LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- பாரதிதாசன் கவிதைகள்

புதிய உலகம்

1.43. உலக ஒற்றுமை


தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு

சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்

சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோ ன்

தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!

கன்னலடா என்சிற்றூர் என்போ னுள்ளம்

கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம்!

தென்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச்

சுதந்தரத்தால் பிறநாட்டைத் துன்பு றுத்தல்!


ஆயுதங்கள் பரிகரிப்பார், அமைதி காப்பார்,

அவரவர்தம் வீடுநகர் நாடு காக்க

வாயடியும் கையடியும் வளரச் செய்வார்!

மாம்பிஞ்சி யுள்ளத்தின் பயனும் கண்டோ ம்!

தூயஉள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்

தொல்லுலக மக்களெலாம் யுஒன்றேரு என்னும் 

தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே

சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்த தாலே.



1. 44. பேரிகை


துன்பம் பிறர்க்கு!நல் இன்பம் தமக்கெனும்

துட்ட மனோபாவம்,

அன்பினை மாய்க்கும்; அறங்குலைக் கும்;புவி

ஆக்கந்தனைக் கெடுக்கும்!

வன்புக் கெலாம் அதுவேதுணை யாய்விடும்

வறுமை யெலாம்சேர்க்கும்!

"இன்பம் எல்லார்க்கும்" என்றேசொல்லிப் பேரிகை

எங்கும் முழங்கிடுவாய்!


தாமும் தமர்களும் வாழ்வதற்கே இந்தத்

தாரணி என்றவண்ணம்,

தீமைக்கெல் லாம்துணை யாகும்; இயற்கையின்

செல்வத்தையும் ஒழிக்கும்!

தேமலர்ச் சோலையும் பைம்புனல் ஓடையும்

சித்தத்திலே சேர்ப்போம்!

"க்ஷேமம் எல்லார்க்கும்" என்றேசொல்லிப் பேரிகை

செகம் முழங்கிடுவாய்!


நல்லவர் நாட்டினை வல்லவர் தாழ்த்திடும் 

நச்சு மனப்பான்மை,

தொல்புவி மேல்விழும் பேரிடியாம்; அது

தூய்மைதனைப் போக்கும்!

சொல்லிடும் நெஞ்சில் எரிமலை பூகம்பம்

சூழத் தகாதுகண்டாய்!

"செல்வங்கள் யார்க்கும்" என்றே சொல்லிப் பேரிகை

திக்கில் முழங்கிடுவாய்!



1. 45. தளை அறு!


கடவுள்கடவுள் என்றெதற்கும்

கதறுகின்ற மனிதர்காள்!

கடவுள்என்ற நாமதேயம் 

கழறிடாத நாளிலும்

உடைமையாவும் பொதுமையாக

உலகுநன்று வாழ்ந்ததாம்;

"கடையர்ரு"செல்வர்" என்றதொல்லை

கடவுள்பேர் இழைத்ததே!


உடைசுமந்த கழுதைகொண் 

டுழைத்ததோர் நிலைமையும்

உடைமைமுற்றும் படையைஏவி 

அடையும்மன்னர் நிலைமையும்

கடவுளாணை யாயின்,அந்த 

உடைவெளுக்கும் தோழரைக் 

கடவுள்தான்முன் னேற்றுமோ?தன் 

கழுதைதான் முன்னேற்றுமோ?


ஊரிலேனும் நாட்டிலேனும்

உலகிலேனும் எண்ணினால்

நீர்நிறைந்த கடலையொக்கும் 

நேர்உழைப் பவர்தொகை!

நீர்மிதந்த ஓடமொக்கும் 

நிறைமுதல்கொள் வோர்தொகை!

நேரிற்சூறை மோதுமாயின் 

தோணிஓட்டம் மேவுமோ?


தொழிலறிந்த ஏழைமக்கள்

தொழில்புரிந்து செல்வர்பால்

அழிவிலாமு தல்கொடுக்க

அம்முதற் பணத்தினால்

பழிமிகுந்த அரசமைத்துப்

படைகள்தம்மை ஏவியே

தொழில்புரிந்த ஏழைமக்கள் 

சோற்றிலே மண்போடுவார்!


நடவுசெய்த தோழர்கூலி

நாலணாவை ஏற்பதும்

உடலுழைப்பி லாதசெல்வர்

உலகைஆண் டுலாவலும்

கடவுளாணை என்றுரைத்த 

கயவர்கூட்ட மீதிலே

கடவுளென்ற கட்டறுத்துத்

தொழிலுளாரை ஏவுவோம்.



1.46. கூடித் தொழில் செய்க


கூடித் தொழில்செய்தோர் கொள்ளைலா பம்பெற்றார்

வாடிடும் பேதத்தால் வாய்ப்பதுண்டோ தோழர்களே!

நாடிய ஓர்தொழில் நாட்டார் பலர்சேர்ந்தால்

கேடில்லை நன்மை கிடைக்குமன்றோ தோழர்களே!

சிறுமுதலால் லாபம் சிறிதாகும்; ஆயிரம்பேர்

உறுமுதலால் லாபம் உயருமன்றோ தோழர்களே!

அறுபதுபேர் ஆக்கும் அதனை ஒருவன்

பெறுவதுதான் சாத்தியமோ பேசிடுவீர் தோழர்களே!

பற்பலபேர் சேர்க்கை பலம்சேர்க்கும்; செய்தொழிலில்

முற்போக்கும் உண்டாகும் முன்னிடுவீர் தோழர்களே!

ஒற்றைக்கை தட்டினால் ஓசை பெருகிடுமோ

மற்றும் பலரால் வளம்பெறுமோ தோழர்களே!

ஒருவன் அறிதொழிலை ஊரார் தொழிலாக்கிப்

பெரும்பே றடைவதுதான் பெற்றிஎன்க தோழர்களே!

இருவர் ஒருதொழிலில் இரண்டுநாள் ஒத்திருந்த

சரிதம் அரிதுநம் தாய்நாட்டில் தோழர்களே!

நாடெங்கும் வாழ்குவதிற் கேடொன்று மில்லைஎனும்

பாடம் அதைஉணர்ந்தாற் பயன்பெறலாம் தோழர்களே!

பீடுற்றார் மேற்கில் பிறநாட்டார் என்பதெலாம்

கூடித் தொழில்செய்யும் கொள்கையினால் தோழர்களே!

ஐந்துரூபாய்ச் சரக்கை ஐந்துபணத்தால் முடித்தல்

சிந்தை ஒருமித்தால் செய்திடலாம் தோழர்களே!

சந்தைக் கடையோநம் தாய்நாடு? லக்ஷம்பேர்

சிந்தைவைத்தால் நம்தொழிலும் சிறப்படையும் தோழர்களே!

வாடித் தொழிலின்றி வறுமையாற் சாவதெல்லாம்

கூடித் தொழில்செய்யாக் குற்றத்தால் தோழர்களே!

கூடித் தொழில்செய்யாக் குற்றத்தால் இன்றுவரை

மூடிய தொழிற்சாலை முக்கோடி தோழர்களே!

கூடைமுறம் கட்டுநரும் கூடித் தொழில்செய்யின்

தேடிவரும் செல்வம் சிறப்புவரும் தோழர்களே!



1.47. தொழிலாளர் விண்ணப்பம்


காடு களைந்தோம் - நல்ல

கழனி திருத்தியும் உழவு புரிந்தும்

நாடுகள் செய்தோம் - அங்கு

நாற்றிசை வீதிகள் தோற்றவும் செய்தோம்

வீடுகள் கண்டோ ம் - அங்கு

வேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம்

பாடுகள் பட்டோ ம் - புவி

பதமுறவே நாங்கள் நிதமும் உழைத்தோம்.


மலையைப் பிளந்தோம் - புவி

வாழவென் றேகடல் ஆழமும் தூர்த்தோம்

அலைகடல் மீதில் - பல்

லாயிரங் கப்பல்கள் போய்வரச் செய்தோம்

பலதொல் லையுற்றோம் - யாம்

பாதாளம் சென்று பசும்பொன் எடுத்தோம்

உலையில் இரும்பை - யாம்

உருக்கிப்பல் யந்திரம் பெருக்கியுந் தந்தோம்.


ஆடைகள் நெய்தோம் - பெரும்

ஆற்றை வளைத்துநெல் நாற்றுக்கள் நட்டோ ம்;

கூடை கலங்கள் - முதல்

கோபுரம் நற்சுதை வேலைகள் செய்தோம்

கோடையைக் காக்க - யாம்

குடையளித் தோம்நல்ல நடையன்கள் செய்தோம்

தேடிய பண்டம் - இந்தச்

செகத்தில் நிறைந்திட முகத்தெதிர் வைத்தோம்.


வாழ்வுக் கொவ்வாத - இந்த

வையத்தில் இந்நிலை எய்தப் புரிந்தோம்

ஆழ்கடல் காடு - மலை

அத்தனை யிற்பல சத்தை யெடுத்தோம்.

ஈழை அசுத்தம் - குப்பை

இலைஎன்ன வேஎங்கள் தலையிற் சுமந்தோம்.

சூழக் கிடந்தோம் - புவித்

தொழிலாள ராம்எங்கள் நிலைமையைக் கேளீர்.


கந்தை யணிந்தோம் - இரு

கையை விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம்.

மொந்தையிற் கூழைப் - பலர்

மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடந்தோம்

சந்தையில் மாடாய் - யாம்

சந்ததம் தங்கிட வீடுமில் லாமல்

சிந்தை மெலிந்தோம் - எங்கள் 

சேவைக் கெலாம்இது செய்நன்றி தானோ?


மதத்தவன் தலைவீர்! - இந்த

மண்ணை வளைத்துள்ள அண்ணாத்தை மாரே!

குதர்க்கம் விளைத்தே - பெருங்

கொள்ளை யடித்திட்ட கோடி சுரர்காள்!

வதக்கிப் பிழிந்தே - சொத்தை

வடிகட்டி எம்மைத் துடிக்க விட்டீரே!

நிதியின் பெருக்கம் - விளை

நிலமுற்றும் உங்கள் வசம்பண்ணி விட்டீர்! 


செப்புதல் கேட்பீர்! - இந்தச்

செகத்தொழி லாளர்கள் மிகப்பலர் ஆதலின்,

கப்பல் களாக - இனித்

தொழும்பர்க ளாக மதித்திட வேண்டாம்!

இப்பொழு தேநீர் - பொது

இன்பம் விளைந்திட உங்களின் சொத்தை

ஒப்ப டைப்பீரே - எங்கள்

உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே

ஒப்படைப்பீரே!



1.48. வாழ்வில் உயர்வுகொள்!


சுயமரி யாதைகொள் தோழா! - நீ

துயர் கெடுப்பாய் வாழ்வில் உயர்வடைவாயே! 

சுயமரி யாதைகொள் ... 


உயர்வென்று பார்ப்பனன் சொன்னால் - நீ

உலகினில் மக்கள் எல்லாம்சமம் என்பாய்; 

துயருறத் தாழ்ந்தவர் உள்ளார் - என்று

சொல்லிடுந் தீயரைத் தூவென் றுமிழ்வாய்!

அயலொரு கூட்டத்தார் ஆள்வோர் - சிலர்

ஆட்பட் டிருப்பவர் என்று சொல்வோரைப்

பயமின்றி நீதிருந் தச்சொல்! - சிலர்

பழமைசொன் னால்புது நிலைநலம் காட்டு!

சுயமரி யாதைகொள் ... 


சேசு முகம்மது என்றும் - மற்றும்

சிவனென்றும் அரியென்றும் சித்தார்த்த னென்றும்,

பேசி வளர்க்கின்ற போரில் - உன்

பெயரையும் கூட்டுவார் நீஒப்ப வேண்டாம்!

காசைப் பிடுங்கிடு தற்கே - பலர்

கடவுளென் பார்!இரு காதையும் மூடு!

கூசி நடுங்கிடு தம்பி! - கெட்ட

கோயிலென் றால்ஒரு காதத்தி லோடு! 

சுயமரி யாதைகொள் ... 


கோயில் திருப்பணி என்பார் - அந்தக்

கோவில் விழாவென்று சொல்லியுன் வீட்டு

வாயிலில் வந்துனைக் காசு - கேட்கும்

வஞ்சக மூடரை மனிதர் என்னாதே!

வாயைத் திறக்கவும் சக்தி - இன்றி

வயிற்றைப் பிசைந்திடும் ஏழைகட் கேநீ

தாயென்ற பாவனை யோடும் - உன்

சதையையும் ஈந்திட ஒப்புதல் வேண்டும்.

சுயமரி யாதைகொள் ... 


கடவுள் துவக்கிக் கொடுத்த - பல

கவிதைகள், பதிகங்கள் செப்பிய பேர்கள்,

கடவுள் புவிக்கவ தாரம் - அந்தக்

கடவுளின் தொண்டர்கள், லோக குருக்கள்,

கடவுள் நிகர் தம்பிரான்கள் - ஜீயர்,

கழுகொத்த பூசுரர், பரமாத்து மாக்கள்

கடவுள் அனுப்பிய தூதர் - வேறு

கதைகளி னாலும் சுகங்கண்ட துண்டா?

சுயமரி யாதைகொள் ... 


அடிமை தவிர்த்ததும் உண்டோ ? - அன்றி

ஆதிமுதல் இந்தத் தேதி வரைக்கும்,

மிடிமை தவிர்த்ததும் உண்டோ ? - அன்றி

மேல்நிலை என்பதைக் கண்டதும் உண்டோ ?

குடிக்கவும் நீரற் றிருக்கும் - ஏழைக்

கூட்டத்தை எண்ணாமல், கொடுந்தடி யர்க்கு

மடங்கட்டி வைத்ததி னாலே - தம்பி!

வசம்கெட்டுப் போனது நமதுநன் னாடு. 

சுயமரி யாதைகொள் ...


உழைக்காத வஞ்சகர் தம்மை - மிக

உயர்வான சாதுக்கள் என்பது நன்றோ?

விழித்திருக் கும்போதி லேயே - நாட்டில்

விளையாடும் திருடரைச் சாமிஎன் கின்றார்!

அழியாத மூடத் தனத்தை - ஏட்டில்

அழகாய் வரைந்திடும் பழிகாரர் தம்மை

முழுதாய்ந்த பாவலர் என்பார் - இவர்

முதலெழுத் தோதினும் மதியிருட் டாகும்!

சுயமரி யாதைகொள் ... 



1. 49. மாண்டவன் மீண்டான்!


ஆற்றோரம் தழைமரங்கள் அடர்ந்தஒரு தோப்பில்

அழகான இளமங்கை ஆடுகின்றாள் ஊஞ்சல்!

சேற்றுமண்ணால் திண்ணையிலே உட்கார்ந்து பொம்மை

செய்துவிளை யாடுகின்றான் மற்றுமொரு பிள்ளை!

ஏற்றிவைத்த மணிவிளக்கின் அண்டையிலே பாயில்

இளஞ்சிசுவும் பெற்றவளும் கொஞ்சுகின்றார் ஓர்பால்!

ஏற்றகடன் தொல்லையினால் நோய்கொண்ட தந்தை

ஏ!என்று கூச்சலிட்டான்; நிலைதவறி வீழ்ந்தான்!


அண்டைஅயல் மனிதரெல்லாம் ஓடிவந்தார். ஆங்கே

அருந்துணைவி நாயகனின் முகத்தில்முகம் வைத்துக்

கெண்டைவிழிப் புனல்சோர அழுதுதுடித் திட்டாள்;

கீழ்க்கிடந்து மெய்சோர்ந்த நோயாளி தானும்

தொண்டையிலே உயிரெழுப்பும் ஒலியின்றிக் கண்ணில்

தோற்றமது குறைவுபடச் சுவாசம்மேல் வாங்க,

மண்டைசுழ லக்கண்ணீர் வடித்துவடித் தழுதான். 

மனமுண்டு வாயில்லை என்செய்வான் பாவம்!


பேசாயோ வாய்திறந்து பெற்றெடுத்த உன்றன்

பிள்ளைகளைக் கண்கொண்டு பாராயோ என்றன்

வீசாத மணிஒளியே! என்றுரைத்தாள் மனைவி.

விருப்பமதை இன்னதென விளம்பிடுக, என்று

நேசரெலாம் கேட்டார்கள். கேட்டநோயாளி

நெஞ்சினையும் விழிகளையும் தன்னிலையில் ஆக்கிப்

பேசமுடி யாநிலையில் ஈனசுரத் தாலே

பெண்டுபிள்ளை! பெண்டுபிள்ளை!! என்றுரைத்தான் சோர்ந்தான்!!!


எதிர்இருந்தோர் இதுகேட்டார்; மிகஇரக்கங் கொண்டார்.

இறப்பவனைத் தேற்றவெண்ணி ஏதேதோ சொன்னார்.

இதுதேதி உன்கடனைத் தீர்க்கின்றோம் என்றார்.

இருந்தநிலை மாறவில்லை மற்றொருவன் வந்து

மதிவந்து விட்டதண்ணே நமதுசர்க்கா ருக்கு!

புமக்களுக்குப் புவிப்பொருள்கள் பொதுமுவென்று சர்க்கார்

பதிந்துவிட்டார் இனிப்பெண்டு பிள்ளைகளைப் பற்றிப்

பயமில்லை! கவலையில்லை! மெய்யண்ணே, மெய்மெய்!!


என்றுசொன்னான் தேற்றுமொழி, இறக்கின்ற மனிதன்

இறக்குங்கால் கவலையின்றி இறக்கட்டும் என்று!

நன்றிந்த வார்த்தைஅவன் காதினிலே பாய்ந்து

நலிவுற்ற உள்ளத்தைப் புலியுளமாய்ச் செய்து

சென்றஉயிர் செல்லாமல் செய்ததனால் அங்குச்

செத்துவிட்ட அம்மனிதன் பொத்தெனவே குந்தி,

இன்றுநான் சாவதற்கே அஞ்சவில்லை என்றான்!

இறப்பதெனில் இனியெனக்குக் கற்கண்டென் றானே!



1.50. ஆய்ந்து பார்!


சாந்தியால் உலகம் தழைப்பது நன்றா?

சமயபே தம்வளர்த்தே தளர்வது நன்றா?

மாந்தரிற் சாதி வகுப்பது சரியா?

மக்கள் ஒரேகுலமாய் வாழ்வது சரியா?


வாய்ந்தபோர்க் குறிபோல் மதக்குறி இனிதா?

மனமொழி மெய்ஒன்றி மகிழுதல் இனிதா?

ஆய்ந்துபார் நெஞ்சமே அமைதிதான் சிறப்பா?

அண்டைவீட் டைப்பறிக்கும் சண்டைதான் சிறப்பா?


காணுமா னிடரைக் கனம்செயல் முறையா?

கடவுள் எனும்மயக்கில் கவிழ்ப்பது முறையா?

மாணுறும் தன்னம்பிக்கை வளர்ப்பது நலமா?

வயப்படும் பக்தியினால் பயப்படல் நலமா? 


வீணரைப் பணிவது மக்களின் கடனா?

மேவும் உழைப்பினிலே ஏவுதல் கடனா? 

நாணு மூடவழக்கம் நாடுதல் பெரிதா?

நல்லறி வென்னும்வழிச் செல்லுதல் பெரிதா?


கோயிலுக் கொன்று கொடுத்திடல் அறமா?

கோடி கொடுக்கும்கல்வி தேடிடல் அறமா?

வாயிலில் வறியரை வளர்த்திடல் அன்போ?

மடத்தில் வீணிற்பொருளைக் கொடுத்திடல் அன்போ?


நாயிலுங் கடையாய் நலிவது மேலா? 

நல்லகூட் டுத்தொழில்கள் நாட்டிடல் மேலா? 

ஓய்வறி யார்உறங்க இடந்தரல் உயர்வா?

ஊரை வளைக்கும்குரு மார்செயல் உயர்வா?


மாதர்தம் உரிமை மறுப்பது மாண்பா?

மாதர்முன் னேற்றத்தால் மகிழ்வது மாண்பா?

மேதினி துயர்ப்பட விரும்புதல் இதமா?

விதவைக்கு மறுமணம் உதவுதல் இதமா?


கோதையர் காதல்மணம் கொள்வது சீரோ?

குழந்தைக்கு மணஞ்செய்து கொல்வது சீரோ?

போதனையாற் பெண்கள் பொதுவெனல் கனமோ?

பொட்டுக்கட்டும் வழக்கம் போக்குதல் கனமோ? 


பாழ்படும் பழமை சூழ்வது திறமா?

பகுத்தறிவால் நலம் வகுப்பது திறமா?

தாழ்பவர் தம்மைத் தாழ்த்துதல் சால்போ?

தனம்காப் பவர்தங்கள் இனம்காத்தல் சால்போ?


ஆழ்வுறும் ஆத்திகம் வைதிகம் சுகமா?

அகிலமேற் சமதர்மம் அமைப்பது சுகமா? 

சூழும் நற்பேதம் தொடர்வது வாழ்வோ?

சுயமரி யாதையால் உயர்வது வாழ்வோ?



1.51. மானிட சக்தி


மானிடத் தன்மையைக் கொண்டு - பலர்

வையத்தை ஆள்வது நாம்கண்ட துண்டு

மானிடத் தன்மையை நம்பி - அதன் 

வன்மையி னாற்புவி வாழ்வுகொள் தம்பி!

"மானிடம்" என்றொரு வாளும் - அதை

வசத்தில் அடைந்திட்ட உன்இரு தோளும்

வானும் வசப்பட வைக்கும் - இதில்

வைத்திடும் நம்பிக்கை, வாழ்வைப் பெருக்கும் 

மானிடத் தன்மையைக் ...


மானிடன் வாழ்ந்த வரைக்கும் - இந்த

வையத்திலே அவன் செய்த வரைக்கும்

மானிடத் தன்மைக்கு வேறாய் - ஒரு

வல்லமை கேட்டிருந்தால் அதைக் கூறாய்!

மானிடம் என்பது புல்லோ? - அன்றி

மரக்கட்டை யைக்குறித் திடவந்த சொல்லோ?

கானிடை வாழ்ந்ததும் உண்டு - பின்பு

கடலை வசப்படச் செய்ததும் அதுதான்! 

மானிடத் தன்மையைக் ...


மானிடம் போற்ற மறுக்கும் - ஒரு

மானிடன் தன்னைத்தன் உயிரும் வெறுக்கும்;

மானிடம் என்பது குன்று - தனில்

வாய்ந்த சமத்துவ உச்சியில் நின்று

மானிடருக் கினி தாக - இங்கு

வாய்த்த பகுத்தறி வாம்விழி யாலே

வான்திசை எங்கணும் நீபார்! - வாழ்வின்

வல்லமை யுமானிடத் தன்மைருஎன் றதேர்! 

மானிடத் தன்மையைக் ...



1.52. முன்னேறு!


சாதிமத பேதங்கள் மூடவழக் கங்கள்

தாங்கிநடை பெற்றுவரும் சண்டை யுலகிதனை

ஊதையினில் துரும்புபோல் அலக்கழிப்போம்; பின்னர்

ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்!

பேதமிலா அறிவுடைய அவ்வுலகத் திற்குப்

பேசுசுய மரியாதை உலகெனப் பேர்வைப்போம்!

ஈதேகாண்! சமுகமே, யாம்சொன்ன வழியில்

ஏறுநீ! ஏறுநீ! ஏறுநீ! ஏறே. 


அண்டுபவர் அண்டாத வகை செய்கின்ற

அநியாயம் செய்வதெது? மதங்கள் அன்றோ?

கொண்டு விட்டோ ம் பேரறிவு, பெருஞ்செயல்கள்

கொழித்து விட்டோ ம் என்றிங்கே கூறுவார்கள்.

பண்டொழிந்த புத்தன், ராமாநு ஞன்,மு

கம்மது, கிறிஸ்து-எனும் பலபேர் சொல்லிச்

சண்டையிடும் அறியாமை அறிந்தா ரில்லை!

சமூகமே ஏறுநீ, எம்கொள் கைக்கே!



1.53. உலகப்பன் பாட்டு


பகுத்தறிவு மன்றத்தில் உலகம்என்ற

பழயமுத லாளியினை நிற்கவைத்து

மிகுத்திருந்த உன்நன்செய், புன்செய்யாவும்

வெகுகாலத் தின்முன்னே, மக்கள்யாரும்

சுகித்திருக்கக் குத்தகைக்கு விட்டதுண்டோ ?

சொல்!என்றேன்; உலகப்பன் ஆம்ஆம்என்றான்.

வகுத்தஅந்தக் குத்தகைக்குச் சீட்டுமுண்டோ 

வாய்ச்சொல்லோ என்றுரைத்தேன். வாய்ச்சொல்என்றான்.


குத்தகைக்கா ரர்தமக்குக் குறித்தஎல்லை

குறித்தபடி உள்ளதுவா என்றுகேட்டேன்.

கைத்திறனும் வாய்த்திறனும் கொண்டபேர்கள்

கண்மூடி மக்களது நிலத்தையெல்லாம்

கொத்திக்கொண் டேப்பமிட்டு வந்ததாலே

கூலிமக்கள் அதிகரித்தார், என்னசெய்வேன்!

பொத்தல்இலைக் கலமானார் ஏழைமக்கள்;

புனல்நிறைந்த தொட்டியைப்போல் ஆனார்செல்வர்.


அதிகரித்த தொகைதொகையாய்ச் செல்வமெல்லாம்

அடுக்கடுகாய்ச் சிலரிடம்போய் ஏறிக்கொண்டு

சதிராடு தேவடியாள் போல்ஆடிற்று!

தரித்திரரோ புழுப்போலே துடிக்கின்றார்கள்;

இதுஇந்நாள் நிலைஎன்றான் உலகப்பன்தான்!

இந்நிலையி லிருப்பதனால் உலகப்பாநீ

புதுக்கணக்குப் போட்டுவிடு; பொருளைஎல்லாம் 

பொதுவாக எல்லார்க்கும் குத்தகைசெய்.


ஏழைமுத லாளியென்ப தில்லாமற்செய்

என்றுரைத்தேன். உலகப்பன் எழுந்துதுள்ளி,

ஆழமப்பா உன்வார்த்தை! உண்மையப்பா,

அதற்கென்ன தடையப்பா, இல்லையப்பா;

ஆழமப்பா உன்கருத்து, மெய்தானப்பா,

அழகாயும் இருக்குதப்பா, நல்லதப்பா,

தாழ்வுயர்வு நீங்குமப்பா, என்றுசொல்லித்

தகதகென ஆடினான். நான்சிரித்து,


ஆடுகின்றாய் உலகப்பா! யோசித்துப்பார்!

ஆர்ப்பாட்டக் காரர்இதை ஒப்பாரப்பா!

தேடப்பா ஒருவழியை என்றுசொன்னேன்.

செகத்தப்பன் யோசித்துச் சித்தம்சோர்ந்தான்.

ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்

உதையயப்ப ராகிவிட்டால், ஓர்நொடிக்குள்

ஓடப்பர் உயரப்பர் எல்லாம்மாறி

ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பாநீ!



1.54. உலகம் உன்னுடையது!


54. உலகம் உன்னுடையது!


பள்ளம் பறிப்பாய், பாதா ளத்தின்

அடிப்புறம் நோக்கி அழுந்துக! அழுந்துக!

பள்ளந் தனில்விழும் பிள்ளைப் பூச்சியே,

தலையைத் தாழ்த்து! முகத்தைத் தாழ்த்து!

தோளையும் உதட்டையும் தொங்கவை! ஈன

உளத்தை, உடலை, உயிரைச் சுருக்கு!

நக்கிக்குடி! அதை நல்லதென்று சொல்!

தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்த நாயினும்

தாழ்ந்துபோ! குனிந்து தரையைக் கெளவி

ஆமையைப் போலே அடங்கி ஒடுங்கு!

பொட்டுப் பூச்சியே, புன்மைத் தேரையே,

அழு!இளி! அஞ்சு! குனி! பிதற்று!

கன்னங் கருத்த இருட்டின் கறையே!

தொங்கும் நரம்பின் தூளே! இதைக்கேள்:

மனிதரில் நீயுமோர் மனிதன்; மண்ணன்று!

இமைதிற! எழுந்து நன்றாய் எண்ணுவாய்!

தோளை உயர்த்து! சுடர்முகம் தூக்கு!

மீசையை முறுக்கி மேலே ஏற்று!

விழித்த விழியில் மேதினிக் கொளிசெய்!

நகைப்பை முழக்கு! நடத்து லோகத்தை!

உன்வீடு - உனது பக்கத்து வீட்டின்

இடையில் வைத்த சுவரை இடித்து

வீதிகள் இடையில் திரையை விலக்கி

நாட்டொடு நாட்டை இணைத்து மேலே

ஏறு! வானை இடிக்கும் மலைமேல்

ஏறு விடாமல்! ஏறு மேன்மேல்!

ஏறி நின்று பாரடா எங்கும்!

எங்கும் பாரடா இப்புவி மக்களை!

பாரடா உனது மானிடப் பரப்பை!

பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!

யுஎன்குலம்ரு என்றுனைத் தன்னிடம் ஒட்டிய 

மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!

அறிவை விரிவுசெய்! அகண்ட மாக்கு!

விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!

அணைந்துகொள்! உன்னைச் சங்கம மாக்கு.

மானிட சமுத்திரம் நானென்று கூவு!

பிரிவிலை எங்கும் பேத மில்லை

உலகம் உண்ணஉண்! உடுத்த உடுப்பாய்!

புகல்வேன்: "உடைமை மக்களுக்குப் பொது!"

புவியை நடத்து! பொதுவில் நடத்து!

வானைப் போல மக்களைத் தாவும்

வெள்ள அன்பால் இதனைக்

குள்ள மனிதர்க்கும் கூறடா தோழனே!



1. 55. சாய்ந்த தராசு


வாழ்வதிலும் நலம் சூழ்வதிலும் - புவி

மக்களெல்லாம் ஒப்புடையார்!


ஏழ்மையில் மக்களைத் தள்ளுவதோ? - இதை

இன்பமெனச் சிலர் கொள்ளுவதோ? 

வாழ்வதிலும் நலம் ...


கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர்

கொள்ளை யடிப்பதும் நீதியோ - புவி

வாழ்வதுதான் எந்தத் தேதியோ?

வாழ்வதிலும் நலம் ... 


சிற்சிலர் வாழ்ந்திடப் பற்பலர் உழைத்துத்

தீர்கஎனும் இந்த லோகமே - உரு

அற்றொழிந் தாலும்நன் றாகுமே! 

வாழ்வதிலும் நலம் ...


காண்பதெலாம் தொழிலாளி செய்தான் அவன்

காணத் தகுந்தது வறுமையாம் - அவன்

பூணத் தகுந்ததும் பொறுமையாம்! 

வாழ்வதிலும் நலம் ...


அன்பெனச் சொல்லியிங் காதிமுதற் பேத

வன்பை வளர்த்தனர் பாரிலே - அதன்

பின்புகண் டோ ம்இதை நேரிலே!

வாழ்வதிலும் நலம் ...


மக்கள் பசிக்க மடத்தலைவர்க் கெனில்

வாழை யிலைமுற்றும் நறுநெய்யாம் - இது

மிக்குயிர் மேல்வைத்த கருணையாம்! 

வாழ்வதிலும் நலம் ...


கோயிலிலே பொருள் கூட்டும் குருக்களும்

கோதையர் தோளினிற் சாய்கின்றார் - இங்கு

நோயினிலே மக்கள் மாய்கின்றார்! 

வாழ்வதிலும் நலம் ...


கோரும் துரைத்தனத் தாரும் பெரும்பொருள்

கொண்டவர்க்கே நலம் கூட்டுவார் - உழைப்

போரிடமே கத்தி தீட்டுவார்! 

வாழ்வதிலும் நலம் ...


மக்களெல் லாம்சம மாக அடைந்திட

மாநிலம் தந்ததில் வஞ்சமோ? - பசி

மிக்கவரின் தொகை கொஞ்சமோ? 

வாழ்வதிலும் நலம் ...



1.56. வியர்வைக் கடல்


அதிகாலை

கிழக்கு வெளுக்கமுன் வெளியிற் கிளம்பினேன்

ஒளிசெயும் மணியிருள், குளிர்ச்சி, நிசப்தம்,

இவற்றிடை என்னுளம் துள்ளும் மான்குட்டி!

உத்ஸாகம் எனைத் தூக்கி ஓடினது!


இயற்கை

குன்றம் இருக்கும்.அக் குன்றத் தின்பால்

குளமும், அழகிய குளிர்பூஞ் சோலையும்

அழகு செய்யும்! அவ்விடத் தில்தான்

என்றன் சொந்த நன்செய் உள்ளது.


பகல்

கடல்மிசை உதித்த பரிதியின் நெடுங்கதிர்

வானெலாம் பாய்ந்தது! பறந்தது வல்லிருள்!

புவியின் சித்திரம் ஒளியிற் பொலிந்தது.

இயற்கை தந்த எழிலிடை நடந்தேன்.


வயல்

வளம்பெற நிறைந்த இளம்பயிர்ப் பசுமை

மரகதம் குவிந்த வண்ணம் ஆயிற்று;

மரகதக் குவியல்மேல் வாய்ந்த பனித்துளி

காணக்கண் கூசும் வயிரக் களஞ்சியம்!

பரந்தஎன் வயலைப் பார்த்துக்கொண் டிருந்தேன்

மகிழ்ச்சி தவிர மற்றொன்று காணேன்!


உழைப்பு

களையினைக் களைவது கருதி, எனது

பண்ணை ஆட்கள் பலபேர் வந்தனர்.

என்னை வணங்கினர்; வயலில் இறங்கினர்.

வில்லாய் வளைந்தது மேனி; அவர்தோள்

விசையாய்க் களைந்தது களையின் விளைவை!

முகவிழி கவிழ்ந்து வயலில் மொய்த்தது.


நடுப்பகல்

காலைப் போதினைக் கனலாற் பொசுக்கிச்

சூரியன் ஏறி உச்சியிற் சூழ்ந்தான்.

சுடுவெயில் உழவர் தோலை உரித்தது;

புதுமலர்ச் சோலையில் போய்விட்டேன் நான்.


வெயில்

குளிர்புனல் தெளிந்து நிறைந்த மணிக்குளம்!

நிழல்சேர் கரையில் நின்றுகொண் டிருந்தேன்

புழுக்கமும் வியர்வையும் எழுப்பி என்னை

நலிவு செய்த நச்சு வெய்யில்,

வானி லிருந்து மண்ணிற் குதித்துத்

தேன்மலர்ச் சோலை செழுமை கடந்தென்

உளத்தையும் உயிரையும் பிளப்பது விந்தை!

குளத்தில் விழுந்து குளிக்கத் தொடங்கினேன்.

வெள்ளப் புனலும் கொள்ளிபோல் சுட்டது.


உழைப்புத் துன்பம்

காலைப் போதினைக் கனலால் பொசுக்கிச்

சோலையும் கடந்து சுடவந்த வெய்யில்

விரிபுனற் குளத்தையும் வெதுப்பிய தெண்ணினேன்.

எண்ணும் போதென் கண்ணின் எதிரில் 

வியர்வையும் அயர்வுமாய்ப் பண்ணை யாட்கள்

வந்து நின்று வணக்கம் செய்தனர்.

ஐயகோ நெஞ்சமே, இந்த ஆட்கள்

தாங்கொணாக் கனலை எவ்வாறு தாங்கினர்?


வியர்வைக் கடலின் காட்சி

களைபோக்கும் சிறுபயன் விளைக்க இவர்கள்

உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின்

ஒவ்வொரு துளியிலும் கண்டேன்

இவ்வுல குழைப்பவர்க் குரிய தென்பதையே!



1.57. நீங்களே சொல்லுங்கள்!


சித்திரச் சோலைகளே! உமை நன்கு

திருத்த இப் பாரினிலே - முன்னர்

எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தன

ரோ!உங்கள் வேரினிலே.


நித்தம் திருத்திய நேர்மையி னால்மிகு

நெல்விளை நன்னிலமே! - உனக் 

கெத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை

இறைத்தனர் காண்கிலமே.


தாமரை பூத்த தடாகங்களே! உமைத்

தந்தஅக் காலத்திலே - எங்கள்

தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்

சொல்லவோ ஞாலத்திலே.


மாமிகு பாதைகளே! உமை இப்பெரு

வையமெ லாம் வகுத்தார் - அவர்

ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட

அந்தியெலாம் உழைத்தார்.


ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே! - உங்கள்

ஆதி அந்தம் சொல்லவோ? - நீங்கள் 

ஊர்த்தொழி லாளர் உழைத்த உழைப்பில்

உதித்தது மெய்அல்லவோ?


கீர்த்திகொள் போகப் பொருட்புவியே! உன்றன்

கீழிருக்கும் கடைக்கால் - எங்கள்

சீர்த்தொழி லாளர் உழைத்த உடம்பிற்

சிதைந்த நரம்புகள்தோல்!


நீர்கனல் நல்ல நிலம்வெளி காற்றென

நின்ற இயற்கைகளே! - உம்மைச்

சாரும் புவிப்பொருள் தந்ததெவை? தொழி

லாளார் தடக்கைகளே!


தாரணியே! தொழி லாளர் உழைப்புக்குச்

சாட்சியும் நீயன்றோ? - பசி

தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும்

செல்வர்கள் நீதிநன்றோ ?


எலிகள் புசிக்க எலாம்கொடுத்தே சிங்க

ஏறுகள் ஏங்கிடுமோ? - இனிப்

புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே பெரும்

புதரினில் தூங்கிடுமோ?


கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார் இனிக்

கெஞ்சும்உத் தேசமில்லை - சொந்த

வலிவுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த

வார்த்தைக்கு மோசமில்லை.



1.58. புதிய உலகு செய்வோம்


புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட

போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம். 

புதியதோர் உலகம் ...


பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்

புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம். 

புதியதோர் உலகம் ...


இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்

யுஇதுஎனதெரு ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம் 

புதியதோர் உலகம் ...


உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்

யுஒருபொருள் தனிருஎனும் மனிதரைச் சிரிப்போம்!

புதியதோர் உலகம் ...


இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்

ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம். 

புதியதோர் உலகம் ...



1.59. பலிபீடம்


மத - ஓடத்திலேறிய மாந்தரே - பலி

பீடத்திலே சாய்ந்தீரே!


பாடுபட் டீர்கள் பருக்கையில் லாதொரு

பட்டியில் மாடென வாழ்கின்றீர் - மதக்

கேடர்கள் காலினில் வீழ்கின்றீர் - ஒண்ட

வீடுமில் லாமலே தாழ்கின்றீர்! 

மத - ஓடத்திலேறிய ...


பாதிக்கு தேபசி என்றுரைத் தால்,செய்த

பாபத்தைக் காரணம் காட்டுவார் - மத

வாதத்தை உம்மிடம் நீட்டுவார் - பதில்

ஓதிநின் றால்படை கூட்டுவார். 

மத - ஓடத்திலேறிய ...


வாதனை சொல்லி வணங்கிநின் றால்தெய்வ

சோதனை என்றவர் சொல்லுவார் - பணச்

சாதனையால் உம்மை வெல்லுவார் - கெட்ட

போதனையால் தினம் கொல்லுவார். 

மத - ஓடத்திலேறிய ...


பேதிக்கும் நோய்க்கும் பெரும்பசிக் கும்,பல

பீதிக்கும் வாய்திறப் பீர்களோ! - இழி

சாதியென்றால் எதிர்ப் பீர்களோ? - செல்வர்

வீதியைத் தான் மதிப்பீர்களோ? 

மத - ஓடத்திலேறிய ...


கூடித் தவிக்கும் குழந்தை மனைவியர்

கூழை நினைத்திடும் போதிலே - கோயில்

வேடிக்கையாம் தெரு மீதிலே - செல்வர் 

வாடிக்கை ஏற்பீரோ காதிலே?

மத - ஓடத்திலேறிய ...


தொட்டிடும் வேலை தொடங்கலு மின்றியே

தொந்தி சுமக்கும்பு ரோகிதர் - இட்ட

சட்டப்படிக்கு நீரோ பதர் - அவர்

அட்டகா சத்தினுக் கேதெதிர்? 

மத - ஓடத்திலேறிய ...


மூடத் தனத்தை முடுக்கும் மதத்தைநிர்

மூலப் படுத்தக்கை ஓங்குவீர் - பலி

பீடத்தை விட்டினி நீங்குவீர் - செல்வ

நாடு நமக்கென்று வாங்குவீர். 

மத - ஓடத்திலேறிய ...



1.60. சகோதரத்துவம்


உறுதி உறுதி உறுதி!

ஒன்றே சமுகம் என்றெண்ணார்க்கே - இறுதி! 

உறுதி உறுதி உறுதி ... 


உறவினர் ஆவார் ஒரு நாட்டார் - எனல் 

உறுதி உறுதி உறுதி ... 


பிறவியில் உயர்வும் தாழ்வும் சொல்லல் மடமை - இந்தப்

பிழைநீக் குவதே உயிருள் ளாரின் கடமை - நம்மிற்

குறைசொல வேண்டாம் உறவினர் பகைநீங் குங்கோள் - உங்கள்

குகையினை விட்டே வெளிவரு வீர்சிங் கங்காள் 

உறுதி உறுதி உறுதி ... 


நாட்டுக் குலையில் தீட்டுச் சொல்வார் மொழியை - நாமே

நம்பித் தேடிக் கொண்டோ ம் மீளாப் பழியை - நாட்டின்

கோட்டைக் கதவைக் காக்கத் தவறும் அந்நாள் - இந்தக்

குற்றம் செய்தோம்; விடுவோம்; வாழ்வோம் இந்நாள் 

உறுதி உறுதி உறுதி ... 


வாழ்விற் செம்மை அடைதல் வேண்டும் நாமே - நம்மில்

வஞ்சம் காட்டிச் சிலரைத் தாழ்த்தல் தீமை - புவியில்

வாழ்வோ ரெல்லாம் சமதர் மத்தால் வாழ்வோர் - மற்றும் 

வரிதிற் றாழ்வோர் பேதத் தாலே தாழ்வோர் 

உறுதி உறுதி உறுதி ... 


தேசத் தினர்கள் ஓர்தாய் தந்திடு சேய்கள் - இதனைத்

தெளியா மக்கள் பிறரை நத்தும் நாய்கள் - மிகவும்

நேசத் தாலே நாமெல் லாரும் ஒன்றாய் - நின்றால்

நிறைவாழ் வடைவோம் சலியா வயிரக் குன்றாய். 

உறுதி உறுதி உறுதி ... 


பத்துங் கூடிப் பயனைத் தேடும் போது - நம்மில்

பகைகொண் டிழிவாய்க் கூறிக் கொள்ளல் தீது - நம்

சித்தத் தினிலே இருளைப் போக்கும் சொல்லைக் - கேளீர்

செனனத் தாலே உயர்வும் தாழ்வும் இல்லை 

உறுதி உறுதி உறுதி ... 



1.61. சேசு பொழிந்த தெள்ளமுது


மேதினிக்குச் சேசு நாதர் எதற்கடி? தோழி - முன்பு

வெம்மைகொள் மக்களைச் செம்மை புரிந்திடத் தோழா - அவர்

காதினிக் கும்படி சொன்னசொல் ஏதடி? தோழி - அந்தக்

கர்த்தர் உரைத்தது புத்தமு தென்றறி தோழா - அந்தப்

பாதையில் நின்று பயனடைந்தார் எவர்? தோழி - இந்தப்

பாரத நாட்டினர் நீங்கிய மற்றவர் தோழா - இவர்

ஏதுக்கு நன்மைகள் ஏற்கவில்லை உரை தோழி - இங்கு

ஏசுவின் கட்டளை நாசம் புரிந்தனர் தோழா.


ஏசு மதத்தினில் இந்துக்கள் ஏனடி? தோழி - அந்த

இந்துக்கள் தீயிட்ட செந்துக்கள் ஆயினர் தோழா - மிக

மோசம் அவர்க்கென்ன வந்தது கூறடி? தோழி - அட

முன்-மனு என்பவன் சொன்னதில் வந்தது தோழா - அவன்

நாசம் விளைக்க நவின்றது யாதடி? தோழி - சட்டம்

நால் வருணத்தினில் நாலாயிரம் சாதி தோழா - ஏசின் 

ஆசை மதம்புகப் பேதம் அகன்றதோ? தோழி - அவர்க்

கங்குள்ள மூதேவி இங்கும் முளைத்தனள் தோழா!


சொல்லிய சேசுவின் தொண்டர்கள் எங்கடி? தோழி - அந்தத்

தொண்டர்கள் உள்ளனர், தொண்டு பறந்தது தோழா - அந்தப்

புல்லிய பேதத்தைப் போக்கினரோ அவர்? தோழி - அதைப்

போதாக் குறைக்குமுப் போகம் விளைத்தனர் தோழா - அடி

எல்லையில் பேதம் இழைத்தது தான் எவர்? தோழி - அட

இந்த நெடுஞ்சட்டை அந்தகரே அறி தோழா - முன்பு

வல்லவர் சேசு வகுத்தது தான்என்ன? தோழி - புவி

"மக்கள் எல்லாம்சமம்" என்று முழக்கினர் தோழா!


ஈண்டுள்ள தொண்டர்கள் என்ன செய்கின்றனர்? தோழி - அவர்

ஏழைகள் தாழ்வுறச் செல்வரை வாழ்த்தினர் தோழா - அடி

வேண்ட வரும்திருக் கோயில் வழக்கென்ன? தோழி - அட

மேற்குலம் தாழ்குலம் என்று பிரித்தனர் தோழா - விரல்

தீண்டப் படாதவர் என்பவர் யாரடி? தோழி - இங்குச்

சேசு மதத்தினை தாபித்த பேர்கள்என் தோழா - உளம்

தூண்டும் அருட்சேசு சொல்லிய தென்னடி? தோழி - அவர்

"சோதரர் யாவரும்" என்று முழங்கினர் தோழா!


பஞ்சமர் பார்ப்பனர் என்பதெல் லாம்என்ன? தோழி - இவை

பாரத நாட்டுப் பழிச்சின்னத் தின்பெயர் தோழா - இங்குக்

கொஞ்சமும் இப்பழி கொள்ளுதல் நல்லதோ? தோழி - ஒப்புக்

கொள்ளும் நிலத்தினில் கள்ளி முளைத்திடும் தோழா - இங்கு

நெஞ்சினிற் சேசுவின் தொண்டர் நினைப்பென்ன? தோழி - தினம்

நேர்மையில் கோயில்வி யாபாரம் செய்வது தோழா - இந்த

வஞ்சகர்க் கென்ன வழுத்தினர் சேசுநல் தோழி - இன்ப

வாழ்க்கை யடைந்திட யார்க்கும் சுதந்தரம் என்றார்!


நாலு சுவர்க்கு நடுப்புறம் ஏதுண்டு? தோழி - அங்கு

நல்ல மரத்தினிற் பொம்மை அமைத்தனர் தோழா - அந்த

ஆலயம் சாமி அமைத்தவர் யாரடி? தோழி - மக்கள்

அறிவை இருட்டாக்கி ஆள நினைப்பவர் தோழா - மக்கள்

மாலைத் தவிர்த்து வழிசெய்வ ரோஇனித் தோழி - செக்கு

மாடுக ளாக்கித்தம் காலைச்சுற் றச்செய்வர் தோழா - அந்தக்

கோலநற் சேசு குறித்தது தானென்ன? தோழி - ஆஹா 

கோயிலென் றால்அன்பு தோய்மனம் என்றனர் தோழா!


ஆண்மைகொள் சேசு புவிக்குப் புரிந்ததென்? தோழி - அவர்

அன்பெனும் நன்முர செங்கும் முழக்கினர் தோழா - அந்தக்

கேண்மைகொள் சேசுவின் கீர்த்தி யுரைத்திடு தோழி - அவர்

கீர்த்தி யுரைத்திட வார்த்தை கிடைக்கிலை தோழா - நலம்

தாண்டவம் ஆடிடச் செய்தவரோ அவர்? தோழி - அன்று

தன்னைப் புவிக்குத் தரும்பெரு மானவர் தோழா - அந்த 

ஆண்டவன் தொண்டர்கள் ஆகிடத் தக்கவர் யாவர்? - எனில்

"அன்னியர்ரு தான்"என்ற பேதமி லாதவர் தோழா. 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.