|
||||||||
நிழலாடும் நினைவு - பாவலர் கருமலைத்தமிழாழன் |
||||||||
சாலையிரு புறங்களிலும் கிளைப ரப்பிச் சாய்ந்துநிழல் தந்திட்ட மரங்க ளூடே
ஆலைசங்கின் ஒலியின்றிக் குளிர்ந்த காற்றின்
அன்பான வருடலிலே உடல்சி லிர்க்கக்
காலையிளம் கதிரவனைக் கண்ணால் கண்டு
காதுகளில் பறவைகளின் குரல்கள் கேட்டு
நூலைத்தோள் பையினிலே தொங்க விட்டு
நுழைந்தபள்ளி நாள்களிங்கே வருமோ மீண்டும் !
அரைக்காலின் சட்டையுடன் கைகள் கோர்த்தே
அடுத்தவீட்டு சாந்தியுடன் பள்ளி முன்பு
நரைகிழவி விற்றிட்ட கம்மர் கட்டை
நறுங்கடியாய்ப் பகிர்ந்துண்ட இனிய காட்சி
கரையினிலே வளர்ந்திருந்த மரத்தி லேறிக்
கண்ணிமைக்கும் நேரத்தில் கரணம் போட்டே
விரைந்தோடும் தூய்மையான ஆற்றி நீரில்
விளையாடி மகிழ்ந்தநாள்கள் வருமோ மீண்டும் !
பொன்வண்டைத் தீப்பெட்டி தனில டைத்தும்
பொறுமையுடன் தலையாட்டும் ஓணான் பார்த்தும்
தின்றுபோட்ட நுங்குகாயில் வண்டி செய்து
திரிந்திட்ட வயல்வரப்பு தோப்பு தோட்டம்
அன்பாக அரவணைத்த அக்கம் பக்கம்
ஆடுகோழி மேய்ந்திட்ட குடிசை யெல்லாம்
இன்றிங்கே மனிதம்தாம் மறைந்த போல
இல்லாமல் போனதுவே ! வருமோ மீண்டும் !
|
||||||||
Nizhladum ninaivu | ||||||||
by Karumalaithamizhazhan on 16 Aug 2019 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|