நீரும் நிழல தினிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) நீரும் நிழலதே இனிது - உயிர்க்கு இன்றியமையாத நீரும் நிழலின் கண்ணதே இனிதாவது, ஏனை வெயிலின் கண்ணது ஆகாது; புலவியும் வீழுநர்கண்ணே இனிது - அது போலக் கலவிக்கு இன்றியமையாத புலவியும் அன்புடையார்கண்ணே இனிதாவது, ஏனை அன்பிலார்கண் ஆகாது. (நிழற்கண் இருந்த நீர் குளிர்ச்சிமிக்குத் தாகம் தணித்தலின், இனிதாயிற்று. வீழுநர் - ஆற்றாமைக்கு நோதலும் கூடுதற்கண் வேட்கையும் உடையராவார். 'இவள் நம்மாட்டு அவ்விரண்டும் இன்மையின் இப்புலவி தானும் இன்னாதாகா நின்றது', என்பதாம்.)
மணக்குடவர் உரை:
ஊடல் செய்யின் இன்பம் உண்டாயினும், அதன் கண்ணும் ஒரு துன்பம் உண்டு: புணருங்கால் அது நீட்டிக்குங்கொல்லோ? நீட்டியாதோ? என்று ஐயுறுதலால்.
இது தலைமகள் ஆற்றாமை வாயிலாகப் புலக்கத் தலைமகன் அது கண்டு சொல்லியது.
தேவநேயப் பாவாணர் உரை:
நீரும் நிழலதே இனிது - உயிர்வாழ்க்கைக் கின்றியமையாத நீரும் நிழலடியுள்ளதே குளிர்ந்து இன்பந்தரும்; வெயிலிற் காய்ந்தது இன்பந்தராது; புலவியும் வீழுநர் கண்ணே இனிது - அதுபோலக் கலவியின்பத்தை மிகுக்கும் புலவியும் அன்புடையாரிடத்தே இன்பத்திற் கேதுவாகும்; அன்பிலாரிடத்தோ துன்பத்திற்கே யேதுவாகும்.
இது வெப்பநாடாதலின் முது வேனிற்கால நண்பகற் காட்டு வழிப்போக்கன் நீர் வேட்கை, நிலைமை நோக்கி 'நிழலதே இனிது ' என்றான். தழைத்தடர்ந்த தண்கா நிழலில் தங்கிய நீர் பனிநீர் போற் குளிர்ச்சிமிக்குத் தாகமுங் களைப்புந் தணித்தலின் இனிதாயிற்று, "காவோ டறக்குளத் தொட்டானும்" (திரிகடுகம் 70) என்றதை இத்தொடர்பில் நோக்குக. 'வீழுநர்' காதலரின் ஆற்றாமைக்கு நோதலும் கலவியின்கண் வேட்கையுமுடையவர். இவளுக்கு அவ்விரண்டுமின்மையின் இப்புலவி இன்னாதாயிற்று என்பதாம். ஏகாரம் ஈரிடத்தும் பிரிநிலை. இவற்றுள் முன்னது பிரித்துக் கூட்டப்பட்டது.
கலைஞர் உரை:
நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்;
அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக
இருக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.
Translation
Water is pleasant in the cooling shade;
So coolness for a time with those we love
Explanation
Like water in the shade, dislike is delicious only in those who love
Transliteration
Neerum Nizhaladhu Inidhe Pulaviyum
Veezhunar Kanne Inidhu
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்