|
||||||||
நான்காம் திருமுறை-29 |
||||||||
4.029.திருச்செம்பொன்பள்ளி
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர்.
தேவியார் - திருவதிகைநாயகி.
284 ஊனினுள் ளுயிரை வாட்டி
உணர்வினார்க்கௌய ராகி
வானினுள் வான வர்க்கும்
அறியலா காதவஞ்சர்
நானெனிற் றானே யென்னும்
ஞானத்தார்பத்தர் நெஞ்சுள்
தேனுமின் னமுது மானார்
திருச்செம்பொன்பள்ளி யாரே.
4.029.1
திருச்செம்பொன்பள்ளிஎம்பெருமான் இவ்வுடம்பினுள் உள்ள உயிரைத் தவம் விரதம் முதலியவற்றால் வாட்டித் தூய்மையுடையதாக்கி மெய்யுணர்வு பெற்ற பெரியவர்களுக்கு எளியராய், உயர்ந்த உலகிலுள்ள தேவர்களும் அறியமுடியாத கள்ளத்தை உடையவராய், சிவபோதத்தினராய் இருக்கும் சிவஞானிகளுக்கு அமுதமும், சிவனடியார்களின் நெஞ்சில் தேனும்போல இனிப்பவராய் உள்ளார்.
285 நொய்யவர் விழுமி யாரு
நூலினுண் ணெறியைக் காட்டும்
மெய்யவர் பொய்யு மில்லார்
உடலெனு மிடிஞ்சி றன்னில்
நெய்யமர் திரியு மாகி
நெஞ்சத்துள் விளக்கு மாகிச்
செய்யவர் கரிய கண்டர்
திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.029.2
நீலகண்டராய திருச்செம்பொன்பள்ளியார் ஞானவடிவினர் ஆதலின் நொய்யராய், சீர்மை உடையவராய், வேதநெறியைக் காட்டும் உண்மை வடிவினராய், பொய்யிலியாய், உடல் என்னும் ஓட்டாஞ் சில்லியிலே நெய்யில் தோய்த்த திரியாகவும் நெஞ்சில் ஒளி தருகின்ற விளக்காகவும் உள்ள செந்நிறத்தவராவர்.
286 வெள்ளியர் கரியர் செய்யர்
விண்ணவ ரவர்கள் நெஞ்சுள்
ஒள்ளிய ரூழி யூழி
யுலகம தேத்த நின்ற
பள்ளியர் நெஞ்சத் துள்ளார்
பஞ்சமம் பாடி யாடும்
தௌளியார் கள்ளந் தீர்ப்பார்
திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.029.3
திருச்செம்பொன் பள்ளியார் வெண்மை, செம்மை, கருமை என்ற நிறத்தவராய், தேவர்கள் உள்ளத்திலே ஒளி தருபவராய், ஊழிதோறும் உலகங்கள் துதிக்கும் படியான பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலுடைய நெஞ்சத்தில் உள்ளவராய், பஞ்சமம் என்ற பண்ணினைப் பாடி ஆடும் ஞானிகளுடைய உள்ளிருளைப் போக்குபவராய் உள்ளார்.
287 தந்தையுந் தாயு மாகித்
தானவன் ஞான மூர்த்தி
முந்திய தேவர் கூடி
முறைமுறை யிருக்குச் சொல்லி
எந்தைநீ சரண மென்றங்
கிமையவர் பரவி யேத்தச்
சிந்தையுட் சிவம தானார்
திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.029.4
திருச்செம்பபொன் பள்ளியார் தந்தையாராய்த் தாயாராய், எல்லோருக்கும் கொடைவழங்குபவராய், ஞானவடிவினராய், முற்பட்ட தேவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து முறைப்படி வேதங்களை ஓதி 'எங்கள் தந்தையே! நீயே அடியேங்களுக்கு அடைக் கலம் நல்குவை' என்று முன் நின்று வழிபட்டுத்துதிக்க, அவர்கள் உள்ளத்துள்ளே மங்கல மூர்த்தியாக இருப்பவராவர்.
288 ஆறுடைச் சடையார் போலும்
அன்பருக் கன்பர் போலும்
கூறுடை மெய்யர் போலும்
கோளர வரையர் போலும்
நீறுடை யழகர் போலும்
நெய்தலே கமழு நீர்மைச்
சேறுடைக் கமல வேலித்
திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.029.5
நெய்தல் பூக்கள் மணம் கமழும் நீர்வளம் உடையதாய்ச் சேற்றிலே தாமரை பூக்கும் வயல்களை நாற்புறமும் எல்லையாக உடைய திருச்செம்பொன்பள்ளியார் கங்கை சூடியசடையராய்த் தம் அன்பர்களிடத்துத் தாமும் அன்பு செய்பவராய், பார்வதிபாகராய், கொடிய பாம்பினை இறுகக் கட்டிய இடையினராய்த் திரு நீறணிந்த அழகருமாவார்.
289 ஞாலமு மறிய வேண்டில்
நன்றென வாழ லுற்றீர்
காலமுங் கழிய லான
கள்ளத்தை யொழிய கில்லீர்
கோலமும் வேண்டா வார்வச்
செற்றங்கள் குரோத நீக்கில்
சீலமுந் நோன்பு மாவார்
திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.029.6
மேம்பட்டது என்று சொல்லி உலகியலில் திளைத்து வாழும் உலகத்தவராகிய நீங்கள் வீணாகக் கழிகின்ற உங்கள் வஞ்சக வாழ்க்கையை விடாது மேற்கொண்டுள்ளீர். நீங்கள் திருச்செம்பொன் பள்ளியாரை அறியவிரும்புவீராயின், உங்கள் போலி அடியவர் வேடத்தையும் காமக் குரோத கோபாதிகளையும் நீங்கள் போக்கிவிட்டால் அவர் உங்களுக்கு ஒழுக்கமும் தவ விரதமுமாக இருந்து உதவுவார்.
290 புரிகாலே நேசஞ் செய்ய
விருந்தபுண் டரீகத் தாரும்
எரிகாலே மூன்று மாகி
யிமையவர் தொழநின் றாரும்
தெரிகாலே மூன்று சந்தி
தியானித்து வணங்க நின்று
திரிகாலங் கண்ட வெந்தை
திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.029.7
திருச்செம்பொன்பள்ளியார் விருப்பம் முற்பட்ட பொழுதே தம்மிடத்தே அன்பு செய்யும் அடியவர் இதயத் தாமரையில் இடம் கொண்டிருப்பவராய், தீ, காற்று, நிலம், நீர், ஆகாயம் என்ற ஐம்பூதங்களுமாகித் தேவர்கள் தொழுமாறு இருப்பவராய், காலை நண்பகல் அந்தி என்ற மூன்று வேளைகளிலும் ஆராயப்படும் திருவடிகளை நினைந்து அடியவர் யாவரும் வணங்க, முக்காலங்களிலும் நிலையாக இருப்பவர் ஆவர்.
291 காருடைக் கொன்றை மாலை
கதிர்மதியரவி னோடும்
நீருடைய சடையுள் வைத்த
நீதியார்நீதி யுள்ளார்
பாரொடு விண்ணு மண்ணும்
பதினெட்டுக் கணங்க ளேத்தச்
சீரொடு பாட லானார்
திருச்செம் பொன்பள்ளி யாரே.
4.029.8
திருச்செம்பொன்பள்ளியார்கார் காலத்தைத் தனக்குப் பூக்கும் காலமாக உடைய கொன்றைப்பூ மாலையை ஒளிவீசும் பிறை, பாம்பு எனும் இவற்றோடு கங்கை தங்கும் சடையில் வைத்தவராய், நீதியே வடிவானவராய்த் தாமும் அந்நீதியையே நடத்துபவராய், பாதலம், தேவருலகம், மண்ணுலகம் என்ற மூன்று உலகங்களும் பதினேட்டுத் தேவகணங்களும் தம்மைத் துதிக்க, சீரோடு கூடிய பாடல் வடிவாய் உள்ளவர்.
292 ஓவாத மறைவல் லானும்
ஓதநீர் வண்ணன் காணா
மூவாத பிறப்பி லாரும்
முனிகளா னார்க ளேத்தும்
பூவான மூன்று முந்நூற்
றறுபது மாகு மெந்தை
தேவாதி தேவ ரென்றுந்
திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.029.9
திருச்செம்பொன்பள்ளியார் என்றும் அழிதல் இல்லாத வேதத்தை ஓதிக்கொண்டிருக்கும் பிரமனும், கடல் நிறத்தவனாகிய திருமாலும் காணமுடியாதவராய், மூத்தலோ பிறத்தலோ இல்லாதவராய் 1080 மலர்களைக் கொண்டு முனிவர்கள் வழிபடும் எங்கள் தந்தையாராய், என்றும் தேவர்களுக்கு எல்லாம் தேவருமாய் உள்ளார்.
293 அங்கங்க ளாறும் நான்கும்
அந்தணர்க் கருளிச் செய்து
சங்கங்கள் பாட வாடுஞ்
சங்கரன் மலையெ டுத்தான்
அங்கங்க ளுதிர்ந்து சோர
வலறிட வடர்ந்து நின்றும்
செங்கண்வெள் ளேற தேறுந்
திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.029.10
சிவந்த கண்களை உடைய திருமாலாகிய வெண்ணிறக் காளையை இவரும் திருச்செம்பொன்பள்ளியார், கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய உடல் உறுப்புகள் உதிர்ந்து தளர அவன் வாய்விட்டு அலறுமறு வருத்தி நின்றும் (நின்றவராயினும்) நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் முனிவர்க்கு உபதேசித்துப் பூதகணங்கள் பாடக் கூத்தாடும் ஆனந்த வடிவினராவர்.
திருச்சிற்றம்பலம்
4.029.திருச்செம்பொன்பள்ளி |
||||||||
by Swathi on 25 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|