|
||||||||
நான்காம் திருமுறை-27 |
||||||||
4.027.திருவதிகைவீரட்டானம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர்.
தேவியார் - திருவதிகைநாயகி.
269 மடக்கினார் புலியின் றோலை
மாமணி நாகங் கச்சா
முடக்கினார் முகிழ்வெண் டிங்கள்
மொய்சடைக் கற்றை தன்மேல்
தொடக்கினார் தொண்டைச் செவ்வாய்த்
துடியிடைப் பரவை யல்குல்
அடக்கினார் கெடிலவேலி
யதிகை வீரட்ட னாரே.
4.027.1
கெடிலநதியை ஒருபுறம் எல்லையாக உடைய அதிகை வீரட்டனார் புலியின்தோலை உடையாக உடம்பைச்சுற்றி இடையில் உடுத்துப் பெரிய முடிமணியை உடைய பாம்பினை அதன் மீது கச்சாக இறுக்கிக் கட்டிப் பிறையைச் செறிந்தசடை மீது செருகித் தொண்டைக்கனி போன்ற சிவந்தவாயையும் துடி போன்ற இடையையும் கடல் போன்ற அல்குலையும் உடைய பார்வதியைத் தம் உடம்பின் ஒருபாகமாக அடக்கியவர் ஆவர்.
270 சூடினார் கங்கை யாளைச்
சூடிய துழனி கேட்டங்
கூடினா ணங்கை யாளு
மூடலை யொழிக்க வேண்டிப்
பாடினார் சாம வேதம்
பாடிய பாணி யாலே
ஆடினார் கெடில வேலி
யதிகைவீ ரட்ட னாரே.
4.027.2
கங்கையாளை எம் பெருமான் சடையில் சூடினாராக அவ்வோசை கேட்டுப்பார்வதி ஊடினாளாக அவ்வூடலைப் போக்க வேண்டிக் கெடிலவேலி அதிகை வீரட்டனாராகிய பெருமானார் சாமவேதம் பாடியவராய் அப்பாடலின் தாளத்திற்கு ஏற்ப ஆடியவராவர்.
271 கொம்பினார் குழைத்த வேனற்
கோமகன் கோல நீர்மை
நம்பினார் காண லாகா
வகையதோர் நடலை செய்தார்
வெம்பினார் மதில்கண் மூன்றும்
வில்லிடை யெரித்து வீழ்த்த
அம்பினார் கெடில வேலி
யதிகைவீ ரட்ட னாரே.
4.027.3
மரக்கிளைகள் தளிர்த்த வேனிற் காலத்திற்கு உரிய அரசனாகியமன் மதனை விடுத்த மால், அயன், இந்திரன் முதலோர் அவன் உருவினை மீண்டும் காண முடியாத வகையில் அவன் உடலைத் தீவிழித்து எரித்து வருத்தினார். அச்செயல் செய்த கெடில வேலி அதிகை வீரட்டனார் பகைவர்களுடைய மும்மதில்களையும் வில்லிடைக்கோத்து எரித்து அழித்த அம்பினை உடையவராவர்.
272 மறிபடக் கிடந்த கையர்
வளரிள மங்கை பாகம்
செறிபடக் கிடந்த செக்கர்ச்
செழுமதிக் கொழுந்து சூடிப்
பொறிபடக் கிடந்த நாகம்
புகையுமிழ்ந் தழல வீக்கிக்
கிறிபட நடப்பர் போலுங்
கெடிலவீ ரட்ட னாரே.
4.027.4
கெடில வீரட்டனார் கையில் மான் குட்டியை ஏந்தி, அழகுவளரும் இளையளாகிய பார்வதி பாகராய்ச் செறிந்த செஞ்சடையில் பிறையைச் சூடி, புள்ளிகளை உடையபாம்பு புகையைக் கக்கி வெகுளுமாறு அதனை இடையில்இறுகக்கட்டி, அடியார்களுடைய உள்ளத்திலே பொய்உணர்வு அழியும்படியாக உலவி வருகிறார்.
273 நரிவரால் கவ்வச் சென்று
நற்றசை யிழந்த தொத்த
தெரிவரான் மால்கொள் சிந்தை
தீப்பதோர் சிந்தை செய்வார்
வரிவரா லுகளுந் தெண்ணீர்க்
கழனிசூழ் பழன வேலி
அரிவரால் வயல்கள் சூழ்ந்த
வதிகைவீ ரட்டனாரே
4.027.5
கோடுகளை உடைய வரால் மீன்கள் தாவும் தௌந்த நீரை உடைய வயல்கள் சூழ்ந்த மருத நிலத்தை நாற்புறமும் எல்லையாகக் கொண்டு நெல்லரியும் உழவரால் சூழப்பட்ட வயல்களை உடைத்தாய அதிகையின் வீரட்டனார், நரி வரால் மீனைக் கவரச் சென்று தன் வாயில் முன்பு பற்றி இருந்த தசைத் துண்டத்தையும் இழந்தது போல், கிட்டாத ஒன்றை நினைத்துக் கிட்டியதனையும் இழக்கும் இயல்பினதாகிய மனித வாழ்க்கையை ஆராயும் சான்றோர்களுடைய உள்ளத்தில் ஏற்படும் மயக்கத்தை நீக்கும் உபாயத்தைத் திருவுளம் கொண்டு அருளுவார்.
274 புள்ளலைத் துண்ட வோட்டி
லுண்டுபோய்ப் பலாசங் கொம்பின்
சுள்ளலைச் சுடலை வெண்ணீ
றணிந்தவர் மணிவெள் ளேற்றுத்
துள்ளலைப் பாகன் றன்னைத்
தொடர்ந்திங்கே கிடக்கின் றேனை
அள்ளலைக் கடப்பித் தாளு
மதிகைவீ ரட்ட னாரே.
4.027.6
புலால்நாற்றத்தால் நெருங்கிவரும் பருந்துகளை விரட்டி மண்டையோட்டிற் பிச்சை எடுத்து உண்டு சென்று, வெப்பத்தாற் பலாசமரங்களின் சிறுகிளைகள் பட்டுப் போகும் சுடுகாட்டின் வெள்ளிய சாம்பலைப் பூசியவராய், அழகிய வெள்ளிய காளைமீது துள்ளி ஏறி அதனைச் செலுத்துபவராய தம்மை, இவ்வுலகிலே பல காலமாகத் தொடர்ந்து பற்றிக் கிடக்கும் அடியேனைப் பிறவிப் பிணியாகிய சேற்றைத் தாண்டச்செய்து அடிமை கொள்பவராய் உள்ளவர் அதிகை வீரட்டனாரே.
275 நீறிட்ட நுதலர் வேலை
நீலஞ்சேர் கண்டர் மாதர்
கூறிட்ட மெய்ய ராகிக்
கூறினா ராறு நான்கும்
கீறிட்ட திங்கள்சூடிக்
கிளர்தரு சடையி னுள்ளால்
ஆறிட்டு முடிப்பர் போலு
மதிகைவீ ரட்ட னாரே.
4.027.7
அதிகை வீரட்டனார் நெற்றியில் நீறுபூசி, நீல கண்டராய், பார்வதிபாகராய், நான்கு வேதங்களும் ஆறு சாத்திரங்களும் உரைப்பவராய், பிறையைச்சூடி, மேல்நோக்கி உயரும் சடையிலே கங்கையை அடக்கிச் சடையை முடிப்பவர் ஆவார்.
276 காணிலார் கருத்தில் வாரார்
திருத்தலார் பொருத்த லாகார்
ஏணிலா ரிறப்பு மில்லார்
பிறப்பிலார் துறக்க லாகார்
நாணிலா ரைவ ரோடு
மிட்டெனை விரவி வைத்தார்
ஆணலார் பெண்ணு மல்லா
ரதிகைவீ ரட்ட னாரே.
4.027.8
ஆணும் பெண்ணும் அல்லாதாராகிய அதிகை வீரட்டனார் பிறர்காட்சிக்கு அரியராய், கருத்திற்கும் எட்டாதவராய்; திருத்துவதற்கு இயலாதவராய், தம்மோடு பொருந்தச் செய்வதற்கும் இயலாதவராய், இந்நிலை என்று குறிப்பிடத்தக்க எந்த நிலையும் இல்லாதவராய், இறப்பும் பிறப்பும் அற்றவராய், இவர் நமக்கு உற்றவர் அல்லர் என்று துறக்க முடியாதவராய், உலகியலுக்கு மாறுபட்டதம் நிலைகளைக் குறித்துச் சிறிதும் நாணுதல் இல்லாதவராய், ஐம்பொறிகளோடு கலந்து தடுமாறுமாறு அடியேனை இவ்வுலகில்தங்க வைத்துள்ளார்.
277 தீர்த்தமா மலையை நோக்கிச்
செருவலி யரக்கன் சென்று
பேர்த்தலும் பேதை யஞ்சப்
பெருவிர லதனை யூன்றிச்
சீர்த்தமா முடிகள் பத்துஞ்
சிதறுவித் தவனை யன்று
ஆர்த்தவா யலற வைத்தா
ரதிகைவீ ரட்ட னாரே.
4.027.9
அதிகை வீரட்டனார், தூயதான கயிலைமலையை நோக்கி வந்து போரிடும் வலிமையைஉடைய இராவணன் அதனைப் பெயர்த்த அளவில்பார்வதி அஞ்சத் தம் கால்விரலை அழுத்தி ஊன்றிச்சிறப்புடைய அவனுடைய தலைகள் பத்தும் சிதறச் செய்து,ஒரு கணத்தில், மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தஅவன் வாய்கள் துயரத்தால் கதறுமாறு செய்தவராவர்.
திருச்சிற்றம்பலம்
4.027.திருவதிகைவீரட்டானம் |
||||||||
by Swathi on 25 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|