தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் புதுப்புது மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மாற்றங்கள் புதிது என்றாலும் அது மக்களிடையே பெரும் வரவேற்பை பொறுத்தே அந்த புதிய மாற்றத்தின் ஆயுட்காலம் நிர்ணயிக்கப்படுகிறது.
முன்பெல்லாம், மூன்று மணிநேர சினிமா, முப்பது பாடல் என இருந்த காலம் மாறி தற்போது, இரண்டு மணிநேர சினிமா, அசத்தலான ஐந்து பாடல்கள் என மாற்றம் கண்டு மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது தமிழ் சினிமாவில் ஒரு புதிய புரட்சிகர மாற்றம் ஒன்று உதயமாகியுள்ளது. அது என்னவென்றால், பல கதைகளின் தொகுப்பை ஒரே படத்தில் சொல்வதுதான் அந்த புதிய மாற்றம்.
இந்த புதிய முயற்சியை இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர், பல ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு வீடு இருவாசல் என்ற படத்தின் மூலம் செய்து காட்டியிருந்தாலும், அது அன்றைய காலகட்டத்தில் வரவேற்கப்படவில்லை என்பதே உண்மை.
மீண்டும் ஒரே படத்தில் பல கதை முயற்சி தமிழ் சினிமாவில் துளிர் விட துவங்கியுள்ளது. இதற்கு சான்றாக உள்ள படங்களைப் பற்றி இங்கு காண்போம்.
சமீபத்தில் வெளிவந்த ஆ என்ற பேய் படத்தில் 5 தனித்தனி கதைகள் இருந்தது.
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் 4 கதைகள் இடம்பெற்றிருந்தது.
தற்போது எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி வரும் டூரிங் டாக்கீஸ் இரண்டு கதைகளை கொண்டது. அதில் ஒரு கதையின் நாயகனாக அவரே நடிக்கிறார்.
பல்வேறு சர்வதேச படவிழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை அள்ளி வரும் குற்றம் கடிதல் படம் 4 வெவ்வேறு கதைகளின் சங்கமம்.
அடுத்த ஜனவரி மாதம் வெளிவர இருக்கும் அனேகன் படத்தில் 1987, 1995, 2014 ஆகிய மூன்று காலகட்டங்களில் நடக்கிற கதை. மூன்று கெட்அப்களில் தனுஷ் நடித்திருக்கிறார். கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார்.
தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் மூன்று கதைகள் இடம்பெறுகிறது. ஒரு கதையின் நாயகன் அட்டகத்தி தினேஷ், நகுல் இன்னொரு கதையின் நாயகன், சதீஷ் ஒரு கதையின் நாயகன்.
இதற்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி ராகவா லாரன்ஸ் ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா என்ற புராஜக்டையே அறிவித்திருக்கிறார். கிழவன், கருப்பு துரை என்ற இரண்டு கதைகளை ஒரே படத்தில் வைத்து தர இருக்கிறார். கிழவன் படத்தில் ராகவா லாரன்சும், லட்சுமிராயும் நடிக்கிறார்கள். கருப்பு துரை படத்தில் ராகவா லாரன்சும், ஆண்ட்ரியாவும் நடிப்பதாக இருக்கிறது.
|