இலங்கையில் இனவாதம் மற்றும் மதவாதத்திற்கு இடமில்லை என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்ச கூறியுள்ளார்.
இலங்கையில் சில தினங்களுக்கு முன் முஸ்லிம்கள் நடத்தி வந்த உணவகங்களுக்கு புத்த மதத்தினர் சென்று, ''இது புத்த மதத்தினர் வாழும் பகுதி. எனவே, அசைவ உணவுப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது'' என்று கூறி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, கொழும்புவில் முஸ்லிம்கள் நடத்திவந்த பல கடைகள் அடித்து நொறுக்கி, தீ வைக்கப்பட்டன. இச்சம்பவத்தில் பலருக்கு காயம் ஏற்பட்டது.இது தொடர்பாக, ஆறு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இதற்கிடையே, மத விழா ஒன்றில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே பங்கேற்று பேசியதாவது, இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இங்கு, புத்த மதத்தினர் சாராதவர்களுக்கும் சம உரிமை உண்டு. மதவாதம், இனவாதம் போன்றவற்றை, எனது அரசு அனுமதிக்காது. மத தீவிரவாதம் ஏற்பட்டால் நாட்டில் ஆயுத கலாசாரத்துக்கு வழி வகுக்கும்; இதனால், இலங்கைக்கு அவப்பெயர் தான் உண்டாகும். எனவே புத்த மதத்தினர், மற்றவர்களின் மத சுதந்திரத்தை ஆதரிக்க வேண்டும். தாய் நாட்டை நேசிப்பவர்கள், மற்றவர்களின் மத சுதந்திரத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்.இவ்வாறு, ராஜபக்ஷே பேசினார்.
|