பேஸ்புக் சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்படும் இந்திய பிரபலங்களில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
இன்றைய இளைஞர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள், தொழில் அதிபர்கள் என அனைத்து தரப்பினரும், தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள, சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். இந்த வகையில் சமூக வலைதளங்களில் அதிகமாக பயன்படுத்தும் வலைதளமாக பேஸ்புக் இணையதளம் உள்ளது. இதில், தங்களுக்கு பிடித்தமான இடங்கள், மனம் கவர்ந்த தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் மிக முக்கிய நிகழ்வுகள் பற்றிய கருத்துக்களை, இந்த இணையதளத்தில் பதிவு செய்வது அதிகரித்துள்ளது.
நம் நாட்டில், பேஸ்புக் இணையதளத்தை பயன்படுத்துபவர்களில், "மந்த்லி ஆக்டிவ் யூசர்(Monthly Active User)' எனப்படும், ஒரு மாதத்திற்கான சராசரி பயன்பாட்டாளர்களின் கருத்துப் பதிவுகளில், அதிகம் பேசப்பட்டவர்களின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை விட, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி அதிகம் பேசப்பட்டவர்கள் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார். இந்த பட்டியலில், அதிகப்படியான, பேஸ்புக் பயன்பாட்டாளர்கள், மோடி பற்றி தகவல்கள் மற்றும் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இதை ஏராளமானோர், விரும்புவதாகவும், பலர் பின்பற்றுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
|