வியட்நாம் நாட்டின் புதிய அதிபராக நிகுயென் பூ டிராங் பதவியேற்றார்.
வியட்நாம் அதிபராக இருந்த டிரான் டாய் குவாங், ஒரு ஆண்டாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த மாதம் மரணம் அடைந்தார்.
இதையடுத்து, புதிய அதிபராக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. சில நாட்களுக்கு முன் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி சார்பில் நிகுயென் பூ டிராங் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் 477 பேர் இவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஒரு உறுப்பினர் மட்டும் எதிராக வாக்களித்தார். இதையடுத்து, நாட்டின் புதிய அதிபராக நிகுயென் பூ டிராங் (வயது 74) பதவியேற்றார்.
விழாவில் பேசிய அவர், “சமீப காலங்களில் வியட்நாம் பல சாதனைகளை புரிந்து உள்ளது என்ற போதிலும் பல சவால்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. பல கனமான பணிகளும், கடமைகளும் நம் முன் காத்திருக்கின்றன ” என்றார்.
|