|
|||||
சென்னையில் அமலானது தமிழக அரசின் ஆட்டோ கட்டணம் ! பயணிகள் மகிழ்ச்சி ! |
|||||
கடந்த மாதம் உச்ச நீதி மன்றம், நான்கு வாரத்திற்குள், ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்து, அறிக்கை தாக்கல் செய்யும் படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதனை அடுத்து, தமிழக அரசு, ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஆட்டோ கட்டணங்களை முறைபடுத்தி முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்துள்ளார். இதன் படி,
முதல், 1.8 கி.மீ., தூரத்திற்கான கட்டணம் 25 ரூபாய்;
ஒவ்வொரு கூடுதல் கி.மீ.,க்கும் 12 ரூபாய்.
இரவு, 11:00 மணி முதல் அதிகாலை, 5:00 மணி வரை கூடுதலாக, 50 சதவீதம் கட்டணம்.
காத்திருப்பு கட்டணம், ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் 3.50 ரூபாய் வீதம், ஒரு மணி நேரத்திற்கு 42 ரூபாய்.
திருத்தப்பட்ட கட்டண விகித அட்டையை வரும்செப்டம்பர் 15ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் சிறப்பு முகாம்களில், ஆட்டோ ஓட்டுனர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
மாற்றப்பட்ட கட்டணத்தை, ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய, அக்டோபர் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு ஆபத்து நேரும் பட்சத்தில், ஆட்டோ மீட்டருடன் பொருத்தப்பட்ட அபாய பட்டனை பயணிகள் அழுத்த வசதி செய்யப்படும். இதன் மூலம், பயணிகள் ஆபத்தில் இருப்பது, கட்டுப்பாட்டு அறைக்கு தெரிந்து, போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆட்டோக்களின் இயக்கத்தை போக்குவரத்து காவல் துறை தீவிரமாக கண்காணிக்கும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஓட்டுனர் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்.
ஆட்டோவில் பயணிப்போர் புகார் அளிக்க ஏதுவாக, பொதுவான புகார் எண் உருவாக்கப்பட்டு, அந்த தொலைபேசி எண் ஆட்டோக்களிலும் பிரதானமாக எழுதப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மேலும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில், ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்ய, மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் ஆலோசனை குழு அமைக்கப் போவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. |
|||||
by Swathi on 25 Aug 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|