க மகடூஉவோ டில்லை' (தொல் - பொ - அகத் - 34) என்னும் புலனெறி வழக்கிற்கு மாறாய்த் தலைவனைப் பிரிந்துறையலாற்றா உழுவலன்பால் அறிவிற் சிறந்த பெருந்தகைமகளார் ஒருவர் நிகழ்த்திய அருஞ்செயலாதலின், ஔவையார் என்னும் அருந்தமிழ்ச் செல்வியார், கற்பின்பாற் றலைவி, பிரிந்த தலைவன்பாற் செல்லத் துணிந்தமைக்கு எடுத்துக்காட்டினா ராவர்.

இவ் வெள்ளி வீதியார் புலனெறி வழக்கெலா முணர்ந்த நல்லிசைப்புலமை மெல்லியலாரா யிருந்தும் தம் தலைவன்மாட்டு வைத்த அன்புமிகுதியான் அவற்றையிகந்து அவன்பாற் செல்லத்துணிந்தமையானே இஃதெடுத்தாளப்பட்டதாகும். இவர் பாடல்களுட் பெரும்பான்மையாகப் பிரிவுபற்றி வருவனவெல்லாம் இவர் தம் தலைவனைப் பிரிந்த காலத்துப் பாடியனவே யாம். புலனெறி வழக்கினாற் பிரிவுடன்பட்டும், ஆற்றலாகாப் பிரிவுத் துயரான் அறிவு மயங்கி அவனைக் காண்டல் வேட்கையே மீதூர்ந்து பெரும் பாலை நிலமெல்லஞ் செல்லத் துணிந்த இவரது அரிய பெரிய அன்பின்றகைமை யாவரானும் அறியலாவது.

'அன்பென்ப தொன்றின் றன்மை யமரரூ மறிந்த தன்றால்' என்றார் கம்பநாடரும். அயோத்தியரிறை பின்னே வைதேகி என்றுரைக்கும் அன்ன நடை அணங்கு காடெலாம் நடந்ததும், இத்தமிழ்நாட்டுக் கண்ணகி என்னும் கற்புடையாட்டி கோவலன் பின் சென்றதும் இப்புலனெறி வழக்கிற்கு மாறாயினும் அன்பின்றகைமையான் ஆன்றோரெல்லாரானும் புகழ்ந்து பாராட்டப்படுதல்போல, இதனையுங்கொள்க. இதனோடொட்டியாராய்வுழி, மேல் தம்பெயர்கூறிற் புறமாமென்றஞ்சி வாளாது கூறிய, 'கன்று முண்ணாது' என்னுஞ் செய்யுள், இவர், தம் தலைவன் பிரியலுற்றபோது தம்மையும் உடன்கொண்டு செல்லாமைக்குக் கவன்று பாடியதாக உய்த்துணரப்படும். இனித் தலைவி, கற்பினுட் பிரிவாற்றாது எம்மையும் உடன்கொண்டு சென்மினெனக் கூறுவனவும் உண்டென்பது, முற்குறித்த 'முந்நீர் வழக்கம்' என்பதற்கு நச்சினார்க்கினியருரை நோக்கி யறிக.

    'என்னீ ரறியாதீர் போல விவைகூறி
    னின்னீர வல்ல நெடுந்தகா யெம்மையு
    மன்பறச் சூழாதே யாற்றிடை நும்மொடு
    துன்பந் துணையாக நாடி னதுவல்ல
    தின்பமு முண்டோ வெமக்கு'
    (கலித்தொகை)

என்று தலைவி கூறுமாற்றான் உணர்க. இவ்வாறு தலைவி கூறுவன தலைவன் செலவழுங்குதற்குக் காரணமாவனவல்லது உடன்கொண்டு சேறற்காவன வில்லை என்பர். இவர் அவ்வாறன்றித் தலைவன்பாற் செல்லவேண்டி நெறிபடு கவலைய நிரம்பா நீளிடையினுஞ் சென்றமையானே அருமைபற்றி இவர் பெருஞ்செயல் எடுத்தாளப்பட்டதாகும் என்பது தெள்ளிது. இனி, இவர் தலைவனுடன் செல்லவேண்டினரல்லது, அவன் பிரிந்த பின்பு அவன்பாற் செல்லத் துணிந்தனரில்லையெனின், அஃது எல்லா மகளிர்க்கும் ஒத்தலான் இவரது செயலொன்றையே சிறப்பித்து, 'வெள்ளி வீதியைப் போல நன்றுஞ், செலவயர்ந் திசினால் யானே' எனக் கூறார் என்க.

இனி, இவர் தந்தலைவனைப் பிரியலுற்றுழிப் பாடியருளிய இக் 'கன்று முண்ணாது' என்னுஞ் செய்யுளொன்றே இவரது நல்லிசைப் புலமையினை நன்கு புலப்படுத்தும். இது சொல்லானும் பொருளானும் சுவை பெரிது பயப்பதென்பது ஆய்ந்தறியத்தக்கது. கன்று வயிறாரவுண்டபின்னே கலத்திற் கறத்தல் அறமென்னுங் கருத்தாற் கன்ருண்டலை முன்னும் கலத்திற்படுதலைப் பின்னும் வைத்தோதினார். 'கறவைகன் றார்த்திக் கலநிறை பொழியும்' என மணிமேகலை துறவினும் (அறவணர்த்தொழுதகாதை), 'கன்றருத்தி மங்கையர் கலநிறை பொழிதர' எனச் சிந்தாமணியினும் (நாமகள் -110), கூறுதல் காண்க.

    'விடுநில மருங்கிற் படுபுல் லார்ந்து
    நெடுநில மருங்கின் மக்கட் கெல்லாம்
    பிறந்தநாட் டொட்டுச் சிறந்தன் றீம்பா
    லறந்தரு நெஞ்சோ டருள்சுரந் தூட்டும்'
    [மணிமேகலை ஆபுத்திரன்றிற மறிவித்தகாதை.
    விடுநிலம் - மக்களால் விளைவிற்குதவாமல் விடப்பட்ட நிலம்.]

தன்மைத்தாகலின் 'நல்லான்' என்றார். நல்லான் றீம்பால் கன்று முண்ணாமற் கலத்தினும்படாமல் வெறிதே நிலத்தே உகுந்தொழிந்தாற் போல எனது மாமைநிறத்தொடு கூடிய அழகு எனக்குமாகாமல் என் தலைவற்கும் உதவாமற் பசலையான் உண்டு கழிய வேண்டும் என்றார் என்க. என்னை என்பது,

    'என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை
    முன்னின்று கன்னின் றவர்'

என்புழிப் போல, என்றலைவன் என்னும் பொருட்டு. பொருண்மேற் சேறல் முதலாயின மனைவியோ டில்லை என்பதனால், மகளிர்க்கு இவ்வரிய பிரிவுத்துயர் அநுபவித்தலே யுறுவது என்னுங் கருத்தால், 'வேண்டும்' என்று கூறினார். இவ்வாறு இவர் பாடியருளிய செவ்விய கூரிய தீஞ்சொல் வவ்விய பாடல்கள் நற்றிணையில் 3-ம், குறுந் தொகையில் 8-ம், நெடுந்தொகையில் 2-ம், திருவள்ளுவமாலையில் 1-ம், ஆகப் பதினான்குள்ளன. இவற்றுள், 'வாடபடுபுல் - ஒருவர் முயற்சியானன்றித் தானே யுண்டாய புல். அப்புல்லும் விளைத்தாற்போல யாண்டும் ஒத்துண்டாகாமையான் 'மருங்கின்' என்றார். ஆர்ந்து-ஒருவர் கொணர்ந்திடுதலின்றித் தானே சென்று மேய்ந்து எ-று. 'நெடுநில மருங்கின் மக்கள்' என்றதனால் அங்ஙனம் விட்ட நிலமும் மிகச் சிறிதாதலறியப்படும். மக்கட்கெல்லாம் என்றது, குழவிமுதல் முதியோரிறுதியாக எல்லா மக்கட்கும் எ - று. பிறந்தநாட் டொட்டு அம்மக்கள் தோன்றிய நாட்டொடங்கி. இதனாற் சாந்துணையும் என்பது கூறாமலுணரப்படும். கொலையுந் துன்பமு மில்லாமல் எய்தவருந் தீவிய உணவாதலாற் 'சிறந்ததன் றீம்பால்' என்றார். தான் புல்லை யுண்டும் பிறர்க்கு இனிய பாலை யளித்தலின், 'அறந்தரு நெஞ்சோ டருள்சுரந் தூட்டும்' என்றார் என வுணர்க.

'லுழுஞ்சில்' என்னும் நெடுந்தொகைச் செய்யுட்கண் இவர், திதியன் என்பவன் குறுக்கை யென்னும் ஊர்ப்புறத்து [*] அன்னியொடு பொருது அவ்வன்னியின் காவன்மரமாகிய புன்னையினை வேரொடு தடிந்த கதையினையும், காதலற்கெடுத்த ஆதிமந்தி கதையினையும், [#] சேரனொருவன் வேலாற் கடலோட்டிய கதையினையும் எடுத்துக்கூறியுள்ளார்.
---------
[*] இவ்வன்னியுடைய ஊர் அன்னியூர். அது, தேவாரத் திருப்பதிகளுள் ஒன்று.]
[#] இவன் சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன். (புறம். 366) ]
-----
திருவள்ளுவமாலையுள்,

    'செய்யா மொழிக்குந் திருவள் ளுவர்மொழிந்த
    பொய்யா மொழிக்கும் பொருளொன்றே--செய்யா
    அதற்குரிய ரந்தணரே யாராயி னேனை
    யிதற்குரிய ரல்லாதா ரில்.'

என்பது இவர் பாடியது. இதன்கண் வேதத்தினைச் செய்யாமொழி என வழங்கியதனால், இவர் வேதம் நித்தியமெனவுங் கருதிய கோட்பாடுடையரென்பதறியப்படுவது. இவ்வெண்பாவானே இவர் வேதவழக்கொடுபட்ட கொள்கையினரென்பதும் எளிதினுணரத்தகும். திருக்குறளைப் பொய்யாமொழி என்னும் பெயரான் வழங்கினாரும் இவரே யாவர். இவர்,

    'காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்
    தாதி மந்திபோலப் பேதுற்
    றலந்தனெ னுழல்வேன் கொல்லோ'
    (அகம்-45)

என்பதனால், இவர் ஆதிமந்தியார்க்குப் பிற்பட்ட காலத்தவர் என்பதும், ஔவையார், 'வெள்ளி வீதியைப் போல' (அகம்-147) என்பதனால் அவ் வௌவையாருக்கு முற்பட்ட காலத்தவரென்பதும் நன்குணரத்தகும். இவரது நல்லிசைப் புலமையின் பல்வளம் பலருமறிய இவரது இன்பப்பகுதியின் பொருட்பாடல்களை ஈண்டுத் தருகின்றேன். இவற்றானும் இவர் தங்கணவனைத் தேடி எங்கும் உழன்றமை ஆராய்ந்து கொள்க.

நற்றிணை

    (1) சிறுவெளாங் குருகே சிறுவெளாங் குருகே
    துறைபோ கறுவைத் தூமடி யன்ன
    நிறங்கிளர் தூவிச் சிறுவெளாங் குருகே
    யெம்மூர் வந்தெம் முண்டுறைத் துழைஇச்
    சினைக்கெடிற் றார்கையை யவரூர்ப் பெயர்தி
    யனையவன் பினையோ பெருமற வியையோ
    ஆங்கட் டீம்புன லீங்கட் பரக்குங்
    கழனி நல்லூர் மகிழ்நர்க்கென்
    இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே.

இது காமமிக்க கழிபடர் கிளவி - (70 )

    (2) திங்களுந் திகழ்வா னேர்தரு மிமிழ்நீர்ப்
    பொங்குதிரைப் புணரியும் பாடோ வாதே
    யொலிசிறந் தோதமும் பெயரு மலிபுனற்
    பல்பூங் கானன் முள்ளிலைத் தாழை
    சோறுசொரி குடவையிற் கூம்புமுகை யவிழ
    வளிபரந் தூட்டும் விளிவி னாற்றமொடு
    மையிரும் பனைமிசைப் பைதல வுயவு
    மன்றிலு மென்புற நரலு மென்றிவ்
    விரல்கவர்ந் துழந்த கவர்வின் யாழ
    யாம முய்யாமை நின்றது
    காமம் பெரிதே களைநரோ விலரே.

இது காமமிக்க கழிபடர் கிளவி: மீதூர்ந்த தலைமகள் சொல்லியது. (335)

    (3) நிலவே, நீனிற விசும்பிற் பல்கதிர் பரப்பிப்
          பான்மலி கடலிற் பரந்துபட் டன்றே
    யூரே, யொலிமரூஉஞ் சும்மையொடு மலிபுதொகு பீண்டிக்
          கலிகெழு மறுகின் விழவய ரும்மே
    வானே, பூமலர் கஞலிய பொழிலகந் தோறுந்
          தாமமர் துணையொடு வண்டிமி ரும்மே
    யானே, புனையிழை ஞெகிழ்த்த புலம்புகொ ளவலமொடு
          கனையிருங் கங்குலுங் கண்படை யிலனே
    அதனால், என்னொடு பொருங்கொலிவ் வுலக
          முலகமொடு பொருங்கொலென் னவலமுறு நெஞ்சே.

இது வேட்கை பெருகத் தாங்ககில்லாளாய் ஆற்றாமை மீதூர்கின்றாள் சொல்லியது. (385)

குறுந்தொகை

    (4) 'கன்று முண்ணாது......................................கவினே'

இது பிரிவிடையாற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி யுரைத்தது. (27)

    (5) [*] காலே பரிதப் பினவே கண்ணே
    நோக்கி நோக்கி வாளிழந் தனவே
    யகலிரு விசும்பின் மீனினும்
    பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.

இஃது இடைச்சுரத்துச் செவிலித்தாய் கையற்றுச் சொல்லியது. (44)
----------------
[*இதனை அகத்திணைக்கேற்ற துறைவகையின் அமைத்துக் கருத்துரை, கூறினாரேனும் வெள்ளிவீதியார் தங்கணவனைப் பிரிந்து தேடிச்செல்வுழித் தங்கால்கள் நடக்கலாகாது செலவு தப்பியமையினையும் தங்கண்கள் அவனையே தேடி**??]

    (6) இடிக்குங் கேளிர் நுங்குறை யாக
    நிறுக்க லாற்றினே நன்றுமற் றில்ல
    ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
    கையி லூமன் கண்ணிற் காக்கும்
    வெண்ணெ யுணங்கல் போலப்
    பரந்தன் றிந்நோய் நொண்டுகொளற் கரிதே.

இது கழற்றெதிர்மறை. (58)

    (7) நிலந்தொட்டுப் புகாஅர் வான மேறார்
    விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
    நாட்டி னாட்டி னூரி னூரிற்
    குடிமுறை குடிமுறை தேரிற்
    கெடுநரு முளரோநங் காத லோரே.

[* இதனானும் இவ் வெள்ளிவீதியார் தங்கணவனைத் தேடியுழன்றமை நன்குணரப்படும்.]

இது பிரிவிடையழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது: நீ யவர் பிரிந்தாரென் றாற்றாயாகின்றதென்னை? யான் அவ ருள்வழி யறிந்து தூதுவிட்டுக் கொணர்வேன்; நின் ஆற்றாமை நீங்குக எனத் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.

ஒளியிழந்தமையினையும் விசும்பின் மீனிற் பலர்பிறரைக் கண்டும் அவ்விசும்பிற் றிங்கள் போன்ற தம் கணவனைக் காணாமல் உழன்றமையினையுமே இது குறிப்பதென்று கொள்க. இவ்வாறே தருமிக்குப் பொற்கிழியளிப்பான் வேண்டிச் செண்பகமாறன் உளக்கருத்தமைத்து இறையனாராற் பாடப்பட்ட 'கொங்குதேர் வாழ்க்கை' என்னுஞ் செய்யுளும் இக் குறுந்தொகையிற் கோக்கப்பட்டு அகத்திணைக் கேற்ற
துறைவகை பெறுவதும் ஈண்டைக்கு நோக்கிக்கொள்க.

தோழி தூதுவிடுவாளாகத் தலைமகள் தனதாற்றாமையாற் கூறியதூஉமாம். (130)

    (8) அம்ம வாழி தோழி நம்மூர்ப்
    பிரிந்தோர்ப் புணர்ப்போ ரிருந்தனர் கொல்லோ
    தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
    நன்றுநன் றென்னு மாக்களொ
    டின்றுபெரி தென்னு மாங்கண தவையே.

இது தலைமகன்றமர் வரைவொடு வந்து சொல்லாடா, நின்றுழி வரைவு மறுப்பவோ எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது. (146)

    (9) அளிதோ தானே நாணே நம்மொடு
    நனிநீ டமர்ந்தன்று மன்னே யினியே
    வான்பூங் கரும்பி னோங்குமணற் சிறுசிறை
    தீம்புன னெரிதர வீந்துக் காங்குத்
    தாங்கு மளவைத் தாங்கிக்
    காம நெரிதரக் கைநில் லாதே.

இஃது உடன்போக்குணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. (146)

    (10) சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டிற்
    றெற்றென விறீஇயரோ வைய மற்றியா
    நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே
    பாணர், பசுமீன் சொரிந்த மண்டை போல
    வெமக்கும் பெரும்புல வாகி
    நும்மும் பெறேஎ மிறீஇயரெம் முயிரே.

இது கற்புக்காலத்துத் தெளிவிடை விளங்கியது; இனித் தோழி வரைவு நீட்டித்தவழி வரைவுகடாயதூஉமாம். (166)

    (11) வெண்மணல் விரிந்த வீததை கானற்
    றண்ணந் துறைவன் றணவா வூங்கே
    வாலிழை மகளிர் விழவணிக் கூட்டு
    மாலையோ வறிவேன் மன்னே மாலை
    நிலம்பரந் தன்ன புன்கனொடு
    புலம்புடைத் தாகுத லறியேன் யானே.

இது பிரிவிடை வற்புறுத்துந் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிரழிந்தது. (386)

அகநானூறு .

    (12) வாட லுழுஞ்சில் வளைநெற் றந்துண
    ராடுகளப் பறையி னரிப்பன வொலிப்பக்
    கோடை நீடிய வியன்பெருங் குன்றத்து
    நீரி லாராற்று நிவப்பன களிறட்
    டாளி லத்தத் துழுவை யுகளுங்
    காடிறந் தனரே காதலர் மாமை
    யரிநுண் பசலை பாஅய்ப் பீரத்
    தெழின்மலர் புரைதல் வேண்டு மலரே
    யன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன்
    றொன்னிலை முழுமுத றுமியப் பண்ணிப்
    புன்னை குறைத்த ஞான்றை வயிரிய
    ரின்னிசை யார்ப்பினும் பெரிதே யானே
    காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்
    தாதி மந்தி போலப் பேதுற்
    றலந்தனெ னுழல்வென் கொல்லோ பொலந்தார்க்
    கடல்கால் கிளர்ந்த வென்றி நல்வேல்
    வான வரம்ப னடன்முனைக் கலங்கிய
    வுடைமதி லோரரண் போல
    அஞ்சுவரு நோயொடு துஞ்சா தேனே.

என்பது, வற்புறுக்குந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. (45)

    (13) பாம்படை விடா பனிநீ ரிட்டுத்துறைத்
    தேங்கலந் தொழுக யாறுநிறைந் தனவே
    வெண்கோட் டியானை பொருத புண்கூர்ந்து
    பைங்கண் வல்லியங் கல்லளைச் செறிய
    முருக்கரும் பன்ன வல்லுகிர் வயப்பிணவு
    கடிகொள வழங்கா ராறே யாயிடை
    யெல்லிற் றென்னான் வென்வே லேந்தி
    நசைதர வந்த நன்ன ராள்
    னெஞ்சுபழு தாக வறுவியன் பெயரி
    னின்றிப் பொழுதும் யான்வா ழலனே
    யெவன்கொல் வாழி தோழிநம் மிடைமுலைச்
    சுணங்கணி முற்றத் தாரம் போலவுஞ்
    சிலம்புநீடு சோலைச் சிதர்தூங்கு நளிர்ப்பி
    னிலங்குவெள் ளருவி போலவு
    நிலங்கொண் டனவாற் றிங்களங் கதிரே.

என்பது, இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.(362)

    (14) 'செய்யாமொழி'
    (திருவள்ளுவமாலை-23)

பொருள் விரித்துணருந் தெருளுடைய மனத்தர்க்கெல்லாம் இப்பதினான்கு பாடல்களும் பதினான்குலகேயாம் எனின் அது வியப்பன்று; இத்துணையுங் கூறியவாற்றான் வெள்ளி வீதியார் வரலாறு ஒருவாறு உணரப்படும்.

----

3. ஔவையார்.

இந் நல்லிசைப் புலமை மெல்லியலாரின் அருமைத் திருப்பெயர் இத் தமிழ்நாட்டின்கண் அறிவுக்கே பரியாயநாமம்போலச் சிறந்து தொன்றுதொட்டே ஆண் பெண் இளையர் முதியர் என எல்லாரானும் வழங்கப்படுவதொன்று. ஒரோ ரினிய முதுமொழியை எடுத்தோதி, அதனை 'ஔவை வாக்கு' என்றும் 'ஔவைவாக்குத் தெய்வவாக்கு' என்றும், 'ஆயிரம் பிள்ளை பெற்ற ஔவையார்' என்றும் பலவாறாக வழங்குதல் இன்றைக்குங் காணலாம். ஈண்டு ஆயிரம் பிள்ளை யென்றது இவர் பாடியருளிய பலவாய பாடல்களையே குறிப்பதாகும். 'செல்வப் புதல்வனே யீர்ங்கவியா' என்றார் பிறரும். ஆயிரம் - உபலக்கணம். இனிய எளிய தொடரில் அரிய பெரிய உறுதிகளை அமைத்து யாவர்க்கும் புலங்கொள உரைப்பது இவர்க்கியல்பு என்பது, 'அறஞ்செய விரும்பு', 'அன்னையும் பிதாவு முன்னறி தெய்வம்' என்பன முதலாக இவரருளிச்செய்த அறவுரைகளாற் றெற்றென விளங்கும். இத்தகைக் கல்விவண்மையானன்றே இவரைக் கற்றோரே யன்றி மற்றோரும் எளிதினறிந்து பாராட்டுவாராயினர். இவ்வாறு யாவரும் பரவும் மேவருஞ் சிறப்பினையுடைய ஔவையா ரென்னும் அருந்தமிழ்ச் செல்வரின் பெரிய வரலாற்றைப் பண்டைத் தண்டமிழ் நூல்களையே பெருந் துணையாக்கொண்டு யான் றெரிந்த அளவால் ஈண்டெடுத்தோதலுற்றேன்.

இவரது பிறப்பு வரலாற்றைப்பற்றி ஆராயுமிடத்துப் பழைய கதையொன்று காணப்படுவது. அஃதாவது, 'யாளிதத்தன் என்னும் பார்ப்பானொருவன், தன்னாலே பார்ப்பனி யெனக் கருதிக்கொள்ளப்பட்ட புலைச்சி யொருத்தியை மணந்து, கபிலர் முதலாக எழுவர் மக்களை இவ்வுலகிற்றந்தனன்; அவருள் இவ்வெளவையாரும் ஒருவர் என்பது. இஃது இற்றைக்கு நானூறு வருடங்கட்கு முற்பட்டதென்று தெரியப்படுகின்ற ஞானாமிர்த நூலுள் 'அறப்பயன் றீரின்' என்னும் அகவலுள்,

    'யாளி, கூவற் றூண்டு மாதப் புலைச்சி
    காதற் சரணி யாகி மேதினி
    யின்னிசை யெழுவர்ப் பயந்தோ ளீண்டே'

என்பதனானும், இதனுரையுள், 'யாளிதத்தன் தனக்கு விகிர்தமாய்த் தன்னானே வெட்டுண்டு கிணற்றில் வீழ்த்தப்பட்ட அறிவில்லாத சண்டாளப்பெண்ணை ஒரு பிராமணன் எடுத்துக்கொண்டுபோய் உத்தரபூமியில் வளர்த்து, இவனுக்கே பின்னர்க்கொடுக்க, இவனுக்கு அவள் காதலித்த பார்ப்பனியாய் இந்நிலவுலகின் கண்ணே இனிய கீர்த்தி பெற்ற கபிலர் முதலிய பிள்ளைகள் எழுவரை ஈங்குப் பெற்றாள்' எனக் கூறுதலானும் அறியப்பட்டது. இக் கபிலர் முதலாகிய எழுவர் இவரென்பது,

    கபில ரதிகமான் காற்குறவர் பாவை
    முகிலனைய கூந்தன் முறுவை--நிகரிலா
    வள்ளுவ ரவ்வை வயலூற்றுக் காட்டிலுப்பை
    [*] யெண்ணி லெழுவ ரிவர்.
    [* 'எள்ளி லெழுவர்' எனப் பாடங்கொள்ளினும் இழுக்காது.]

என்னும் ஒரு பழைய வெண்பாவினால் நன்று தெளியப்படுவது. இவ்வெழுவருட் கபிலர் அதிகமான் வள்ளுவர் மூவரும் ஆண்மக்க ளெனவும், குறவர்பாவை முறுவை ஒளவை உப்பை நால்வரும் பெண்மக்க ளெனவும் கூறுப. இவ்வெழுவர்மக்களுட் கபிலர் அதிகமான் வள்ளுவர் ஒளவை என்னும் நால்வர்வரலாறுகளே பண்டைத்தமிழ் நூல்களான் ஒருவாறு உணரப்படுவன. இவர்கள் பெயர் பொறித்துள்ள பழைய பாடல்கள் சிலவற்றாலும் பிறவற்றாலும் இந்நால்வரும் வேறு வேறு குடியினர் இடத்தினர் என்பது செவ்வனதந் தெளியப்படுவது.

    'யானே, பரிசிலன் மன்னு மந்தணன்' (புறம்.200)
    'அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே' (புறம்.201)
    'புலனழுக் கற்ற வந்த ணாளன்' (புறம்.126)

என்பனவற்றால் கபிலர் அந்தணராவர். 'மழவர் பெருமகன்' (புறம்.86), 'அதியர் கோமான்' (புறம் 91) என்பனவற்றால் அதிகமான் மழவரெனப் பெயரிய ஒருவகை வீரர்பாற்பட்ட அதியர் குடியின னாவன். வள்ளுவரென்னும் 'பெயரானும், 'மறந்தேயும் வள்ளுவ னென்பானோர் பேதை' (திருவள்ளுவமாலை) என்பதனானும் வள்ளுவர் முரசறைந்து அரசாணை சாற்றும் முதுக்குடியினராவர். செய்தி சாற்றுதல் வள்ளுவர் குடித்தொழிலென்பது செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன் (குறுந்தொகை-228) என்னும் பெயரானுந் தெளியப்படும். இக் 'கபிலரதிகமான்' என்னும் வெண்பாவானே இவ்வெழுவருள் ஒருவர் குறவர்குடியினர் என்பதும் அறியலாகும்.

    'மடவர லுண்கண் வாணுதல் விறலி
    பொருநரு முளரோநும் மகன்றலை நாட்டென
    வினவ லானாப் பொருபடை வேந்தே
    யெறிகோ லஞ்சா வரவி னன்ன
    சிறுவன் மள்ளரு முளரே யதா அன்று
    பொதுவிற் றூங்கும் விசியுறு தண்ணுமை
    வளிபொரு தெண்கண் கேட்பி
    னதுபோ ரென்னும் என்னையு முளனே.' (புறம்.89)

இஃது அதிகமா னெடுமா னஞ்சியை ஔவையார் சிறப்பித்துப் பாடியது. இப்புறப்பாட்டினை ஔவையார் தம் பெயர் கூறாமலே தம்மை வினாவிய வேந்தற்கு விடையாகக் கூறியதெனக் கொள்ளலே ஏற்புடைத்தாகும். அங்ஙனம் கொள்ளின், ஔவையார், பாணர் விறலியர் என்னும் பகுதியினராவர். விறலியர் - விறல்பட ஆடலும் பாடலும் வல்லவர். இவர்க்குப் பாடலுஞ் சிறந்ததென்பது,

    'சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி
    பாரி வேள்பாற் பாடினை செலினே' (புறம். 105)

என்னும் கபிலர் பாட்டானும் உணர்க. இவர் விறலியென்பதற்கேற்ப 'வாயிலோயே வாயிலோயே' என்னும் புறப்பாட்டினுள் (206), 'காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை ' எனத் தஞ்செய்தி கூறியவாற்றான், இவர் யாழ் முதலிய இசைக்கருவியுடையராதலையும், அதிகமான் தூதுவிடத் தொண்டைமானுழைத் தூது சென்றமையினையும் (புறம்.95) ஈண்டைக்கு நோக்கிக்கொள்க. முற்காலத்துப் பாணர் கூத்தர் விறலியர் முதிலியோரெல்லாம் கல்விகேள்விகள் நிரம்பினவராய்ச் சுவை பெரிது பயப்பச் செய்யுள் செய்தலினும் வல்லவராயிருந்தனர். பாண்டிய னொருவன் கழைக்கூத்துப் பார்க்குமிடத்துப் பராமுகமாக, கூத்தாடினவள் கோபித்துக் கொண்டு விழுங்காற் பாடிய

    மாகுன் றனையபொற் றோளான்
    வழுதிமன் வான்கரும்பின்
    பாகொன்று சொல்லியைப் பார்த்தென்னைப்
    பார்த்திலன் பையப்பையப்
    போகின்ற பள்ளினங் காள்புழற்
    கோட்டம் புகுவதுண்டேற்
    சாகின் றனளென்று சொல்லீ
    ரயன்றைச் சடையனுக்கே.

[*இதனைப் 'பாகொன்று சொல்லி' என்னுந்தொண்டைமண்டல சதகச் செய்யுளானு முணர்க.]

என்னும் தமிழ்நாவலர்சரிதைப்பாட்டும் இக்கருத்தை வலியுறுத்தும்.

இனிக் கபிலர் வாதவூரிற்[+] பிறந்துவளர்ந்து பெரும்பாலும் பாரியுடைய பறம்பின்கண் வதிந்தனர்.
    [+] ப்ரும்மஸ்ரீ உ.வே.சாமிநாதையரவர்கள் ஐங்குறுநூற்று முகவுரை, பக்கம் - 12]

அதிகமான் தகடூரில் வதிந்தனர். வள்ளுவர், மயிலையிலும் கூடலிலும் வதிந்தனர். ஔவையார் பெண்ணையாற்றங்கரைக்கணுள்ள புல்வேளூரிலும் அதியமானூரிலும் திருக்கோவலூரிலும் வதிந்தனர். மேற்காட்டிய 'கபில ரதிகமான்' என்னும் வெண்பாவானே உப்பை யிருந்தது ஊற்றுக்காடென்பதும் உணரப்படும். இவ்வாறு குடியானும் இடத்தானும் வேற்றுமை பெரிதுடைய இவர்கள் ஓருடற் பிறப்பினரென்பது என்னையெனின், இவர்களைப் பெற்ற தந்தையுந் தாயுந் தேச சஞ்சாரிகளாய் ஓரோரிடத்து ஒவ்வோர் காலத்து இவரைப் பெற்றுவிட்டனராக, இவர்களை எடுத்துவளர்த்தார் வேறு வேறிடத்து வேறு வேறு குடியினரென்பதுபற்றி, இவர்கள் ஆங்காங்கு வளர்ந்த குடிப்பெயர்களான் வழங்கப்பட்டனர் என்பவாகலான் அமையுமென்பது. உலகவழக்கி னன்றிச் சிறந்ததோர் நூல்வழக்கினும் இவ்வெழுவரது ஓருடற்பிறப்புக் காணப்பட்டவாற்றானே அவ்வரலாறு உண்மையெனக் கொள்ளத்தகும். பல்வேறிடத்தில் வேறு வேறு குடியில் வளர்ந்த இவர்களது ஓருடற்பிறப்புப் பின்பு உணரப்பட்டவாறு இங்ஙனமென்பதும் இவ்வெழுவரும் தம் ஓருடற்பிறப்பினை உணர்ந்தனராவர் என்பதும் இப்போது தெற்றெனப் புலப்படவில்லை.

எத்துணையோ நூற்றாண்டுகட்கு முன்பு நிகழ்ந்த இவ்வரிய செய்தியி னுண்மையை இப்போதுள்ள சுருங்கிய கருவிகளைக்கொண்டு தெளிதல் அரிது. ஆயினும் எத்துணையோ நல்லிசைப்புலவரும் வள்ளல்களும் உளராகவும் அவர்கள்பாலெல்லாங் காணாமல் இவ்வெழுவர்பாலே இக்கதை சிறப்பாகத் தொன்றுதொட்டு வழங்கப்படுதலால் இதன்கண் ஓருண்மை யுளதாவதில் ஐயமில்லை. ஒரு குடிப்பிறந்து ஒரு குடிக்கண் வளர்ந்து அவ்வளர்ந்த குடிக்கேற்ற பெயரும் ஒழுக்கமும் பூண்டு விளங்கினார், வடவாரிய ருள்ளும் பண்டைக்காலத்தே பலராதல்போல இத்தென்றமிழர்க்குங் கொள்ளத்தகும்.

இடங் குடி முதலியவற்றான் இக்கபிலர் முதலாயோர் வேற்றுமை பெரிதுடையரேனும், நுணுகிநோக்கின் இவர்கள் ஒருகாலத்தவர்களாதல் தெளிவாம். அதிகமானை ஔவையார் பாடிய பாடல்கள் அவ்விருவரும் ஒருகாலத்தவரென்பது தெரிவிக்கும். அவன் தகடூர்ப் பொருது வீழ்ந்தபோது அவன் பிரிவாற்றாது பாடிய அரிசில்கிழார், பேகனாற்றுறக்கப்பட்ட கண்ணகி என்பாளை அவன்பாற் சேர்த்தல்வேண்டி அப்பேகனைப் பாடினரென்பது 146 ஆம் புறப்பாட்டான் அறியப்படுவது. அக்கண்ணகி காரணமாகவே அப் பேகனையே கபிலர் பரணர் பெருங்குன்றூர்கிழார் என்னும் இவர்களும் பாடியுள்ளாராதலின் (புறம் 143, 144, 145, 147), அதியமான் ஔவையார் அரிசில்கிழார் கபிலர் பரணர் பெருங்குன்றூர்கிழார் இவர்களனைவரும் ஒருகாலத்தவராதல் நன்கு தெளியலாகும். வள்ளுவர் திருக்குறள் அரங்கேற்றியபோது அதனைக் கபிலருங்கேட்டுச் சிறப்பித்துப் பாடியிருத்தலின்(திருவள்ளுவமாலை) இக் கபிலர் முதலிய நால்வரும் ஒரு காலத்தவரென்பது தெள்ளியது.

[*] பாரி பறித்த [+] கலனும் பழையனூர்க் காரியன் றீந்த களைக்கோலுஞ் சேரமான்
[++] வாராயோ வென்றழைத்த வார்த்தையு மிம்மூன்றும் நீலச்சிற் றாடைக்கு நேர். (தமிழ்நாவலர் சரிதை)
      [+] 'பறியும்' [++] 'வாரா யெனவழைத்த வாய்மொழியும்' எனவும் பாடம்]

* இஃது ஔவையார் திருக்கோவலூரில் அங்கவை சங்கவை என்பார், மழையால் நனைந்த தமக்கு ஒரு நீலச்சிற்றாடை நல்கினபோது பாடியது: ஔவையார் பாரிபாற் பரிசில்பெறச் சென்றபோது இவரது பேரறிவுடைமையை வியந்து இவருடன் அளவளாவுதலே பேரின்பமாகக் கருதி இவரைப் பிரிதற்கு உடன்படாமையாற் பரிசில் நல்காது நீட்டித்தனனாக, இவர் அவனைப் பரிசீலீந்து விடுப்பவேண்ட, இவர் வேண்டுதலை மறுத்தற்கியலானாய்ச் சிறந்த கலன்பல நல்கிவிடுத்தும் இவரைப் பிரிந்துறைய லாற்றாப் பேரன்பால் இவர் தன்பாற்றிரும்பவும் எய்தற்கு இதுவே தக்கதோர் சூழ்ச்சியாகுமென்று தன்னுளத்துக்கருதிப் பிறர் சிலரை இவர் செல்நெறிவிடுத்து இவருடைய அருங்கலவெறுக்கை முழுதை யும்பறித்துக் கொடுவரச்செய்ய, இவர் அவனெண்ணியவாறே அவன்பால் மீண்டு நிகழ்ந்ததறிவிக்க, அவன் முகத்தானொந்து இவர் மீண்டெய்தியமைபற்றி அகத்தானுவந்து நெடுங்காலம் இவருடனளவளாவிப் பெருமகிழ்வெய்தி இவர்க்கு முன்னரினுஞ் சிறப்ப அரும்பொருள் பலவும் நல்கினன் எனவும், பழையனூரிற் காரிபால் இவர் பரிசில் பெற்றுத் தாம்வேற்றூர் புகுதற்கு விடைபெறவேண்டித் தன் கொல்லைப் புறத்துக்

** என்னும் ஔவையார் பாட்டானும் ஔவையாரும், பாரியும் பெருநண்பினரென்பது தெளியப்படுதலால், அப் பாரிக்கு உயிர்த்துணைவராகிய கபிலரும் ஔவையாரும் ஒருகாலத்தவராதல் நண்குணரலாகும்.

ஒருகாலத்தவரெனத் தேர்ந்த இந்நால்வருள் ஒருவன் மகாவீரனும் பெருவள்ளலுமாய்ச் சிறந்தான். மற்றைமூவர் அறிவுவீற்றிருந்த செறிவுடை மனத்து வான்றோய் நல்லிசைச் சான்றோரெனச் சிறந்தார். இம்மூவரது நல்லிசைப் புலமையே இச்செந்தமிழுலகாற் பண்டும் இன்றும் களையெடுப்புழி நின்ற அவன்பாற் சென்றாராக, இவரது உள்ளக்குறிப்பை இவர் கூறாமலே யுணர்ந்த அவன், இவரைப் பிரிதற்காற்றானாய், இவரை இன்னும் பலகாலந் தன்பால் வைத்துச் சிறப்பிக்க மனங்கொண்டு, இவர் இப்போது செல்லாமைக்கு இதுவே தக்கதாகுமென்று கருதி, அக் களையெடுத்த இடத்தை யளத்தற்குரிய அளவுள்ள களைக்கோலொன்றை இவர்பால் நல்கி, 'இதனையளந்திடுக' என்று கூறி, அவன் வேறு தொழில்மேலிட்டுச் செல்ல, இவரும் அங்ஙனமே யளந்து, அன்று விடைபெறக் கூடாமையாற் பின்னும் அவன்பாற் சிலகாலந் தங்கினாரெனவும், சேரன் அரண்மனையில் ஓருழிப் பலருடன் இவரும் உண்டற்கிருந்தபோது, ஆங்கு வேற்றுவிருந்தினனொருவன் எய்தினனாக, சேரன் அவனுக்கு இடமொழிக்க நினைந்து ஆண்டுள்ள பலரும் பிறராதலின் ஒன்றுஞ் சொல்லானாய்த் தன் அன்பிற்குரிய பெருந்தமர் இவ்வௌவையாரே யாதலால் இவரை நோக்கி, 'ஔவையே வாராய்' என ஆண்டுநின்று வருமாறு அழைக்க, இவர் அப் பிறனுக்குத் தம்மிடத்தை நல்கிப் பின் அச்சேரனுடன் உண்டனர் எனவும் கூறுப.

இம்மூன்றும் எவ்வாறு பேரன்பேயடியாகப் பிறந்தனவோ அவ்வாறே நீலச்சிற்றாடை கொடுத்ததும் ஆதலின் இவை தம்முள் ஒக்குமென்றவாறு. மிகவும் உயர்த்துப் புகழப்படுவதென்பது ஒருதலை. இம்மூவரும் பல்வகை மக்கட்கும் இன்றியமையாப் பொதுவாய ஒழுக்கங்கள் சில பலவற்றைத் தொகுத்தோதியவாற்றானே ஒருபடிப்பட்ட தன்மையினரென்பது உணரத்தகும். கபிலர் இன்னாநாற்பதும், வள்ளூவர் திருக்குறளும், ஔவையார் மூதுரை முதலியனவும் ஓதியவாறு பற்றியுணர்க. [*] நச்சினார்க்கினியர் தொல்காப்பியச் செய்யுளியலுரையில் (72) 'அட்டாலும் பால்சுவையிற் குன்றாது' என்னும் வெண்பாவினை எடுத்தோதி, 'இது மூதுரை' என்று கூறியவாற்றானும், நீலகேசித்தெருட்டுரைகாரர் (கடவுள் வாழ்த்துரை) 'விதியால் வருவ தல்லால்' என்னும் பாடலை எடுத்து மேற்கோள் காட்டுதலானும், இம்மூதுரையின் பழமை உணரத்தக்கது. [* பேராசிரியர் நூற்பெயர் கூறினாரில்லை.]

ஒரு காலத்தவரும் ஒரு தன்மையரும் ஆதல்பற்றி இவரது ஓருடற்பிறப்பு ஒருவழியான் வலிபெறுவதாகும். இப்பிறப்பையும் அதிகமான்பாலே பெரிதுமுறலாகும். அதுவும் அவன் பரிசில் நீட்டித்தபோது ஔவையார் அவனைச் சினந்து, அதிகமான், 'தன்னறி யலன்கொல் என்னறி யலன்கொல்' என்றது ஔவையார்க்கும் அவ்வதிகற்கும் உளதாகிய இவ்வுறவினையே குறிப்பாற் றெரித்துக் கூறப்பட்டதெனக் கொள்ளுதற்கும் இயைதலின் நீங்கும் என்க. இவ்வாறு கொள்ளுதலே பண்டுதொட்டு வழங்கும் உலகவழக்கிற்கும் செய்யுள்வழக்கிற்கும் இயைபுடைத்தாகும்.

ஔவையார் பெண்ணையாற்றங் கரையிலுள்ள புல்வேளூர் என்னுமிடத்துப் பூதனென்னுங் கொடையாளி யொருவனாற் பெரிதுஞ் சிறப்பித்துப் போற்றப்பட்டு வெயிலால் வறந்த அவன் வயலுக்குக் கிணற்றுநீர் தானே ஏறிப்பாயக் கட்டளையிட்டு, ஆண்டுச் சிலகாலந் தங்கிப் பின்னர்த் தகடூர் புகுந்து, ஆண்டிருந்த அதிகமானெடுமானஞ்சியைப் பாடி, அவன் பரிசினீட்டித்தானாக, அப்போது அவன் வாயில்காப்போனிடத்தில் அவனை முனிந்து கூறி, அக்காலத்திருந்த அறிவும் புகழுமுடைய வேறு சிலர்பாற் பரிசில் பெறும்பொருட்டுச் செல்லுதற் கொருப்பட்டார். இதனை அதிகமான் தெரிந்து, இவர்க்கு வேண்டுவனவெல்லாம் விரைந்தளித்து, நெடுங்காலம் உயிர்வாழ்தற்குக் காரணமாகத் தான் அரிதின் முயன்றுபெற்ற அமிழ்தத்தன்மையுடைய நெல்லிப்பழம் ஒன்றையும் இவர்க்குதவ, இவர் அதனைப் பெற்று, அவன், தன்னினும் தம்மை மீப்பட மதித்தமைக்கு உவந்து, அவன்பால் அன்பும் அருமையு மிகுத்து அவனையே புகழ்ந்து பாடி, அவனுக்கு உயிர்த்துணைவராய்ச் சிறந்தனர்.

[*] அக்காலத்துக் கச்சியை யாண்ட தொண்டைமானுழை அவ்வதிகன் இவரைத் தூதுவிட, இவர் அவன் பொருட்டுத் தூதுஞ் சென்றனர்; இதனிடையிற் பாரியிடஞ் சென்று அவனானும் அன்பு பாராட்டப் பெற்றனராவர். அதிகமான் கோவலூர்மேற் படையெடுத்துச்சென்று அவனை யெறிந்த காலத்தும், அவனுடனிருந்து அவ்வென்றியைப் புகழ்ந்து பாடினர். அவ்வதிகமான் கோவலூரை யெறிந்து மீண்டு தனதூர் புகுந்து, தனக்குத் தவமகன் பிறந்தானைக் கண்டபோதும், இவர் ஆண்டிருந்து அவனைப் பாடினர் (புறம் 110). அவன் தகடூர் பொருது வீழ்ந்தபோது ஆற்றாத்துயராற் பெரிதுமிரங்கிப் புலம்பினர் (புறம் 235). இவ்வாறு அவன் சாந்துணையும் அவன் செய்நன்றிபாராட்டி அவற்கின்னுயிர்த்துணைவராய்ச் சிறந்து, பின்பு அவ்வதிகமான் தவமகனாகிய பொகுட்டெழினிபாலும்

[*] இவர்க்கும் அதிகற்குமுள்ள பெருநட்புரிமைபற்றி 'தெவ்வடு வைவே லெழினி, யௌவை' என்றார் திவாகரநூலாரும் (பழைய ஏடு). எழினி, அதிகற் கொருபெயர். (புறம். 158)

அந்நட்புரிமையே பூண்டு அவனையும் புகழ்ந்துபாடி, அவனாலுஞ் சிறப்புப் பலபெற்று விளங்கினர். இவர் அதிகமான்பால் நெல்லிப்பழம் பெறுதற்கு முன்பே புல்வேளூர்ப் பூதனாற் சிறப்பித்தோம்பப் பட்டனரென்பதும் அவன் வயற்குக் கிணற்றுநீர் ஏறிப்பாயக் கட்டளையிட்டனரென்பதும்,

    'பூங்கமல வாவிசூழ் புல்வேளூர்ப் பூதனையு
    மாங்குவரு பாற்பெண்ணை யாற்றினையு--மீங்கு
    மறப்பித்தாய் வாளதிகா வன்கூற்றை நாவை
    யறுப்பித்தா யாமலகந் தந்து.'

    'வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
    முரமுரவென் றேபுளித்த மோரும்--பரிவுடனே
    புல்வேளூர்ப் பூதன் புகழ்புரிந் திட்டசோ
    றெல்லா வுலகும் பெறும்.'

என்னுந் தமிழ்நாவலர்சரிதைப் பாடல்களானும்,

    'சொல்லாரு மௌவை பரிவாய்த் தனக்கிட்ட சோறுலக
    மெல்லாம் பெறுமென்று பாட்டோ தப் பெற்றவ னின்னருளாற்
    கல்லாரற் சுற்றிக் கிணறேறிப் பாயுங் கழனிபெற்றான்
    வல்லாளன் பூத மகிபால னுந்தொண்டை மண்டலமே.'

என்னுந் தொண்டைமண்டல சதகச் செய்யுளானும் தெரிவன. அதிகமானைப்பற்றி இவர் பாடிய 'வாயிலோயே வாயிலோயே' என்னும் புறப்பாட்டால் (206), இவர் அவன் பரிகி னீட்டித்தமைபொறாது, 'நெடுமானஞ்சி தன்னறி யலன்கொல் என்னறி யலன்கொல், அறிவும் புகழு முடையோர் மாய்ந்தென, வறுந்தலை யுலகமு மன்றே யதனாற், காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை...... எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே' என்று சினந்து கூறி, வேற்றிடங்கட்குச் செல்ல ஒருப்பட்டனர் என்பது அறியப்படுவது.

பின்பு அதிகன் இவர்க்குப் பரிசில் நல்கி வரிசை செய்ய உவந்து, அவன் பரிசினீட்டித்தானென நினைந்து, அவனை வெறுத்துச் செல்லற்கு ஒருப்பட்ட தம் நெஞ்சினைக் கழறி, அதிகமான் பரிசில் பெறுங்காலம் நீட்டிப்பினும் நீட்டியாதொழியினும் அப்பரிசில் தப்பாது என்று கூறி, அவனையும் வாழ்த்தினர் என்பது 101 - ஆம் புறப்பாட்டான் விளங்குகின்றது. இவர்பால் இவன் என்றைக்கும் ஒருபடியான பேரன்பே பூண்டிருந்தனனென்பது, 'ஒருநாட் செல்லல மிருநாட் செல்லலம், பலநாள் பயின்று பலருடன் செல்லினுந், தலைநாட் போன்ற விருப்பினன்' (புறம். 131) என இவன் அவனைக் கூறியதனானே அறியலாகும்.

அமுதத் தன்மை பொருந்திய நெல்லிப்பழம் ஒன்றை அதிகமான் ஔவையார்க் களித்தனனென்பது, 'சிறி யிலை நெல்லித் தீங்கனி குறியா, தாத னின்னகத் தடக்கிச், சாத னீங்க வெமக்கீத் தனையே (புறம் 91), 'வன்கூற்றை நாவை யறுப்பித்தா யாமலகந் தந்து' என இவர் பாடியவாற்றானும், 'கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி, யமிழ்துவிளை தீங்கனி யௌவைக் கீந்த...அதிகனும்' எனச் சிறுபாணாற்றுப்படையில் நத்தத்தனார் கூறியதனாலும் அறியப்படுவது. பரிமேலழகரும் இதனையே சுட்டி, 'ஔவையுண்ட நெல்லிக் கனிபோல்வது' (திருக்குறள் 100) என்றார்.

அதியமான்பொருட்டுத் தொண்டைமானுழைத் தூதுசென்றபோது அத்தொண்டைமான் தன்போர்வலியின் பெருமையுணருமாறு தன் படைக்கலக்கொட்டிலைக் காட்ட, இவர் அவற்றைப் பார்த்து, 'இப்படைக்கருவிகளெல்லாம் போரிற் பயன்படாமையாற் பீலியணிந்து மாலைசூட்டிக் காம்பு திருத்தி நெய்யணிந்து காவலையுடைய அரண்மனைக்கண் வீணே தங்குவன; எம்முடைய அதிகன்வேல் பகைவரைக் குத்துதலான் நுனிமுரிந்து கொல்லன் பணிக்களரியிற் சிறிய கொட்டிலிடத்து உற்றன' என்று அத்தொண்டைமான் வீரத்தை யிகழ்ந்து, தமது அதிகன் போர்வீரத்தையே மேம்படுத்து உரைத்தார்.

இத்தூது சென்றமையானும் இவ்வமையத்து எடுத்து மொழிந்த வீரவார்த்தையானும் இவரது ஆண்மையும் அறிவும் செய்ந்நன்றி மறவாமையும் நன்றறியத்தக்கன. மேற்குறித்த 'மடவர லுண்கண்' என்னும் பாட்டும் அத்தொண்டையர் வேந்தன், 'நும் நாட்டிற் போர்புரிவாரும் உளரோ?' என இவ்வௌவையாரை வினாவியபோது, அவனுக்கு விடையாக உரைத்ததாகும். இவர் அதிகனையே தம்மரசனாகக்கொண்டு 'என்னை' எனக் கூறுதலுங்காண்க (புறம் 96). அதிகமான் கோவலூரெறிந்ததனை இவர் பாடினரென்பது, 'இன்றும், பரணன் பாடினன் மற்கொன் மற்றுநீ, முரண்மிகு கோவலூர் நூறிநின், னரணடு திகிரி யேந்தியதோளே.' (புறம் 99) என்பதனாலறிக. இவ்வடிகளானும் அதிகன் பரணர் ஔவையார் இவர்கள் ஒருகாலத்தவராதல் புலனாகும். அகநானூற்றில், 'நெடுநெறிக் குதிரைக் கூர்வே லஞ்சி, கடுமுனை யலைத்த கொடுவிலாடவ, ராகொள் பூசலிற் பாடுசிறந் தெறியும் பெருந்துடி' (372) என்பதனானும், 'வாய்மொழி, நல்லிசை தரூஉம் இரவலர்க்குள்ளிய, நசைபிழைப் பறியாக் கழறொடி யதியன்' (162) என்பதனானும் அதிகமான் வீரமுங் கொடையும்பற்றிப் பரணராற் புகழ்ந்து பாடப்பட்டுள்ளான் என்பதும் அறிக. இவ் வௌவையார் அதிகனைப் பாடிய பாடல்கள் பெரும்பாலும் அவனுடைய வீரமும் தியாகமும் பற்றியே வருவன. அவன் இரவலர்க்கெளியனாய்ப் புலவர்க்கரியனாய் நின்ற நிலைமை இவராற் பெரிதும் பாராட்டப்படுவது. இதனை,

    'ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலி
    னீர்த்துறை படியும் பெருங்களிறு போல
    வினியை பெரும வெமக்கே மற்றதன்
    றுன்னருங் கடாஅம் போல
    வின்னாய் பெருமநின் னொன்னா தோர்க்கே.'

எனவரும் இனிய பாடலா னறிக. இவர் அதிகமான் இறந்ததன் மேலும் அவன் மகன் பொகுட்டெழினிபாற் சில காலந் தங்கிப் பின்னர்த் தமிழ்மூவேந்தர்பாற் செல்லற்கெழுந்து, பழையனூர் புகுந்து, ஆண்டுள்ள காரி என்பவனால் உபகாரம்பெற்று, அவன் தம்பால் வைத்த அன்பின் மிகுதியாற் பிரிதற்கியலாது, அவன் வேண்டியன சில செய்தொழுகிச் சிலபோது கழித்தனர். இவனது பேரன்புடைமையே இவராற் 'காரியன் றீந்த களைக்கோலும்' என்பதனாற் புகழ்ந்து பாராட்டப்பட்டது. களைக்கோலென்பது களையெடுக்குங் கோல் என்று கொண்டு இவர் அவன் வேண்ட அவனுடைய கொல்லைக்குக் களையெடுத்தனர் எனவுங் கூறுப. இக்கதை,

    'எரி னியற்றுங் களைக்கோலை யீந்தன்ன மிட்டுநல்ல
    பாரி பறித்தென்னும் பாடல்கொண் டோன்பண்பு சேர்பழைய
    னூரி லிருப்பவ னௌவைதன் பாடற் குவந்தபிரான்
    மாரி யெனத்தரு கைக்காரி யுந்தொண்டை மண்டலமே.'

என்னும் தொண்டை மண்டல சதகச் செய்யுளானும் அறியப்படும். பின் அக்காரிக்கு ஆடு வாங்கிக்கொடுக்கவேண்டி வாதவன் வத்தவன் யாதவன் என்னும் மூவரிடத்துப்போய்க் கேட்க அவர்கள் கொடாமையாற் சேரநாட்டுச் சென்று வஞ்சிநகர்புக்கு ஆண்டுள்ள சேரன்பால்,

    வாதவர்கோன் பின்னையென்றான் வத்தவர்கோ னாளையென்றான்
    யாதவர்கோன் யாதொன்று மில்லையென்றா--னாதலால்
    வாதவர்கோன் பின்னையினும் வத்தவர்கோ னாளையினும்
    யாதவர்கோ னில்லை யினிது. (தமிழ்நாவலர் சரிதை)

என்னும் பாடலைப் பாடித் தம்செய்தி கூற, அச்சேரன் மகிழ்ந்து, பொன்னாடு கொடுக்கப்பெற்று, அப்போது,

    சிரப்பார் மணிமுடிச் சேரமான் றன்னைச்
    சுரப்பாடு கேட்கவே பொன்னாடொன் றீந்தா
    னிரப்பவ ரென்பெறினுங் கொள்வர் கொடுப்பவர்
    தாமறிவர் தங்கொடையின் சீர். (தமிழ்நாவலர் சரிதை)

என்னும் பாடலைப்பாடிக் காரிபொருட்டெய்திய பொன்னாட்டை அவன்பாற் சேரவிடுத்து, அச்சேரனா லினிது ஓம்பப்பட்டுச் சிலகாலம் அவன்பாற் றங்கினர். இவர், சேரன் மாளிகையில் இனிதுண்டு வாழ்ந்திருந்தனர் என்பது, இவர் அவனைப் பிரிந்தபோது கூறிய,

    சிறுக்கீரை வெவ்வடகுஞ் சேதாவி னெய்யு
    மறுப்படாத் தண்டயிரு மாந்தி--வெறுத்தேனை
    வஞ்சிக்குங் கொற்கைக்கு மன்னவனேற் பித்தானே
    கஞ்சிக்கும் புற்கைக்குங் கை. (தமிழ்நாவலர் சரிதை)

என்னும் பாடலானறியப்படுவது. பின்பு இவர் சேரனுடைய வஞ்சியினின்று நாஞ்சின் மலைச்சென்று ஆண்டிருந்த வள்ளுவன் என்பானை அரிசி கேட்க, அவன் இவர்க்கு யானை கொடுத்தானாக, அப்போது அவனது கொடைமடத்தை வியந்து, 'தடவுநிலைப் பலவி னாஞ்சிற் பொருநன்' (140) என்னும் புறப்பாட்டைப் பாடி, ஏழிற்குன்றம் போய் ஆண்டுள்ள அரசன் ஒருவனைப்பாட, அவன் இவரது அருமையும் பெருமையும் அறியாமையால், அவனை,

    இருடீர் மணிவிளக்கத் தேழிலார் கோவை
    குருடேயு மன்றுநின் குற்ற--மருடீர்ந்த
    பாட்டு முரையும் பயிலா தனவிரண்
    டோட்டைச் செவியு [*] முள.
          [* முளை எனவும் பாடம்.]

என்னும் பாடலால் முனிந்து பழித்துரைத்தனர். 'இஃது எழிற்கோவை ஔவை முனிந்து பாடியது' எனப் பேராசிரியரும் (தொல். செய் 125) 'இஃது எழிற்கோவை ஔவையார் பாடியது' என நச்சினார்க்கினியரும், 'எழிற்கோவைப்பாடிய அங்கதம்' எனத் தமிழ்நாவலர் சரிதையுடையாரும் கூறினார். எழில் என்பது ஒருமலை; நன்னன் என்னுங் குறுநில மன்னனுடையது. நன்னனுடைய மலையரணாகிய பாழி யென்பதும் இதனோர் பகுதியதாகும். இதனை 'நன்ன, னேழி னெடுவரைப் பாழிச் சிலம்பின்' (அகம். 152) 'நன்ன னன்னாட் டேழிற் குன்றத்துக் கவா அன்' (அகம் 349) என வருவனவற்றானுணர்க.

இந் நன்னன்மரபிற் றோன்றிய இளவிச்சிக்கோ என்பானொருவன் இளங்கண்டீரக்கோ என்பவனோ டொருங்கிருந்தவழிச் சென்ற பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் இளங்கண்டீரக்கோவைப் புல்லி, இளவிச்சிக்கோவைப் புல்லாராக, அப்போது அவ்விளவிச்சிக்கோ, புலவரை நோக்கி, 'நீர் என்னை என்செய்யப் புல்லீராயினீர்?' என்று வினாவ, அதற்கவர், 'அவன் மரபிற் பெண்டிரும் பாடுவார்க்குப் பிடிகளைப் பரிசிலாகக்கொடுக்கும் வண்புகழுடையனாதலின் அவனைப் புல்லினேன். நுமருளொருவன் பாடுவார்க்கடைத்த கதவு காரணமாக நும்முடைய மலையை எம்மனோர் பாடுதலொழிந்தனராதலால் யான் நின்னைப் புல்லேனாயினேன்' எனவுரைத்தார் என்பது 151 - ஆம் புறப்பாட்டான் அறியப்பெறுதலால், அப் பாடுவார்க்குக் கதவடைத்தவன் நன்னனுக்கும் பெருந்தலைச்சாத்தனாராற் புல்லப்பெறாத இளவிச்சிக்கோவுக்கும் இடையிற்றோன்றியோ னொருவனெனத் தேறலாகும். இவ்வௌவையாரால் முனிந்து பாடப்பட்டவன் அக்கதவடைத்தவனாவன். பெருந்தலைச்சாத்தனார் வள்ளல்கள் எழுவரும் மாய்ந்தபின் னிருந்த புலவர் என்பது அவர் குமணனைப் பாடியுள்ளவைபற்றி அறியலாகும். இவ்வாறு எழிற்கோவை முனிந்து பாடி வழிச்செல்வார், ஓரூரில் ஒருநாட் பசியினாலே ஒருவன்மனையிற் போக, அவன், 'சோறில்லை, போ' என்று சொன்னபோது அவன்மனைவி முகமன் கூறி அன்னமிட்டாள். அப்போது,

    'அற்ற தலையி னருகிற் றலையதனைப்
    பற்றித் திருகிப் பறியேனோ--வற்றன்
    மரமனையா னுக்கிம் மனையாளை யீந்த
    பிரமனையான் காணப் பெறின்.' (தமிழ்நாவலர் சரிதை.)

என்னும் பாடலைப் பாடிப் பின்னுஞ் செல்வார், ஓரூரி லொரு குறவன் பலாமரத்தைப் பகைவர் வெட்டிப்போகிட, அவன் வருந்துவதற் கிரங்கி, அப்பலா வளரும்படி,

    'கூரிய வாளாற் குறைபட்ட கூன்பலா
    வோரிலையாய்க் கொம்பா யுயர்மரமாய்ச்--சீரிய
    வண்டுபோற் கொட்டை வளர்காயாய்ப் பின்பழமாய்ப்
    பண்டுபோ னிற்கப் பணி.' (தமிழ்நாவலர் சரிதை.)

எனத் தெய்வத்தை வேண்டிப் பாடி வளர்ப்பிக்க, அதற்குக் குறப்பிள்ளைகள் மகிழ்ந்து நாழித்தினை கொடுக்க அதனை அன்பாலேற்றுச் சோணாட்டு உறையூர் புகுந்து சோழன்பாற் சென்று பாட, அவன் இவர்க்குப் பரிசில் பலவளித்து வரிசைபலசெய்ய, அதற்குவந்து,

    'கூழைப் பலாத்தழைக்கப் பாடக் குறச்சிறார்
    [*] மூழக் குழக்குத் தினைதந்தார்--சோழாகே
    ளுப்புக்கும் பாடிப் புளிக்கு மொருகவிதை
    யொப்பித்து நிற்கு முளம்.' (தமிழ்நாவலர் சரிதை.)
          [* மூன்றுழக்கு என்பதன் விகாரம். உழக்கு காற்படி நாழி - ஒருபடி.]

என ஒரு செய்யுளுரைத்து, தினைத்துணை நன்றியையும் பனைத்துணையாகக் கருதுகின்ற தம்மியல்பினை யவனுக்கறிவுறுத்தி அவன்பாற்றங்கினர். ஒருநாள் இவர் சோழன்பா லொன்று பாடும்போது, அவன் ஒரு துகிலைப் பார்த்துப் பராக்காக இருப்ப அப்போது இவர்,

    நூற்றுப்பத் தாயிரம் பொன்பெறினு நூற்சீலை
    நாற்றிங்க டன்னிற் கிழிந்துபோம்--மாற்றலரைப்
    பொன்றப் புறங்கண்ட போர்வே லகளங்கா
    என்றுங் கிழியாதென் பாட்டு. (தமிழ் நாவலர் சரிதை)

என்னும் பாடலைப்பாடினர். அக்காலத்துச்சோழன், இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியென்பவன். அவன் இராசசூயம் வேட்டபோதும் ஆங்கிருந்து அவ்வேள்வியின்பொருட்டு ஆண்டெய்திய சேரன் மாவெண்கோவையும் பாண்டியன் உக்கிரப்பெருவழுதியையும் அச்சோழனையும் ஒருங்கு வாழ்த்திப் பாடினர் (புறம் 367). இவர் அச் சோணாட்டில் வெண்ணி, அம்பர், குடந்தை முதலிய பலவூர்கட்குஞ் சென்றுவா ரென்பது இவர் பாடல்களா னறியப்படுவது. இவர் 'கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த' (நற்றிணை 360) எனவும், 'நல்லம்பர் நல்லகுடி யுடைத்து' (திருமுருகாற்றுப்படை யுரைமேற்கோள்) எனவும் பாடுதலான் அறிந்து கொள்க. இவர் திருக்குடந்தையிற் சென்று, அங்கு ஒருவன் உலோபியும் ஒருவன் விதரணியுமாக இருந்தாரைக் கண்டு,

    'திருத்தங்கி தன்வாழை தேம்பழுத்து நிற்கு
    மருத்தன் றிருக்குடந்தை வாழை--குருத்து
    மிலையுமிலை பூவுமிலை காயுமிலை யென்று
    முலகில் வருவிருந்தோ டுண்டு.' (தமிழ் நாவலர் சரிதை)

என்னும் பாடலைப் பாடினரென்பவாகலான், இவர் திருக்குடந்தைக்குச் சென்றமை யுணரப்படும். திவாகரம் விலங்கின் பெயர்த்தொகுதி யிறுதிக்கட்டுரையில், 'ஔவை பாடிய வம்பர் கிழவோன்' என வருதலானும், இவரே அம்பரைச் சிறப்பித்துக் கூறுதலானும் அக்காலத்து அம்பர்நகரத்திருந்த அம்பர்கிழான் அருவந்தை என்பானையும் பாடி, அவனாலும் போற்றப்பட்டனராவர். பின் சோணாடுவிட்டுப் பாண்டியனாடு செல்வாராய் அக்காலத்துச் சித்தன்வாழ்வு எனவும் பெயர் சிறந்த திருவாவினன்குடிப் போந்து சின்னாட்டங்கி, அப்பாற் பாண்டியர் பதிக்கட்புக்கு, ஆண்டு அரசு புரிந்த உக்கிரப் பெருவழுதியையும் அவனா லினிதோம்பப்பட்ட பழுதில் கேள்வி முழுதுணர் பேரவை நல்லிசைப்புலவர் பல்லோரையும் கண்டு மகிழ்ந்து,

    'நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன்வாழ்
    வில்லந் தொறுமூன் றெரியுடைத்து--நல்லரவப்
    பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின்
    னாட்டுடைத்து நல்ல தமிழ்.' (திருமுருகாற்றுப்படையுரை)

என்னும் பாடலைப் பாடினர். இதனான் இவர் பாண்டி நாடு புகுதற்கு முன்னே வேற்றுநாட்டு ஊர்கள் பலவற்றிற்குச் சென்றிருந்தனர் எனவும் ஆண்டெல்லாமில்லாத நல்ல தமிழைப் பாண்டியநாட்டேதான் கண்டன ரெனவும், அக்காலத்து அம்பர்நகரத்து வளமையும் வண்மையு மிக்க குடிகள் பல இருந்தன எனவும், திருவாவினன் குடியில் மூத்தீயோம்பும் நான்மறை யந்தணர் நிறைந்திருந்தனர் எனவும் அறியப்படும். நல்லிசைப் புலவர் பல்லோர் ஒருங்கு குழீஇத் தமிழாயுநன்னா டாதலின், நின்னாட்டுடைத்து நல்லதமிழ் என்றார். இவர் அப்பாண்டியன்பால் இனிதுறையுங்காலத்து ஒருநாள் அப்பாண்டியன் தன் வாயிலில்ஐந்து பொற்கிழி கட்டி வைத்து, மூன்று கிழி சங்கிலி யிறப்பாடுக எனவும் ஒருகிழிக்கு நிறை நில்லாத கவிபாடுக எனவும் மற்றொன்றுக்கு நாலுகோடி கவிபாடுக எனவும், சொன்னபோது இவர்,

    'தண்டாம லீவது தாளாண்மை தண்டி
    படுத்தக்கா லீவது வண்மை யடுத்தடுத்துப்
    பின்சென்றா லீவது காற்கூலி பின்சென்றும்
    பொய்த்தா னிவனென்று போமெ லவன்குடி
    யெச்ச மிறுமே லிறு.' (தமிழ் நாவலர் சரிதை)

    'வழக்குடையார் நிற்ப வரும்பொருள்கை வாங்கி
    வழக்கை வழக்கழிவு சொல்லின் -- வழக்குடையார்
    சுற்றமுந் தாமுந் துடைத்தெழுகண் ணீராலேழ்
    சுற்ற மிறுமே லிறு.' (தமிழ் நாவலர் சரிதை)

    'சென்றுழு துண்பதற்குச் செய்வ தரிதென்று
    மன்றுழு துண்பான் மனைவாழ்க்கை -- முன்றலிற்
    றுச்சி லிருந்து துடைத்தெழுகண் ணீராலே
    ழெச்ச மிறுமே லிறு.' (தமிழ் நாவலர் சரிதை)

என்னும் பாடல்களைப்பாடி முதன் மூன்று கிழிகளையும் இற்று வீழச் செய்து,

    'வையக மெல்லாம் வயலாய் வானோர்
    தெய்வமா முகடு சேரி யாகக்
    காணமு முத்து மணியுங் கலந்தொரு
    கோடானு கோடி கொடுப்பினு மொருநா
    ளொருபொழு தொருவனூ ணொழிதல் பார்க்கு
    நேர்நிறை நில்லா தென்னு மனனே.' (தமிழ் நாவலர் சரிதை)

என ஒரு நிறை நில்லாத அகவலும்,

    'மதியாதார் முற்ற மதித்தொருகாற் சென்று
    மிதியாமை கோடி யுறும்.
    உண்ணீருண் ணீரென்றே யூட்டாதார் தம்மனையி
    லுண்ணாமை கோடி யுறும்.

    கோடி கொடுத்துங் குடிப்பிறந்தார் தம்மோடு
    கூடுவதே கோடி யுறும்.
    கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
    கோடாமை கோடி யுறும். (தமிழ் நாவலர் சரிதை)

என நாலு கோடி கவியும் பாடித் தஞ் சொல்லின்மாட்சி யெல்லார்க்குந் தெரித்து, வேத்தவையேத்த விளங்கி வதிந்தனர்.

இதற்கிடையில் தமிழ்மூவேந்தரும் தம்மினுமேம்பட்ட வண்புகழுடையனாதலால் அழுக்காறுகொண்டு, பாரி என்னும் வள்ளற்றலைவனோடு பகைத்து, அவனது பறம்பாகிய மலையரணை நெடுங்கால முற்றியும் பாரியின் போர்வலியாலும் அவனுக்குயிர்த்துணைவராய்ச் சிறந்த கபிலரின் சூழ்ச்சியாலும் அவர்க்கு வெல்லற் கரிதாகவும் அவனை வஞ்சித்துக்கொல்ல, அக்காலத்து ஆண்டிருந்த கபிலர் அப் பாரிபால் வைத்த பேரன்பினால் துணையின்றிக் கழிந்த அவனது அருமை மகளிரை அப்பறம்பினின்று கூட்டிக்கொண்டு, அக்காலத்து வேளிருட் சிறந்த இருங்கோவேள் முதலியோர்பாற் போய் இவர்களை மணஞ் செய்துகொள்ள வேண்டியும், மூவேந்தர்க்கும் பாரிக்கும் நிகழ்ந்த பகைமைபற்றி அவர்கள் உடம்படாமையால் அம்மகளிரைத் தமக்கினிய பார்ப்பார் சிலரது பாதுகாப்பில்வைத்து அப்பாரியின் பிரிவாற்றாது வடக்கிருப்பாராயினர்.

இது தெரிந்த ஔவையார் மேனிகழ்ந்தவற்றிற்கு மனநொந்து அப் பாரிமகளிரிருந்த திருக்கோவலூர்க்கட்புக்கு அம்மகளிரைக் கண்டு அவர்கட்கு நேர்ந்த பெருந்துயர்க்கு மிகவும்வருந்தி, அவர்கள் அன்றிரவு தமக்கு இலைக்கறியிட அதனை யுண்டு மகிழ்ந்து,

    'வெய்தாய் நறுவிதாய் வேண்டளவுந் தின்பதாய்
    நெய்தா னளாவி நிறையிட்டுப் -- பொய்யே
    யடகென்று சொல்லி யமுதத்தை யிட்டாள்
    கடகஞ் செறியாதோ கைக்கு.' (தமிழ் நாவலர் சரிதை)

என்னும் பாடலைப்பாடி, அவர்கள் ஒரு நீலச்சிற்றாடை கொடுக்க அப்போது, 'பாரி பறித்த கலனும்' என்னும் வெண்பாவினைப்பாடி, அவர்களை நன்னிலையினிறுத்துங் கவலையேபெரிதுடையராய், ஆண்டிருந்த தெய்வீகனென்னும் அரசனொருவனை இவர்களை மணம் புரியும்படி வேண்டி உடம்படுவித்தனர். இவ்வரியபெரிய மணத்திற்கும் தாம் பெற்ற தெய்வத்தன்மையால் வேண்டுவன அனைத்தும் உளவாக்கி, மூவேந்தர்க்கும் பாரிகுடிக்குமுள்ள பகைமையும் போக்கி, அம்மூன்றரசரையும் தம்மறிவின் வலியாற் கோவலூர்க்கண் வரவழைத்து, அப்பாரிமகளிரது திருமணத்தைச் சிறப்பவியற்றினர். இவ் வௌவையாரால் இப்பாரிமகளிர் மணம் சிறப்ப நிகழ்த்தப் பெற்றமையறியப்படுதலான், 'கபிலர் பாரிமகளிரைப் பார்ப்பார்ப் படுத்தனர்' என்பது, அவர் அம்மகளிரைப் பார்ப்பாரது பாதுகாப்பின் வைத்தமையே குறிக்கும். இப் பெருமணத்து ஔவையார் பனந்துண்டம் பழந்தரவும், பெண்ணையாறு நெய்பால் தலைப்பெய்து வரவும், வானம் பொன்மாரி பொழியவும் பாடித் தமது தெய்வவாக்கின் வலிமை யுணர்த்தின ரென்ப. பெண்ணையாறு இவர் பாடலுக்கு நெய்பால் தலைப்பெய்து வந்த கதை வில்லிபுத்தூரர் மகனார் வரந்தருவாரானும்,

    ஔவைபா டலுக்கு நறுநெய்பால் பெருகி
    யருந்தமி ழறிவினாற் சிறந்து
    தெய்வமா நதிநீர் பரக்குநா டந்தத்
    திருமுனைப் பாடிநன் னாடு.

என்பதனான் எடுத்தாளப் பட்டுள்ளமை தேறுக. இவற்றை யெல்லாம், தமிழ் நாவலர் சரிதையில் ஒளவையார் அங்கவை, சங்கவையைத் தெய்வீகனுக்குக் கல்யாணம் பண்ணுவிக்கிறபோது ஓலையெழுத விநாயகனை அழைத்த வெண்பா:

    'ஒருகை யிருமருப்பு மும்மதத்து நால்வாய்க்
    கரியுருவக் கங்காளன் செம்மல் -- கரிமுகவன்
    கண்ணால வோலை கடிதெழுத வாரானேற்
    றன்னாண்மை தீர்ப்பேன் சபித்து.'

    சேர சோழ பாண்டியர்க்கு
    விநாயகன் எழுதப் பாடிய வெண்பாக்கள்.

    'சேரலர்கோன் சேரன் செழும்பூந் திருக்கோவ
    லூரளவுந் தான்வருக வுட்காதே -- பாரிமக
    ளங்கவையைக் கொள்ள வரசன் மனமியைந்தான்
    சங்கியா தேவருக தான்."

    'புகார்மன்னன் பொன்னித் திருநாடன் சோழன்
    றகாதென்று தானங் கிருந்து -- நகாதே
    கடுக வருக கடிக்கோவ லூர்க்கு
    விடியப் பதினெட்டா நாள்.

    'வையைத் துறைவன் மதுரா புரித்தென்னன்
    செய்யத் தகாதென்று தேம்பாதே -- தையற்கு
    வேண்டுவன கொண்டு விடியல்பதி னெட்டாநா
    ளீண்டு வருக வியைந்து.

மூவரும் வந்தபோது பனந்துண்டத்தைப் பாடியது.

    திங்கட் குடையுடைச் சேரனுஞ் சோழனும் பாண்டியனு
    மங்கைக் [*] கறுகிட வந்துநின் றார்மணப் பந்தரிலே
          [* அறுகிடுதல் - ஒரு மணவினை]

    சங்கொக்க வெண்குருத் தீன்றுபச் சோலை சலசலத்து
    நுங்குக்கண் முற்றி யடிக்கண் கறுத்து நுனிசிவந்து
    பங்குக்கு மூன்று பழந்தர வேண்டும் பனந்துண்டமே."

அந்தக் கல்யாணத்திற் பெண்ணையாற்றைப் பாடியது.

    'முத்தெறியும் பெண்ணை முதுநீ ரதுதவிர்ந்து
    தத்திவரு நெய்யா றலைப்பெய்து -- குத்திச்
    செருமலைத்தெய் வீகன் றிருக்கோவ லூர்க்கு
    வருமளவிற் கொண்டோ டி வா.'

அப்போது வருணனைப் பாடியது.

    'கருணையா லிந்தக் கடலுலகங் காக்கும்
    வருணனே மாமலையன் கோவற் -- பெருமணத்து
    நன்மாரி தாழ்க்கொண்ட நன்னீ ரதுதவிர்த்துப்
    பொன்மாரி யாகப் பொழி.'

என வருவனவற்றான் உணர்க. இவற்றால், அங்கவை சங்கவை யென்பார் பாரிமகளிர் என்பதும், அம்மகளிர் திருக்கோவலூரில் தெய்விகன் என்னும் அரசனுக்கு மணஞ் செய்யப்பட்டனரென்பதும், இம்மணம் ஒளவையாரது அறிவின்மாட்சியாலும் தெய்வத்தன்மையாலும் சிறப்ப நிகழ்த்தப்பட்ட தென்பதும், ஒளஔவையார் மூவேந்தரையும் இம்மணத்திற்கு 'உட்காது', 'நகாது', 'செய்யத்தகாதென்று தேம்பாது' வருக என்றழைத்தமையாற் பாரிகுடிக்கும் அவ்வேந்தர்க்கும் உளதாகிய பழைய செற்றம் போக்கிவருக என்றனரென்பதும், செயற்கரியன பலசெய்தனர் என்பதும், பிறவும் ஆராய்ந்தறிக.

ஔவையார் இத் திருக்கோவலூர்ப் பெருமணத்திற்குப்பின் யாண்டுச் சென்றன ரென்பது நன்கு உணரப்படவில்லை. சோணாட்டுத் திருத்தருப்பூண்டிச் சேகரத்து திருக்கடிக்குளம், திருவிடும்பாவனம் இவற்றுப்புறத்து வளவனாற்றின் கீழ்கரை-[*] யில் துளசியார் பட்டினம் என்ற ஊரில் இவ்வௌவையார் திருப்பெயரான் ஒரு சிறிய பழைய கோயி லிருப்பது கேட்கப்படுதலால் [*] இவர் ஆண்டுப்போய் விண்ணுலகெய்தினரோ என ஊகிக்கப்படுகிறார்.

இனி, இவர் ஓரூர்க்குச் செல்லும்போது இடைவழியில் வெயிலால் வியர்த்து வாடித் துவரப்பசித்து உணவின்றி வருந்தினராக, ஆங்குச் சென்ற ஆட்டிடையன் ஒருவன் அசதி என்பான், தானுண்டற்குக் கருதிக் கொணர்ந்துள்ள தெண்ணீரடுபுற்கையை இவர்க்கு உதவினான்; அந்நன்றி பாராட்டி அவன்மேற் கோவைநூ லொன்றுபாடிச் சென்றன ரென்ப. இவர் அசதிமேற் கோவை பாடினர் என்பது,

[* ஒளவையார் கோவில், வளவனாற்றின் கீழ்கரையில் துளசியார் பட்டினம் என்ற ஊரி லுள்ளது. அவ்வூர் திருக்கடிக்குளம், திருவிடும்பாவனம் என்ற வூருக்குக் கீழ்த்திசையில் ஒருமைல் தூரத்தி லுள்ளது; தஞ்சை ஜில்லாத் திருத்தருப் பூண்டித் தாலுகாவைச் சார்ந்தது. அக்கோவிலில் ஒளவையார் விக்கிரக மானது விருத்தாப்பியவடிவாய் முகந்திரைந்து விளங்குகிறது. அதனுடன் இளம்பெண்ணுருவமான விக்கிரகமும் ஒன்றிருக்கிறது. அதை உப்பை என்கிறார்கள். இக்கோவிலுக்கு அவ்வையார் மானியம் என்று சில நிலங்களும் பாத்தியங்களும் உள. கோவிலில், பிற்காலத்தில் விசுவலிங்கப் பிரதிட்டை நிகழ்ந்துள்ளது. அவ்விலிங்கம் ஔஒளவையார் விக்கிரக மிருந்த இடத்தில் இப்போது வைக்கப்பட்டுள்ளது. அது தெற்குப்பார்த்த சந்நிதி; ஆதிசைவரால் இரண்டுகால பூஜை நடைபெறுகிறது. ஔவையார் விக்கிரகம், பெயர்த்து மற்றொரு பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. கோவிலுக்கு வடமேற்கில் அரைமைல் துரத்தில் கொல்லன்திடல் என்று ஒரு மேடு இருக்கிறது. அதன்-

    'பன்னு மசதியன்பு பாராட்டிக் கோவைநூல்
    சொன்னாளே யௌவைமுன்பு சோமேசா'

என்னும் முதுமொழி வெண்பாவினால் அறியப்படும்.

அசதிக்கோவை

    'அற்றாரைத் தாங்கிய வைவே லசதி யணிவரைமேன்
    முற்றா இளநகை யெவ்வாறு சென்றனள் முத்தமிழ்நூல்
    கற்றார் பிரிவுங்கல் லாதா ரிணக்கமுங் கைப்பொருளொன்
    றற்றா ரிளமையும் [*] போலே கொதிக்கும் அருஞ்சுரமே.'

[*] கண் ஓராலமரமும் ஒரு மேடையும் உள்ளன. அங்கு ஒளவையாரைப் பிரார்த்தித்து இஷ்டசித்திகளைப் பெறுபவர்களாற் பச்சை பரப்புதல் மிகுதியாக நடைபெறுகிறது. அம்மேட்டிற் கொல்லன் ஒருவன் வீடுகட்டியிருந்தனனாகவும், அவ்வழியாக ஔவையார் மழையால் நனைந்து பசித்துவந்தாராக அவ்வூரார் ஒருவரும் இவரை ஆதரியாமற்போக, அக்கொல்லன் தன் உலைக்களத்து நெருப்பால் அவர் புடவையினை உலர்த்தி அவரையும் குளிர்காயச்செய்து அவர்க்கு உணவளித்தனனென்றுங் கூறுவர். அக்காலத்து வெள்ளம் மேலிட்டு ஊரெல்லாம் பரவியது. அப்போது இவனிடத்துண்டாய அன்பின் மிகுதியால் ஒளவையார், 'வள்ளையுங் கொள்ளையாகி வளவனும் பேராறாகிக், கொல்லன் றிடலொழியக் கொள்ளாய் பெருங்கடலே' என்று பாடி, அக்கொல்லன்றிடல் மட்டில் வெள்ளங் கொள்ளாமற் காத்தனர் என்பர். இதற்குச் சான்றாக இப்போதுஞ் சதுரமைல் நாலுக்கு எங்கும் வெள்ளமாகவே இருப்பது பார்க்கலாம். கடல் இக்கோவிலிருக்குமிடத்திற்குப் பத்துமைல் தூரத்துள்ளது. இவை மன்னார்குடிக் காலேஜுத் தமிழ்பண்டிதர் மகா-ள-ள-ஸ்ரீ சருக்கரை இராமசாமிப் புலவர் வாயிலாற் றெரிந்தன.

இவ்வாறு எளியரும் வலியரும் இவர்க்குதவி, இவராற் பெற்ற இனிய பாடல்கள் மிகப்பலவாம். இவரது செவ்விய நா ஒருவரைச் செய்யா கூறிப் புகழ்தலை ஒருபோதும் அறியாதாகும். அறிவும் புகழுமுடைய மூன்று பெருங்கோக்களும் அன்பும் அருமையும் உடைய பெருவள்ளல்களும், நல்லுபகாரிகளுமே இவரது திருப்பாடல் புனைந்தவராவார். இவரை ஒருகாற் சில புல்லறிவோர், தம்மைப் பாடுக என்றபோது, இவர்,

    'மூவர் கோவையு மூவிளங் கோவையும்
    பாடின வென்றன் பனுவலா னெம்மையும்
    பாடுக வென்றனிர்
    நும்மையிங் கெங்ஙனம் பாடுகென் யானே.
    களிறுபடு செங்களம் கண்ணிற் காணீர்
    வெளிறுபடு நல்யாழ் விரும்பிக் கேளீர்
    புலவர் வாய்ச்சொற் புலம்பலுக் கிரங்கீ
    ரிலவு வாய்ச்சிய ரிளமுலை புல்லீ
    ரவிச்சுவை யல்லது தமிழ்ச்சுவை தெருளீர்
    உடீஇ ருண்ணீர் கொடீஇர் கொள்ளீ
    ரொவ்வாக் கானத் துயர்மரம் பழுத்த
    துவ்வாக் கனியெனத் தோன்றிய நீரே.'

எனப் பாடியதனானே, இவரது அறிவு வீற்றிருந்த செறிவுடை மனத்துத் திட்பமும் ஒட்பமும் நன்கறியத்தகும். 'செம்பொருளாயின் வசையெனப்படுபடுமே' என்னுஞ் செய்யுளியற் சூத்திரவுரையிற் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் எடுத்துக்காட்டிய 'எம்மிகழ் வோரவர் தம்மிகழ் வோரே' என்னும் பாட்டு, 'ஒளவையார் ஒருவனைப் பாடி, அவன் இகழ்ச்சிசொல்ல, அப்போதுபாடிய அங்கத அகவல்' என்னுந் தலைப்பின்கீழ்த் தமிழ்நாவலர் சரிதையிற் காணப்படுவது.

இதனானும் இவரது மனவலியும் சொல்வலியும் ஆராயப்படும். இவர் பாடியருளிய,

    'எரு மிரண்டுளதா யில்லத்தே வித்துளதாய்
    நீரருகே சேர்ந்த நிலமுமா--யூருக்குச்
    சென்று வாவணித்தாய்ச் செய்வாருஞ் சொற்கேட்டா
    லென்று முழவே யினுது.' (தமிழ் நாவலர் சரிதை)

    '* ஈதலறந் தீவினைவிட் டீட்டல்பொரு ளெஞ்ஞான்றுங்
    காத லிருவர் கருத்தொத்துற்--றாதரவு
    பட்டதே யின்பம் பானைநினைந் திம்மூன்றும்
    விட்டதே பேரின்ப வீடு.' (தமிழ் நாவலர் சரிதை)

    'ஒன்றாகக் காண்பதே காட்சி புலனைந்தும்
    வென்றான்றன் வீரமே வீரமா--மென்றானுஞ்
    சாவாமற் கற்பதே கல்வி தனைப்பிற
    ரேவாம லுண்பதே யூண்.' (தமிழ் நாவலர் சரிதை)

    'அரியது கேட்குந் தனிநெடு வேலோய்
    மக்கள் யாக்கையிற் பிறத்தலு மரிதே
    மக்கள் யாக்கையிற் பிறந்த காலையு
    மூங்கையுஞ் செவிடுங் கூனுங் குருடும்
    பேடு நீக்கிப் பிறத்தலு மரிதே
    பேடு நீக்கிப் பிறந்த காலை
    ஞானமுங் கல்வியும் நற்குற லரிதே
    ஞானமுங் கல்வியு நற்குறு மாயினுந்
    தானமுந் தவமுந் தரித்தலு மரிதே
    தானமுந் தவமுந் தரித்தார்க் கல்லது
    வானவ னாடு வழிதிற வாதே.' (தமிழ் நாவலர் சரிதை)

என்னும் பாடல்களான் இவரது அரிய பெரிய மனநிலை நன்குணரப்படும்.

இவர், சேரமண்டலஞ் சோழமண்டலம் பாண்டிய மண்டலம் தொண்டைமண்டலம் இந் நான்கிலும் அவற்றின்
றலைநகர்களிலும் நெடுங்காலஞ் சரித்தனரென்பதும், இவர்காலத்துத் தொண்டைநாட்டிற் சான்றோர் பல ரிருந்தனர் என்பதும் இவர் பாடியருளிய,

    'வேழ முடைத்து மலைநாடு மேதக்க
    சோழ வளநாடு சோறுடைத்து--பூழியர்கோன்
    றென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை
    நன்னாடு சான்றோ ருடைத்து.'

    'வஞ்சி வெளிய குருகெல்லாம் பஞ்சவன்ற
    னான்மாடக் கூடலிற் கல்வலிது
    சோழ னுறந்தைக் கரும்பினிது தொண்டைமான்
    கச்சியுட் காக்கை கரிது."

என்னும் பாடல்களான் அறியப்படுவன. இவை ஒளவையார் பாடியன என்பது,

    'அஞ்சொன் முதுதமிழ் நால்வேந்தர் வைகு மவையிலெளவை
    செஞ்சொற் புனைகின்ற வேளாளர் வைகுஞ் சிறப்புடைத்தால்
    விஞ்சிய வேழ முடைத்தென்னும் பாடல் விளம்பிப்பின்னும்
    வஞ்சி வெளிய வெனும்பா மொழிதொண்டை மண்டலமே.'

எனவருந் தொண்டைமண்டல சதகச் செய்யுளானும் தெளியப்படும். நச்சினார்க்கினியர், 'வெண்பாட் டீற்றடி முச்சீர்த் தாகும்' என்னுஞ் சூத்திரவுரையில், 'வஞ்சி வெளிய குருகெல்லாம்...காக்கை கரிது' இவை ஔஒளவையுங், காரைக்காலம்மையுங் கூறியன' எனக்கூறியதனானும் இதனை யுணர்க.

இனித் தமிழ்நாவலர் சரிதைக்கண், 'பொய்யாமொழியார் பாதியும் ஔஒளவையார் பாதியுமாகப் பாடிய வெண்பா' என்னுந் தலைப்பின்கீழ்,

    'தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
    மண்ணா வதுஞ்சோழ மண்டலமே--பெண்ணாவா
    ளம்பர்ச் சிலம்பி யரவிந்தத் தாளணியுஞ்
    செம்பொற் சிலம்பே சிலம்பு.'

என ஒரு பாட்டுக் காணப்படுவது. இஃது அம்பர்நகரத்திருந்த சிலம்பி என்பாளொருத்தியைப் புகழ்ந்து பாடியதாகும். இதனான் இவ்வௌவையார் பொய்யாமொழியார் காலத்தும் இருந்தனரென்பது அறியப்படுவது. பொய்யாமொழியார் சங்கம் ஒழிந்த காலத்தை அடுத்திருந்த புலவரென்பது அவர் சங்கப்பலகை மிதப்பப் பாடிய,

    'பூவேந்தர் முன்போற் புரப்பா ரிலையன்றிப்
    பாவேந்த ருண்டென்னும் பான்மைதாந்--மாவேந்தன்
    மாற னறிய மதுரா புரித்தமிழோர்
    வீறணையே சற்றே மித.' (தமிழ் நாவலர் சரிதை)

என்னும் பாடலான் ஊகித்தலாகும். இப்பாட்டின்கண் உள்ள, 'மதுரா புரித்தமிழ்' என்னுந் தொடர், இவர் பாடிய 'மதுரா புரித்தமிழ் தேர்வாணன் மாறை வனத்துவந்தே' என்னும் வாணன்கோவையிலும் பயின்றமை காண்க. கடைச்சங்கம் உக்கிரப்பெருவழுதி இறந்தபோது ஒழிந்ததாகும். ஔவையார் உக்கிரப்பெருவழுதி காலத்தும் அவனுக்குச் சிறிது முற்பட்ட அதிகமான், பாரி என்னும் வள்ளல்கள் காலத்தும் இருந்தனரென்பது முற்காட்டிய இவரது பாடல்களான் நன்கறிந்தது. இவற்றால் அதிகமான் காலமுதல் பொய்யாமொழியார் காலம்வரை ஔவையார் இருந்தாராக விளங்கும். மக்கள் யாக்கைக்குப் பேரெல்லையாயுள்ள யாண்டு நூறும் ஔவையார் புக்காராகக்கொண்டு, உக்கிரப்பெருவழுதி துஞ்சுவதற்கு முன்னர் முப்பதியாண்டும், துஞ்சிய பின்னர் எழுபதியாண்டும் இருந்தனராகக் கருதி இவ் வௌவையாரதிறுதிக்காலத்துப் பொய்யாமொழியார் இருந்தனரெனக் கூறுதல் பொருந்திற்றாகும். இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் காலத்து வள்ளல்கள் எழுவரும் மாய, வஞ்சி, மதுரை, உறந்தை என்னும் மூன்று தலைநகர்களும் வறியவாயொழிந்தன என்பது சிறுபாணாற்றுப்படையாற் புலப்படுவது.

அவ்வாறே பெருஞ் சித்தனார் காலத்தும் வள்ளல்கள் எழுவரும் மாய்ந்தன ரென்பது அவர் குமணனைப்பாடிய புறப்பாட்டான் (185) அறியப்படும். இவற்றால் வள்ளல்கள் எழுவருக்குப் பின்னர் வஞ்சி, மதுரை, உறந்தை இந்நகர்கள் வறியவாயொழிந்ததன் மேலும், நல்லிசைப்புலவர் பல ருளராயினர் என்பதுந் தெளியப்படும். இவர்களுடன் ஔவையாரும் இருந்தனராவர். பொய்யாமொழியார் காலத்தை இறப்பப் பிற்பட்டதெனக்கருதி, ஔவையார் காலத்தை உலகியற்குமாறாக நெடிது நீட்டித்தலினும் பொய்யாமொழியார் காலத்தையே முற்பட்டதெனக் கோடல் ஈண்டைக் கியையுடைத்தாகும். அப்பொய்யாமொழியாரது செய்யுள் வழக்கினை உற்றுநோக்கினும் இதுவே புலனாகும்.

தமிழ்நாவலர் சரிதையுடையாரும் 'ஔவையார் பாதியும் பொய்யாமொழியார் பாதியுமாகப் பாடியது' எனக் கூறுதலானும் ஔவையாரையடுத்தே பொய்யாமொழியாரை வைத்தோதுலானும் இதனுண்மையறியலாம். இருவரும் முருகவேள் கேட்கப் பாடுதலானும், கோவைபாடுதலானும் ஒற்றுமையுடையராதலுங் காண்க.

பண்டைத் தண்டமிழ் நூல்களையே பெருந்துணையாகக் கொண்டு நன்காராய்ந்தமட்டில் இவர் பொய்யாமொழியார் காலத்துக்கும் பிற்பட்டிருந்தனரென்பது சிறிதும் புலப்படவில்லை. இனி இவர் அதிகமான்பால் நெல்லிப்பழம் பெற்றபோது, 'சாத னீங்க வெமக்கித் தனையே' எனவும், 'வன்கூற்றை நாவை யறுப்பித்தா யாமலகந் தந்து' எனவும் பாடுத[*]லானும், தத்துவங் கூறியபோது 'என்றானுஞ் சாகாமற் கற்பதே கல்வி' எனவுரைத்தலானும் இவர் சாகாமல் நெடுங்காலம் வாழ்ந்தனரெனக் கூறுப. மற்றுந் தமிழ்நாவலர் சரிதையில், 'சேரன் கயிலைக்குப் போகிறபோது ஒளவையாரை அழைக்க, அவர் விநாயகபூசை பண்ணித் தாமதமாயிருக்க, விநாயகன் அன்று துதிக்கையாலே எடுத்துக் கயிலையில் விடச் சேரனைக் கண்டு பாடியது' என்னுந் தலைப்பின் கீழ்,

    'மதுர மொழியி னுமையாள் சிறுவன் மலரடியை
    முதிர நினையவல் லார்க்கரி தோமுகில் போன்முழங்கி
    யதிர வருகின்ற யானையுந் தேரு மதன்பின்வருங்
    குதிரையுங் காதம் கிழவியுங் காதங் குலமன்னனே'

என்னும் பாடலொன்று காணப்படுவது. இதன்கட் கூறப்பட்ட சேரன், சேரமான் பெருமாணாயனார் என்ப. இக்கதை பெரிய புராணத்துக் காணப்பட்டதில்லையாதலின், இதனுண்மை எம்மனோரா லறிய லாவதில்லை. இவற்றதுண்மை எவ்வாறாயினும் இவையெல்லாம் இவர் இறப்பமுதியோராய் நெடி தாயு ளிருந்தனரென்பதுமட்டில் நண்குணர்த்துவதாகும். யாப்பருங்கல விருத்திகாரர், 'மிக்குங் குறைந்தும்' என்னுஞ் சூத்திரவுரையில்,

    'உடையராச் சென்றக்கா லூரெல்லாஞ் சுற்ற
    முடவராக் கோலூன்றிச் சென்றக்காற் சுற்ற
    முடையானும் வேறு படும்.'

என்னும் பாடலை ஒளஔவைபாட்டென்றுகொண்டு, ஆரிடப்போலிக்கு எடுத்துக்கூறினார். இதனாலும் ஒளவையார் இறப்ப முதுமை யெய்தியிருந்தனரெனவும், அக்காலத்துத் தம் இளமையிற்போலத் தாங்குவாரின்றித் தளர்ந்தன ரெனவும் ஊகிக்கத்தகும். இவரது நெடிதாயுட்காலத்து, இவர் திருவாய்மலர்ந்தருளிய பாடல்கள் எண்ணிறந்தனவாம்.
அவற்றுள் ஒரு சிலவே இப்போது உளவாவன. அவை நற்றிணையினும் குறுந்தொகையினும் நெடுந்தொகையினும் புறநானூற்றினும் தமிழ்நாவலர் சரிதையினும் தொகுக்கப்பட்டன சிலவும், தொல்லுரையாசிரியர்களா லாங்காங்கு மேற்கோள் காட்டப்பட்டன சிலவும், அசதிக்கோவையிற் சிலவும், மூதுரை முப்பதும், [*] ' அறஞ்செய விரும்பு, 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்பன முதலாகவரும் அறவுரைகளும் பிறவுமாம். இவரது திருப்பாடல்கள், நற்றிணையிற் கோக்கப்பட்டவாற்றாற் பன்னாடுதந்த பாண்டியன் மாறன் வழுதியாலும், குறுந்தொகையிற் கோக்கப்பட்டவாற்றாற் பூரிக்கோவாலும், நெடுந்தொகையிற் கோக்கப்பட்டவாற்றால் உக்கிரப்பெருவழுதியாலும் உருத்திரசன்மராலும் பெரிதும் பாராட்டப்பட்டன என்பது நன்கு புலனாகும். ஈண்டிய பல்புகழ்ப் பாண்டியர் பலரும்,

[* இஃது இக்காலத்து 'ஆத்திசூடி' என வழங்குவது. இச்சங்கத்திற்குக்கிடைத்த உரையொடுகூடிய இந்நூற்பழைய ஏடொன்றில், இதுவே கொன்றை வேய்ந்தோன் என்னும் பெயரான் வழங்கப்பட்டு முள்ளது. இந் நூல்முகத்தேதான்

    கொன்றை வேய்ந்த செல்வ னடியிணை
    யென்று மேத்தித் தொழுவோம் யாமே.

என்னும் கடவுள் வாழ்த்து எழுதப்பட்டு, உரை கூறப்பட்டுள்ளது. இந் நூலிறுதியில்,

    கொன்றைவேய்ந் தோனுரையைக் கொன்றைவேய்ந் தோனருளா
    னின்றமிழார் வேந்த ரிருங்குழுவே--யொன்று
    மறியா துரைத்தே னவையா ருரையாற்
    பிறியாத நார்ப்பூப் பிணை.

திருத்தகு கேள்வி யுருத்திரசன்மரும், வான்றோய் நல்லிசைச் சான்றோர் பிறரும், மேம்படுத் தேத்துந் தேம்படு கல்விக் கடலாய் விளங்கிய இவ் வருந்தமிழ்ச்செல்வியாரின் நல்லிசைப்புலமையை யாமோ எடுத்துரைக்குந் தகுதி யுடையேம். இங்ஙனம் கூறியன கொண்டு கூறாதனவற்றையும் வல்லார்வாய்க் கேட்டுணர்க.

[** foot note from previous page follows **]
என்னும் வெண்பா வொன்றுள்ளது. அதன்பின் 'அன்னையும் பிதாவும்' என்னும் பெயரில், இக்காலத்துக் 'கொன்றைவேந்தன்' என வழங்கும் நூல் உரையுடன் எழுதப் பட்டுள்ளது. அதன்றலைப்பில்,

    'அன்னையும் பிதாவு மென்னு முன்னுரைப்
    பெயருடை நூற்கும் பெயர்த்துரை யுரையென
    நல்லோர் சொல்லு நல்லுரை கேட்டுச்
    சொல்லெனச் சொலுஞ்சொற் கிள்ளை போல
    வல்லவர் முன்னுரை வழங்குவன் மாதோ.'

என்று வரையப்பட்டுள்ளது. இந்நூல்களிற் கண்ட பாடபேதங்களும் உரைப்பேதங்களும் மிகப் பலவாம். 'உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு' என இக்காலத்துவழங்குவது, 'உண்டி சுருங்கிற் பண்டிக் கழகு' என அவ்வேட்டின்கண் உள்ளது. இவ்வேடு, திருநெல்வேலி வித்வான் மகா-ள-ள-ஸ்ரீ பால்வண்ணமுதலியாரவர்கள் நன்முயற்சியாற் கிடைத்தது.
-------------
4. பாரி மகளிர்

பாரி என்பான், தமிழ்நாட்டுப் பண்டைக்காலத்தே பெரும் புகழ் பெற்று விளங்கிய வள்ளல்கள் எழுவருள் தலைமை வாய்ந்தவன். வேள் என்னும் பட்டம் பெற்ற உழுவித்துண்போர் வகையினன்; கொடையிற் சிறந்த எவ்வி என்பவனது தொல்குடியிற் பிறந்தோன்; செல்வமிக்க முந்நூறு ஊர்களையுடைய பறம்புநாட்டுக்குத் தலைவன்; இவனது பறம்புநாடு, பறநாடு எனவும் வழங்கப்படும். 'பாரி, பறநாட்டுப் பெண்டி ரடி' எனவும், 'பறநாட்டுப் பெருங்கொற்றனார்' எனவும் வழங்குவது காண்க.

இவன், பறம்பு என்னும் பெயரையுடைய வளமலைக்கண் வலியுடையதோர் பேரரண் அமைத்து அதனைத் தன் அரசிருக்கையாக்கி அதன்பாற் சிறக்க வீற்றிருந்தோன். இவனது மலையரண் பெரிய அழகும் அரியகாவலும் உடையது (நற்றிணை-235) எனவும், பகைவர் முற்றியகாலத்தும், வறங்கூர்ந்த காலத்தும் தன்னகத்து வாழ்வார் இனிதுண்டு செருக்குதற்கு உரிய மூங்கினெல்லும், தன் பால் மிக்கது (புறம்-119) எனவும், என்றும் வற்றாததும், பேரினிமை பயப்பதுமாகிய குளிர்ந்த நீரையுடைய பைஞ்சுனையொன்று தன்கணுடையது (அகம்-78, குறுந்தொகை-196) எனவும் சான்றோர் கூறுவர்.

இப்பறம்பு, பாண்டி நாட்டது என்பது 'வரிசைத் தமிழ்புனை பாரியும் பாண்டியன் மண்டலமே' என்னும் பாண்டிமண்டல சதகத்தாற் (46) புலப்படுவது. இப்பாரி, 'உலகுடன் றிரிதரும் பலர்புகழ் நல்லிசை, வாய்மொழிக் கபிலன்' (அகம்-78) என நல்லிசைப் புலவர்களால் மேம்படுத்தேத்தப்பட்ட கபிலரென்னும் புலவர்தலைவர்க்கு உயிர்த்தோழனானவன் (புறம்-201). 'புலங்கத் தரக விரவலர் செலினே, வரைபுரை களிற்றொடு நன்கலனீயு, முரைசால் வண்புகழ்ப் பாரி' (அகம்-303) என ஒளவையார் பாடுதலால் இவன் அவராலும் பேரன்புபாராட்டப் பட்டவனென்பது புலனாம்.

இவன் நிழலில்லாத நீண்டவழியிற் றனிமரம்போல நின்று, தன்னை யடைந்த அறிஞர், மடவர், வலியர், மெலியர் யாவர்க்கும் இன்னருள் சுரந்து மூவேந்தரினு மிகுத்து நன்கு வழங்கிய வள்ளியோன். இவனது பெருங்கொடைக்குக் கபிலர், மாரியினையே பல்லிடத்தும் உவமை கூறுவர். 'மாரி வண்பாரி (பதிற்றுப்பத்து-71) 'பாரி யொருவனு மல்லன், மாரியுமுண்டீண் டுலகுபுரப் பதுவே' (புறம்-117) என வருவனவற்றாலுணர்க. இவன் ஒருநாள் பொற்றேரூர்ந்து ஒரு காட்டிற் செல்லும்போது முல்லைக் கொடியொன்று படர்தற்குக் கொம்பரின்றி வெற்றிடையிலெழுந்து காற்றால் தளர்ந்து நடுங்குவது கண்டு, அவ் வோரறிவுயிர்மாட்டும் உண்டாகிய பேரருளால் அஃது இனிதுபடருமாறு தனது பொற்றேரை அதன் பக்கத்திட்டுத் தன்னிணையடி சிவப்ப நடந்துபோயின னென்ப. இவ்வரியபெரிய வள்ளன்மையே,

    'பூத்த லையறாஅப் புனைகொடி முல்லை
    நாத்தழும் பிருப்பப் பாடா தாயினுங்
    கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
    பரந்தோங்கு சிறப்பிற் பாரி' (புறம்-210)

    'ஊருட னிரவலர்க் கருளித் தேருடன்
    முல்லைக் கீத்த செல்லா நல்லிசைப்
    படுமணி யானைப் பறம்பிற் கோமா
    னெடுமாப் பாரி' (புறம்-211)

    'சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
    ......பறம்பிற் கோமான் பாரி' (சிறுபாணாற்றுப்படை)

    'முல்லைக்குத் தேரும்......
    தொல்லை யிரவாம லீந்த விறைவர்'
          (வெண்பாமாலை, பாடாண்-6)

என்பனவற்றாற் பாராட்டப்படுவது. தன் அரசிருக்கையாகிய பறம்புமலையொழியத் தன்னாட்டு முந்நூறூர்களையும் இரவலர்க்கே அளித்தனன் என்று கபிலர் கூறுவர். 'முந்நூறூர்த்தே தண்பறம்பு நன்னாடு, முந்நூறூரும் பரிசிலர் பெற்றனர்' (புறம்-110) என்பதனாலுணர்க.

இவனது வரையாவண்மை, 'கொடுக்கிலா தானைப் பாரி யேயென்று கூறினுங்கொடுப் பாரிலை' (தேவாரம்) என்பதனாற் சைவசமயாசாரியராகிய சுந்தரமூர்த்தி நாயனாராலும் எடுத்தாளப்பட்ட தென்பதொன்றானே இவனது வள்ளற்றலைமை தெள்ளிதி னுணரப்படும். இங்ஙனம் மாரிபோன்ற வரையாவீகையால், இவன் யாரினுஞ் சிறக்க விளைத்த பெரும்புகழ்க்கு அழுக்காறு கொண்டு, தமிழ் மூவேந்தரும் ஒருங்குகூடிப் படையெடுத்துப் போய் இவனது பறம்பாகிய மலையரணை நெடுங்காலம் முற்ற, அதனால் அவ்வரண் அடைமதிற்பட்டதாகப், பாரிக்கு உயிர்த்துணைவராய் அக்காலத்தும் அங்கிருந்த கபிலரென்னும் புலவர்பெருமான் கிளிகளை வளர்த்து விடுத்து, அரணுக்கு அப்புறத்து விளை நிலங்களிலுள்ள நெற்கதிர்களை நாளுங்கொணரச் செய்து ஆண்டுள்ள குடிபடைகளை அருத்திப் போராற்றளராவண்ணம் புரிந்து பாதுகாத்துவந்தனர். இவ்வரிய கதை,

    'உலகுடன் றிரிதரும் பலர்புகழ் நல்லிசை
    வாய்மொழிக் கபிலன் சூழச் சேய்நின்று
    செழுஞ்செந் நெல்லின் விளைகதிர் கொண்டு
    நெடுந்தா ளாம்பன் மலரொடு கூட்டி
    யாண்டுபல கழிய வேண்டுவயிற் பிழையா

    தாளிடூஉக் கடந்து வாளம ருழக்கி
    யேந்துகோட் டியானை வேந்த ரோட்டிய
    கடும்பரிப் புரவிக் கைவண் பாரி
    தீம்பெரும் பைஞ்சுனைப் பூத்த
    தேங்கமழ் புதுமலர் நாறுமிவ ணுதலே.'

எனவரும் அகப்பாட்டாலும் (78) 'இதனுட் கபிலன்சூழ என்றது, அரசர் மூவரும் வளைத்திருப்ப அகப்பட்டிருந்து உணவில்லாமைக் கிளிகளை வளர்த்துக் கதிர்கொண்டு வரவிட்ட கதை' எனவரும் அதன் உனுரையானும் அறியப்படுவது. இதுவே,

    'உரைசால் வண்புகழ்ப் பாரி பறம்பி
    னிரைபறைக் குரீஇயினங் காலைப் போகி
    முடங்குபுறச் செந்நெற் றரீஇய ரோராங்
    கிரைதேர் கொட்பின வாகிப் பொழுதுபடப்
    படர்கொண் மாலைப் படர்தந் தாங்கு.' (அகம்-303)

என்பதனால் ஒளவையாரானும் எடுத்துக்கூறப்பட்டதாகும். பின் கபிலர் பறம்புமுற்றிய மூவேந்தரையும் நோக்கி, 'நீவிர் முத்திறத்தீரும் ஒருங்குகூடித் தானை, யானை, குதிரை முதலிய படைகொண்டு எத்தனையோகாலம் முற்றிப் பொருதீராயினும், இப் பாரியுடைய பறம்பு கொள்ளுதலரிது; இவனது முந்நூறூரையும் இவன்பாற் பாடிப்பெற்ற பரிசிலர் போல நீவிரும் பாடினராய்வரின் கொள்ளுதலெளிது' என்று இவனது புலவர்க்கருமையும், இரவலர்க்கெளிமையுமாகிய பெருநிலையைத் தம் மினியபாடலா னறிவிக்க (புறம்,110), அதனால் மூவேந்தரும் இவனை எதிர்த்துவெல்லுதல் அரிதென்பதோர்ந்து இவனோடு பொருதற்கஞ்சி ஓடினரென்ப. மேல், 'ஏந்துகோட்டியானை வேந்தரோட்டிய, கடும்புரிப் புரவிக் கைவண் பாரி' என்பதனால், இவன் அம் மூவேந்தரையும் வென்றோட்டியமை நன்குபுலப்படும். இதன்பின் மூவேந்தரும் ஒருங்குகூடி வேறோர் சூழ்ச்சிசெய்து பாரியை வஞ்சித்துக் கொன்றனர். இதனை-112 ஆம் புறப்பாட்டு ரையில், 'ஒருவனை மூவேந்தரும் முற்றியிருந்தும் வஞ்சித்துக் கொன்றமையின்' எனவருதலா னறிக.

    'பாரியும் பரிசில ரிரப்பின்
    வாரே னென்னா னவர்வரை யன்னே.' (புறம் 108)

எனக் கபிலர் இப் பாரியினியல்பு கூறுதலான், இவ்வேந்தர் மூவரும் அவனியல்புக்குத்தகப் பரிசிலர்வேடம் பூண்டோ, பிறரைப்பரிசிலராகவிடுத்தோ, இவனை இரந்து தம்மகப்படுத்திக் கொன்றனராவர். இக்கருத்து,

    'புரிசைப் புறத்தினிற் [*] சேரனுஞ் சோழனும் போர்புரிய விரியச் சயங்கொண்ட போழ்தினில் யாமினி யீங்கிவனைப் பரிசுக்கு நல்ல கவிபாடி னால்வரும் பாக்யமென்றே வரிசைத் தமிழ்புனை பாரியும் பாண்டியன் மண்டலமே.'

என்னும் பாண்டிமண்டல சதகச்செய்யுளினும் (64) பயில்வது காண்க.
[* இந்நூலுடையார் பாண்டிமண்டலச் சிறப்பேகூறுதலான் பாண்டியனும் அப்போரில் இரிந்தோடினனெனக் கூற வுடம்பட்டாரில்லைப்போலும். *]

இவ்வாறு புரவலர்க்கின்னானாய் இரவலர்க்கினியனாய்
விளங்கிய நல்லிசைவள்ளலான மாரியனைய பாரியின் அருமைப்புதல்வியர்தாம், யான் ஈண்டெடுத்தோதப்புக்க நல்லிசைப்புலமை மெல்லியன்மகளிர். இம்மகளிர் வரலாறு பெரும்பாலும் ஒளவையார் வரலாற்றுட் கூறப்பட்டதாகும். ஆங்குக் கூறியன தொகுத்தும், கூறாதன விரித்தும் ஈண்டு உணர்த்துகின்றேன்.

மேலுரைத்தவாறு பாரி யிறந்த பின்னர், அவனது இன்னுயிர்த் தோழராகிய கபிலர், பாரியை நீத்துத் தமித்து உயிர் வாழ்வதற்கு மனமிலராயினும். அவனுடைய அறிவுடை மகளிரைக்காத்தற்கு வேறொருவரும் இலராதல்பற்றி உயிர்கொடுநின்று, அம்மகளிர்க்குத் தக்க அறிவும் பெருமையுமுடைய கணவரைத் தேட நினைந்து, அவர்களுடன், அவர் கட்குந் தமக்கும் பேரன்பு மிக்க பறம்பினை விடமுடியாமே விடுத்து, அப் பாரியை நினையுந்தோறும் பறம்பினைத் திரும்பிநோக்குந்தோறும் உள்ளம் நெக்குநெக்கு உருகிக் கண்ணீர் வாரநின்று, ஆற்றொணாத்துயராற் பொங்கியெழுந்த அன்புடைப்பாடல்களாற் பாரியினையும் பறம்பினையும் புகழ்ந்துகொண்டே சென்று ஓரூரிற்றங்கினர். அங்கு அன்றிரவு நிலாத்தோன்றியபோது அவருடனிருந்த பாரியின் அருமைமகளிர், தாம் அதற்கு முந்திய நிலாக்காலத்துத் தமது அரசுநிலையிட்ட திருவுடைநகர்க்கண்ணே இனிது மகிழ்ந்து விளையாடியதும், அடுத்த இந்நிலாக்காலத்துத் தாம் தந்தையிழந்து தண் பறம்பிழந்து தமியராய்த் துச்சிலொதுங்கித் துயர்கூரநின்றதும் தம்முள்ளத்தே தோன்ற, அப்போது,

    'அற்றைத் திங்க ளவ்வெண் ணிலவி
    னெந்தையு முடையேமெங் குன்றும் பிறர்கொளா
    ரிற்றைத் திங்க ளிவ்வெண் ணிலவின்
    வென்றெறி முரசின் வேந்தரெங்
    குன்றுங் கொண்டார்யா மெந்தையு மிலமே.' (புறம்.112)

என்னும் பாடலைப் பாடினர் இப்பாட்டால், இச்செய்யுள் செய்தற்கு ஒருமாதத்துக்குமுன், பாரி தன் அரசிருக்கையாகிய பறம்பின்கண் தம்மகளிர் முதலியோருடன் இருந்து வாழ்ந்திருந்தனனென்பது புலப்படுவது. இப்பாடல், சங்கத்தாராற் றொகுக்கப்பட்ட புறநானூற்றி லொன்றாகக் காணப்பட்டவாற்றால், இம்மகளிர் நல்லிசைப் புலவராதல் உணரப்படும். பாரிமகளிர் இருவர் என்பது மேலே தேறப்படுமாதலின், *ஈண்டும் 'பாரிமகளிர் பாடியது' எனப் பொதுப்படக் கூறப்பட்டமைபற்றி அவ்விருவருமே செந்தமிழ்ப் புலமையிற் சிறந்தாரவரென்பதுந் தெளியலாகும். புலவரிருவர் சேர்ந்து ஒருபாடல் பாடுவது முன்வழக்கே. இம்மகளிரது இன்றமிழ்ப்புலமை, தம் தரும்பெறற் றந்தையாகிய வள்ளற்பாரிக்கு ஆருயிர்த்தோழராகிய கபிலரென்னும் புலவர் தலைவர்பாற் பெற்றதாகும்.

இதன்மேற் கபிலர், அவ்வூரை விடுத்து இளவிச்சிக்கோ என்பானிடஞ் சென்று இம்மகளிரது உயர்குடிப்பிறப்பு முதலியவற்றை எடுத்துரைத்து, இவர்களை மணஞ்செய்து கொள்ளும்படி அவனைப் பாடி வேண்ட, அவன் உடம்படாமையால் இருங்கோவேள் என்பானுழைச் சென்று அவனையும் அவ்வாறு வேண்ட, அவனும் அங்ஙனமே உடம்படானாய் மறுக்க, இதற்காக அவனை முனிந்துபாடி, பாரிகுடிக்கும் மூவேந்தர்க்கும் உண்டாகிய பகைமைபற்றி அரசரொருவரும் இவர்களை மணஞ்செய்துகொள்ள இயையாமையாற் கபிலர் அம்மகளிரைத் தமக்கினிய பார்ப்பார் சிலர்பாற் படுத்து, பாரியின் பிரிவாற்றாது வடக்கிருப்பாராயினர்.

இதற்கிடையிற் கபிலர் செல்வக்கடுங்கோவாழியாதன்" என்னும் சேரமான்பாற்சென்று அவனைப் பத்துப் பாடல்களாற் புகழ்ந்துபாடி, நூறாயிரங்காணமும் அவன் மலையேறிக் கண்டு கொடுத்த நாடும் அவன்பாற் பெற்றனர் எனத் தெரிவது. இதுவே பதிற்றுப்பத்தினுள் ஏழாம் பத்தாவது. இவர், பாரி இறந்தபின்னேதான் அவனது நற்குணநற்செயல்கள் செல்வக்கடுங்கோவாழியாத னிடமும் இருப்பனவாகக் கேட்டு, அவனைக் காணச் சென்றனராவர். இதனை,*

    'பலாஅம் பழுத்த பசும்புண் ணரியல்
    வாடை தூக்கு நாடுகெழு பெருவிற
    லோவத் தன்ன வினைபுனை நல்லிற்
    பாவை யன்ன நல்லோள் கணவன்
    பொன்னி னன்ன பூவிற் பசியிலைப்
    புன்கா லுன்னத்துப் பகைவ னெங்கோப்
    புலர்ந்த சாந்திற் புலரா வீகை
    மலர்ந்த மார்பின் மாரிவண் பாரி
    முழவுமண் புலரா விரவல ரினைய
    வாராச் சேட்புலம் படர்ந்தோ னளிக்கென
    விரக்கு வாரே னெஞ்சிக் கூறே
    னீத்த திரங்கா னீத்தொறு மகிழா
    னமரா வள்ளிய னென்ன நுவலுநின்
    னல்லிசை தரவந் திசினே'

என்னும் பதிற்றுப்பத்தாலும் (8-ம் பத்து, 1), 'படர்ந்தோன் என்பது, முற்று. அளிக்கென என்பது, நீ யெம்மை அளிப்பாயாக எனச்சொல்லி என்றவாறு. இரக்கு என்பது தன்வினை. எஞ்சிக்கூறேனென்பது உண்மையினெல்லையைக் கடந்து பொய்யே புகழ்ந்து சொல்லேன் என்றவாறு. யான், பாரி சேட்புலம் படர்ந்தான்: நீ எம்மையளிக்க எனச்சொல்லி இரக்கவென்று வந்து சில புகழ்ந்து சொல்கின்றேனு மல்லேன்; அஃதன்றி யான் உண்மையொழியப் புகழ்ந்து சொல்கின்றேனுமல்லேன்; ஈத்ததிரங்காமை முதலாகிய பாரிநற்குணங்களை நின்பாலுளவாக உலகஞ்சொல்லும் நின்புகழ் நின்பாலேதர வந்தேன்' என்னும் அதனுரையானும் உணர்ந்துகொள்க. சேரன்பால் இவர் சென்ற காலத்தும் இப் பாரிமகளிரும் உடனிருந்தனர் போலும். இம்மகளிர் வரலாற்றினைப் புறநானூறொன்றே துணையாகக்கொண்டு ஆராயின், அதன்கண்,

    (1) 'அற்றைத் திங்கள்..........மிலமே' (புறம் - 112)

இது பாரிமகளிர் பாடியது.

    (2) 'சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே
    கோறிரண் முன்கைக் குறுந்தொடி மகளிர்
    நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே.' (புறம் - 113)

இஃது அவன்(பாரி)மகளிரைப் பார்ப்பார்ப்படுக்கக் கொண்டுபோவான் பறம்புவிடுத்த கபிலர் பாடியது.

    (3) 'ஈண்டுநின்..........நெடியோன் குன்றே' (புறம் - 114)

அவன் மகளிரைக் கொண்டுபோங் கபிலர் பறம்பு நோக்கிநின்று சொல்லியது.

    (4) 'இவரே..........பாரிமகளிர்
    யானே, பரிசிலன் மன்னு மந்தணன்
    நீயே, வரிசையில் வணங்கும் வாண்மேம் படுந
    னினக்கியான் கொடுப்பக் கொண்மதி' (புறம் - 200)

இது பாரிமகளிரை விச்சிக்கோனுழைக் கொண்டுசென்ற கபிலர் பாடியது.

    (5) 'இவர்..........பாரிமகளிர் யானே
    தந்தை தோழ னிவரென் மகளிர்
    அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே' (புறம் - 201)

இது பாரிமகளிரை இருங்கோவேளுழைக் கொண்டுசென்ற
கபிலர் பாடியது.

    (6) 'எவ்வி தொல்குடிப் படீஇயர் மற்றிவர்
    கைவண் பாரி மகளி ரென்றவென்
    றேற்றாப் புன்சொ னோற்றிசிற் பெரும' (புறம் - 202)

இருங்கோவேள் பாரிமகளிரைக் கொள்ளானாகக் கபிலர் பாடியது.

    (7) 'கலையுணக்..........பாலே.' (புறம் - 239)

வேள்பாரி துஞ்சியவழி மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக்கிருந்த கபிலர் பாடியது என வருவனவற்றாற் பாரிமகளிர் ஒருசிலரென்பதும், அவர் பாடவல்லவரென்பதும், அப் பாரி இறந்தபின் அவனது தோழராகிய கபிலரென்னும் புலவரந்தணரால் இளவிச்சிக்கோ, இருங்கோவேளென்னும் அரசரிடம் தம்மை மணஞ்செய்து கொள்ளும்படி வேண்டப்பட்டனரென்பதும், அவ்வரசர் அதற்குடம்படாமையாற் கபிலராற் பார்ப்பார்ப் படுக்கப்பட்டனரென்பதும், இவரைப் பார்பார்ப் படுத்தபின் கபிலர் பாரிபிரிவாற்றாது வடக்கிருந்தனரென்பதும் அறியப்படும்.
இனித் தமிழ்நாவலர் சரிதையினையும் துணைக்கொண்டு
நோக்கின்,

    'சேரலர்கோன் சேரன் செழும்பூந் திருக்கோவ
    லூரளவுந் தான்வருக வுட்காதே -- பாரிமக
    ளங்கவையைக் கொள்ள வரசன் மனமியைந்தான்
    சங்கியா தேவருக தான்.'

என்பன முதலாக மேல் ஒளஔவையார் வரலாற்றுள் எடுத்துக் காட்டிய பாடல்களானும், பிறவற்றானும் அப் பாரிமகளிர் அங்கவை சங்கவை என்பாரிருவரென்பதும், அவர் திருக்கோவலூரில் இருந்தனரென்பதும், அவ்வூரில் தெய்விகனென்னும் அரசனுக்கு மூவேந்தர்நடுவில் ஒளவையாருடைய நன்முயற்சியாற் சிறக்க மணஞ்செய்து கொடுக்கப்பட்டன ரென்பதும், பிறவும் புலனாகும். இத்தமிழ்நாவலர் சரிதைப் பாட்டுள், 'பாரிமகள், அங்கவையைக் கொள்ள அரசன் மனமியைந்தான்' என்பது, முன், அரசர் சிலர் இம்மகளிரைக் கொள்ள மனமியையாமை குறிப்பதாம். இதன் விரிவெல்லாம் ஒளஔவையார் வரலாற்றுட் காண்க.

இங்ஙனமன்றி, 'பார்ப்பார்ப்படுத்தல்' என்பது, பார்ப்பார்க்கு மணஞ்செய்யப்பட்டமையேயாம்: என்னை? 'குறுந்தொடி மகளிர், நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே' (புறம், 113) என மேல் வந்தது, பாரிமகளிரைப் பார்ப்பார்ப் படுக்கக் கொண்டுபோவான் பறம்புவிடுத்த கபிலர் பாடிய தாதலான்' எனின்;-- கூறுவேன். கபிலர் பறம்பினை விடுத்தபோதே இம்மகளிரைப் பார்ப்பார்ப் படுக்கக் கருதினாராயின், இளவிச்சிக்கோ, இருங்கோவே ளென்பாரிடம் இவரை மணஞ்செய்துகொள்ள வேண்டார். இவ்வரசர்பாற் சென்று வேண்ட அவருடம்படாத பின்னேதான் கபிலர்க்குப் பாரி மகளிரைப் பார்ப்பார்ப்படுக்கு மெண்ணம் உண்டாயிருத்தலாகும். அதன்பின்னரே பார்ப்பார்ப்படுத்தன ராவர்.

இம் முடிவுநிகழ்ச்சியை உட்கொண்டு, பிற்காலத்துச் செய்யுட்டொகை செய்தார், பறம்புவிடுத்தது முதலும் பார்ப்பார்ப்படுத்தது
இறுதியுமாக இவர்கள் செய்தி நிகழ்தலின் இடையினிகழ்ந்தன வெல்லாங் கூறாமல் இறுதியிற் 'பார்ப்பார்ப் படுக்கக் கொண்டுபோவான்' என்பதே குறித்துக்கொண்டார். 'நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே' எனப் பாட்டுட் கூறப்பட்டிருத்தலால் இம்மகளிர் மணத்தற்குத்
தக்க ஒருகுலக்கணவரைத் தேடுதலே பறம்புவிடுக்கும்போது கபிலர்க்குள தாகிய எண்ணமென்பது நன்கு புலனாம். நாறிருங்கூந்தற் கணவர் பார்ப்பாரே என முதற்கட் கருதினாரெனின் பார்ப்பார்ப் படுத்தற்குமுன் இளவிச்சிக்கோ, இருங்கோவேளென்னும் வேளிரிடஞ் சென்று வேண்டல் பொருந்தாதாகும். இம்மகளிர் வேளிர்குலக்கொடிகளாதலால் அக்குலத்து நல்லாண்மக்களையே தேடிச்சென்றன ரென்பது தெள்ளிது. ஆதலால், 'நாறிருங் கூந்தற்......கிழவரைப் படர்ந்தே' என்பதற்குக் கீழ்க்குறிப்பே துணையாகக்கொண்டு, பார்ப்பார்க்கு மணஞ்செய்யப்பட்டன ரென்றல் இயையாமை காண்க.

இனிப் பார்ப்பார்ப் படுத்தனெ ரென்பதுதானே, பார்ப்பார்க்கு மணஞ் செய்யப்பட்டன ரென்ப துணர்த்து மெனின் ;- அது 'பாரிமக ளங்கவையக் கொள்ள வரசன் மனமியைந்தான்' என்னும் ஒளவையார் பாட்டோடு மாறுகொள்ளும். இவற்றாற் 'கபிலர் பாரிமகளிரைப் பார்ப்பார்ப் படுத்தனர்' என்பது, அவர் அம்மகளிரை அரசரொருவரும் மணஞ்செய்து கொள்ளாமையால் தமக்கினிய பார்ப்பார் சிலரது பாதுகாப்பில் வைத்தமையே குறிக்கும். அன்றியும், பார்ப்பார்க்கும் வேளிர்க்கும் மணநிகழ்ச்சி கூறுதலும் இயையாதாம். கபிலர், மகளிரை அரசர்க்கு மணஞ்செய்யலாகாமற் பார்ப்பாரது பாதுகாப்பில் வைத்து வடக்கிருக்க, ஔவையார் அதுதெரிந்து தெய்விகன் என்னும் அரசனை, இம்மகளிரை மணஞ்செய்து கொள்ளும்படி உடம்படுவித்து அவர் மணத்தைச் சிறப்ப வியற்றினர் என்பதே இயைபுடைத்தாவது காண்க.

இம்மகளிர், புலவர் பேரணியாங் கபிலரந்தணர்பாற் பயின்றமைக் கேற்ற நல்லிசைப் புலமையே யன்றி, வரையா வள்ளியோ னாகிய பாரிமகளிர் என்றற்கேற்ற வள்ளற்றன்மையு முடையராயின ரென்பது,

    'மாரியொன் றின்றி வறந்திருந்த காலத்தும்
    பாரி மடமகள் பாண்மகற்கு -- நீருலையுட்
    பொன்றந்து கொண்டு * புகாவாக நல்கினா
    ளொன்றுறா முன்றிலோ வில்.

[* புகா என்பது உணவு. 'புகாக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப், பகா விருந்தின் பகுதிக் கண்ணும்' என்னுந் தொல்காப்பியத்து (களவியல், 16), நச்சினார்க்கினியர், 'புகாக்காலை' என்பதற்கு 'உண்டிக்காலத்து' எனக் கூறியவற்றா னுணர்க. 'புகாவலை விலங்காய்' என வளையாபதியினும் (புறத்திரட்டு, *] [* புலான்மறுத்தல், 7) வருதல் காண்க. இது நிலா நிலவு என வருதல் போலப் 'புகவு' எனவும் வரும். 'அகநாட்< டண்ணல் புகவே' என்பது புறம்(249). *]

என்னும் பழமொழிச் செய்யுளானும் (171), 'மாரி யென்பதொன் றின்றி உலகம் வற்றியிருந்த காலத்தும் பாரிமடமகளிர் இரந்து வந்தானொரு பாண்மகற்குச் சோறுபெறாமையால் உலையுட் பொன்னைப் பெய்துகொண்டு திறந்து சோறாகவே நல்கினாளாதலால், ஒரு துன்பமுறாத மனையில்லை என்றவாறு. அல்லதூஉம், சோறும் அரிதாகிய காலத்துப் பொன்னே சோறாக உதவினாளாதலாற் சென்றிரந்தால் ஒரு பயன்படாத மனையில்லை என்றவாறு' என்னும் அதனுரையானும் அறியப்படும்.

முன்னரே ஒளவையாரது வரலாற்றுள் இம்மகளிரது திருமணச்சிறப்பு முதலியன கூறப்பட்டனவாதலான், ஈண்டு வேறெடுத்தோதினேனில்லை. அதனால் ஒளவையாரென்னும் அறிவுடையாட்டி இம்மகளிர்பால் வைத்த பேரன்பு நன்குணரப்படும்.

இத்துணையுங் கூறியவாற்றால், புவிநிறை பெரும்புகழ்க் கபில ரௌவை அன்பு பாராட்டு மின்புடைப் பாரியி னருமை மகளிர் பெருமையுங் கல்வியும் ஒருவா றுணர்க.

------
5. பூதப்பாண்டியன் தேவியார்

இருவேறு நல்வினைகளின் பயன்களா யுள்ள அரிய கல்வியும் பெரிய செல்வமும் ஒருங்கெய்தி, அங்ஙனம் எய்தியமைக்கேற்ற பேரறிவும் பெருங்கொடையும் உடையராய், இவ்வுலகில் என்றைக்கும் நீங்காத நல்லிசையினை நிறுத்தின முடியுடைத் தமிழரசர் மூவருள்ளும், பாண்டியரே, கல்விபற்றி மற்றை யிருவரினும் சிறப்பித்துப் போற்றப்படுவோராவர். இவரே செந்தமிழ்நாடாளும் உரிமை யுடையர். இவரே முக்காலும் செந்தமிழ்ச் சங்கம் சிறப்புற இரீஇயினோர். இவரே கவியரங்கேறினோர். இவரே அரும்பெறற் புலவர்க்குப் பெரும்பொற்கிழி யளித்தோர்.

இவரது அவைக்களமே தொல்காப்பியம், திருவள்ளுவர் முதலிய பெருநூல்கள் அரங்கேறப் பெற்றது. இவர் நாடுதான் நல்ல தமிழுடையது. இவர் பதிதான் தமிழ் நிலைபெற்ற தெனப்படுவது. இவர்பதியைக் கூறுமிடமெல்லாம் கல்விபற்றியே சிறப்பித் துரைப்பர். இவர் 'பதிகளில் வாழ்வார்தாம் வாழ்வார்' எனப்படுவா ரென்ப. பல சொல்லி யென்? மூவேந்தருள்ளும் பாண்டியர்தாம் தமிழுடையார் என்று சிறப்பிக்கப்படுவாரென்ப. இவற்றையெல்லாம்,

    'வில்லுடையான் வானவன் வீயாத் தமிழுடையான்
    பல்வேற் கடற்றானைப் பாண்டியன் - சொல்லிகவா
    வில்லுடையான் பாலை யிளஞ்சாத்தன் வேட்டனே
    நெல்லுடையான் நீர்நாடர் கோ.' (யாப்பலங்கலவிருத்தி
          (மேற்கோள்)

    'நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன்வாழ்
    வில்லந் தொறுமூன் றெரியுடைத்து - நல்லரவப்
    பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின்
    னாட்டுடைத்து நல்ல தமிழ்.'
          (ஒளவையார்)

    'தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
    மகிழ்நனை மறுகின் மதுரையும்'
          (சிறுபாணாற்றுப்படை)

    'உயர்மதிற் கூடலி னாய்ந்தவொண் டீந்தமிழின் றுறை'
          (திருச்சிற்றம்பலக்கோவை)

    'மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
    பூவொடு புரையுஞ் சீரூர் பூவி
    னிதழகத் தனைய தெருவ மிதழகத்
    தரும்பொகுட் டனைத்தே யண்ணல் கோயில்;
    தாதி னனையர் தண்டமிழ்க் குடிக
    டாதுண், பறவை யனையர் பரிசில் வாழ்நர்
    பூவினுட் பிறந்தோ னாவினுட் பிறந்த
    நான்மறைக் கேள்வி நவில்குர லெடுப்ப
    வேம வின்றுயி லெழுத லல்லதை
    வாழிய *வஞ்சியுங் #கோழியும் போலக்
    கோழியி னெழாதெம் பேரூர் துயிலே.'
          (பரிபாடலுறுப்பு)
    [* வஞ்சி - கருவூர்; சேரர் தலைநகர்.
    # கோழி - உறையூர்; சோழர் தலைநகர்.#]

    'ஈவாரைக் கொண்டாடி யேற்பாரைப் பார்த்துவக்குஞ்
    சேய்மாடக் கூடலுஞ் செவ்வேள் பரங்குன்றும்
    வாழ்வாரே வாழ்வா ரெனப்படுவார் மற்றையார்
    போவாரார் புத்தே ளுலகு.'
          (பரிபாடலுறுப்பு)

    'உலக மொருநிறையாத் தானோர் நிறையாப்
    புலவர் புலக்கோலாற் றூக்க -- வுலகனைத்துந்
    தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவ
    னான்மாடக் கூட னகர்.'
          (பரிபாடலுறுப்பு)

என இவ்வாறு பாண்டியரையும், அவரது நாடுநகர்களையுஞ் சிறப்பித்துவரும் அரிய பழைய பாடல்களானும் பிறவற்றானு முணர்க. இன்னுந் தொகைநூல்களுட் கோக்கப்பட்டுள்ள இப்பாண்டியர் பாடல் சிலவற்றான் இவ்வேந்தரது நல்லிசைப் புலமை மேம்பாடு உய்த்தறியத்தக்கது.

    முடத்திருமாறன்     நற்றிணை-105,228
    மாறன் வழுதி     ,, 97
    பெருவழுதி     ,, 55
    கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி     புறம் - 182
    குறுவழுதி     அகம் - 150
    அண்டர்முன் குறுவழுதி     குறுந்தொகை - 345, அகம்-227
    பாண்டியன் ஆரியப்படை தந்த நெடுஞ்செழியன்     புறம் - 183.
    பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்    புறம் - 82.
    பாண்டியன் அறிவுடைநம்பி குறுந்தொகை - 230, நற்றிணை - 13,
    அகம் - 28, புறம் - 188.
    ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியன்     அகம் - 25, புறம் - 71.
    பாண்டியன் பன்னாடுதந்தான்     குறுந்தொகை - 270
    பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதி    அகம் - 26, நற்றிணை - 98.

என்னும் இப்பாண்டியர், நல்லிசைப்புலமைச் செல்வராய் விளங்கினோ ரென்பது தெற்றெனத் தெரிவது. இவருள், முடத்திருமாறன் கடைச்சங்கம் நிலைபெறுவித்தோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் பாடியருளிய மதுரைக்காஞ்சி கொண்டோன்: பாண்டியன் பன்னாடு தந்தான் நற்றிணை தொகுப்பித்துதவினோன்: பாண்டியன் கானப்பேர்தந்த உக்கிரப்பெருவழுதி அகநானூறு தொகுப்பித்துதவினோன் எனவும் அறிந்து கொள்க.

இத்தகைக் கல்விச்சிறப்புடைச் செல்வப் பாண்டியருள் ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியன் என்னும் அரசர்பெருந்தகைக்கு ஆருயிர்த்துணைவியராய்ச் சிறந்தார்தாம் யாம் ஈண்டெடுத்தோதப் புக்க நல்லிசைப் புலமை மெல்லியற் றேவியார் என அறிக. இத்தேவியாரது இன்னுயிர்க் கொழுநனாகிய பூதப்பாண்டியன், புலவனும் வீரனுமாய்ச் சிறந்து விளங்கினோன். அகநானூற்றினும் புறநானூற்றினுங் காணப்படும் அவனது பாடல்களானும், 'ஒல்லையூர்தந்த' என்னும் அடைச்சிறப்பானும் அவனது புலமையும் வீரமும் உணரத்தக்கன. புறத்திற் காணப்பட்ட

    'மடங்கலிற் சினைஇ மடங்கா வுள்ளத்
    தடங்காத் தானை வேந்த ருடங்கியைந்
    தென்னொடு பொருது மென்ப வவரை
    யாரம ரலறத் தாக்கித் தேரோ
    டவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த
    பேரம ருண்க ணிவளினும் பிரிக
    வறநிலை திரியா வன்பி னவையத்துத்
    திறனி லொருவனை நாட்டி முறைதிரிந்து
    மெலிகோல் செய்தே னாகுக மலிபுகழ்
    வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பிற்
    பொய்யா யாணர் மையற் கோமான்
    மாவனு மன்னெயி லாந்தையு முரைசா
    லந்துவஞ் சாத்தனு மாத னழிசியும்
    வெஞ்சின வியக்கனு முளப்படப் பிறருங்
    கண்போ னண்பிற் கேளிரொடு கலந்த
    வின்களி மகிழ்நகை யிழுக்கியா னொன்றோ

    மன்பதை காக்கு நீள்குடிச் சிறந்த
    தென்புலங் காவலி னொரீஇப்பிறர்
    வன்புலங் காவன் மாறியான் பிறக்கே.'

என்னும் பாட்டு, இவர் காதலனது வீரம் பற்றிய வஞ்சின வார்த்தையாகலுங் காண்க. இப்பாட்டால் இவர் கொழுநன் பெரிய போர்வீரன் என்பதும், தனக்கொத்த கல்வியறிவு வாய்ந்த தேவியாராகிய இவரைச் சிறிதும் பிரிதாலாற்றாப் பேரன்புடையா னென்பதும், அறநிலை திரியா< முறையுடைச் செங்கோலன் என்பதும், வையையால் வளமிக்க மையல் என்னும் ஊரிலிருந்த மாவன் என்பானையும், எயில் என்னும் ஊரிலிருந்த ஆந்தை, அந்துவஞ்சாத்தன், ஆதனழிசி, இயக்கன் என்பாரையும் தன் கண்போல் நண்பினராகக் கொண்டவன் என்பதும், பிறநாட்டரசுரிமையினும் பாண்டிநாடாள் அரசுரிமையையே வேலாக மதித்திருந்தன னென்பதும், பிறவும் அறியலாகும்.

இத்தகை அறிவுடை வீரனான முடியுடை வேந்தனை 'அவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த போம ருண்க ணிவளினும் பிரிக' என்று சொல்வித்தது, இப்பெருங்கோப்பெண்டினது [1] அறிவுருவொடு கூடிய அருந்திறற் கற்பே யென்பதுந் தெள்ளிது. நல்லிசைப் புலமையினும் தன்னோடொத்த இம்மெல்லியற்றேவியாரைத் தனது உயிர்க்காதலியாகப் பெற்ற பாண்டியன்றான் இவரைப் பிரித லாற்றுவனோ: ஒருசிறிதும் ஆற்றான்! ஈண்டு இத்தேவியார் தம்மோடொத்த நல்லிசைப்புலமைச் செல்வப்பாண்டியன்பால் வைத்த அன்பின்
பெருக்கை இனைத்தென்றுணர்த்தலாவதோ! அன்று.

[1: பெருங் கோப்பெண்டு என்பது, முடியுடையரசர் பெருந்தேவியார்க்கொரு பெயர். (சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை தன் பெருங்கோப் பெண்டு துஞ்சியகாலைச் சொல்லிய பாட்டு, புறம்-245) என வருதலான்அறிக.]

மேல், இப்பெருந்தேவியார் நிகழ்த்தும் அரும்பெருஞ்செயலானும், அவ்வமையம் ஆண்டு உடனிருந்த மதுரைப் பேராலவாயார் என்னும் புலவர், இவரது அன்புடைமையை வியந்து, 'சிறுநனி தமிய ளாயினு, மின்னுயிர் நடுங்குந்த னிளமைபுறங் கொடுத்தே' எனப்பாடியதனாலும் அதனை ஒருவாறுணர்க. குறைவற்ற செல்வமும் நிறைவுற்ற கல்வியுமுடைய இருபெருமக்கள் காதலுனுங் காதலியுமாக அன்புபட்டியைந்த இவ் வரியபெரிய இல்வாழ்க்கை யாண்டுங்காண்டற் கரிய தொன்றே. இதற்கு மிகவும் பிற்காலத்தே இப்பாண்டியர் குடிக்கண்ணேதான் வரதுங்க பாண்டியனும் அவனுடைய பெருந்தேவியுங் கல்வியறிவுடையராய்ச் சிறந்தனரெனத் தெரிவது. வரதுங்க பாண்டியன் பிரமோத்தரகாண்டம் தமிழாற் பாடினான். தமிழ்நாவலர் சரிதைக்கண் 'பணியாரக் குடத்துள் மதுரைக்குப் பாண்டியன்தேவி விடுத்த கவி' என்னுந் தலைப்பின் கீழ்,

    'என்னையிவ்வா றவர்மறந்தும் யானவரை
          மிகநினைந்திங் கிருந்து வாட
    முன்னைவினைப் பயன்றானோ வப்பிறப்பிற்
          செய்ததவ முடிந்த வாறோ
    கண்ணன்மத னபிராமன் வரதுங்க
          ராமனியற் காசி நாட்டி
    லன்னவயற் குருகினங்கா ளினியெவ்வா
          றுயிர்தரித்திங் காற்று மாறே'

    'செப்பாரு முகிழ்முலையா ரெல்லாருங்
          கணவருடன் சேர்ந்து வாழ
    வெப்பாரு மில்லாவென் கணவனுடன்
          யான்கூடி யுறவா டாமல்
    வெப்பாலு மிகுகாமத் துயராலு
          நாடோறு மெலிந்து வாடி
    யிப்பாடு படவென்றோ விறைவனென்
          றலையேட்டி லெழுதி னானே'

    'எண்டிசா முகத்துந் திங்க
          ளிளநிலா வெள்ளங் காயக்
    கொண்டமால் பெருகுந் தோறுங்
          கொழுங்கணீர் முலையிற் சோரப்
    பண்டுநா மறியாக் காமத்
          துயரினாற் படுவ தெல்லாம்
    வண்டுகா ளுரையீ ருங்கள்
          வரதுங்க ராம னுக்கே.'

என வரும் பாடல்களான் அவ் வரதுங்க பாண்டியன் தேவியின் புலமை அறியத்தகும். இப்புலமை பூதப்பாண்டியன் தேவியாரின் நல்லிசைப் புலமைக்கு ஒப்பாவதில்லையாயினும் இவ்வகைக் கல்விச்சிறப்புப் பாண்டியர்குடிக்கண்ணேதா னுள்ளது என்பதுமட்டில் நன்கு விளங்கும். இத்தகையாளரே ஒத்த கிழவனும் கிழத்தியு மாவர். உருவமுதலியவற்றான் எத்தனையும் ஒத்து அறிவான் வேற்றுமைப்படின் அக்காதலனும் காதலியும் ஒருகாலும் தம்முள் ஒத்தாராகார். 'உறுப்பொத்தன் மக்களொப் பன்றால்' என்ற ஆன்றோர் திருவாக்கினையும் ஈண்டைக்கு நோக்கிக்கொள்க. இங்ஙனம் பெரிதும் அருமையாய்க் காண்டற்குரிய இவ்வறிவொப்பின்கட் பெருமகிழ் கூர்ந்து பூதப்பாண்டியனும் அவனுக்குச் சிறந்த பெருந்தேவியாரும் இனிது வாழ்கின்ற நாளில், இவ்வகை அறிவுடைச் சேர்க்கைக்கண் அழுக்காறு கொண்ட அறிவில் கொடுங்கூற்றம் பூதப்பாண்டியன் இன்னுயிரைக் கவர்ந்தது. அந்நிலையில் அறிவுடைப் பெருந்தேவியாரின் துன்பவெள்ளம் கரையடங்குவதோ! இவரது கேண்மை பேதையார் கேண்மை யில்லையே; அறிவு வீற்றிருந்த செறிவுடை நெஞ்சின ரிருவர் ஓருயிராகக் கலந்ததன்றோ.

    'மக்க ளிழந்த இடும்பையினும் மனையா ளிழந்த இடும்பையினும், மிக்க இடும்பை ஓவாத விதவை இடும்பை'[*]

என்பரே! தந்தை தாய் முதலாயினோரை இழந்தார்க்குத் துயராற்றுதற்கு அம்முறைசொல்லிப் பிறரைக் காட்டுவதுண்டு; கணவனையிழந்தார்க்கு அங்ஙனஞ் சொல்லிக்காட்டுதலுமாகாதே; இவையெல்லாம் நன்குணர்ந்த இவரது கற்றறி நெஞ்சம் என்பாடுபடும்! அதனை எம்மா லெளிதி லறிந்துரைக்கத் தக்கதன்று. பெருந்தேவி இவ்வாறு துயருழவாநிற்கையில் அரசனுக்கு உரிமைச்சுற்றத்தினர்

[* - இச்செய்யுள், ஒட்டக்கூத்தர் பாடியதென்று சொல்லப்படும் இராமாயணம் உத்தரகாண்டத்து, திக்குவிசயபடலத்திலுள்ள 138- வது கவியாகும். இப்பாடல் முழுதையும் அடியார்க்குநல்லார் சிலப்பதிகாரப்பதிகத்தின் 42- வது அடிவிசேடவுரையில் மேற்கோள் காட்டியிருக்கின்றனர்.]

பிறர் பூதப்பாண்டியனது திருவும் வீரமும் பொலிகின்ற திருமேனியை அவனது பெருமைக்குத் தக்க பெருஞ்சிறப்புடன் இடுகாட்டுய்த்து ஈமத்தேற்றித் தீக்கொளுவுவாராயினர். உயிர்க்காதலனது திருமேனியையுங் காணப்பெறாத இந்நிலையிற் பெருந்தேவியாரது துயரம் கடலாய்ப் பொங்கித் தலைக்கொண்டது. அப்போது தேவியார் ஆற்றொணாதவராய்ப் 'பசைந்தாரைத் தீர்தலிற் றீப்புகுத னன்று ' என்ற சான்றோர் திருவாக்கின்படி தமதாருயிர்க் காதலனுடன் அவ்வீமத்தீயிற் பாய்ந்துமாய்தலே தம்மாற் செய்யத்தகுவதென்று தேர்ந்து அவ்வாறு செய்ய ஒருப்பட்டனர். அவ்வமையம் ஆண்டுக்குழீஇ யிருந்த மதுரைப் பேராலவாயார் முதலிய புலவர் சான்றோர்கள் தம்மோ டொத்த அறிவுடையரசியையும் இழக்கலாகுமோ என்று தேவியாரைத் தீப்புகாமல் விரைந்து தடுப்பாராயினர். அதுகண்டு பெருந்தேவியார் ஈமத்தீப்புறத்து நின்றுகொண்டு அச் சான்றோரை நோக்கி,

    'பல்சான் றீரே பல்சான் றீரே
    செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும்
    பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
    யணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
    காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா
    தடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்
    வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட
    வேளை வெந்தை வல்சி யாகப்
    பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியு
    முயவற் பெண்டிரே மல்லே மாதோ
    பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் டீம
    நுமக்கரி தாகுக தில்ல வெமக்கெம்
    பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற
    வள்ளித ழவிழ்ந்த தாமரை
    நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே.'

என்னும் பாடலைக் கூறித் தீயிற்பாய்ந்து மாய்ந்தனர். தம் ஆருயிர்க் கொழுநனை நீங்கிய இவ் வுலகவாழ்க்கையே இப் பெருந்தேவியார்க்குச் சுடுதீ யாயிற்று; அக் கணவனுட னிறத் தற்குக் காரணமான சுடுதீயோ அரும்பற மலர்ந்த தாமரைக் குளிர்நீர்ப்பொய்கை யாயிற்று. இங்ஙனம் இயற்கையையும் மாற்றுகின்ற அன்பென்பதொன்றின்றன்மை அமரரும் அறிந்ததன்று. இப்பாட்டால் இவரைச் சான்றோர்பலர் தீப்பாயாமல் விலக்கினாரென்பதும், அங்ஙனம் விலக்கினாரை யெல்லாம் பொல்லாச்சூழ்ச்சியர் என்று முனிந்தனர் என்பதும், கைம்மைநோன்பினை வெறுத்தன ரென்பதும், கணவனுடன் மாய்தலை மகிழ்ந்தன ரென்பதும் பிறவும் நன்குணர்ந்துகொள்க.

இப்பாட்டொன்றே இம் மெல்லியலாரது
நல்லிசைப்புலமையினைச் செவ்விதி னறிவுறுத்தும். இச்செய்தி நிகழ்வுழி யுடனிருந்த மதுரைப்பேராலவாயர் இத்தேவியாரது அரும்பெருஞ் செயற்கு வியந்து, 'மடங்கலிற் சினைஇ' என்னும் புறப்பாட்டைப் பாடினர். அதனானும் இவரது பேரன்பும் அருஞ்செயலும் அறிந்துகொள்க.

இனி, அகநானூற்றில் பூதப்பாண்டியன் பாடிய 'நெடுங் கரைக் கான்யாற்றுக் கடும்புனல்' என்னும் பாட்டினுள்,

    'பொருநர், செல்சமங் கடந்த வில்கெழு தடக்கைப்
    பொதியிற் செல்வன் பொலந்தேர்த் திதியன்
    இன்னிசை யியத்திற் கறங்குங்
    கன்மிசை யருவிய காடிறந் தோரே'

என்பதனால், பொதியின்மலைக்க ணிருந்த திதியன் என்னுங் குறுநிலமன்னன் கூறப்பட்டுள்ளான். நெடுஞ்செழியனாற் றலையாலங்கானத்துச் செருவெல்லப்பட்ட எழுவருள் திதியனும் ஒருவன் என்பது, 'பகுவாய் வராஅல்' என்னும் அகப்பாட்டானும் மதுரைக்காஞ்சியுரையானும் அறியப்படுதலால், பூதப்பாண்டியன், நெடுஞ்செழியனுக்குப் பிற்பட்ட காலத்தவ னாவன் என அறிக.

திருவனந்தபுரத்தைச் சார்ந்த மேலைப்பிடாகையில் தோவாழைக்கு மேற்காக ஐந்துநாழிகை வழித்தூரத்துள்ள தரிசனன்கோப்பு எனப்பெயரிய சிற்றூரில் 'பூதப்பாண்டியன்' {Swell's Antiquities Vol, I. page 258.} கோவில் என்னும் பெயரில் ஓர் கோயி லுள்ளது என்பது இங்கு அறியப்படுவது.

இத்துணையுங் கூறியவாற்றான் இமிழ்கடல் வரைப்பிற்றமிழுடையாரெனும், பாண்டியர் குடிக்குக் காண்டகு திலதமாய்க், கற்பினுக் கணியாய்ப் பொற்பினுக் கிடனாய், நல்லிசைப் புலமைச் செல்வமகளா யீண்டிய பூதப் பாண்டியன்றேவியாரின் வரலாறு ஒருவாறுணர்க.

---

6. காக்கைபாடினியார் நச்செள்ளையார்
[ மகாமகோபாத்தியாயர் ப்ரும்மஸ்ரீ டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் செவ்வனம் ஆராய்ந்து வெளியிட்ட பதிற்றுப்பத்துள் 'நூலாசிரியர்கள் வரலாறு' பார்க்க. ]

இவர் பதிற்றுப்பத்தின்கணுள்ள ஆறாம்பத்தால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்னுஞ் சேரனைப் புகழ்ந்து பாடி, அவனாற் கலனணிக என்று ஒன்பதுதுலாம் பொன்னும் நூறாயிரங்காணமும் அளிக்கப் பெற்று, அவன் பக்கத்து வீற்றிருத்தற் சிறப்பும் எய்தியவர். பாடினி, செள்ளை என்னும் பெண்பாற்பெயர்களானும் கலனணிதற்குப் பொன்பெற்றமை யானும் பெண்பாலாராகத் தெளியப்படுகின்றார். பதிற்றுப்பத்து, 6-ஆம் பத்துப்பதிகத்தி னிறுதியில், 'யாத்த செய்யுளடங்கிய கொள்கைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார்' என வருவதன்கண் உள்ள அடங்கிய கொள்கை என்ற விசேடணமும் இவர் பெண்பாலார் என்பதனையே வலியுறுத்துவது காண்க. குறுந்தொகையில் 210-ஆம் பாட்டும், புறநானூற்றில் 278-ஆம் பாட்டும் இவருடையன. இவரது குறுந்தொகைப்பாட்டில் நள்ளி என்னும் வள்ளல் கூறப்பட்டுள்ளான் இம் மெல்லியலாரது நல்லிசைப்புலமைமாட்சி அளத்தற்கரியதே.

---------
7. குறமகள் இளவெயினி

இவர் குன்றுறை வாழ்க்கைய ராகிய குறவர் குடியினராவர். விற்றூற்றுமூதெயினனார் (அகம்-37), இளவெயினனார் (நற்றிணை- 263), கடுவன் இளவெயினனார் (பரிபாடல்) என ஆண்பாற்கண் வருதல்போல, இளவெயினி எனப் பெண்பாற்கண் வந்ததாகும். குறமகள் குறியெயினி என்னும் நல்லிசைப் புலமை மெல்லியலார் ஒருவ ருளரென் றறியப்படுதலால், இவர் அவர்க்கிளையராதல் பற்றி இளவெயினி என வழங்கப்பட்டனரெனக் கொள்ளலுமாம்.

இவர், தம்குறவர்குடிக்குத் தலைவனாய்ச் சிறந்த ஏறை என்பானைத் 'தமர்தற் றப்பின்' என்னும் புறப்பாட்டாற் (157) புகழ்ந்து பாடினர். அப்பாட்டால், அவ் வேறைக்கோன், தன்னிற் சிறந்தோர் தனக்குத் தவறிழைப்பின் அதனைப் பொறுத்தலும், பிறருடைய வறுமைக்குத் தான் நாணுதலும், படையிடத்துப் பிறராற் பழிக்கப்படாத வலியுடையனாதலும், அரசுடை அவையத்து ஓங்கி நடத்தலும் இயல்பாகவே பொருந்தினோன் என்பதும், குறவர்தலைவன் என்பதும், காந்தட்பூவாற் செய்த கண்ணியை யுடைய னென்பதும், பெரிய மலைநாடுடைய னென்பதும் அறியப்படுவன. 'வந்து வினை முடிந்தனன்' என்னும் அகப்பாட்டான், ஏறை என்பான், சேரன்படைத்தலைவருள் ஒருவனாக அறியப்படுதலால், இவனது பெருங்குன்றநாடு சேரநாட்டின் கண்ணதாகுமெனக் கருதப்படுவது. இந் நல்லிசைப் புலமை மெல்லியலாரும் அச் சேரநாட்டாரே யாவர்.

----

8. பேய்மகள் இளவெயினி

இவர் நல்லிசைப்புலமைச் செல்வவேந்தனாய்ச் சிறந்த பாலைபாடிய பெருங்கடுங்கோ என்னுஞ் சேரமானைப் பாடியவர். இவர் பாடியது, 'அரிமயிர்த் திரண்முன்கை' என்னும் புறப்பாட்டாகும் (11). இப்பாட்டின் கருத்து, 'வஞ்சிவேந்தனாகிய சேரன் வலியோடெதிர்ந்தவருடைய புறக்கொடையைப் பெற்றான்; அப் புறக்கொடையைப் பெற்ற வலிய வேந்தனது வீரத்தைப் பாடிய பாடினியும் பொன்னாற் செய்த இழைபல பெற்றாள்; அவளுக்கேற்பப் பாடவல்ல பாணனும் வெள்ளிநாராற் றொடுத்த பொற்றாமரைப்பூப் பெற்றான்' என்பதனால், யானொன்றும் பெறுகின்றிலேன் என்று அவ்வரசன்பாற் பரிசில் வேண்டியதாகும். இதுவே புறப்பாட்டுரையாசிரியர் கருத்தாகும்.

இனி, அவ்வுரையாளர் பக்ஷாந்தரங் கூறுவாராய், 'இவள் பேயாயிருக்கக் கட்புலனாயதோர் வடிவு கொண்டு பாடினாளொருத்தி யெனவும், இக் களத்து வந்தோர் யாவரும் பரிசில் பெற்றார்கள்; ஈண்டு நின்னோ டெதிர்த்துப் பட்டோரில்லாமையால் எனக்குணவாகிய தசை பெற்றிலேன் எனத் தான் பேய்மகளானமை தோன்றப் பரிசில் கடாயினாளெனவும் கூறுவாரு முளர்' என வுரைத்தார். இதனால் அப் பக்ஷாந்தரமுடையார் கருத்து, பெண்வடிவிற் றோன்றியதோர் பேய், தனக்குணவாகிய மக்கட்டசை வேண்டிச் சேரன் பாலைபாடிய பெருங்கடுங்கோவைப் போர்க்களத்தே பாடியதாகும் என்பதாம்.

போர்க்களத்தே ஒரு வீரனைப் பேய் தனக்குணவாகிய மக்கட்டசை வேண்டியதாக ஒரு புலவர் புனைந்து பாடிய தென்பதல்லது, அது வேண்டி அப்பேயே உருக்கொடு தோன்றிப் பாடிற்றென்றல்்றல் சிறிது மியையாதாகும். அவர், இதுபாடினார் பேய்மகள் என்பது பற்றியும் பேயெல்லாம் மக்கட்டசையுணவின என்பது பற்றியும் அவ்வாறு கருதினா ராவர். இவர், பெயராற் பேய்மகளெனப்-படுதலோடு இச் சிறந்த பாடலால் விழுமிய பேரறிவுடையராகவும் கருதப்படுகின்றாராதலின், இப் பெருந்தகையாளரது நல்லறிவினைக்கெடுத்துப் பேய்மகள் என்னும் பெயரேகொண்டு பேயென்றலும், அது தசை வேண்டிற்றென்றலும் பொருந்தாவாம். அன்றியும், இப்பெயர்க்கண் பேய்மகள் என்பது இளவெயினி யென்பதனோடு இணைந்துநின்ற தல்லது அதுவே தனித்திவர்க்குப் பெயராகாமையுங் காண்க. அப் புறப்பாட்டின்கண்ணும்,

    'அரசன் புறக்கொடை பெற்றான்;
    பாடினி இழை பெற்றாள்;
    பாணன் பூப்பெற்றான்'

எனப் பிறர் பெற்றனவே கூறியவாற்றாற்றாம் ஒன்றும் பெறாமையே குறித்தாராவர். 'கொடுப்பவர், தாமறிவர் தங்கொடையின் சீர்' என்பவாகலின், தாம் வேண்டுவது இஃதென்று கூறினாரில்லை யென வுணர்க. மற்று இத்தகைப் பெருநாகரிகரைப் பேய்மகள் என்றது என்னையெனில், தேவராட்டி, அணங்காட்டி என்றாற்போலத், தம் மந்திரவலியாற் பேயைத் தமக்குரியதாகப் பெற்ற மகள் இவர் ஆவர்; அது பற்றிக் கூறப்பட்டதா மென்க. இதனால் இவர் பேயையும் ஏவிக் காரியங்கொள்ள வல்லர் என்பதறிக.
---

9. காவற் பெண்டு

இவராற் பாடப்பட்டது, 'சிற்றி னற்றூண்' என்னும் புறப்பாட்டு (86). இதனை உற்றுநோக்கின், இவர் ஒரு மறமகளாவார் என்பதும், புலியொத்த போர்வீரனொருவனை மகனாகவுடையர் என்பதும், அத்தகை வீரமகனைப் போர்க்களத்தே போக்கியபின் அவனைப் பெற்ற தம்வயிற்றினைப் புலிகிடந்துபோன கன்முழையாகக் கருதினாரென்பதும் புலனாகும்.

இனி, காவற்பெண்டு என்பது செவிலித்தாயைக் குறிக்குமென்பது, 'காவற் பெண்டும் அடித்தோழியும்' என்ற சிலப்பதிகாரத்து உரைப்பாட்டு மடைத்தொடரால் அறியப்படுதலின், இவர், தலைவனொருவனை வளர்த்த செவிலிபோலும் என்று கருதலாகும். இவ்வாறின்றி, அரசனது மெய்காவல், மனைகாவல், ஊர்காவல், பாடிகாவல் இவற்றி லொன்றிற்குரிய காவற்குடிக்கண்ணே பிறந்த பெண்டு ஆவளெனினும் அமையும்.

---

10. குறமகள் குறியெயினி

இவரும் குறவர்குடியின ராவர். இவர் குறி சொல்லும் வழக்குடையராதலிற் குறியெயினி என்று பெயர் பெற்றனர். இக் குறக்குடிமகளிரே கட்டுவித்தியாய்த் தோன்றிக் குறியிறுத்தல் பண்டைவழக்கு. முற்காலத்து இக்குடிச்சிறாரும் குறியிறுக்க வல்லரா யிருந்தன ரென்ப. இதனைக் 'குறமக ளீன்ற குறியிறைப் புதல்வரொடு' என்னுங் குறுந்தொகையானும் (394) உணர்க. இவர் பாடியது,

    'நின்குறிப் பெவனோ தோழி யென்குறிப்
    பென்னொடு நிலையா தாயினு மென்று
    நெஞ்சுவடுப் படுத்துக் கெடவறி யாதே
    சேணுறத் தோன்றுங் குன்றத்துக் கவாஅற்
    பெயலுழந் துலறிய கணிப்பொறிக் குடுமிப்
    பீலி மஞ்ஞை யாலுஞ் சோலை
    யங்க ணறைய வகல்வாய்ப் பைஞ்சுனை
    யுண்க ணொப்பி னீல மடைச்சி
    நீரலைக் கலைஇய கண்ணிச்
    சார னாடனோ டாடிய நாளே.'

என்னும் நற்றிணைப் பாட்டாகும் (357).

----

11. ஒக்கூர்மாசாத்தியார்

ஒக்கூர்மாசாத்தனார் (புறம்-248. அகம்-14) என்னும் பெயரில் ஓராண்பாற் புலவருளராதலாலும், சாத்தியென்னும் பெண்பாற்பெயர் புனைதலாலும் இவர் பெண்பாலாராகத் தெளியப்படுகின்றார். புறநானூற்றில் 279-ஆம்பாட்டும், குறுந்தொகையில் 126, 139, 186, 220, 275-ஆம் பாடல்களும், அகநானூற்றில் 324, 384-ஆம் பாடல்களும் இவர்பாடியனவாம்.

இவற்றுட் பெரும்பாலன், முல்லைத்திணைபற்றியே வருவன். பாண்டிநாட்டுத் திருக்கோட்டியூர்ப் புறத்தும், திருப்பெருந்துறைப்புறத்தும் இரண்டூர்கள் ஒக்கூர் என்னும் பெயரான் வழங்குவன. இவர் ஒக்கூர்மாசாத்தனார் உடன்பிறந்தவ்ரோ என ஊகிக்கப்படுகின்றார். இவருடைய பாடல்களில்,

    'அருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை
    வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணிக்
    குறுமுகை யவிழ்ந்த நறுமலர்ப் புறவின்.' (குறுந்-220)

    'தளிரியற் கிள்ளை யினிதினி னெடுத்த
    வளராப் பிள்ளைத் தூவி யன்ன
    வுளர்பெயல்வளர்த்த பைம்பயிர்ப்புறவின்.' (அகம்-324)

    'நேமி, தண்ணில மருங்கிற் போழ்ந்த வழியு்ணிரைசெல்
    பாம்பின் விரைபுநீர் முடுகச்செல்லு நெடுந்தகை தேரே.' (அகம்)

. என வருவன பெரிதும் பாராட்டத்தக்கனவாம்.

---

12.குன்றியாள்

குன்றியனார், குன்றியன் (குறுந்தொகை 51) என ஆண்பாற்கண் வருதல்போலக் குன்றியாள் எனப் பெண்பாற்கண் வந்தது. இவர் பாடியது குறுந்தொகையில் 50-ஆம் பாட்டாகும். இவர் குன்றியனார் உடன்பிறந்தவரோ என ஊகிக்கப்படுகின்றார்.

---

13. வருமுலையாரித்தி

இவர், பெயர்க்கண் உள்ள வருமுலை யென்னும் அடையாற் பெண்பாலராகக் கருதப்படுகின்றார். இவர்பாடியது குறுந்தொகையில் 176-ஆம் பாட்டாகும். அஃதாவது,

    'ஒருநாள் வாரல னிருநாள் வாரலன்
    பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென்
    னன்னர் நெஞ்ச நெகிழ்ந்த பின்றை
    வரைமுதிர் தேனிற் போகி யோனே
    யாசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
    வேறுபுல னன்னாட்டுப் பெய்த
    வேறுடை மழையிற் கலுழுமென் னெஞ்சே.'

என்பது. இதன்கண், வரைமுதிர் தேனிற் போகியோனே' என்பது பாராட்டத்தக்கது.

---

14. நெடும்பல்லியத்தை

நெடும்பல்லியத்தனார் (புறம்-64) என ஆண்பாற்கண் வருதலால் இப்பெயர் பெண்பாற்கண் வந்ததாம். இவர் பாடியன, குறுந்தொகையில் 178, 203-ஆம் பாடல்களாகும். இவர் நெடும்பல்லியத்தனார் உடன்பிறந்தவரோ என ஊகிக்கப்படுகின்றார்.

---

15. கழார்க்கீரனெயிற்றியார்

கழார்க்கீரனெயிற்றினார் (குறுந்தொகை-330) என ஆண்பாற்கண் வருதலால், இப்பெயர் பெண்பாற்கண் வந்ததாகும். குறுந்தொகையில் 35, 261-ஆம் பாடல்களும், நற்றிணையில் 281-ஆம் பாட்டும், அகநானூற்றில் 163, 217, 235, 294-ஆம் பாடல்களும் இவர் பாடியன. இவரது நற்றிணைப்பாட்டில் சோழர் கழாரூரும், அதன்கட் புலாற்சோற்றாற் பலியீதலும் கூறப்பட்டுள்ளன. இவர் பாடல்களிலுள்ள,

    #'சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன
    கனைத்த கரும்பின் கூம்புபொதி. (குறுந்-35.)

    [# 'சொல்லறுஞ் சூற்பசும் பாம்பின் தோற்றம்போன், மெல்லவே கருவிருந் தீன்று' என்ற சிந்தாமணியார்க்கும் அக்கருத்து இதனடியாற் பிறந்ததாகும்.]

    'களிறுயிர்த் தன்ன கண்ணழி துவலை
    முளரி கரியு முன்பனிப் பானாட்
    குன்றுநெகிழ்ப் பன்ன குளிர்கொள் வாடை
    யெனக்கே வந்தனை போறி.' (அகம்-163.)

    'எயிறுதிப் பிறப்பத் திருகி
    நடுங்குதும் பிரியின்யாங் கடும்பனியுழந்தே.' (அகம்-217)

என்னும் அடிகள் பெரிதும் பாராட்டத்தக்கன. இவர் கழார்க்கீர னெயிற்றியனார் உடன்பிறந்தவரோ என ஊகிக்கப்படுகின்றார்.

---

16.அள்ளூர் நன்முல்லையார்

இவர் பெயர்க்கண் உள்ள முல்லையென்னும் சொல்லானும், குறுந்தொகையினும் அகநானூற்றினும் பெரும்பாலும் இவர்பெயர் வருமிடங்களிற் பென்பாற்புலவரும் உடன்கூறப்படுதலாலும் இவர் பெண்பாலாராகக் கருதப்படுகின்றார். முல்லை கற்பாயின் அதுபெண்பாலையே குறிக்கும். பூவாயின், அப் பூப்பெயரெல்லாம் பெரும்பான்மையும் மகளிர்க்கே வருவனவாம் என்க.

குறுந்தொகையில் இவர்பெயர் பெரும்பாலும் ஆதிமந்தியார், ஒக்கூர்மாசாத்தியார், ஔவையார், நெடும்பல்லியத்தை என்னும் பெயர்களை அடுத்து வந்தது. அகநானூற்றில் இவர்பெயர் வெள்ளிவீதியாரை அடுத்து வந்தது. குறுந்தொகையில் 32, 67, 68, 93, 96, 140, 157, 202, 237–ஆம் பாடல்களும், அகநானூற்றில் 46–ஆம் பாட்டும் இவர் பாடியன. இவர் பாடிய அகப்பாட்டின்கண்,

    'ஒளிறுவாட் டானைக் கொற்கைச் செழியன்,
    பிண்ட நெல்லி னள்ளூ ரன்னவென்'

என வருதலால் இவருடைய அள்ளூர் பாண்டிநாட்டதாகும். அகநானூற்றுரைகாரர், ஈண்டு, அள்ளுர் என்பதற்கு அள்ளியூர் என உரை கூறுவர். தொல்லுரைகாரர் ['குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி யறிதல்'(தொல்-சொல்-எச், 57) என்பதனுரையிற் காண்க.] பல்லோரானும் இடைக்குறைக்கு எடுத்துக்காட்டப்பட்ட 'வேதின வெரிநி னோதிமுதி போத்து' என்பது, இவர்பாடிய குறுந்தொகைப்பாட்டி னோரடியாவது. ஆசிரியம் ஓகாரத்தான் இற்றமைக்கு உரைகாரர் பலரும் எடுத்துக் காட்டுகின்ற 'சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ' என்பதும் இவர் பாடிய அகப்பாட்டின் ஈற்றடியேயாம்.

---

17. நக்கண்ணையார்

நக்கண்ணனார் (அகம்,252) என ஆண்பாற்கண் வருதல்போல நக்கண்ணையார் எனப் பெண்பாற்கண் வந்ததாம். இவர் பாடியன நற்றிணையில் 16, 18 ஆம் பாடல்களாம்.

---

18. நன்னாகையார்

நன்னாகனார் (புறம்.381) என ஆண்பாற்கண் வருதல் போல நன்னாகையார் எனப் பெண்பால்பற்றி வந்ததாம். குறுந்தொகையில் 118,325 ஆம் பாடல்கள் இவர் பாடியனவாம்.

---

19. கச்சிப்பேட்டு நன்னாகையார்

மேலதுபற்றி நோக்கின், இவரும் பெண்பாலராகக் கருதப்படுவர். இவர் பாடியன குறுந்தொகையில் 30, 172, 180, 192, 197, 287 ஆம் பாடல்களாம்.

---

20. வெண்பூதி

வெண்பூதன் (குறுந்தொகை 83) என ஆண்பாற்கண் வருதலால் இப்பெயர் பெண்பால் பற்றியதாகும். குறுந்தொகையில் 97, 174 – ஆம் பாடல்கள் இவர்பாடியன.

---

21. மாறோகத்து நப்பசலையார்

பிரிவுகாலத்து மகளிர்க்கெய்தும் பசலை யென்னும் நிறப்பெயரால் இவர் சிறந்து விளங்கியதாற் பெண்பாலராகக் கருதப்படுகின்றார். இவர் புறநானூற்றிற் சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனையும், மலையமான் திருமுடிக்காரியையும், அவன்மகன் மலையமான் சோழியவேனாதி திருக்கண்ணனையும் பாடியுள்ளார். இவர், புலவர்பெருமானாகக் கபிலரையே பலரினும் மீப்பட மதித்தவராவர் (129). இவரது செய்யுட்டிறம் பெரிதும் பாராட்டத் தக்கது. நற்றிணையில் 264-ஆம் பாட்டும் இவருடையதே. அதற்கண்,

    'புணரிற் புணருமா ரெழிலே பிரியின்
    மணிமிடை பொன்னின் மாமை சாயவெ
    னணிநலஞ் சிதைக்குமார் பசலை யதனா

    லசுணங் கொல்பவர் கைபோ னன்று
    மின்பமுந் துன்பமு முடைத்தே
    தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பே.'

என்பதனாற், பசலையினியல்பு நன்குரைத்தவாற்றால் நப்பசலையார் எனப்பட்டாரோ என ஊகிக்கப்படுகின்றார். இவ்வாறு பசலையையே பெயராகக்கொண்டார் சிலருளர்; அவரும் பெண்பாலராவரெனக் கருதப்படுகின்றார்.

---

22. போந்தைப்பசலையார்

இவர் பாடியது 110-ஆம் அகப்பாட்டாகும்.

---

23. குமிழிஞாழார் நப்பசலையார்

இவர் பாடியது 160-ஆம் அகப்பாட்டாகும்.

---

24. காமக்கணிப் பசலையார்

இவர் பாடியது 243-ஆம் நற்றிணைப்பாட்டாகும்.

---

25. பூங்கண்ணுத்திரையார்

இவரது பெயரானும், குறுந்தொகையினும் புறநானூற்றினும் முறையே கச்சிப்பேட்டு நன்னாகையாரையும், காக்கை பாடினியார் நச்செள்ளையாரையும் அடுத்து வருதலானும், இவர் பெண்பாலாகக் கருதப்படுகின்றார். புறநானூற்றில் 'மீனுண் கொக்கின்' என்னும் புறப்பாட்டும், குறுந்தொகையில் 48, 171 ஆம் பாடல்களும் இவர் பாடியன. இவ்வாறே,

---

26. நல்வெள்ளியார் (மதுரை)

- நற்றிணை-7, 47. குறுந்தொகை. 365.
---

27. 'மதுவோலைக் கடையத்தார' {மதுரை ஓலைக்கடையத்தார்}

நல்வெள்ளை: நற்றிணை-369.

---

28. பொன்மணியார்

குறுந்தொகை-391.
--

29. மாறபித்தியார்

புறம்-256, 252.
--

30. முள்ளியூர்ப்பூதியார்

அகம்-173.
---

31. வெண்மணிப்பூதியார்

குறுந்தொகை-299.

என்பாரும் பெண்பாற்புலவ ராவர் என ஊகிக்கப்படுகின்றார்.

இனி, நல்லிசைப்புலவருட் பலர், தாம்பாடியருளிய இனிய செய்யுட்களில் ஆங்காங்கு வழங்கிய அரிய சொற்றொடர்பற்றிப் பெயர்சிறந்துளார். அவர் கல்பொரு சிறுநுரையார் (குறுந்தொகை-290), தேய்புரி பழங்கயிற்றினார் (நற்றிணை-184), வில்லக விரலினார் (குறுந்தொகை-370) முதலாயோர் பலராவர். அப் பலருள்ளும் பெண்பாற் புலவர் எத்துணையரோ உளராவர் என அறிக. இனி, சைவ வைணவ சமயங்களில் பேரடியார்களாய்ப் பிற்காலத்து விளங்கிய நல்லிசைப்புலமை மெல்லியலார்கள் காரைக்காற் பேயம்மையாரும், வில்லிப்புத்தூர்க் கோதையாரும் ஆவர். இவர்கள் திப்பிய
வரலாறுகளைப் பெரிய புராணம், குருபரம்பரை முதலிய நூல்களால் தமிழ்மக்கள் நன்கறிவர்.

இத்துணையுங் கூறியவாற்றான், வான்றோய் நல்லிசைச் சான்றோர் குழீஇய, துங்கச் செந்தமிழ்ச் சங்ககாலத்துத், தீதற விளங்கிய மூதுணர்வுடைய பெண்பாற் பெருமக்களின் கல்விப்பரப்பு ஒருவாறு உணரப்படும்.

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.