சமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் நிமிர்ந்து நில்.
படத்தின் ஆரம்பத்தில் இருந்தே நிதி சிக்கலில் தவித்து வந்த நிமிர்ந்து நில் படம் ஒருவழியாக இன்று ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட சில கடன் சிக்கல்களால் இப்படம் இன்று ரிலீஸாகவில்லை.
இதுப்பற்றி கோடம்பாக்கத்தில் விசாரித்ததில், நிமிர்ந்து நில் படத்தை தயாரித்துள்ள வாசனன் விஸ்வல் வென்சர்ஸ் தயாரிப்பாளரான கே.எஸ்.சீனிவாசன் ஏற்கனவே தான் தயாரித்த சில படங்களுக்கு சுமார் 4 கோடி ரூபாய் வரை கடன் பாக்கி வைத்திருக்கிறார். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் தயாரிப்பாளர்களிடம் சென்று எங்களுக்கு ஏற்கனவே கொடுக்க வேண்டிய கடனை கொடுத்து விட்டு படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என்று கூறியுள்ளனர்.
ஆனால் சீனிவாசனால் பணத்தை கொடுக்க முடியவில்லை. மேலும் இதுதொடர்பாக படத்தின் ஹீரோ ஜெயம் ரவி, இயக்குநர் சமுத்திரகனி ஆகியோரிடமும் முறையிட்டுள்ளது. ஜெயம் ரவியோ, ஏற்கனவே நான் இந்தப்படத்திற்காக ரூ.90 லட்சம் விட்டுக்கொடுத்துள்ளேன் என்னால் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார். அதேப்போல் சமுத்திரகனியும், நானும் சுமார் ரூ.50 லட்சம் விட்டுக் கொடுத்துள்ளேன் என்று கைவிரித்துவிட்டார்.
தயாரிப்பு நிறுவனம் கடனை திருப்பி செலுத்ததால் இன்று வெளியாக இருந்த நிமிர்ந்து நில் படம் ரிலீஸாகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தை ரிலீஸ் செய்ய தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதால், படம் நாளை ரிலீஸ் ஆகலாம் என தெரிகிறது.
|