பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, 2 அமெரிக்கர்களுக்குக் கிடைத்து உள்ளது.
புதிய கண்டுபிடிப்புகளையும், சுற்றுச்சூழலையும் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைத்தமைக்காக அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் ரோமர் ஆகிய பொருளாதார நிபுணர்களுக்கு பொருளாதாரத்துக்கான நிகழாண்டின் நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்டு, நோபல் பரிசுக்கான தேர்வுக் குழு கூறியதாவது: பொருளாதார வளர்ச்சியை நிலையான வளர்ச்சியாகவும், நீண்ட கால வளர்ச்சியாகவும் ஆக்குவது எப்படி என்ற சவாலுக்கு தீர்வு அளித்ததற்காக பேராசிரியர்கள் வில்லியமும், பால் ரோமரும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழலுடனும், புத்தாக்கச் சிந்தனைகளுடனும் சந்தைப் பொருளாதாரத்தை இணைத்ததன் மூலம், பொருளாதாரப் பகுப்பாய்வின் எல்லையை இந்த இருவரும் விரிவுபடுத்தி இருக்கிறார்கள். இவர்களில் வில்லியம் நார்தாஸ், பருவநிலை மாறுபாடு என்ற முக்கியப் பிரச்னையை பொருளாதாரத்தோடு இணைத்துள்ளார்.
பால் ரோமரைப் பொறுத்தவரை, தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளை பொருளாதார உத்திகளுடன் இணைத்துள்ளார் என்று நோபல் தேர்வுக் குழு குறிப்பிட்டு உள்ளது.
இருவரையும் பற்றிய விவரங்கள் வருமாறு: அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவரான வில்லியம், தற்போது அதே கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பொருளாதாரம் குறித்து இதுவரை 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.
உலக வங்கியின் முதுநிலை துணைத் தலைவராக கடந்த ஜனவரி மாதம் வரை பொறுப்பு வகித்த ரோமர், தற்போது நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவர், அமெரிக்காவில் உள்ள பிலிப் எக்ஸடர் அகாதெமியில் பட்டம் பெற்றவர்.
|