திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்றாகும் - தான் சேர்ந்த நிலத்தினது இயல்பானே நீர் தன் தன்மை திரிந்து அந்நிலத்தின் தன்மைத்தாம், மாந்தர்க்கு இனத்து இயல்பு அறிவு (திரிந்து) அதாகும் -அதுபோல மாந்தர்க்குத் தாம் சேர்ந்த இனத்தின் இயல்பானே அறிவும் தன் தன்மை திரிந்து அவ்வினத்தின் தன்மைத்தாம். (எடுத்துக்காட்டுவமை: விசும்பின்கண் தன் தன்மைத்தாய நீர் நிலத்தோடு சேர்ந்த வழி, நிறம், சுவை முதலிய பண்புகள் திரிந்தாற்போல, தனி நிலைக்கண் தன் தன்மைத்தாய அறிவு, பிறஇனத்தோடு சேர்ந்தவழிக் காட்சி முதலிய தொழில்கள் திரியும் என, இதனான் அதனது காரணங் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
நிலத்தின் தன்மையால் நீர் தன் தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மைத்தாவது போல, மக்கட்கு அறிவு இனத்தின் தன்மையதாய் வேறுபடும்.
தேவநேயப் பாவாணர் உரை:
நீர் நிலத்து இயல்பான் திரிந்து அற்று ஆகும் - நீரானது தான் சேர்ந்த நிலத்தின் வகையினால் தன் தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மையதாம்; மாந்தர்க்கு அறிவு இனத்து இயல்பு அது ஆகும் - அதுபோல, மாந்தரது அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் வகையால் தன் தன்மை வேறுபட்டு அவ்வினத்தின் தன்மையதாம்.
இனி, மாந்தர்க்கு இனத்தியல்பதாகும் அறிவு நிலத்தியல்பால் நீர் திரிந்தற்றாகும், என ஒரே தொடராக்கினும் அமையும். இப்பொருள்கோட்கு, 'அறிவு' எழுவாய்; 'அற்றாகும்' பயனிலை. இரண்டாம் 'ஆகும்' பெயரெச்சம் . அணி உவமை.
இரு தொடராக அல்லது சொல்லியமாக (வாக்கியமாக)க் கொள்ளின் எடுத்துக்காட்டுவமை. மழைபெய்யுமுன் வானத்தின் கண் நின்றநிலையில் தன்னியல்பிலிருந்த நீர் , நிலத்தொடு சேர்ந்த விடத்துத்தன் நிறமும் சுவையும் மணமும் ஆற்றலும் நிலத்திற் கேற்ப வேறுபட்டாற்போல், மாந்தன் அறிவும் அவன் தனித்து நின்றவழித் தன்னியல்பிலிருத்து, ஓர் இனத்தொடு கூடியவழி அவ்வினத்திற்கேற்ப நோக்குந் தன்மையும் வேறுபடும் என்பதாம். அன்னது -அற்று (அன் +து); "மலரோடு (பூவோடு) சேர்ந்த நாரும் மணம்பெறும்" என்பது நல்லினத்தோடு சேர்வதன் விளைவையும். "பன்றியொடு சேர்ந்த கன்றும் பவ்வீதின்னும்" என்பது தீயினத்தோடு சேர்வதன் விளைவையும், நுவலாது நுவலுதல் காண்க. நுவலுதல் நுணித்துச் சொல்லுதல்.
கலைஞர் உரை:
சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின்
தன்மையை அடைந்துவிடும். அதுபோல மக்களின் அறிவும், தாங்கள்
சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.
Translation
The waters' virtues change with soil through which they flow;
As man's companionship so will his wisdom show.
Explanation
As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates.