LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- மற்றவை

ஒப்பியல் இலக்கியம் -க. கைலாசபதி

ஒப்பியல் இலக்கியம்
கலாநிதி. க. கைலாசபதி M. A., Ph.D.

Oppiyal Ilakkiyam (A study of Comparative Literature)
by Dr. K. Kailasapathy, M.A., Ph.D.

 

சமர்ப்பணம்

 
பல்லாண்டுகளாக எனது இலக்கிய முயற்சிகளை நேர்மையுடன் விமர்சித்து ஊக்கங் கொடுத்து வந்தவரும் இன்றைய ஈழத்து எழுத்தாளரின் முன்னோடிகளின் ஒருவரும் பிறர்மொழியிலக்கியங்களைக் கற்று மகிழ்ந்து அவற்றைத் தழுவியும் பெயர்த்தும் தமிழுக்கு அணிசெய்தவரும், பல துறை வல்லுநருமான காலஞ்சென்ற அ.ந. கந்தசாமி அவர்களது நினைவுக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்

 

முன்னுரை


'ஒப்பியல் இலக்கியம்' என்ற தலைப்பிலே தொகுக்கப் பெற்றுள்ள கட்டுரைகள் நான் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதியவற்றிற் சில. பொதுப்பண்புடைய இப்பதினொரு கட்டுரைகளையும் ஒன்று சேரத்தொகுத்தபோது அவை ஓரளவு காலவரையறையையொட்டி அமைந்திருக்கக் காண்கிறேன். எமக்குக் கிடைக்கும் மிகப் பழைய சான்றோர் செய்யுட்களிலிருந்து தற்காலப் பாரதி பாடல்கள் வரை எனது கண்ணோட்டம் பாய்ந்திருக்கக் காணலாம். இலக்கியத்தின் தொடர்ச்சியில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு. அது போலவே இலக்கியத்தின் உலகப் பொதுமையிலும் அசைக்க முடியாத நம்பிக்கையுள்ளவன். இந்நம்பிக்கைகள் நெஞ்சிலே நெடுங்காலமாகப் பதிந்திருப்பனவாதலால் அவ்வப்போது எழுதுங்கட்டுரைகளில் அங்கங்கே வௌிப்படுவது இயல்பே.

சுமார் இருபது வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிற் படித்துக் கொண்டிருந்த காலத்தில் கல்லூரிக்குப் பக்கலில் நடாத்தப்பெற்ற இந்துசாதனம் என்ற வார ஏட்டிற்கு எழுதலானேன். என்னோடு ஒரு சாலை மாணவராயிருந்த இ.முருகையனும் இவ்வெழுத்தார்வத்திற் பங்கு கொண்டவரே. இளங்கன்று பயமறியாது என்பது போல ஏதேதோவெல்லாம் எழுதினோம். அப்பொழுது நான் எழுதிய கட்டுரையொன்று இப்பொழுது நினைவுக்கு வருகிறது. உலக ஞானியர் சிலரது நல்லுரைகளைக் குறட்பாக்கள் சிலவற்றோடு ஒப்பிட்டு வள்ளுவரின் மேம்பாட்டை எடுத்துக் காட்டியிருந்தேன். பத்திராதிபருக்கு பொருள் பிடித்திருக்கவேண்டும்; 'வள்ளுவர் விஞ்சி விட்டார்' என்ற தலைப்பிற் சில கட்டுரைகளைத் தொடர்ந்து வௌியிட்டு ஊக்கமளித்தார். அன்று பதினைந்து வயதுப் பருவத்திலே எழுதியது பொருள் ஆழமுடையதாக இருந்திருக்க வியலாது. ஆனால் ஒப்புநோக்கும் பழக்கம் நிலைத்து விட்டது.

கல்லூரியிலும் பின்னர் பல்கலைக்கழகத்திலும் புத்தகம் வாசிக்கும் ருசியேற்பட்டுப் பலவகையான நூல்களைப் படித்தபோது முற்கூறிய ஒப்புநோக்கு உறுதிப்பட்டது. நான் கல்லூரி மாணவனாக இருந்த காலத்திலேயே வ.வே.சு. ஐயரது கம்பராமாயணம் பற்றிய ஆங்கிலத் திறனாய்வு நூல்வௌி வந்தது. ஏலவே ஒப்புநோக்கில் ஈடுபாடிருந்த எனக்கு அந்நூல் பேரூக்கமூட்டியது. தமிழில் ஒப்பியல் ஆய்வு செய்யும் பிறரும் என்னைப் போலவே ஐயருக்குக் கடமைப்பட்டவர்கள் என நினைக்கிறேன். இன்று ஐயரது ஒப்பியல் ஆய்வின் குறைநிறைகளைத் துணிய முற்படும் பொழுது ஐயரது செல்வாக்கே செயற்படுகிறது எனல் வேண்டும்.

ஒருவகையிற் பார்க்கும் போது நான் எழுதும் கட்டுரைகள் பலவற்றிலும் இவ்வொப்பியல் நோக்கு நிலை இழையோடுகிறதெனலாம். இலக்கியமும் அதன் விளை நிலமாகிய சமுதாயமும் உலகப்பொதுவான நியதிகளுக்கு ஏற்ப நடப்பனவே என்னும் உண்மையை உணர உணர இந்நோக்கு இலக்கியக் கல்விக்குப் புதிய பொருளைத் தருவதாயுள்ளது. இத்தகைய இலக்கிய நோக்கைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியின் விளைவே இத்தொகுதியுள் அடங்கியுள்ள கட்டுரைகள்.

ஒப்பியலின் தத்துவங்கள் என்ற முதற் கட்டுரை விஞ்ஞானயுகத்தில் இலக்கியத்தின் நிலையையும் ஒப்பியல் ஆராய்ச்சியின் விஞ்ஞானப் பண்புகளையும் ஆராய்கிறது. இப்பொருள் பற்றி மேனாட்டு நூல்களில் நான் கற்றறிந்தவை கட்டுரையிற் கலந்துள்ளன. இரண்டாவது கட்டுரை தமிழில் ஒப்பியல் இலக்கிய ஆய்வு நடந்திருக்குமாற்றை விவரிக்கிறது. 1968-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடந்த உலகத்தமிழாராய்ச்சிக் கருத்தரங்கிலே இடம் பெற்ற ஒப்பியல் இலக்கிய ஆய்வுகள் குறித்து ஒரு குறிப்பு அதனுடன் இணைத்துள்ளேன். தமிழில் வீரயுகப் பாடல்கள் என்ற கட்டுரை மேற்கூறிய கருத்தரங்கிலே நான் படித்தது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறேன். நான்காவது கட்டுரை இரு கோட்பாடுகள் என்பது மூன்றாவது கட்டுரையின் தொடர்ச்சியாக அது அமைந்து பொருள் விளக்கஞ் செய்கிறது. 'பெரும் பெயர் உலகம்' என்ற ஐந்தாவது கட்டுரையில் பழந் தமிழிலக்கியத்திற்காணும் துறக்கத்தை ஜெர்மானிய மேலுலகத்துடன் ஒப்புநோக்கி இரண்டிற்கும் பொதுவான அடிப்படைகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

ஆறாவது கட்டுரை எமது கால உணர்வு பற்றியது. கிரேக்க இலக்கியச் செய்திகள் ஒப்புநோக்கிற் பயன்படுத்தப் பட்டுள்ளன. பழமை போற்றும் பண்பு எமது நூல்களில் எவ்வாறு செயற்பட்டு வந்திருக்கிறது என்பது நாம் முக்கியமாகக் கவனித்தற்குரிய பொருள். ஒப்பியல் ஆய்வு பொருள் விளக்கத்துக்குப் பேருதவி செய்வதை இக்கட்டுரை காட்டுகிறது. காதலும் கட்டுப்பாடும் கிரேக்க இலக்கியத்துடன் ஒப்புநோக்கி யெழுதப்பட்டுள்ளது. சித்தர் தத்துவம் என்ற எட்டாவது கட்டுரையில் சித்தர் மரபினையும் அதன் முக்கியத்துவத்தையும் கோடிட்டுக் காட்டி சீன நாட்டுத் தாவோயிகளுடன் தமிழகத்துச் சித்தரை ஒப்புநோக்கி விவரித்துள்ளேன். மேனாட்டாசிரியர் சிலரது நூல்கள் இக்கட்டுரையாக்கத்திற்குப் பெரிதும் பயன்பட்டன. ஒன்பது முதல் பதினொன்றுவரையுள்ள மூன்று கட்டுரைகள் மகாகவி பாரதி சம்பந்தமானவை. பாரதி பற்றிய திறனாய்புகளிலே போதியளவு வற்புறுத்தப்பெறா அம்சங்களை இவை எடுத்துரைக்கின்றன.

நூலினிறுதியில் இக்கட்டுரைகளை எழுதுங்கால் துணை நின்ற முக்கியமான நூல்களை வரிசைப்படுத்தியுள்ளேன். விரிவஞ்சித் தேர்ந்த சிலவற்றையே இங்கு குறித்திருக்கிறேன். படைப்பிலக்கியத்திலும் திறனாய்வு முதலிய அறிவிலக்கியத் துறைகள் அயராத உழைப்பை வேண்டி நிற்பன. நடைமுறையனுபவத்தாலும் நூற் பயிற்சியாலுமே இலக்கியக் கல்வி செம்மையடைகிறது. இலக்கியம் என்பது ஞானோதயத்தின் வௌிப்பாடல்ல. அதற்கும் வரன் முறையுண்டு. அட்டவணையில் குறித்துள்ள நூல்களைத் தவிர வேறு பலவும் இக்கட்டுரைகளின் உருவாக்கத்திற்குப் பயன் பட்டிருக்கின்றன. அவற்றிற் சிலவற்றை நூலில் ஆங்காங்குச் சுட்டியிருக்கிறேன். இக்கட்டுரைப் பொருள்களை மேலும் ஆராய விழைபவர்க்கு உசாத்துணை நூல்கள் முதற்படியாக அமையும் என நம்புகிறேன்.

எனது இலக்கிய முயற்சிகளுக்கு வாய்ப்பாக ஆசிரியரும் நண்பரும் அமைந்தனர். இது எனக்குக் கிடைத்த நற்பேறாம். ஈழத்தில் எனது நெருங்கிய இலக்கிய நண்பர்களான முருகையன், சிவத்தம்பி, கந்தசாமி, செல்வராசன் முதலியோரும் தமிழகத்திலே ரகுநாதன், அழகிரிசாமி முதலியோரும் பிரபல கன்னடஎழுத்தாளர் உடுப்பி ஆனந்த மூர்த்தியும் பிறரும் மேனாட்டிலக்கியங்களிற் பயிற்சியும் பாண்டித்தியமும் உடையவரே. இத்தொடர்புகளினால் நானடைந்த பயனை வேறுபடுத்திப் பார்ப்பது இலகுவன்று. குறிப்பாக நண்பர்கள் முருகையனும், சிவத்தம்பியும் இந்நூலிலுள்ள கட்டுரைகளை எழுதுங் காலத்து நீண்ட சர்ச்சைகள் செய்தவர்கள். இலங்கைப் பல்கலைக் கழகத்திலே எனக்குத் தமிழறிவித்த பேராசிரியர் கணபதிப்பிள்ளை தமது விசாலமான உள்ளத்தால் உலக இலக்கியங்களை ஓர்ந்தளந்தவர். எனது ஒப்பிலக்கிய வேட்கைக்கு உற்சாகந்தந்து உர மூட்டியவர் அவர். பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்திலே எனது ஆராய்ச்சி மேற்பார்வையாளரான பேராசிரியர் தொம்சன் 'நடமாடும் கலைக்களஞ்சியம்' என்று வழங்கப்பட்டவர். ஒப்பியலின் தத்துவங்களை அவரிடம் கற்றது மட்டுமன்றி அவற்றிற்கு உருவங் கொடுக்கவும் பழகிக்கொண்டேன். இவர்களுக்கெல்லாம் எவ்வாறு நன்றி கூறுவது? உபசாரத்துக்கு அப்பாற்பட்ட உள்ளத்து நட்புக்கு வார்த்தைகள் ஏது?

பல சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் சிதறிக் கிடந்த கட்டுரைகளைத் தொகுத்து வேண்டிய மாற்றங்கள் செய்யும்பொழுது மிக்க ஆர்வத்துடன் உதவி செய்தவர், எனது முன்னாள் மாணவரான ச.கதிர்காமநாதன். நான் எழுதியவற்றைப் பிரதி செய்வதில் இவரும் வேறு சிலரும் ஒத்தாசை புரிந்தனர். எழுத்தாள நண்பர்களான கணேசலிங்கனும் நா.சுந்தரலிங்கமும் நூலின் அமைப்புப் பற்றி ஆலோசனைகள் கூறியுதவினர். இவர்களுக்கெல்லாம் எனது மனமுவந்த நன்றி.

இத்தொகுதியில் அடங்கிய கட்டுரைகளிற் பெரும்பாலானவை வெவ்வேறு அளவிலே தினகரன் பத்திரிகையில் வௌி வந்தவை. இவற்றைக் காலத்துக்குக் காலம் எழுதப் பண்ணும் பத்திராதிபர் நண்பர் இ.சிவகுருநாதனுக்கு நன்றி உரியது.

இறுதியாக ஒன்று கூற விரும்புகிறேன். பாரதி ஒரு சந்தர்ப்பத்தில் எழுதினான்: "காரியம் மிகப்பெரிது, எனது திறமை சிறிது. 'ஆகையால்' இதனை எழுதி வௌியிடுகின்றேன். பிறருக்கு ஆதர்சமாக அன்று, வழிகாட்டியாக." பயில் தொறும் பாரதியிற் புதுமை காணும் நான், இம்மேற்கோளை நினைந்து கொள்கிறேன். இந்நூலிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் தனித்தனி நூலாக விரித்தெழுதக்கூடியது. அந்த வகையில் இக்கட்டுரைகளை முற்குறிப்புரைகளாகவே கருதுகிறேன்.

எனது நூல்களை வௌியிடுவதற்கு மனமுவந்து ஊக்கமளித்து வரும் திரு. செல்லப்பன், கணமுத்தையா ஆகியோருக்கு அன்பு நிறைந்த நன்றிகள்.

'தமிழகம்'
29, 42வது ஒழுங்கை
கொழும்பு - 6.
க. கை



பொருளடக்கம்

    ஒப்பியலின் தத்துவங்கள் - 1
    தமிழில் ஒப்பியல் ஆய்வு - 23
    தமிழ் வீரயுகப் பாடல்கள் - 48
    இரு கோட்பாடுகள் - 61
    பெரும் பெயர் உலகம் - 79
    பொற் காலமும் புதுயுகமும் - 89
    காதலும் கட்டுப்பாடும் - 116
    சித்தர் தத்துவம் - 137
    சிந்துக்குத் தந்தை - 160
    பாரதியும் சுந்தரம் பிள்ளையும் - 196
    பாரதியும் மேனாட்டுக் கவிஞரும் - 219
    உசாத் துணைநூல்கள் - 228
    நூலாசிரியர் அகரவரிசை - 242

     

ஆசிரியரது இதர நூல்கள்
பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்
தமிழ் நாவல் இலக்கியம்
அடியும் முடியும்

 


1. ஒப்பியலின் தத்துவங்கள்

நவீன ஆராய்ச்சியிற் காணப்படும் முக்கிய பண்புகளிலொன்று பல துறைகள் மாறிமாறி ஒன்றை யொன்று ஊடுருவிப் பாதிப்பதாகும். உதாரணமாக ஒரு காலத்தில் மொழிநூல் என்பது இலக்கணத்தை ஆதாரமாகக் கொண்ட மொழி வரலாற்றாய்வாகக் கருதப்பட்டது.இன்று மொழியியலின் சில பிரிவுகளைச் செம்மையாகக் கற்றுத் தேர்வதற்குக் கணிதவியல், புள்ளியியல், பௌதிகவியல் முதலியவற்றின் அறிவு இன்றியமையாதிருக்கிறது. அது போலவே ஒரு காலத்தில் அகழாராய்ச்சி என்பது நிலத்தைத் தோண்டி மறைந்து கிடக்கும் பொருள்களைக் கண்டெடுத்து விளக்கும் பயிற்சியாகக் கருதப்பட்டது. இன்று இரசாயனம், பௌதிகம் முதலிய அறிவியற்றுறைகளின் அறிவு பெரிதும் வேண்டப்படும் ஒரு புத்தம் புதிய ஆய்வுப் பகுதியாக அது வளர்ந்து வருகிறது. இப்பொதுப் போக்கிற்கு இயைய இலக்கியமும் தற்காலத்திற் பிறதுறைகளின் தாக்கத்தைப் பெற்று வருகின்றது. ஒரு காலத்தில் கவிதை என்பது கருவிலே திருவுடையாரால் படைக்கப் பெற்று இன்பம் பயக்கும் இயல்பொன்றே அமைந்த "தூய" கலையாகக் கருதப்பட்டது. இன்றோ பொறிமூளையாம் கணனி சுமாரான தரமுள்ள கவிதை செய்யுமளவிற்குக் கவிதைக் கலை அறிவியலின் தாக்கத்தைப் பெற்றுள்ளது

இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. எமது யுகம் விஞ்ஞானயுகம். விஞ்ஞானம் எமது வாழ்க்கை முழுவதையும் எண்ணற்ற வழிகளிலும் வகைகளிலும் பாதிக்கிறது. ஆகவே வாழ்க்கையின் விளைபொருளாகவும் இலட்சியக் கனவாகவும் அமைந்த இலக்கியம் அறிவியலின் செல்வாக்கைத் தவிர்த்து இயங்கமுடியுமா? முடியாது. விஞ்ஞான யுகத்திலும் இலக்கியம் தனக்கெனவோர் இடத்தைப் பெற்றே உள்ளது. ஆனால் அவ்விலக்கியத்தின் தன்மை நிச்சயமாக மாற்ற மடைகிறது. புதிய கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் அது ஏற்றாலன்றிச் செயற்பட வியலாது.

படைப்பிலக்கியம் ஒரு புறமிருக்க இலக்கிய ஆய்விலும் நோக்கிலும் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒரு சிறு உதாரணம் காட்டுவோம். சென்ற நூற்றாண்டின் பிற்கூறுவரை இலக்கிய வரலாறு எமது மொழியில் எழுத முயன்றவர் எவருமிலர். ஏனெனில், காலவாராய்ச்சி முக்கியமாகக் கருதப்படவில்லை. விஞ்ஞானப் பிரிவாகிய உயிரியலின் நியதியாகப் பரிணாமக் கொள்கை தோன்றியதையொட்டி படிமுறை வளர்ச்சி என்னுங் கோட்பாடு சிந்தனையின் அங்கமாக அமைந்த காலத்திலேயே இலக்கிய வடிவங்களின் தோற்றமும் வளர்ச்சியும் பொருண்மை சுட்டுவனவாயின.

இவ்வாறு இலக்கிய ஆய்வில் வந்து புகுந்த புது முறைகளில் ஒன்றே ஒப்பியல் ஆய்வு. இலக்கியத்துக்கு முன்னதாக ஒப்பியல் நோக்கு மொழியாராய்ச்சியின் சிறப்புப் பண்பாக இருந்தது. அதற்கும் முன்னதாக அறிவியற்றுறைகளின் தனிச்சிறப்புப் பண்பாகவிருந்தது. ஒப்புநோக்கு மொழியாராய்ச்சியை நெறிப்படுத்திய பின்னரே மொழி ஆய்வு, மொழியியல் ஆயிற்று. மொழியியல் அறிவியலின் (Science) அந்தஸ்தைப் பெற்றது. மொழியியலுக்குப் புதுத்தகைமை அளிக்குமுன் மானிடவியல், சமூகவியல், பொருளியல், புவியியல் முதலியவற்றிற்கு அறிவியல் அந்தஸ்தைக் கொடுத்தது ஒப்பியல் ஆய்வேயாகும். சுருங்கக் கூறின் அது சென்றவிடமெல்லாம் சிறப்புச் செய்துள்ளது என்று கூறலாம். ஒரு வகையிற் பார்த்தால் எமது மொழியில் மட்டுமன்றி வேறு பல மொழிகளிலும் ஒப்பியல் ஆய்வானது இலக்கியத் துறைக்குக் காலங் கடந்தே வந்து சேர்ந்திருக்கிறது. ஒப்பியற் சட்டம், ஒப்பியல் மதம், ஒப்பியற் கல்வி, ஒப்பியல் அரசியல் என்பன ஓரளவு வளர்ச்சிபெற்றவையாகக் காணப்பட ஒப்பியல் இலக்கியம் கடைக் குட்டியாக இருக்கிறது எனலாம். ஆகவே அதனைக் கவனமாக வளர்க்க வேண்டியுள்ளது. 

இன்னொரு வகையிற் பார்க்கும் பொழுது ஒப்பியல் நோக்கு இலக்கியக்கர்த்தாக்களிடத்துத் தொன்றுதொட்டுக் காணப்படுகிறது. பிற நூலாசிரியனைப் பற்றிய அறிவும் பிற நூற் பயிற்சியும் அடிப்படையில் ஒப்புநோக்குடையனவே. மிகப் பழங்காலத்தவரான சான்றோரைக் கணக்கெடுக்காது விட்டால் எமது தலையாய நூலோரெல்லாம் வடமொழியறிவுடையோராகவே இருந்திருக்கின்றனர். அது மட்டுமன்று. கம்பனைப் போன்ற புலவருக்கு வடமொழியோடு கன்னடம் முதலிய திராவிட மொழிகளும் தெரிந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு. இலக்கியகாரரைவிட இலக்கணகாரரும் இலக்கணகாரரைவிடச் சமய நூலாரும் பன்மொழிப் புலமையும் பரந்த ஒப்புநோக்கு முடையவராயிருந்தனர்.

    "தேவ பாடையில் இக்கதை செய்தவர்
    மூவ ரானவர் தம்முளும் முந்திய
    நாவி னார்உரை யின்படி நான்தமிழ்ப்
    பாவி னால்இது உணர்த்திய பண்பரோ"

எனக் கம்பன் நூல் வரலாறு கூறும் போது தனக்கு முன் வடமொழியில் இராம காதையைப் பாடிய மூவரையும் அவருள்ளும் ஆதிகவியாகிய வான்மீகியையும் சிறப்பாகக் கூறுகின்றனன். மூவரையும் ஒப்புநோக்கி அவருள் வான்மீகியையே தான் பின்பற்றிருப்பதாகக் கூறுகிறான் கம்பன். இம்மூவரானவர் வான்மீகி, வியாசர், அகத்தியர் என்பது மலையாள மொழியிலுள்ள ராமசரிதம் கூறுஞ் செய்தி. நகர் நீங்கு படலத்திலே

    "தென்சொற் கடந்தான் வடசொற் கலைக்கு
    எல்லை தேர்ந்தான்"

என்று கம்பன் இராமனைக் குறித்துக் கூறுவது கம்பனது இரு மொழிநோக்குக்கு மற்றொரு சான்றாகும். ஆதிகவியின் பெருமையையும் பேராற்றலையும் பலபடப்போற்றும் கம்பன் எத்தனையோவிடங்களில் கதையமைப்பு, பாத்திர வார்ப்பு முதலியவற்றில் வான்மீகியிலிருந்து வேறுபடுவதற்கு ஆதி காவியத்தை மனத்திருத்தியமையே ஏதுவாகும். கம்பனைப் போலவே எமது யுகத்தின் மகாகவியான பாரதியும் பன்மொழிப் புலவனாகத் திகழ்ந்தான். "யாமறிந்த புலவரிலே" என்று அவன் பாடும்பொழுது ஒப்புநோக்கியேதான் கண்ட உண்மையை உரைக்கின்றான். அதுபோலப் பாஞ்சாலி சபதத்தைப் பாடியபோது சிற்சில இடங்களில் வியாசரிலிருந்தும் வேறுபடுவதற்கும் ஒப்புநோக்கே ஏதுவாகும். தற்கால ஆசிரியர் சிலர் ஐரோப்பிய மொழியறிவுடையராதலால் இலக்கியத்தைப் படைக்கும் போதும் விமர்சிக்கும்போதும் ஐரோப்பிய இலக்கியங்களை மனத்திலிருத்திக் கொள்கின்றனர்.

இலக்கிய ஆசிரியரை விட இலக்கண நூலார் ஒப்பு நோக்கு அதிகம் கை வந்தவராயிருக்கின்றனர். தொல்காப்பியச் சொல்லதிகாரத்துச் சேனாவரையர் எழுதிய உரையிலிருந்து ஒருதாரணம் பார்க்கலாம்:

"வட சொல்லாவது வட சொல்லோடொக்குந் தமிழ்ச் சொல்லென்றாரால் உரையாசிரியரெனின், அற்றன்று: ஒக்குமென்று சொல்லப்படுவன ஒருபுடையனொப்புமையும் வேற்றுமைமுடைமையான் இரண்டாகல் வேண்டும். இவை எழுத்தானும் பொருளானும் வேறுபாடின்மையாகிய ஒரு சொல்லிலக்கணமுடைமையான் இரண்டு சொல்லெனப்படா: அதனால் ஒத்தல் யாண்டையது? ஒரு சொல்லேயார்மன்பது."

சேனாவரையரது கருத்து ஒருபுறமாக, வட சொல்லையும் தமிழ்ச் சொல்லையும் ஒப்புநோக்கி அபிப்பிராயங் கூறுந்தன்மையே இங்குக் கவனிக்கத்தக்கது. சேனாவரையர் போன்ற வட மொழிச் சார்புடையோரது ஒப்புநோக்கு உண்மையில் ஒப்புநோக்கும் மனோ பாவத்தினடிப்படையில் தோன்றியதல்ல என்பதையும் அதன் உள்ளார்ந்த குறைவுபாட்டையும் பின்னர் காட்டுவேன். ஆனால் ஒப்புநோக்கின் பயன் விபரீதமாயமைந்த போதும் ஒப்புநோக்கிற்கு இன்றியமையாததான பன்மொழிப்பயிற்சி எக்காலத்தும் வேண்டப்படுவதே என்பதை இலக்கண உரையியற்றிய இளம்பூரணரை வன்மையாகக் கண்டிக்கும் வட நூற்கடலும் தென்தமிழ்க் கடலும் நிலைகண்டுணர்ந்த ஆசிரியர் சிவஞானயோகிகள் அன்னாரின் பிறமொழியறிவின்மையைக் குறிப்பாகக் குத்திக்காட்டுவது மனங் கொளத்தக்கது. தமிழ் நூல் ஒன்றே வல்ல உரையாசிரியருள்ளிட்டோர் உரையை ஆசிரியர் கருத்தாகக் கொண்டு பின்னுள்ளோரும் மயங்குவாராயினர். இவ்வாறு உரையாசிரியரை மட்டந்தட்டும் சிவஞான யோகிகள் வட நூற் கடலை நிலைகண்டறிந்த சேனாவரையர் என்று புகழ்மாலை சூட்டுவதும் குறிப்பிடத்தக்கதே.

இலக்கண நூலார் இவ்வாறாக இவரினும் கூடியளவு ஒப்புநோக்குடையராய் இருந்தனர். சமயவாதிகள் தருக்கம் முதலியனவற்றில் மறுக்கப்பட வேண்டியனவற்றை ஒருவர் பூர்வபக்கஞ் செய்வது ஒப்புநோக்கின் உதவியைக் கொண்டேயாகும். மணிமேகலைக் காப்பியத்திலே பல்வேறு சமயக் கணக்கரிடம் ஒட்டிய சமயத் துறுபொருள் கேட்கும் மணிமேகலை ஒப்புநோக்கின் பயனாக பௌத்தத்தின் மகிமையை ஐயமின்றி அறிந்து கொள்வதாகக் காட்டுகிறார் சாத்தனார். சைவ சித்தாந்த சாத்திர நூல்களிலொன்றான சிவஞான சித்தியாரில் பரபக்கம், சுபக்கம் ஆகிய இரு பகுதிகளிலும் முறையே பரசமய மறுப்பும் சைவ சித்தாந்த விளக்கமும் கூறப்படுவதற்கு ஒப்புநோக்கு இன்றியமையாதது. சமண சமயத்தவராகிய தொல்காப்பியர் மரபியலிலே தந்திரவுத்திகளை விரித்துக் கூறுமிடத்து, ஒப்பக்கூறல், தன்கோட்கூறல், பிறனுடம்பட்டது தானுடம்படுதல் என்பனவற்றை சமயஞ் சார்ந்த ஒப்பியலின் வழிவந்த தருக்கத்திலிருந்தே எடுத்தாள்கிறார். இவையாவும் சமயக் கணக்கரின் மதி வழிவந்த ஒப்பியலுக்கு உதாரணங்கள்.

இவ்வாறு எமது முன்னோர் ஒப்பு நோக்குடையராயிருந்திருக்கவும் அதனைப் புதுவதாகக் கூற வேண்டுங் காரணம் என்னவெனச் சிலர் எண்ணக் கூடும். அதற்கு விடை கூறுமுகத்தான் நவீன ஒப்பியலின் தத்துவங்களை விளக்கிக் கூறலாம்.

இக் கட்டுரையின் தொடக்கத்திலே ஆற்றல் இலக்கியத்திலும் அறிவிலக்கியத்திலும் ஏற்பட்டுள்ள அறிவியல் தாக்கத்தைக் குறிப்பிட்டேன். நவீன ஒப்பியல் இலக்கியம் இத்தாக்கத்தின் விளைவுகளில் ஒன்று. நவீன ஒப்பியலைப் பண்டைய ஒப்பியலிலிருந்து (அவ்வாறு கூறக்கூடுமானால்) வேறுபடுத்துவது அதிற்கையாளும் முறையேயாகும். விஞ்ஞான முறை விஞ்ஞானத்துக்கு முந்தியோ பிந்தியோ தோன்றுவதல்ல. அது விஞ்ஞானத்தின் உடன் பிறவியேயாகும். அதுபோலவே, நவீன ஒப்பியல் நவீன முறையினின்றும் தோன்றுவது. விஞ்ஞானத்தில் முறையையும் பொருளையும் பிரிக்க முடியாதது போல ஒப்பியல் இலக்கியத்தையும் ஒப்பியல் முறையையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரித்து விட இயலாது.

நாம் மேலே உதாரணங் காட்டிய இலக்கிய ஆசிரியரும் இலக்கண நூலாரும் சமய வாதிகளும் தத்தம் தேவைக்கும் இயல்புக்கும் ஏற்பப் பொருள்களை ஒப்பு நோக்கினர். எனினும் அவர்களின் பிரதான நோக்கம் தமது நம்பிக்கையை அல்லது அபிப்பிராயத்தை உயர்த்தி உறுதிப் படுத்துவதே. சித்தியாரில் பரபக்கமும் சுபக்கமும் அமைத்ததன் நோக்கம் உண்மையில் குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொள்வதல்ல. அது ஓரளவிற்குத் தெரிந்து தௌிவதாகும். சமயவாதியாகிய சகலாகம பண்டிதர் மெய்ச்சமயமாகத் தான்கைக் கொண்டிருந்த சைவத்தை நிலை நாட்டுவதற்கு இதர சமயங்களை நிராகரிக்க வேண்டுமாதலால் பரபக்கத்தை அமைத்தார் சேனாவரையர். வட மொழியையும் தென் மொழியையும் ஒப்பு நோக்கியதன் பயனாக இரண்டையும் மேலும் ஆழமாக அறியவில்லை. மாறாக, "தமிழ்ச் சொல் வடபாடைக்கட் செல்லாமையானும் பட சொல் எல்லாத் தேயத்திற்கும் பொதுவாகலானும் இவை வடசொல்லாய் ஈண்டு வழங்கப்படன வெனல் வேண்டும்" என்று ஒரு பாற்கோடியுரைத்தார். சிவஞான யோகிகள் புகழ்வது போலச் சேனாவரையர் வடநூற் கடலை நிலை கண்டுணர்ந்த வராயிருத்தல் கூடும். ஆயினும் தமிழையும் வட மொழியையும் ஒப்பிட்ட போது இரண்டும் பன்னெடுங்காலமாக அருகருகே வழங்கியமையால் தமிழ்ச் சொற்களும் வடபாடைக்குட் சென்றிருக்கலாம் என்ற எண்ணம் அவருக்கத் தோன்றவில்லை. காரணம் வட மொழி தேவபாடை என்ற மூடநம்பிக்கையாகும். ஆகவே அவரது ஒப்புநோக்கு ஏலவே மனத்திலிடம் பெற்றிருந்த ஒரு தலையான தப்ெண்ணத்துக்கு அரண்செய்வதாகவே அமைந்து விடுகிறது. அவரது ஒப்புநோக்குப் பெயரளவில் ஒப்பு நோக்கேயன்றி உண்மையில் தவறான முடிவுகளைத் தவிர்க்கவும் தடுக்கவும் முன்னேற்பாடுகளைக் கொண்ட தாயிருக்கவில்லை. சேனாவரையர் வட சொல் எல்லாத்தேயத்திற்கும் பொது என்பது எத்துணைத் தவறானதோ அது போன்றதே அதற்கு மறுதலையாகத் திராவிடம் உலக மொழிகளில் தாய் என்பது. ஒப்பியல் மொழி என்னும் பெயரைத் தாங்கினாலும் தேவ நேயப்பாவாணர் போன்றோரது ஆய்வு நூல்கள் ஒரு தலைப் பட்சமானவையே. பாலூர் கண்ணப்ப முதலியார் கூறியிருப்பதுபோல், தேவநேயப் பாவாணருக்கு "இருக்கும் தமிழ்ப்பற்று அளவிடற்பாலதன்று" என நாமும் கூறலாமேயன்றி அவரது ஒப்பியல் ஆராய்ச்சி முறையைப் பாராட்டவியலாது. கண்ணப்பமுதலியார் கூறுகிறார்: "வட மொழி எனக் கருதப்படும் பல சொற்கள் தமிழ் சொற்களே என்று அச்சொற்களின் அடிச் சொற்களின் வழி நிறுவிக்காட்ட வல்லவர்...தேவநேயப் பாவாணர்." தனிப்பட்ட ஒருவரது வல்லமையல்ல முக்கியம், அவர் கைக்கொள்ளும் ஆராய்ச்சி முறை அப்பழுக்கற்றதா என்பதே கவனிக்க வேண்டியது. சுநிதிகுமார், சட்டர்ஜி, பறோ முதலிய மொழிநூல் ஆராய்ச்சியாளரை உதாரணத்துக்காக எடுத்துக் கொள்வோம். வட மொழியில் வழங்கும் திராவிடச் சொற்களை இவர்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றனர். சுமார் எழுநூற்றுக்குமதிகமான திராவிடச் சொற்கள் பல்வேறு காலப் பகுதிகளில் வட மொழியிற் சென்றடைந்திருப்பதைப் பேராசிரியர் பறோ தொகுத்துள்ளார். ஆனால் இவர் இவ்வாறு கூறும் பொழுது திராவிடம் உலகத் தாய்மொழி என்னும் தற்பெருமையோ அல்லது வட மொழி தேவபாடை என்னும் அகங்காரமோ இல்லாது இருமொழிகளையும் ஒப்பநோக்கி ஒன்றையொன்று பாதித்து வந்தமையைச் சான்று காட்டி நிறுவுவதே நோக்கமாயுள்ளது. அது மட்டுமல்லாது மொழிகள் ஒன்றையொன்று எவ்வாறு பாதிக்கின்றன என்னும் மிகப் பொதுவான நியதியை உணர்த்துவதும் அவ்வாய்வின் பயனாக அமைகிறது. 

ஆனால் இவ்வாய்வு தனியொரு மனிதரின் வல்லமையாகவோ, சிலருக்குத் திருப்தி தரும் முயற்சியாகவோ, இராமல் யாவரும் ஏற்றுத் தாமும் மேற்கொள்ளக்கூடிய ஆராய்ச்சியாக இருக்க வேண்டுமாயின், ஆராய்ச்சி முறை மயக்கமின்றியும் அறிவியல் சார்ந்ததாயும் இருத்தல் அவசியம். உதாரணமாக வடமொழிக்கண் வழங்கும் திராவிடச் சொற்களை நிருணயிக்க முனைந்த பறோ சில நடைமுறைகளை மேற்கொண்டார் வடமொழிக்கண் பயிலும் ஒரு சொல், திராவிடச் சொல்லாயிருக்கலாம் என்னும் ஐயமேற்பட்டதும் முதலில் அச்சொல் திராவிட மொழிக் குடும்பத்திலே எவ்வாறு பரந்து காணப்படுகின்றது என்பதனை நோக்கினார். வட திராவிட மொழிகளிலும் அச்சொல் வழக்காறுடையதாயின் அது திராவிடச் சொல்லாக இருத்தல் கூடுமென்று ஓரளவு துணிந்தார். அதன் பின்னர் அச்சொல் இந்தியாவிலுள்ள ஆரிய மொழிகளில் எத்தகைய வழக்காறுடையது என்பதனை நோக்கினார். அதன் பின்னர் பிற இந்தோ-ஆரிய மொழிகளில் எவ்வாறு வழங்குகிறது என்பதை ஆராய்ந்தார். ஆரிய மொழிகளிலும் இந்தியாவிற்கு வௌியேயுள்ள இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலும் அதன் வரலாறு திருப்திகரமாக இல்லா விட்டால் அது திராவிடத்திலிருந்தோ திராவிட மொழியொன்றிலிருந்தோ வட மொழிக்குச் சென்றிருத்தல் வேண்டும் எனத் துணிந்தார். அதன் பின்னரும் வட மொழி நூல்களிலே எக்காலத்திலிருந்து அச் சொல் பயின்று வருகிறது என்பதனை நிச்சயப்படுத்திக் கொண்டார். இவையாவற்றின் இறுதியாகவே அச் சொல் ஏறத்தாழ இன்ன காலத்திலே தமிழிலிருந்தோ அல்லது மூலத் திராவிடத்திலிருந்தோ வட மொழிக்குச் சென்றது என ஒருவாறு துணிந்து கூறினார்.

மேற்கூறிய ஆராய்ச்சியைக் கவனித்தால் பேராசிரியர் பறோவுக்கு "வடமொழி எனக் கருதப்படும் சில சொற்கள் தமிழ்ச் சொற்களே என நிறுவிக் காட்டும் வல்லமை" அன்றி ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் சொற்கள் புடை பெயர்வதைக் கண்டறியும் முறை கைவரப் பெற்றமை புலனாகும். இதை இன்னுஞ் சிறிது விளக்குவோம். தனியொரு மனிதனுடைய தனிச் சிறப்பான ஆற்றலை மாத்திரம் இவ்வாராய்ச்சிக்கு அளவு கோலாகக் கொண்டால் அது பொதுவான நியதிகளுக்குக் கட்டுப்படாத தொன்றாகி விடுகிறது. அவ்வாறன்றிச் சில விதிகளினடிப்படையில் நடை முறைகள் அனுட்டிக்கப் பட்டால் அவ்விதிகளைப் பின்பற்றும் மாணவன் எவனும் அவ்வாராய்ச்சியைச் சிறிய அளவிலேனும் செய்தல் முடியும். முடிந்தால் அது பொதுவான பரிசீலனையாக அமைகிறது. விஞ்ஞானப் பரிசோதனைகளை எத்தனை பேரும் எத்தனை தடவையும் செய்யலாம்; அவ்வடிப்படையிலேயே படிப்படியாக அறிவு விருத்தியடைகின்றது. 

மொழியாராய்ச்சி பற்றிய இவ்வுதாரணம் அறிவியல் முறை எவ்வாறு செயற்படுகின்றது என்பதை ஓரளவு விளக்குகிறது என எண்ணுகிறேன். இலக்கியத்தில் இம்முறை பெருமளவு செயற்படுவது ஒப்பியல் ஆய்வியலாகும் எனினும் அதை விவரிக்குமுன் மேற்கூறிய விஞ்ஞான முறையாது எனச் சுருக்கமாகக் கூற வேண்டும்.

ஒரு பொருளை அல்லது நிகழ்வை விஞ்ஞானி கூர்ந்து நோக்கிக் குறித்துக் கொள்வனவற்றைத் தரவுகள் என்கிறோம். ஒரு பொருளைப் பற்றிய தரவுகளுடன் பிறிதொருதொகுதித் தரவுகளை ஒப்புநோக்கும் பொழுது இயற்கையான ஒருமைப்பாடுகள் சிலவற்றையும் பொதுக் குணங்களையும் காண்கிறோம். அதாவது பல முறை அவதானித்த தரவுகளின்றும் சில பொது முடிவுகள் அன்றி விதிகள் வகுக்கப்படுகின்றன. சில சமயங்களில் தரவுகளைப் பெற முன்னரே ஏதாவதொரு பொதுமுடிவை அல்லது விதியை ஊகமாகக் கொள்கிறோம். அதனையே கருதுகோள் என்பர். பரிசோதனையின்போது கிடைக்கும் முடிவு முதற்கொண்ட கருதுகோள் சரியா தவறா என்பதைக் காட்டும். ஆயினும் கருதுகோள், ஆய்விற்கு முதற்றேவையாக அமையும். விஞ்ஞானத்துக்கு ஒவ்வும் இவ்வாய்வு முறையை ஒப்பியல் ஆராய்ச்சியின் மூலம் கலை இலக்கியத்துறைக்கும் ஏற்றதாக நாம் அமைத்துக் கொள்ள இயலும். இதனைச் சிறிது விரித்துரைக்கலாம். 

விஞ்ஞான ஆராய்ச்சியிலே எடுகோள் முக்கிய இடம் வகிக்கிறது. பொதுவாக விஞ்ஞானிகள் இரு அடிப்படை மெய்ம்மைகளைத் தமது ஆராய்ச்சிகளுக்கு முதற்படியாக ஏற்றுக் கொள்வர். நடப்பவைக் கெல்லாம் காரணம் இருக்கிற தென்பதும் ஒரே தன்மையான காரணங்கள் நிலைமைகள் மாறாதிருக்குமானால் ஒரே மாதிரியான பயனையே அளிப்பன என்பதும் அவர்கள் ஏற்கும் இரு எடுகோள்கள். முதலாவது எடுகோள் முடிவற்ற ஆராய்ச்சிக்கு ஏதுவாகவும் நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கும் சக்தியாகவும் அமைகிறது. இரண்டாவது எடுகோளினடிப்படையில் வெவ்வேறு விஞ்ஞானிகள் குறிப்பிட்ட பரிசோதனைகளைத் திரும்பச்செய்து சரிபார்க்க வழி பிறக்கிறது.

இவ்விரு எடுகோள்களை இலக்கிய ஆராய்ச்சியாளனும் முன்கூட்டியே ஏற்றுக் கொள்வதற்கு தடையெதுவுமில்லை. ஒரு நூல் குறிப்பிட்ட காலப்பகுதியிலே தோன்றுவதற்கு ஏதுக்கள் இருத்தல் வேண்டும். உலகம் உய்ய வேண்டுமென்பதற்காகத் திருவுளங் கொண்ட பெரியார் திடீரென அருளிச் செய்வது இலக்கியம் என்ற ஐதீகத்தை நீக்கி, காரண காரிய நியதிக்குள் இலக்கியத்தை அடக்க இவ்வெடுகோள் உதவுகிறது. அது முதற் பயன். காரணம் இருத்தல் வேண்டும் என்று நம்பினால் அக்காரணத்தைக் கண்டுபிடிக்க அயராது உழைத்தலவசியம். உதாரணமாகத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே சான்றோர் செய்யுள்கள் சித்திரிக்கும் வீரயுகத்தை யடுத்து, அறவியல் நூல்களும் அவற்றுக்கு அடிப்படையான தீமைக் கோட்பாடும் அதன் வௌிப்படையான சிணுங்கித்தனமும் தோன்றக் காண்கிறோம். வீரயுகத்திற் காணப்பட்ட நன்னம்பிக்கைக் கோட்பாடுகள் அதன் வௌிப்படான புலனின்ப வேட்கையும் களிப்பார்வமும் இலக்கியத்தினின்றும் மறைந்து விடுகின்றன. அவை தோன்றுமிடத்தும் இழித்துரைக்கப்படுகின்றன. இத்தகைய ஒழுக்கவியல் உரைக்கும் நூல்கள் தோன்றத்தக்க காரணம் இருத்தல் வேண்டும். அதனை ஒப்புக் கொண்டால் அக்காரணத்தைக் கண்டறிய வாய்ப்பேற்படும். பிரயாசைப் பட்டால் காரணத்தை அறிவது உறுதி. காரணத்தைத் தேட முயலவும் வரலாற்றுப் பார்வை தவிர்க்க முடியாதவாறு வந்தமைந்து கொள்கிறது. அது மட்டுமல்லாது வரலாற்று அடிப்படையிற் காரணகாரிய ஆய்வைப் பயன் படுத்தும்பொழுது குறிப்பிட்ட நூல்களின் தோற்றத்திற்குப் பொருளாதார சமூக அரசியல் நிலைமைகள் காரணிகளாக அமைகின்றன. இக் காரணிகள் புறநிலையில் வைத்து நோக்கியாராயத்தக்கன. இயற்கை அறிவியற்றுறைக்குரிய முறைகளாம் 'சோதித்தறியும் தன்மை,' 'தற்சார்பற்ற நிலை,' 'மயக்கமின்மை' முதலியன இக்காரணிகளுக்குப் பண்பாயமைகின்றன. இவற்றைத் தரவுகளாகக் கொள்ளுவோம். கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அற நூல்கள் தோன்றற்குரிய சூழமைவையும் உந்தல்களையும் நியதிகளாகக் கருதிக் கொள்கிறோம்.

இனி, மேலே கூறிய இரண்டாவது எடுகோளைக் கவனிப்போம்: ஒரே மாதிரியான காரணங்கள் ஒரே மாதிரியான பயனையே அளிக்கும் என்பது. இது பரிசோதனைக்கு எம்மைத் தூண்டுவது தமிழ் வீரயுகத்தைப் போலவே கிரேக்கரது வீரயுகமும் அமைந்திருந்தது. அவ்வாறாயின் அங்கும் வீரயுகத்தையொட்டி அறநூல்கள் எழுந்தனவா எனப் பார்க்கலாம். அதாவது ஒத்த காரணங்கள் ஒத்த பயனையளித்துள்ளனவா எனச் சரிபார்க்கலாம். அங்கும் அறநூல்கள் தோன்றியிருக்கக் கண்டால் எமது ஊகம் அல்லது கருதுகோள் பிழையற்றது எனக் கொண்டு அதனை இலக்கிய வரலாற்று விதிகளிலொன்றாக்கலாம். உண்மையில் வீரகாவியங்கள் பாடிய சான்றோன் ஹோமரை யடுத்து ஹீசியொட் போன்ற அறநூற்புலவர் கிரேக்கத்திலே தோன்றினர். எமது அறநூலாசிரியரைப் போல அவரும் பெண் வெறுப்பு, புலனடக்கம், இறை பக்தி முதலியவற்றைப் பெரிதும் வற்புறுத்தினர்;புராணக் கதைகள் பெருவழக்குப் பெற்றன. கவிஞர் போதகர்களாக மாறினர். இவற்றையெல்லாம் உற்று நோக்கும் போது தமிழிலும் கிரேக்கமொழியிலும் ஒரே தன்மையான சூழ்நிலைகள் ஒரே மாதிரியான இலக்கிய வகையைத் தோற்றுவித்தமை உறுதிப்படும். இதன் பயனாக இலக்கியத்துக்கு ஓர் உலகப் பொதுமை ஏற்படுகிறது. இவ்வடிப்படையிலேயே ஒப்பியல் இலக்கியம் உலகப் பொதுவான இலக்கியத்தோடு ஒன்றுபடுகின்றது.

ஒப்பியல் இலக்கிய ஆய்வு முன்னோடிகளில் ஒருவரான தெயின்(Hippolyte Taine, 1828-1893), ஒப்பியல் இலக்கியம் இறுதியில் உலக இலக்கியக் கோட்பாட்டிற்கு எம்மை இட்டுச் செல்லல் வேண்டும் என்றே கருதினார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தெயின், ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சியாளன் கவனஞ் செலுத்த வேண்டிய பொருள்களைக் குறிப்பிடுமிடத்து, இனம், சூழமைவு, காலம், மனத்திறன் என்பனவற்றை வற்புறுத்தினார். சூழமைவிலே புவியியற் காரணிகள் அடங்கும். இவற்றிற் சில இன்று அத்துணைச் சிறப்புடையவனாகக் கொள்ளப்படுவதில்லை. சில புதிய காரணிகளை நாம் இன்று சேர்த்துக் கொள்ளுதல் கூடும். ஆனால் "இலக்கிய ஆராய்ச்சியை ஒரு விஞ்ஞானப் பரிசோதனை போல நடத்தவும், அதனைச் சரிபார்க்கவும், மேலும் மேலும் திருத்தமுறச் செய்யவும்" முடியும் என்று ஆணித்தரமாகக் கூறியவருள் ஒருவர் தெயின்.

இக்கூற்றிலும் முறை, அழுத்தம் பெறுவதைக் கவனிக்கலாம். இதன் முக்கியத்தை எவ்வளவு வற்புறுத்தினாலும் தகும். பழைய விஞ்ஞானத்துக்கும் புதிய விஞ்ஞான நோக்குக்குமுள்ள வேறுபாட்டை இங்குக் கூறுதல் பொருத்தம். தொகுத்தறிமுறை முற்காலத்திலிருந்தே வெவ்வேறு வகையில் வழங்கி வருகிறது. எமது பண்டை நூலோர் கூறும் காட்சியளவை தொகுத்தறிமுறையைச் சேர்ந்ததே. ஆனால் பழைய தொகுத்தறிமுறையில் கருதுகோள் முக்கியம் பெறவில்லை. அம்முறையில் இயற்கையில் யாவும் மறைந்து கிடப்பதாகவும், அவற்றைத் தேடிக் கண்டு பிடிப்பதே ஒருவர் செய்யக் கூடியதாகவும் கருதப்பட்டது. இவ்வடிப்படையிலேயே பண்டைய அறிவாராய்ச்சி இயல் (Epistemology) அமைந்தது. இது விஞ்ஞானத்தின் தோற்றத்தைப் பெற்றிருப்பது போலக் காணப்பட்டாலும் உண்மையில் விஞ்ஞானத்துக்கு முற்பட்ட நோக்கேயாம். ஏனெனில் பண்டைய தொகுத்தறிமுறையும் அறிவு ஆராய்ச்சி இயலும் நவீன விஞ்ஞானத்துக்குப் போதிய அடிப்படையும், நெறியும் ஆகா. நவீன விஞ்ஞானத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று இடையறாத பரிசோதனையாகும். இப்பரிசோதனைகளுக்கு அநுசரணையாகத் துணிகரமான கருதுகோள்கள் கைக்கொள்ளப் படுகின்றன. இவற்றின் பயனாகத் தாமாகத் தோன்றும் உண்மைகளேயன்றிப் புதிய உண்மைகளும் நிலை நாட்டப் படுகின்ற தொகுத்தறிமுறையும் அறிவாராய்ச்சி இயலும் மூட நம்பிக்கைகளையும் இறைக் கோட்பாடுகளையும் விமர்சனஞ் செய்ய உதவக் கூடும். ஆனால் புதிய புதிய கருதுகோள்களின் அடிப்படையில் தொடர்ந்து பரிசோதனைகள் நடாத்திப் பொருள்களுக்கிடையே புதிய உறவுகளையும் தொடர்புகளையும் காண்பதற்கு மட்டுமின்றிப் புதிய பொருள்களையே கண்டுபிடிக்க அவை உதவா. இந்நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்பட்ட விஞ்ஞானப்புரட்சியானது அதற்கு முற்பட நிலவிய விஞ்ஞான முறைகளை வழக்கறச் செய்தது. சார்புக் கொள்கையும், சொட்டுக் கொள்கையும், உளப் பகுப்பாய்வியலும் புதிய ஆராய்ச்சி முறைகளை இன்றியமையாதனவாக்கின.

எமது சம்பிரதாயமான இலக்கிய ஆய்வு முந்திய தொகுத்தறிமுறையை ஒத்ததாகவேயுள்ளது. இலக்கியங்கள் மேதைகளால் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றிற் சிறந்த கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றன. நூற்பயிற்சியுள்ளோனொருவன் இவ்விலக்கியங்களைப் படித்தால் விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். இதுவே பொதுவான நம்பிக்கையாய்க் காணப்படும். இதன் தருக்கரீதியான முடிவாக ஒருவன் யாவுமுணர்ந்தவனாக இருப்பான் அல்லது ஒன்றுந் தெரியாதவனாயிருப்பான். ஆனால் நவீன விஞ்ஞானி தான் செய்கின்ற முயற்சியெல்லாம் ஆகக் கூடிய அளவில் உண்மையின் ஒரு பகுதியே என்று உணர்கிறான். பழைய கல்வி முறைப்படி ஒருவன் இலக்கண இலக்கியத்தின் வரம்பு கண்டவனாகக் கொள்ளப்படலாம். ஆனால் இன்று அவ்வாறு கருத முடியுமோ முடியாது. உதாரணமாகத் திருக்குறளை எடுத்துக் கொள்ளுவோம். இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை என்னும் குருட்டு நம்பிக்கை ஒரு புறமிருக்க திருக்குறளைக் கரைகண்டவராகப் பலர் புகழப் படுவதைக் காண்கின்றோம். குறளிலுள்ள ஆயிரத்து முந்நூற்று முப்பது பாக்களையும் ஓதியுணர்ந்தவரும் உள்ளனர். ஆயினும் குறள் பற்றிய பல ஆதாரச் செய்திகள் தாமும் இன்னும் எமக்குத் தௌிவாகத் தெரிந்தில.

குறள் தோன்றிய காலம், அதன் நோக்கம், அது எடுத்துரைக்கும் வாழ்க்கைத் தத்துவம், அதன் மொழி நிலை, அதனாசிரியர் மதம், குறள் காட்டும் சமுதாய நோக்கு, இலட்சியம், அதன் குறைபாடுகள், முரண்பாடுகள், என்பன போன்ற பொருள்களுக்குத் தீர்க்கமான விளக்கம் கூறப் படவில்லை. இதனைத் தனியொரு மனிதன் செய்து முடிக்கலாம் என எண்ணுவதும் தவறு. ஏனெனில் நவீன விஞ்ஞானம் ஐயமின்றிக் காட்டுவது போல "பூரண அறிவு எந்த ஒருவனது சிந்தனைக்கும் அப்பாற்பட்டதாகும்." திருவற்றுவ மாலைப் புலவரும் தற்காலக் கருத்துரைகாரர் சிலரும் கூறியுள்ளவற்றை மாத்திரம் குறள் பற்றிய முடிந்த முடிபாகக் கொள்ள வியலாது. அது மட்டுமல்ல. இன்று குறள் எடுப்பார் கைப்பிள்ளையாகவும் இருக்கிறது. மாறுபட்ட கருத்துக்களுக்குக் குறட்பாக்கள் இடமளிப்பதைக் குறள் உரையாசிரியரே எமக்குக் காட்டியுள்ளனர். இந்நிலையில் குறளாராய்ச்சி இது காலவரை, கூறியது கூறலாகவோ, அன்றிக் குதர்க்கமாகவோ இருந்து வருகிறது. இவ்வவல நிலையிலிருந்து இருதலைக் கொள்ளி எறும்பு நிலையிலிருந்து குறளாராய்ச்சி விடுதலையடைந்து பயனுள்ளதாய் அமைய வேண்டுமானால் புதிய ஆய்வு முறை கைக்கொள்ளப்படல் வேண்டும். மொழியியல், வரலாறு, சமுதாயவியல், ஒப்பியற்சமயம், மெய்யியல், அரசியல் முதலிய பல துறையைச் சேர்ந்தவரும் ஒன்று சேர்ந்து யாவரும் அங்கீகரிக்கும் விதிமுறைகளுக்கேற்ப ஆராய்ந்தால் ஒருவாறு உண்மை துலக்கமடையும். சுருங்கக் கூறுவதாயின் முறை திருந்தவேண்டும். ஆனால் முறை செயற்படுவதற்கு முதற்றேவையாகக் கருதுகோள்கள் அவசியம். கருதுகோள்கள் கனவிலே தோன்றுவனவல்ல. அந்தராத்மாவின் குரல் இது. விஷயத்தில் அத்துணைப் பயனளிக்காது. 

இவ்விடத்திலே ஒப்பியல் நோக்கும், சான்றுகளும் கைகொடுத்து உதவக் கூடியன. திருக்குறளைப் போன்ற பிற அறநூல்களைப் பற்றிய செய்திகள் அனைத்தும் கூர்ந்து அவதானிக்கத் தக்கன. தம்மபதம், கொன்பூசியஸ் போதனைகள், மார்க்கஸ் ஔரேலியஸ் சிந்தனைகள், வடமொழித் தரும சாத்திரங்கள் குறிப்பாகக் கௌடில்யரது அர்த்தசாஸ்திரம் முதலியன குறளாராய்ச்சிக்கு உதவுவன. இவற்றைப் பற்றிய செய்திகளையும் கணக்கெடுப்பதன் மூலம் இந்நூல்களுக்கிடையேயுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை முதலிற் காண்டல் கூடும். அதன் பின்னர் இவற்றின் வளர்ச்சி ஒழுங்கு பற்றிச் சில பொது நியதிகளை வகுக்கலாம். ஒரேதன்மை வாய்ந்த நியதிகளை ஒன்றாக நிரைப்படுத்துவதன் மூலம் கூடிய விளக்கம் ஏற்படுகிறது. தெய்வப்புலமைத் திருவள்ளுவனாரின் தனித்திறமையொரு புறமிருக்க "ஒரே மாதிரியான சூழ்நிலைகள் நிலைமைகள் மாறாதிருந்தால் ஒரே மாதிரியான" நூலைத் தோற்றுவிக்கின்றன என்னும் அடிப்படை உண்மை நிரூபணமாகிறது. அதன் வாயிலாகவே குறள் உண்மையான உலகப் பொதுமையைப் பெறுதல் முடியும். மற்றைய நூல்களிலும் சிறந்தது என்பதனால் குறளுக்கு உலகப் பொதுமை வராது. மற்றைய அறநூல்களிற் காணப்படும் பண்புகளே திருந்திய வடிவத்திற் காணப்படுகின்றன என்பதனாலேயே அதற்குப் பொதுமதிப்பு ஏற்படும். அப்பொழுதுதான் குறளின் பொதுப்பண்பும் தனிச்சிறப்பும் எவராலும் ஏற்றுக் கொள்ளப்படும்.

இதுகாலவரை பெரும்பான்மையான எமது தமிழ் ஆராய்ச்சியாளர் குறள் உலகிலேயே தலை சிறந்த வாழ்வியல் நூல் என்னுமடிப்படையிலே தமது ஆய்வுகளை நடாத்தி வந்துள்ளனர். இவ்வடிப்படைத் தப்பெண்ணத்தினால் ஒரேவழி காணப்ட்ட ஒப்பு நோக்கும் அர்த்தமற்றுப் போய்விட்டது. ஏனெனில் ஒன்றைப் பற்றி அபிப்பிராயம் கூறவது விஞ்ஞான முறையன்று. ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளது போல, "உயிருள்ள பொருள்கள் மீது ஆவலும், அவை எவ்வாறு உலகியற் பொருள்களுள் அடங்குகின்றன என்பது பற்றி ஆர்வமும் காட்டுகின்றானேயன்றி, அவை ஏன் உயிருடன் இருக்கின்றன என்ற கேள்விக்கு விஞ்ஞானி இடங் கொடுக்கமாட்டான். அவனுக்குப் பொருள்கள் மீதே கவனம்-அவற்றின் பெறுமதியில் அன்று". இதனையே விடயச் சார்ச்சி அல்லது புறநிலை மெய்ம்மை என விஞ்ஞானம் கூறுகிறது. ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சிக்கு இது மிகவும் வேண்டப்படுவது. இல்லா விட்டால் எமது நூலாய்வு முற்றிலும் அகநிலைப்பட்டதாகிவிடும். இதனை ஒருதாரணத்தால் விளக்குவோம். மனோன்மணீயம் பாயிரத்தில் சுந்தரம் ,பிள்ளையவர்கள்

    "வள்ளுவர் செய்திருக் குறளை மறுவற நன்குணர்ந்தோர்கள்
    உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி"

எனப் பாடுகின்றனர். திருக்குறளையும் மநுதரும சாத்திரத்தையும் ஒப்புநோக்கி குறள் நன்று, மநுதருமம் தீது என்கிறார் ஆசிரியர். இது உண்மையில் ஒப்பு நோக்கல்ல. ஏனெனில் குணத்தின் அடிப்படையில் அபிப்பிராயங் கூறப்படுகிறது. ஆனால் பொருள்கள் நல்லவையா அல்லது கெட்டவையா என்பதை அறிவதுதான் விஞ்ஞானத்தின் நோக்கமன்று. மநுதருமத்திற்கும் குறளுக்கும் வேறுபாடிருப்பது உண்மையே. ஆனால் சுந்தரம் பிள்ளை கூற்றுப்படி மநுதருமம் இருள்; குறள் ஒளி; இஃது பொருந்தாது. மநு ஒருவகையான சமூகஏற்றத் தாழ்வை ஏற்றுக் கொண்டால், குறளாசிரியர் இன்னொருவகையான ஏற்றத் தாழ்வை ஏற்றுக்கொள்ளுகிறார். ஆக இருவரும் ஏற்றத் தாழ்வை நிராகரித்தவர் அல்லர். அதிலே பொதுமை காணப்படுகிறது. ஆனால் சுந்தரம் பிள்ளை கூற்றுப்படி குறள் ஏற்றத் தாழ்வை ஏற்காதது எனவே அது பற்றிய ஆராய்ச்சி அநாவசியமாய்ப் போகிறது. போகவும் குறள் பற்றிய முற்சாய்வான மனப்பதிவு உறுதிப்படுகின்றதேயன்றிப் புதிய விளக்கம் எதுவும் பெறப்படவில்லை.

நல்லது கெட்டது என்ற தீர்ப்பு உண்மையில் அறவியல் சம்பந்தமானது. அது மட்டுமல்ல. அவ்வாறு தீர்ப்புக்கூறுவது நிலையியல் நோக்கின் விளைவாகமுள்ளது. ஆனால் நவீன விஞ்ஞானமோ இயக்கவியல் நோக்கை ஆதாரமாகக் கொண்டது. உலகைக் கண்டறிந்து விவரிப்பது மட்டுமின்றி அதனை எமக்கேற்றவாறு அமைக்கவும் நவீன விஞ்ஞானம் முயலுகிறது. அது போலவே விழுமிய இலக்கியத்தைக் கற்றறிவது மட்டுமல்லாது அதனைப் புதிய கோணத்திற் பார்த்துப் புதிய பொருளைக் கண்டறியும் வழி காணவேண்டும்.

இயற்கையையும் சமுதாயத்தையும் மாற்ற விரும்புபவர்கள் அம்முயற்சிக்கு முதற்தேவையாக அவற்றின் இயக்கவிதிகளைத் தௌிந்து தெரிவதுபோல, இலக்கியத்தைப் பூரணமாக நமதாக்குவதற்கு அதன் இயக்கவிதிகளைத் தெரிந்து கொள்ளல் இன்றியமையாதது. இயக்கவிதிகள் விடயச் சார்பானவை;புறநிலை மெய்ம்மையானவை. எனவே அவற்றை நன்கு விளக்கிக் கொள்ளுவதற்கு மனத்திலே பசையிருத்தலாகாது. வைத்தியன் எத்துணை முன்னெச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் சத்திர சிகிச்சை செய்கின்றானோ அத்துணை தற்சார்பற்ற முறையில் இலக்கிய ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறன்றி எமது சொந்த விருப்பு வெறுப்புகளைக் கட்டுப்படுத்தாது அவற்றைத் துணைக் கொள்வோமானால் புறநிலைக்குரிய உண்மைகளைக் கண்டறிய வியலாது. இதனை ஒருதாரண மூலம் விளக்குவோம்.

தமிழ் வீர யுகத்திலே அரசருக்கும் புலவருக்கும் அத்தியந்த உறவு நிலவியது. புலவரைப் போற்றி வாழ்ந்தனர் மன்னர். அவர்களுக்கு வரையாது வழங்கினர். பாணர், விறலியர், புலவர் முதலியோரைப் புரத்தலைப் பாண்டகன் எனக் கொண்டனர். இச் செய்திகள் சான்றோர் செய்யுட்களிலிருந்து பெறப்படுவன. இவற்றைக் கண்ணுற்ற தற்கால எழுத்தாளர் சிலர் புலவரைப் பேணுதலும் கொடையும் கற்றோரைப் போற்றுதலும் பழந்தமிழ் மன்னரது தனிச் சிறப்பியல்புகள் எனக் கூறவராயினர். அம்மட்டில் நில்லாது புலவரைப்போற்றி வாழ்ந்த பண்பு பழந்தமிழ் மன்னரிடத்து மாத்திரம் காணப்படுவது என்றும் தேற்றமாகக் கூறினர். இத்தகைய எண்ணமும் கூற்றும் இனப்பற்றிலிருந்தும் மொழிப்பற்றிலிருந்தும் எழுவன. ஆனால் ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சி வழி நின்று நோக்கும்போது தமிழ் வேந்தர்க்கே உரிய இம்மரபு பிற சமுதாயங்களிலும் காணப்படும்.

பண்டைத் தமிழ் மன்னர்கள் புலவரைப் போற்றியதைப் போலவே பழங்கால வெல்ஷ், ஐரிஷ், ஜெர்மானிய, கிரேக்க அரசரும் பிறரும் புலவரைப் பெருமதிப்புடன் நடாத்தினர். எனவே தமிழ் வேந்தரது அருங்குணத்தைப் புகழ்ந்து வீண் பெருமை கொள்ளுவதற்கப் பதிலாகப் புராதன சமுதாயங்களிலே மண்ணாள் வேந்தரும் பிறரும் புலவரைச் சிறப்பித்தமைக்குக் காரணம் காண முற்படுதல் விவேகமான செயலாகும். உலக இலக்கியங்கள் பலவற்றை நுணுகியாராய்ந்த திருமதி. நோரா சாட்விக் கூறுகிறார்: எழுத்துக்கலைப் பயிற்சியற்றுப் பெரும்பாலும் வாய் மொழி இலக்கியத்தையே பயன்படுத்தும் மக்கள் கவிதையையும் சொல் வன்மையையும் மிக உயர்வாக மதித்தல் இயல்பே. அது மட்டுமல்லாது எமது காலத்தில் வழங்கும் வெகுஜன சாதனங்களுக்குப் பதிலாக அச்சமுதாயங்களிற் புலவரே விளங்கினர். இக்கூற்றைக் கருதுகோளாகக் கொண்டு எமது சான்றோர் செய்யுட்களை ஆராய்ந்தால் உண்மையாயிருக்கக் காண்போம். புராதன சமுதாயங்களிலே மனிதனது அறிவு முழுவதும் செய்யுள் வடிவிலேயே இருந்தது. மந்திரம், மாயம், வானநூல், வரலாறு, புராணம், அறிவியல், இயற்கையறிவு முதலிய யாவும் பன்னெடுங்காலமாகச் செய்யுள் வடிவிலேயே வழங்கி வந்தன. புலம் என்ற சொல்லின் பொருளைக் கவனித்தால் இச்செய்தி புலனாகும். புலம் என்றால் இந்திரியம், இந்திரிய உணர்வு, அறிவு, கூர்மதி, துப்பு, நூல், வேதம், இடம் என்றெல்லாம் பொருள்படும். புலமை என்பதற்குக் கல்வி, மெய்ஞ்ஞானம் செய்யுளியற்றும் ஆற்றல் என்ற பொருளுண்டு. புலமையோர் என்றால் கவி, கமகன், வாதி, வாக்கி என்ற நால்வகைக் கல்வியாளரும், கற்றோரும், நிபுணரும் கருதப்படுவர். புலவரை அறிவர் என்றும் அழைத்தனர். அது மட்டுமல்லாது கிரேக்கர் அபோலோவும், தமிழர் முருகனுமே புலமைக் கடவுளர் என நம்பினர். இது காரணம் பற்றியே திருமுருகாற்றுப்படையில், "புரையநர் இல்லாப் புலமையோய்", "நன்மொழிப் புலவரேறே", "அறிந்தோர் சொன் மலை", "நூலறி புலவ" என்றெல்லாம் பெரும் பெயர் முருகன் துதிக்கப்படுகின்றான். புலமைத் தெய்வத்திடம் புலவர் ஆற்றுப் படுத்தப்படுதல் இயல்பே. இவ்வாறு முருகனது பக்தர்களாகவும் வாய்மொழி வல்லவராகவும் கட்டுரையாளராகவும் விளங்கிய புலவரைச் சர்வக்ஞராகக் கருதிப் புராதன சமுதாயம் போற்றியதில் வியப்பெதுவுமில்லை. ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சி இவ்விளக்கம் பிறக்க வழி செய்கிறது. அதை விடுத்துத் தமிழபிமானத்தால் மன்னரின் சிறப்பியல்பு பேசுவது மடமை மட்டு மல்லாது உண்மைக்குப் புறம்பானதுமாகும். பற்று கண்ணை மறைக்காவிடின் பழமைக்கும் புது விளக்கம் காணலாம்.

விஞ்ஞானத்தின் பண்புகளில் ஒன்று அது 'இருக்க வேண்டும்' 'இருக்கப்படாது' என்ற சொற்களின் பொருளுக்குக் கட்டுப்படாததாகும். பழங்கால இலக்கிய ஆய்வு பெரும்பாலும் இலக்கணம் போல விதிமுறையிலமைந்தது.

    "அந் நிலை மருங்கின் அறமுதலாகிய
    மும்முதற் பொருட்கும் உரிய வென்ப"

அறம் பொருளின்பமென்னும் மூன்று முதற் பொருட்கும் ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி என்ற நால்வகைப்பாவும் உரியன எனக் கூறுவது விதிமுறை. 'இருத்தல் வேண்டும்'. 'இருத்தலாகாது' என்பனவற்றிற்கும் நல்லது கெட்டது என்பனவற்றுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஆகவே விஞ்ஞானி விதிப்பதிலும் விவரித்து விளக்குவதையே சிறந்த முறை யெனக்கருதுகிறான். ஏனெனில் புதுப் புதுச்சான்றுகளும் செய்திகளும் கிடைக்கக் கிடைக்க விஞ்ஞான விளக்கத்தை மாற்றியமைக்கின்றான். இருத்தல் வேண்டுமென ஒரு விதியைக் கொண்டால் அது மாற்ற முடியாததாகிறது. ஆனால் விஞ்ஞானத்தின் அடிப்படையில் ஒன்று விஞ்ஞான விதியை எந்நேரமும் மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதாம். விதிப்படி நாம் எதிர்பார்ப்பதற்கு மாறான ஒரு நிகழ்வு கண்டுபிடிக்கப்பட்டால் இந்நிலை ஏற்படும். சில சமயங்களில் அவ்விதியை அடியோடு கைவிடவேண்டியும் நேரும். புதிய நிகழ்விற்கு ஏற்பப் புதிய விளக்கமும் விவரணமும் அமைகின்றது. இதற்கோர் உதாரணங் காட்டுவோம்:

கிரேக்க ஆதி கவியாம் ஹோமர் தமது இதிகாசத்தை எழுதினார் என்ற நம்பிக்கையே பல காலமாகக் கிரேக்க இலக்கிய அறிஞரிடையே நிலவி வந்தது. அவ்வாறுதான் அது இருக்க வேண்டும் என அவர்கள் விரும்பினார். உயர் தனிக் காவியமாகிய இலியாது, ஒதீசி முதலியன நனிமிகு நாகரிகம் செழித்து வளர்ந்த காலப் பகுதியில் மகாகவியால் எழுதப் பெற்றிருக்க வேண்டும் எனக் கொண்டனர். ஆனால் கிரேக்க உயர் தனிக் காவியங்களை கேவலம் யூகோசிலாவிய வாய்மொழிப் பாடல்களுடன் தற்செயலாக ஒப்பு நோக்கிய ஓர் அமெரிக்க ஆராய்ச்சியாளர் அவ்விரு தொகுதிப் பாடல்களும் பெரிதும் ஒத்திருக்கக்கண்டார். வாய் மொழிப் பாடல்களை அவர் காதாரக் கேட்டு அவற்றைப் பாடிய புலவர்களது உத்திகளைக் காட்சியளவையால் அறிந்திருந்தார். உறுதியாகத் தெரிந்த வாய் மொழி இலக்கியப்பண்புகள் பலவும் எழுதியனவாக நம்பப்பட்டு வந்த செம்மைசான்ற காவியங்களில் காணப்படும் போது என்ன செய்வது? கிரேக்க காவியங்களும் வாய்மொழிப் பாடல்களாக வழங்கி வந்து பிற்காலத்திலே எழுத்தில் பொறிக்கப்பட்டிருத்தல் கூடும் என்ற எண்ணத்தைக் கருதுகோளாகக் கொண்டு, இரு தொகுதி நூல்களையும் மேலும் நுணுக்கமாக ஆராய்ந்தார். ஐயத்துக்கிடமின்றிக் கிரேக்க காவியங்கள் வாய் மொழிப் பாடல்களே என்று தெரிய வந்தது. வரவும் அதைப் புதுக் கொள்கையாக வகுத்தார். 

நம்பிக்கையில் வாழ்ந்த கிரேக்க இலக்கிய உலகம் நம்ப மறுத்தது. ஆனால் புதிய கொள்கையை வெகுகாலம் எதிர்க்க முடியவில்லை. புதுக் கொள்கையைக் கூறிய மில்மன் பரி விஞ்ஞான முறையை-ஒப்பியல் ஆய்வு முறையைக் கையாண்டமையாலேயே அவரது விளக்கம் உண்மையாயமைந்தது. முதலிலே ஏளனஞ் செய்தவர்கள் பின்னர் உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பரிக்குப் பின் வந்தோர் அவரை விஞ்ஞானியாகவே போற்றுகின்றனர். வேட்ஜெரி என்பார் "பரி ஹோமர் ஆராய்ச்சிக்கு வாய்ந்த டார்வின்" என்றார். காப்பென்றர் என்பர், "அவரது கண்டுபிடிப்பின் மெய்ம்மை இயுகிளிட் நிறுவிய மெய்ப்பீடுகளின் உண்மை போன்றது" என்றார். இப்பாராட்டுகளுக்கு விளக்கம் வேண்டாம்.

பரியின் புதிய விளக்கம் அவருக்குத் தெரிந்த அளவில் சான்றுகளுக்கு ஏற்றாக இருந்தது. ஆனால் பரி அதனை முடிந்த முடிபாகக் கருதினார் அல்லர். தனது "விளக்கம்" உண்மையாக இருந்து, மேலும் புதிய வினாக்களுக்கு விடையளிக்கக்கூடிய புதிய ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டும் என எண்ணி மகிழ்ந்தார். அவரது கண்டு பிடிப்பிலும் பார்க்க இம் மனோ பாவமே அவரது விஞ்ஞான நோக்கை வௌிக்காட்டுவதாயுள்ளது. "ஏனெனில் புதிய விஷயங்களை அறிவதில் விஞ்ஞானிக்குள்ள ஆர்வம் ஒருபோதும் திருப்திப்படுவது கிடையாது." தமிழராய்ச்சி தற்போதுள்ள நிலைமையைக் கண்டு மன நிறைவு அடைபவர்கள் இக்கூற்றை உன்னுதல் தகும்.

ஒப்பியலின் தத்துவங்கள் இவ்வாறாக, இவை தமிழிலே தழைத்து வளராமைக்குக் காரணங்கள் யாவை எனச் சிறிது சிந்தித்தால் பொருத்தமாகும். தமிழரிடையே பெருவழக்காயுள்ள தத்துவம் அவரது வரலாற்றுணர்வின் தன்மை. இன்றைய சமுதாய நிலை முதலியன இத்துறையின் வளர்ச்சிக் குறைவுக்குக் காரணங்களாயுள்ளன. இக்காரணிகளிற் சில அடுத்து வரும் கட்டுரைகளில் ஆராயப்பட்டிருக்கின்றன. இவ்விடத்திலே துணைக் காரணம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். எமது நவீன இலக்கியப் படைப்பும், திறனாய்வு முறைகளும் பெரும்பாலும் ஆங்கில நூல் வழி வருவனவே. இதன் விளைவாக ஆங்கில இலக்கிய மரபிற்காணும் குறைபாடுகள் பல எம்மத்தியிலும் பரவியுள்ளன. இவற்றில் ஒன்று ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சியின் தாழ்ந்த நிலை. பிரெஞ்சுக்காரர், ஜெர்மானியர், ரஷ்யர் முதலினோருடன் ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது ஆங்கிலேயர் இத்துறைக்கு ஆற்றிய சேவை பெருமைப் படத்தக்கதல்ல. ஒப்பியல் இலக்கியம் என்ற சொற்றொடரை 1848இல் புகழ் பெற்ற திறனாய்வாளர் ஆர்னல்ட் (Matthew Arnold, 1822 - 1888) ஆங்கிலத்திலே முதன் முதலாக வழங்கினார். ஆர்னல்ட் பிரெஞ்சு இலக்கியத் திறனாய்வு முறைகளைப் பெரிதும் மதித்தவர். அம்மொழியில் இப்பொருள் தருஞ் சொற்றொடர் எனவே, (1829) பயன்படுத்தப்பட்டது. இவர்களுக்கும் முன்னதாக ஜெர்மானியர் 'ஒப்புமை இலக்கியத் துறை' என்னும் சொற்றொடரைப் பிரயோகித்திருந்தனர். ஆர்னல்ட் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் இக்கருத்தை ஆங்கிலேயருக்கு அறிமுகப்படுத்திய போதும் அது ஆழமாக வேரூன்றவில்லை. ஆனால் அமெரிக்காவிலே ஒப்பியலின் குழந்தையான சமூகவியல் செழித்து வளர்ந்தமையால் அந்நாட்டில் ஒப்பியல் இலக்கியமும் குறிப்பிடத்தக்களவு அபிவிருத்தியடைந்தது. கிரேக்க இலக்கிய ஆராய்ச்சியில் புரட்சி செய்த மில்மன் பரி ஓர் அமெரிக்கராயிருந்தது தற்செயல் நிகழ்ச்சியன்று. ஆயினும் இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியராயிருந்த எச்.எம்.சாட்விக் என்பாரும் அவரது மாணவியும் மனைவியுமான நோரா சாட்விக் என்பாரும் சேர்ந்து எழுதிய இலக்கிய வளர்ச்சி (The Growth of Literature) என்னும் பாரிய நூல் இந்நூற்றாண்டிலே ஆங்கிலேயருக்கு மாத்திரமல்லாது உலகின் பல பாகங்களிலுள்ள ஆராய்ச்சியாளருக்கும் ஆதர்ஷமாக இருந்து வந்திருக்கிறது. தமிழில் எஸ். வையாபுரிப்பிள்ளை எழுதத் தொடங்கிய இலக்கிய உதயம் என்ற நூலும் வேறு சிலவும் முற்கூறிய நூலினால் உந்தப்பட்டனவே. எனினும் சுமேரிய இலக்கிய ஆய்வாளரான கிறேமர், ரஷ்ய இலக்கியம், கிரேக்க இலக்கியம் என்பனவற்றை ஆராய்ந்த பரி, லோட் முதலிய அமெரிக்கர் சாட்விக் தம்பதிகளின் மகத்தான நூலைப் பயன்படுத்திப் பயனடைந்ததைப் போல ஆங்கிலேயர் எவரும் பயனடைந்திருப்பதாகத் தெரியவில்லை. ஆங்கிலேயரிடத்துக் காணப்படும் இப்பெருங்குறைபாடு குடியேற்றக் கல்வியின் பயன்களில் ஒன்றாக எம்மிடையே நிலைத்து விட்டது. இதனை உணர்ந்தால் இக்குறைபாட்டை நிவிர்த்தி செய்யச் சிலராவது முயலக்கூடும்.

ஒப்பியல் இலக்கியம் எம்மிடையே போதியளவு வளராமையால் விஞ்ஞான முறைகள் இலக்கியக் கல்வியில் இடம் பெறாதது மட்டுமினறி ஓரளவுக்கு ஆங்கிலேயரிடம் காணப்படுவது போல எமது இலக்கியத்திறனாய்வும் பூரணத்துவம் பெறமாட்டாதிருக்கிறது. இப்பொருள் குறித்து ரெனிவெல்லாக், ஓஸ்டின்வாரன் ஆகிய இருவரும் இலக்கியக் கொள்கை (Theory of Literature) என்னும் நூலிற் குறிப்பிடுவது பொருத்தமாகக் காணப்படுகிறது. எல். குளோறியா சுந்தரமதியின் மொழி பெயர்ப்பைத் தருகிறேன்:

"பொதுவாக ஒர் இலக்கியத்தைப் பாராட்டுதல், சுவைத்தல், அதில் ஆர்வங் காட்டுதல் போன்றவை தனிப்பட்ட முறையில் இலக்கியத்தை இரசிப்பவர்களுக்கே உரியவை என ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, திடமான இலக்கியப் புலமை பெறும் இலக்கியக் கல்வியினின்று, இவை அகற்றப்பட்டுள்ளன;இந்நிலை வருந்தத்தக்கது. இவ்வாறு இலக்கியப் புலமை ஒருபுறமும் இலக்கியத்தைப் பாராட்டும் நிலை மறுபுறமாக அமைந்த இரட்டை நிலை, ஒழுங்கான அதே அளவில் இலக்கியப் போக்குடைய பாராட்டு ஆய்விற்கு உரிய வழிவகைகளை அமைக்காது. கலையை அதிலும் குறிப்பாக இலக்கியக் கலையை எவ்வாறு அறிந்து தௌியக்கூடிய நிலையில் கற்பது என்பதே பிரச்சினை."

இலக்கியக் கொள்கை என்ற நூலின் ஆசிரியர்கள் எழுப்பியுள்ள பிரச்சினை எம்மவரையும் எதிர்நோக்குகிறது. மேற்கூறிய ஆசிரியர்கள் தாம் எழுதிய பிச்சினைக்கு இறுக்கும் விடை திருப்திகரமானதல்ல. இலக்கியத்தின் உள்ளார்ந்த இயல்புகளை ஆராய்வதே தக்க ஆய்வு முறையென்றும், ஒப்பியல் இலக்கிய ஆய்வு இலக்கியத்துக்குப் புறம்பான செய்திகளையும் வகைகளையும் புகுத்துகிறது என்பதும் இவர்கள் கருத்தாகத் தெரிகிறது. தெயின் போன்ற ஒப்பியல் இலக்கிய ஆய்வு முன்னோடிகளை இக்கண்ணோட்டத்திலேயே இவர்கள் தள்ளி வைக்கின்றனர். ஆனால் அறிவாராய்ச்சியையும் அழகியலையும் வேறுபடுத்தும் இரட்டை நிலை பேணப்படும் வரை இப்பிரச்சினை தீராது. எனினும் தவிர்க்க முடியாதபடி இலக்கியங்களின் உலகப் பொதுமையை ஒப்பும் ரெனிர்வல்லாக்கும் அவரது சகாவும் பின்வருமாறு கூறியுள்ளனர்:

"உலக இலக்கியங்களின் வரலாறு பற்றிய கொள்கையில் சிக்கல்கள் பலவிருக்கலாம். ஆயினும் இலக்கியத்தை முழுமையாகக் கருதுவதும் மொழி வேறுபாடுகளைக் கருதாது இலக்கியத்தின் வளர்ச்சியைக் காண வேண்டியதும் மிக இன்றியமையாதவை. பொது இலக்கிய வரலாற்று வல்லுநரது நோக்கங்களையும் ஆர்வங்களையும் நாம் முன்னரே பின்பற்றியிருக்க வேண்டும். இப்போது காலம் கடந்து விட்டது. இலக்கிய வரலாற்றை ஒரு தொகுப்பு என்ற நிலையிலும் தேச வரையறையைக் கடந்து அமைந்தது என்ற நிலையிலும் இனிமேல் தான் எழுத வேண்டும். இப்பொருளில் நாம் ஒப்பு இலக்கியத்தை அமைப்பதனால் நமது அறிஞர்களது மொழியியல் திறன் அதற்கு மிகத் தேவை. மேலும் நமது நோக்கை விரிவாக்க வேண்டும். நாட்டு உணர்வுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இதை எளிதாகப் பெற இயலாது. எனினும் கலையும் மக்களினமும் எவ்வாறு ஒன்றாக இணைந்துள்ளனவோ அது போன்று இலக்கியமும் ஒன்றே. இக்கருத்தின் அடிப்படையிலே வரலாற்று இலக்கியத்தின் அடிப்படைக் கருத்துக்கள், இலக்கிய உருவங்கள், இலக்கிய வகைகள் ஆகியவற்றின் வரலாறு உலக இலக்கியங்கள் அனைத்திற்கும் பொதுவான ஒரு வரலாறு என்பது தௌிவு. யாப்பமைப்பின் வரலாறு அந்தந்த மொழியின் அமைப்போடு நெருங்கிய தொடர்புடையது. எனினும் அவையும் எல்லா மொழிகளுக்கும் பொதுவானவை...."

உன்னிடத்து உணர வேண்டிய இக்கருத்துடன் இக்கட்டுரையை முடித்தல் விரும்பத்தக்கதாகும்.

 


2. தமிழில் ஒப்பியல் ஆய்வு 

சமீப காலம் வரை தமிழறிஞாின் கவனம் ஒப்பிலக்கியத்துறையிற் செல்லவில்லை. நூல்களின் காலவாராய்ச்சியிலேயே அவாின் சிந்தனை சென்றது. சுந்தரம்பிள்ளை, சிவராசபிள்ளை, வையாபுாிப் பிள்ளை, இராகவ ஐயங்கார், சேஷையர், கிருஷ்ணசாமி ஐயங்கார், இராசமாணிக்கனார் முதலிய தமிழிலக்கிய ஆராய்ச்சியாளர், சான்றோர் செய்யுள்களின் கால வாராய்ச்சிலேயே தமது திறமைகளைச் செலவிட்டனர். ஒரு வகையில் இப்போக்கு, தவிர்க்க முடியாததாய் அமைந்தது என்று கூறலாம். சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே பழந்தமிழ் நூல்கள் - அதாவது சான்றோர் செய்யுள்கள் அச்சேறத் தொடங்கின. பெயரளவில் மட்டும் அறியப்பட்டிருந்த பாட்டும் தொகையும் தமிழ்த் தாத்தா சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களின் அரும் பெரும் முயற்சிகளால் உலகை எட்டிப்பார்க்கத் தொடங்கின. தாமோதரம் பிள்ளை காட்டிய பாதையில் முன்னேறிச் சென்றார் உ.வே. சாமிநாதையர். சி.வை. தாவின் முதன் முயற்சி 1885இல் உருவம் பெற்றது. இரண்டாண்டுகளுக்குப் பின்னர் ஐயர் தமது பதிப்பு முயற்சியைத் தொடங்கினார். வௌிவந்த நூல்களை ஆதாரமாகக் கொண்டு பண்டைத் தமிழர் வாழ்வியலை ஆராய்ந்தனர். வி.கனகசபைப் பிள்ளை, இவற்றிற்கு முதற்றேவையாகப் பழந்தமிழில் நூல்களின் காலம் நிர்ணயிக்கப்பட வேண்டியதாயிற்று. பதிப்பாசிாியருக்குப் பின்வந்தவர்கள் காலவாராய்ச்சியில் அமிழ்ந்து போயினர். இதன் காரணமாக இலக்கிய இரசனையும், திறனாய்வும், ஒப்பியல் நோக்கும் போதியளவு முக்கியத்துவம் பெறவில்லை. எனினும், ஒப்பியல் இலக்கியத்தின் பண்பையும் பயனையும் காலத்திற்குக் காலம் சிலர் சுட்டிக் காட்டத் தவறவில்லை. இவருள் 'தமிழ் மாணவன்' போப் பாதிாியார் தலையாயவர். 1885 இல் அதாவது சான்றோர் செய்யுள்கள் பல அச்சுவாகனம் ஏறுமுன்னரே அவர் மேல்வருமாறு எழுதினார்: 

"பழைய தமிழ்க் காப்பியங்களைப் பார்க்கும் பொழுது, அவற்றுக்கும் அவற்றிற்குச் சமமான கிரேக்க இலக்கியங்களுக்க முள்ள ஒற்றுமை புலனாகின்றது. உருவத்திலும், உள்ளடக்கத்திலும், சமுதாய நிலைமையிலும் பெரும் ஒற்றுமைகள் காணப்படுகின்றன." 

பல வருடங்களுக்குப் பின்னர் (1923) பேராசிாியர் எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் இதுபற்றிக் குறிப்பிடுகையில், எமது சான்றோர் செய்யுள்களில் ஒரு பகுதியான புறப்பாடல்கள் ஹோமரது காவியத்திற்கு அடிநிலையான கதைப் பாடல்களை (Lays) ஒத்துள்ளன என்றார். ஐயங்காரைவிட ஒரு படி மேலே சென்று ஒப்பியல் நோக்கிற்குக் கால்கோள்விழா நடாத்தியவர் பேராசிாியர் என்.கே.சித்தாந்தா. 1927-ல் வௌி வந்த தமது Heroic Age of India என்ற நூலிலே, புற நானூற்றுப் பாடல்கள் பிறமொழிகளிற் காணப்படும் வீரப் பாக்களுடன் ஒப்பு நோக்கத்தக்கன என்றார். "பொருளமைதியிலும் கவிதா நெறியிலும் தமிழிலக்கியமானது பிற மொழிகளிலுள்ள வீரயுகப் பாடல்களுடன் ஒப்பு நோக்கி ஆராயப்பட வேண்டியது" என்றார் அவர். சித்தாந்தாவின் கூற்றைப் பின்பற்றிப் பேராசிாியர் வையாபுாிப்பிள்ளை தமது காவிய காலம் (1952) என்ற ஆராய்ச்சி நூலில், Heroic Age எனப்படும் வீரயுகத்தைச் சார்ந்தனவாக உள்ளன எமது புறப்பாடல்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்லாது, அதே நூலில் ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சியின் இன்றியமையாமையையும் மனத்தில் பதியும் வகையில் வற்புறுத்தியுள்ளார். 

"கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்ற மூன்று மொழிகளிலும் முறையே நல்ல பயிற்சியுடைய கன்னடரும், தெலுங்கரும், மலையாளிகளும் வடமொழியிலக்கியம் பற்றிய அளவில் தகுதியுள்ளவர்களாயிருப்பார்கள். ஆனால், தற்காலத்துள்ள தமிழறிஞர்களைக் குறித்து இவ்வாறு சொல்ல முடியுமாதென்று அஞ்சுகிறேன். தமது தாய் மொழியைத் தவிர, பிற திராவிட மொழிகள் பற்றிய அளவில், இந்த அறிஞர்களில் ஒவ்வொருவரும் அறியாமையாற் பீடிக்கப் பெற்று, தம் நிலையுணராது இருக்கின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். வட மொழியோ இவர்களுக்கு வேம்பாக உள்ளது. வியாசர், வால்மீகி, காளிதாசன் என்பவர்களைப் பற்றியும், வள்ளுவர், கம்பன் என்பவர்களைப் பற்றியும், திக்கண்ணா, நன்னய்யா என்பவர்களைப் பற்றியும், பம்பா, ரன்னா, பொன்னா என்பவர்களைப் பற்றியும், எழுத்தச்சனைப் பற்றியும், அறியாதவனைத் திராவிட மொழிகளிலொன்றிலேனும் வல்லவனென்று எவ்வாறு கூற முடியும்? இந்த அறியாமை நமது நாட்டில் நீடித்திருக்கும்படியாக விடக்கூடாது. திராவிட இலக்கியங்களையும் இந்திய இலக்கியங்களையும் ஒப்புநோக்கிக் கற்றவனுடைய கல்வியறிவு மிகவும் பரந்துள்ளதாயும் செழிப்புள்ளதாயும் இருத்தல் ஒருதலை. இந்த ஒப்புநோக்குக் கல்வி நமது அறிஞருடைய குறுகிய மனப்பான்மை என்னும் திண்ணிய சுவரை இடித்துத் தகர்த்து விடும். அச்சுவரை அரணாகக் கொண்டு நம் அறிஞர்கள் மறைந்து வாழ முடியாது. இவ்வகைக் கல்வியின் மேல் எழுந்த ஆராய்ச்சிக்கு ஒரு புதிய பொருண்மையும் புதிய பெருமையும் ஏற்படும். நம்முள் ஒவ்வொரு மொழியாளரும் பிற திராவிட மொழிகள் ஒவ்வொன்றிலுமுள்ள சிறந்த இலக்கியங்களையும் வட மொழி இலக்கியங்களையும் கற்று அனுபவித்துப் பரஸ்பரம் நன்மதிப்பைத் தேடிக்கொள்ளுதல் வேண்டும்."

யாமறிந்த வரையில் வையாபுாிப் பிள்ளை அவர்களைப் போல் சமயம் வாய்க்கும்போதெல்லாம் ஒப்பியலை வற்புறுத்திய தமிழறிஞர் வேறு யாருமில்லை. வேறோர் இடத்தில் அவர் கூறுகிறார்:

'வடமொழி நூல்களோடு மட்டும் இவ்வகை ஒப்பு நோக்கு அமைந்து விடக்கூடாது. ஆங்கிலம் முதலிய முற்போக்கு மொழிகளிலும் 'காவியம்' என்ற கருத்தோடு ஒத்துள்ள இலக்கியங்கள் உள்ளன. இவற்றின் தோற்றமும் வரலாறும் தமிழ்க் காவிய வரலாறு முதலியவற்றை உணர்தற்குப் பயன்படுவனவாம். ஆகவே, ஒப்புநோக்கு முறை மிக விாிந்து செல்லுதல் வேண்டும்." 

மேற்கூறிய பேராசிாியர் யாவரும் ஒப்பிலக்கியத்தின் சாத்தியக் கூற்றினைத் தொட்டுக் காட்டினரேயன்றி, தாம் அப்பணியைச் செய்தனர் அல்லர். கடந்த பத்தாண்டுக் காலத்துட் பல்கலைக் கழங்களில் நடந்தேறிய ஆராய்ச்சிகள் சில இத்துறையில் வழிகாட்டியுள்ளன என்று கூறலாம். 'பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை' என்ற ஆங்கில நூலிலே (1953) வண. தனிநாயக அடிகள் கிரேக்க, இலத்தீன் கவிதைகளோடு தமிழியற்கைக் கவிதைப் பகுதிகளை ஆங்காங்கு ஒப்புநோக்கிச் செல்கின்றனர். இலண்டன் பல்கலைக் கழகத்திலே தமிழ் விாிவுரையாளரகவிருக்கும் கலாநிதி ஜே.ஆர்.மார், தமது எட்டுத் தொகை நூல்கள் பற்றிய ஆராய்ச்சியுரையில், கிரேக்க வாய்மொழியிலக்கியத்திற்கும் தமிழ்ப் பாடல்களுக்கமுள்ள ஒப்புமையைச் சுட்டிக் காட்டியுள்ளார். 

இந்திய சிந்தனையும் உராம ஸ்டோய்க்கு வாதமும் என்ற பேருரையில் (1962) வண. தனிநாயக அடிகள், குறிப்பாகத் தமிழிலக்கியத்திலிருந்தே சான்றுகள் காட்டியுள்ளார். உரோமப் பேரரசுக்கும் தமிழ் நாட்டிற்கும் நடந்த வாணிபத்தின் பின்னணியில் இரு நாடுகளிலுந் தோன்றிய உயர் இலட்சியங்களின் ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்திருக்கின்றார். சிஸரோ, குயின்றிலியன், செனெகா, கற்றலஸ் முதலிய உரோம இலக்கிய கர்த்தாக்களுக்குச் சமமானவராகவும், சிற்சில பொருள்களைப் பற்றிய அளவில் அவர்களை விஞ்சியவராகவும் தமிழ்க் கவிஞர் விளங்குகின்றனர் என்று வாதாடுகிறார் அடிகளார். இயற்கையைப் பற்றிய நூலிற் காணப்படுவது போலவே இதிலும் விாிவாக ஆராயக் கூடிய பகுதிகள் பல உள்ளன. 1962 - இல் டாக்டர் சுப மாணிக்கம் வௌியிட்ட தமிழ்க் காதல் பற்றிய ஆராய்ச்சியுரையிலும், கிரேக்க இலக்கியங்கள் காட்டும் பெண்மையைத் தமிழ்ச் சான்றுகளுடன் ஒப்பிட்டுக் காட்டுகின்றார். இவை யாவற்றையும் விடக்கூடிய அளவில் கிரேக்க காவியங்களையும், தமிழ்ப் புறப்பாடல்களையும், ஒப்பிட்டு இக்கட்டுரை ஆசிாியர் எழுதிய ஆராய்ச்சியுரை 1966-இல் பர்மிங்ஹம் பல்கலைக்கழகத்திற் கலாநிதிப் பட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்டது. Tamil Heroic Poetry என்னும் பெயாில் அது வௌிவந்துள்ளது. 

இவ்விடத்திலே வேறு சில முயற்சிகளையும் குறிப்பிடுதல் பொருத்தமாயிருக்கும். தமிழில் விமர்சனக் கலையைத் தன்னுணர்வோடு முதன் முதலிற் கையாண்ட வ.வே.சு.ஐயர் தமது கம்பராமாயண ஆய்வு நூலில், கம்பனையும் பிற காவிய கர்த்தாக்கள் சிலரையும் ஒப்பிட்டுள்ளார். ஹோமர், வெர்ஜில், மில்டன் ஆகியோர் ஐயரது கவனத்திற்குள் அகப்பட்டவர்கள். 

ஐயாின் முயற்சி பல நோக்குடையதாக விருந்தது. ஒப்பியலின் அடிப்படையில் கம்பனைத் தூக்கி நிறுத்துவது மாத்திரமன்றி, 'காவிய சமத்காரத்தைப் பற்றி விஸ்தாரமாக விவாித்துள்ள' மேனாட்டுத் திறனாய்வாளரைத் தமிழ் நாட்டு வாசகருக்கு அறிமுகப்படுத்துவதும். அவரது நோக்கமாகத் தொிகிறது. இன்று பின்னோக்கிப் பார்க்கும் போது, ஐயரது பெருமுயற்சியின் நிறைகுறைகளைப் புற நிலையில் வைத்து ஆராய வாய்ப்பிருக்கிறது. விடுதலைக்கு வீரத்துடன் உழைத்த தீவிரவாதியான ஐயர் விமர்சனத்திலும் தீவிரவாதியாகத் தான் இருந்தார். இராமாயணத்தை, "கம்பநாட்டாழ்வார் எழுதிய திவ்ய கிரந்தம்" என வருணிக்கும் ஐயர், கம்பனைப் புகழும் போது அவனை உலகின் தலையாய காவியகர்த்தா என்றே கூறுகிறார். 

"கம்பனுடைய ராமாயணமானது மற்ற கவிகள் எழுதிய ராம சாிதைகளையும் தமிழில் எழுதப்பட்ட இதர காவியங்களிற் பெரும்பாலான வற்றையும் கூட 'வெயிலிடைத் தந்த விளக்கொளிபோல் ஆக்கிவிட்டது. இது மாத்திரமல்ல. கம்ப ராமாயணமானது ஹோமர் எழுதிய இலியாதையும், விர்க்கிலியன் எழுதிய ஏனயிதையும், மில்டனுடைய சுவர்க்க நஷ்டம் என்ற காவியத்தையும், வியாஸ பாரதத்தையும் தனக்கே முதனூலாக இருந்த வால்மீகி ராமாயணத்தையும் கூட, பெருங்காப்பிய லட்சணத்தின் அம்சங்களுள் அனேகமாய் எல்லாவற்றிலும் வென்றுவிட்டது என்று சொல்லுவோம்." 

இக்கூற்று அழுத்தந் திருத்தமாகக் கம்பனை அாியாசனத்தில் ஏற்றுந் தகைமையது என்பதில் ஐயமில்லை. எந்தவிதமான தயக்கமுமின்றித் தமது முடிவைக் கூறி விடுகின்றார் ஐயர். எமக்கு மகிழ்ச்சிதரும் முடிபாக இருப்பினும், ஐயரது சுதேச பக்தி வரம்பு கடந்திருக்குமோ என்ற எண்ணம் இக்கூற்றைப் படிக்கும்பொழுது எனக்கு ஏற்படுவதுண்டு. ஆனால், ஐயர் எடுத்துக்காட்டும் சான்றுகள் அவ்வையத்தைப் போக்கவல்லன. எனினும், இவ்விடத்தில் ஒரு விஷயத்தைக் கூறலாம். ஐயர் இவ்வாறு எழுதியது போலவே அவரது உற்ற நண்பனான பாரதியும்,

    "யாமறிந்த புலவாிலே கம்பனைப் போல்
    வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்
    பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
    உண்மை வெறும் புகழ்ச்சி யில்லை" 

என்று உரத்துப் பாடினான். இதனைப் பார்க்குமிடத்து மொழிப் பற்றும் தேசப்பற்றும் ஓரளவுக்கு இவர்களை உயர்வு நவிற்சியில் ஊக்குவித்துள்ளன எனக் கருதத் தோன்றுகிறது. ஏனெனில் ஐயர் நுண்ணுணர்வும் நூலறிவும் சாலப் பெற்ற விமர்சகர்; அவ்வறிவுப் பயிற்சி காரணமாக ஒருபாற் கோடாத சமநோக்குக் கைவரப் பெற்றவர். ஆயினும் அந்நியராட்சியை எதிர்த்து நின்ற அறிஞர் பலரைப் போல இந்தியப் பாரம்பாியத்தின் பெருமையை உலகறியச் செய்தல் வேண்டுமென்ற அவா அவருக்குமிருந்தது. தம்மை ஆண்ட ஆங்கிலேயரையும் அவர் போன்ற பிற ஐரோப்பியரையும் விட, தாம் பெருமை மிக்க கலை, இலக்கிய, தத்துவ பாரம்பாியத்துக்கு வாாிசுகள் என்று காட்டுவதில் ஏறத்தாழ எல்லா இந்திய அறிஞரும் ஈடுபட்டிருந்தனர். திலகர், ராஜ்வாடே, ரானடே, ஐயஸ்வால், பண்டர்கார், பாஓகி, கேட்கர், கோஷால், மஜூம்தார் முதலிய வரலாற்றாசிாியரைக் கவனித்தால் இவ்வுண்மை தெற்றெனப் புலனாகும். மேனாட்டார் மிகவும் சிலாகித்துப் பேசிய குடியரசு முறை பண்டைக்கால இந்தியாவில்- புத்தர் பிறந்த காலத்திற்கு முன்னதாக, சிறப்புற்று விளங்கியது என்று வாதிட்டார் கே.பி. ஐயஸ்வால். அவரைப் போலவே பிறரும் வெவ்வேறு துறைகளில் புராதன இந்தியாின் பெருமை பேசினர். மேனாட்டார் கான்ற் என்பவரைச் சிறந்த தத்துவ வாதியாகக் கொண்டாடினால், அவாினும் சங்கரர் சிறப்பு மிக்கவர் எனவும், அதுபோலவே ஷேக்ஸ்பியாினும் காளிதாசனும் கம்பனும் மேம்பட்டவர்கள் எனவும் இப்பேரறிஞர்கள் வாதம் புாிந்தனர். 

    "கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்
    காளிதாசன் கவிதைபு னைந்ததும்
    உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
    ஓர்ந்த ளந்தோர் பாஸ்கரன் மாட்சியும்

    நம்ப ருத்திற லோடொரு பாணினி
    ஞால மீதில் இலக்கணங் கண்டதும்
    இம்பர் வாழ்வின் இறுதி கண் டுண்மையின்
    இயல்பு ணர்த்திய சங்கரன் ஏற்றமும்
    அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
    தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்" 

என்ற சுயசாிதையில் பாரதி பாடும்போது, இவர்களின் குரலையே கேட்கிறோம். கம்பனை உலக மகாகவி என ஐயர் கூறியதைப் பின்பற்றி வேறு சிலரும் அவ்வாறு கூறி வந்துள்ளனர். ஆனால் ஒப்பியலின் பண்பும் பயனும் எது சிறந்தது எனத் தீர்ப்பளிப்பது மட்டும் அல்ல. ஒப்புமைககான காரணிகளைக் கண்டறிவதும், ஒப்புமைகள் தோன்றக் காரணமாயிருந்த பகைப்புலத்தை விளங்கிக்கொள்வதும், இலக்கியங்களைப் படைக்கும் கர்த்தர்களுக்கும் சூழலுக்குமுள்ள பரஸ்பரத் தொடர்பினை அறிந்து கொள்வதும் ஒப்பியலின் பண்புகளாம். ஐயர் அவற்றை அதிகம் கவனித்ததாகத் தொியவில்லை. அந்தளவுக்கு அவரது ஒப்புநோக்குக் குறைபாடுடையதே. 

மேனாட்டு இலக்கியங்களிலுஞ் சிறந்தவை இந்திய இலக்கியங்கள் என்று பலர் காட்ட முயன்றதைப் போலவே வட மொழிலக்கியங்களிலுஞ் சிறந்தன தமிழிலக்கியங்கள் என்று நிறுவப் பலர் முயன்று வந்துள்ளனர். ஆாியர்-திராவிடர் பிரச்சினையின் வௌிப்பாடாகத் தோன்றும் இப்போதைக்கு இரு சாராரையும் பாதித்துப் போதித்துள்ளது. சாதியினடிப்படையிலும் சமயப் பிாிவினடிப்படையிலும் மொழியடிப்படையிலும் பெருமை பேசும் இப்போக்கு, இலக்கிய மதிப்பீட்டைப் பெருமளவு மலினப்படுத்தியுள்ளது. கம்பராமாயணத்தையும் பொறுத்தளவில் ஆாியர்-திராவிடர் பூசலானது. வான்மீகி-கம்பன் போட்டியாக உருவெடுத்துள்ளது. இதனால் இன்றுவரை நிதானமான ஒப்பியல் ஆய்வு நடப்பதற்குத் தடைகள் இருந்து வருகின்றன. பா.வே. மாணிக்கநாயக்கர் எழுதிய "கம்பன் புளுகும் வான்மீகி வாய்மையும்", வெ.ப. சுப்பிரமணிய முதலியார் எழுதிய 'இராமாயண உள்ளுரைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும்' என்பன போன்ற நூல்கள் இராமாயண ஆய்வு திசை தவறிய தன்மையைக் காட்டுகின்றன. இந்நோக்க நிலையினடிப்படையிலேயே "திராவிடனான இராவணனது" பெருமையை உணர்த்தும் 'இராவண காவியம்' எழுந்தது. இதனாசிாியர் புலவர் குழந்தை. 

இத்தகைய விபாீதப் போக்குகளையெல்லாம் பார்க்கும்போது, வ.வே.சு.ஐயர் முதற்றர விமர்சகராக மாத்திரமின்றி, ஒப்பிலக்கிய ஆய்வு முன்னோடியாகவும் திகழ்வதன் காரணத்தை உணரலாம். இராமாயணத்தை மட்டுமல்லாது பிற இலக்கியங்களைச் சுவைத்தபோதும், ஐயரவர்கள் தமது ஆழ்ந்த இலக்கியப் பயிற்சி காரணமாக ஒப்புநோக்கில் ஈடுபட்டார். தமிழிலே ஏதேனுமொன்றைப் படிக்கும்பொழுது, அதற்கு நிகரான பிறமொழிச் செல்வங்கள் அவருக்கு நினைவிலே தோன்றின. நாம் மேலே கூறியவாறு விவரமாக அவற்றை அவர் ஒப்பு நோக்கினாரல்லர். ஆயினும் ஒப்புநோக்க முனைந்தமையொன்றே அவரது பரந்து விாிந்த பார்வையைக் காட்டுவதாயுள்ளது. பூர்வ வரலாற்று முறை, சாதிச் சூழ்ச்சி முறை என்ற நோக்கங்களுடன் இராமாயணத்தைக் கற்பவர் மலிந்த சூழலிலே, உளநூல் முறையையும் சிற்ப முறையையும் துணைக் கொண்டு அக்காப்பியத்தை ஆய்ந்து சுவைத்த ஐயர் தனிச்சிறப்புடையவரே. கம்பனைத் தவிர, பிற தமிழ்க் கவிஞரை ஒப்பியலின் அடிப்படையில் ஐயர் நோக்கிய விதத்திற்கு எடுத்துக்காட்டாக நவீன மகாகவி பாரதியின் கண்ணன் பாட்டு இரண்டாம் பதிப்பிற்கு (1920) அவர் எழுதிய முன்னுரையிற் சில பகுதிகளைக் குறிப்பிடலாம்:

"நாயக நாயகி பாவத்தைப் பற்றி இங்குச் சில மொழிகள் கூறாது விட முடியவில்லை. இப்பாவத்தால் பகவானை வழிபடும் முறை தொன்றுதொட்டுப் பக்தர்களாலும் கவிகளாலும் அனுசாிக்கப்பட்டு வருகிறது. ரோமன் கத்தோலிக்க மதத்திலே கூட அடியார் வர்க்கத்தை நாயகியாகவும் கிறிஸ்துவை நாயகனாகவும் பாவித்து எழுதிய ஸ்தோத்திரங்கள் பல உள. நமது பாகவதத்தில் கோபிகைகளின் உபாக்கியானங்களெல்லாம் இப்பாவத்தைத் தழுவி எழுதப்பட்டுள்ளனவே.... ஆனால் இந்த பாவத்தை ஆளுவது கத்தியின் கூர்ப்பாகத்தின் மீது நடப்பதைப் போன்ற கஷ்டமான காாியம். ஒரு வரம்பு இருக்கிறது: அதற்கு அப்புறம் இப்புறம் போய்விட்டால் அசந்தர்ப்பமாகி விடும். ஸரீ பாவகதத்திலுங் கூட கோபிகா உபாக்கி யாணங்களில் சுகபகவான் இவ்வரம்பை அங்கங்கே கடந்து விட்டிருக்கிறார் என்பது எனது தாழ்ந்த அபிப்பிராயம்.... செயிாின்றி இப்பாவத்தைப் பாடுவது அநேகமாய் அசாத்தியம்... நமது கவியும் சாாீரமான காதலையே அதிகமாக வர்ணிக்கிறார்... ஆனால், சுகப் பிரம்மமே நிறுத்த முடியாததான தராசு முனையை நம் ஆசிாியர் நிறுத்தவில்லை என்று நாம் குறை கூறலாமா?

மேனாட்டிலக்கியங்களை மட்டுமன்றி, இந்திய மொழிகள் பிறவற்றிலுள்ள இலக்கியங்களையும் பொருத்தமான சந்தர்ப்பத்தில் ஒப்புநோக்கித் தாம் ஆராயும் நூலுக்கு விளக்கம் கூறினார் ஐயர் என்பதற்கு மேற்கூறிய பகுதி தக்கவொரு திருஷ்டாந்தமாகும். ஆயினும் ஐயர் எழுதிய சிறுகதைகளை நோக்கும் போதும், திறனாய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் நோக்கும்போதும் படிப்போர் மனத்தைக் கவர்வது அவரது நிலையான மேனாட்டிலக்கியப் பயிற்சியாகும். தென்றலோடு மேல்காற்றையும் அற்புதமாகக் கலந்தூட்டியவர் ஐயர். அந்த வகையில், அப்பணியை வெவ்வேறு அளவிலே தொடர்ந்து செய்து வருபவரான அ.சீனிவாசராகவன், ரா.ஸரீ.தேசிகன், பி.ஸரீ., டி.கே.சி. க.நா.சுப்ரமண்யன், புரசு பாலகிருஷ்ணன், ரகுநாதன், எஸ்.இராமகிருஷ்ணன், சி.சு. செல்லப்பா, முதலியோரெல்லாம் ஐயர் மரபிலே வந்தவர்களே. சுருங்கக்கூறின் நவீன ஆங்கில விமர்சன முறையும் உத்திகளும் ஐயர் தமிழுக்கு அளித்த அருங்கொடைகள் என்பதில் எந்தவித ஐயப்பாடுமில்லை. ஐயரது காலத்திற்குப் பின் மேனாட்டுக் காவியங்களைப் பற்றிய ஆய்வு பல புதிய நெறிகளிற் சென்றுள்ளது. எனினும் அவாின் KAMBARAMAYANA - A STUDY என்ற நூல் இன்னும் சிறப்புடன் விளங்குகின்றது. 

ஐயர் இவ்வாங்கில நூலை ஏறத்தாழ நாற்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்னர் (1921-22) பெலாாி சிறைக் கைதியாக இருந்த காலத்தில் எழுதினார். என்றோ வௌி வந்திருக்க வேண்டிய இவ்வாிய ஆராய்ச்சி நூல் சுமார் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னரே (1950) அச்சுவாகனமேறி வௌியுலகை எட்டிப் பார்த்தது. ஐயர் நூலை எழுதியதற்கும் குறிப்பிடும் மேனாட்டுக் காவியங்கள் பற்றிய ஆய்வுகள் பல்கிப் பெருகி வந்துள்ளன. சிறப்பாக கிரேக்க ஆதி கவியாம் ஹோமர் பற்றி விமர்சனம் முற்றிலும் புதிய போக்கில் விாிந்துள்ளது. இலியாது, ஈனியித், சுவர்க்க நீக்கம், வால்மீகி இராமாயணம் என்பனவற்றையெல்லாம் ஒரே தன்மையனவாகக் கொண்டு ஒப்புநோக்கி விமர்சனஞ் செய்தார் ஐயர். பெலாாி சிறையில் போதிய நூல்கள் கிடைக்காத இடர்மிகுந்த சூழ்நிலையில் எழுதிக் கொண்டிருந்த வேளை, பிரெஞ்சு நாட்டுச் சொர்பொன் பல்கலைக் கழகத்திலே ஆராய்ச்சி மாணவனாக இருந்த மில்மன் பாி என்ற அமொிக்கர் ஹோமர் பற்றிய ஆராய்ச்சியைப் புரட்சிகரமான பாதையில் செலுத்திய ஆய்வுக் கட்டுரையை உருவாக்கிக் கொண்டிருந்தார். அது காலவரை உலகெங்கிலுமுள்ள கிரேக்க இலக்கிய அறிஞர்கள் ஹோமர் தமது காவியங்களை எழுதினார் என்று திடமாக நம்பி வந்தனர். மதக் கோட்பாடு போல நம்பிக்கையடிப் படையில் நிலவி வந்த கருத்தை வேரோடு சாய்த்தார் பாி. செர்போ குறோஷியன்-தென்சிலாவிக்-வாய்மொழியிலக்கியங்களை நுணுக்கமாக ஆராய்ந்த பாி, அவற்றிற்கும் ஹோமரது பெயரால் வழங்கும் கிரேக்க ஆதிகாவியங்களுக்குமுள்ள அத்தியந்த ஒற்றுமைகளைக் கண்டார். காணவும் ஹோமரைப் பற்றிய புதிய விளக்கம் பிறந்தது. பத்தாண்டுகளுக்குப் பின்னர் (முப்பதுகளில்) தமது முடிபைக் கூறினார். கிரேக்க இலக்கிய ஆராய்ச்சியாளரும் பெரும் பேராசிாியரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் ஹோமரது படைப்பு ஏட்டிலெழுதா வாய்மொழிக் காப்பியம் என்னுமுண்மை உணரப்படலாயிற்று. வெர்ஜிலின் ஈனியித், மில்டனது சுவர்க்க நீக்கம் முதலியன செயற்கையாகத் தோற்றுவிக்கப்பட்ட இலக்கியக் காப்பியங்கள் வியாசரது மகாபாரதத்தைப் போல, ஹோமரது இலியாது முன்முறை இதிகாசம் அல்லது இயற்கை இதிகாசம் எனப்படும். ஒரு கவிஞனால் ஒருமுறையில் பாடப்படாது, பலகாலமாகப் பல பிரதேசங்களில் ஆங்காங்கே வழங்கி வந்த கவிதைப் பகுதிகள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் திரண்டு வடிவம் பெறுவதே வளர்ச்சி இதிகாசம் எனப்படும். 

ஈனியித், சுவர்க்க நீக்கம், கம்பராமாயணம் முதலியன "கலைபற்றிய நியமங்களும், பாட்டியல் மரபுகளும் வரையறைப்பட்ட காலத்தில்" பிறந்தவை. தனியொரு பெருங்கவிஞனது மேதாவிலாசத்திற்கும் கலையுணர்ச்சிக்கும் களஞ்சியமாக விளங்குவன. 

இயற்கை இதிகாசங்களும் இலக்கியக் காப்பியங்களும் பிறப்பினால் வேறானவையாதலால் அவைபற்றிய விமர்சனங்களும் வேறானவையாயிருத்தல் வேண்டியது இயல்பே. இதனை வற்புறுத்தினார் மில்மன் பாி. பாிக்குப் பின் வந்த பௌரா, தொம்ஸன், நெடோபோலொஸ், லோட், கேர்க் முதலிய ஆராய்ச்சியாளர் ஹோமரது காவியங்களை வாய்மொழிப் பாடல்களாகவே கொண்டு தமது நூதன ஆய்வுகளை நடத்தியுள்ளனர். உலக முழுவதும் பூர்வீக இலக்கியங்களைப் புதிய நோக்கில் ஆராயவும், ஒப்பு நோக்கவும் இவர்கள் முனைந்துள்ளனர். இவற்றின் பயனாக வாய் மொழிப் பாட்டியல் (Oral Poetics) ஆழமும் அகலமும் அடைந்து வருகிறது. உண்மையில் ஹோமரது கவிப்பண்பு கம்பனிலன்றி, முற்காலச் சான்றோாிடத்திலேயே காணப்படுகிறது. கம்பனை வெர்ஜிலுடனும், மில்டனுடனும், தாந்தோயுடனும் ஒப்பிடலாம். ஹோமருடன் ஒரே வழி ஒப்பிடலாமாயினும், அதனாற் பெறும் பயன் குறைவே. 

ஐயர் முற்குறிய பாகுபாட்டை அறியாதவராதலின், காப்பியங்கள் யாவற்றையும் ஒருசேர வைத்து ஒப்பு நோக்கியுள்ளார். அது அவாின் குற்றமோ குறைபாடோ அல்ல. ஏனெனில் பாியின் ஆய்வுகள் பிரசித்தமாகு முன்னதாகவே (3.6.1925) அவர் அகால மரணமடைந்தார். அவர் செய்யத் தவறியதை அவருக்குப் பின்வந்தோர் சிலர் ஒரளவு நிவிர்த்தி செய்துள்ளனர் எனலாம். ஆயினும் ஐயர் காட்டிய வழியில் வரும் தமிழறிஞர் பலர், இயற்கை இதிகாசத்துக்கும், இலக்கியக் காப்பியத்துக்கும், உள்ள அடிப்படை வித்தியாசத்தைச் செவ்வனே உணர்ந்துள்ளனர் எனக் கூறுவதற்கில்லை. ஐயருக்குப் பின்வந்தவர்கள் எழுதியுள்ள நூல்களில் எஸ்.இராமகிருஷ்ணனின் கம்பனும் மில்டனும், சிதம்பர ரகுநாதனின் பாரதியும் ஷெல்லியும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வி.சச்சிதானந்தன் என்பார் ஆங்கிலத்தில் பாரதியையும், விட்மன், ஷெல்லி, கீட்ஸ் முதலியோரையும் ஒப்பிட்டு எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளும், இக்கட்டுரையாசிாியர் பாரதியையும் தாகூரையும் ஒப்புநோக்கி எழுதிய இரு மகாகவிகள் என்ற நூலும், ஜி.வான்மீகநாதன் என்பார் மணிவாசகரையும் ரூமி என்ற பாரசீக மறைஞானக் கவிஞரையும் ஒப்பிட்டு ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையும் குறிப்பிடத்தக்கன. இவற்றைவிட இன்னும் என் கண்ணிற் படாதனவும் இருத்தல்கூடும். 

சிதம்பர ரகுநாதன் எழுதியுள்ள கங்கையும் காவிாியும் குறிப்பிடத்தக்க ஒப்பியல் இலக்கிய நூலே. தாகூரையும் பாரதியையும் ஒப்பு நோக்கி எடைபோடுகிறது இந்நூல். இவற்றைவிட, பேராசிாியர் அ.சீனிவாசராகவன், திரு.கி.சந்திரசேகரன் ஆகியோர் அவ்வப்போது எழுதிய சில கட்டுரைகளும் இத்துறையிலடங்குவன. ஆயினும் இவை சிறு துளிகளே. 

இவ்விடத்திலே ஒப்புநோக்கு மனோபாவம் பற்றி ஓர் எச்சாிக்கை செய்யத் தோன்றுகிறது. பழைய இலக்கியங்களை ஒப்புநோக்கி ஆய்வோர் சிலரே. ஆனால் தற்கால இலக்கியங்களைத் திறனாய்வோர் பலர். தற்கால இலக்கிய வடிவங்களுள்ளும் புனைகதை, நாடகம் என்பனவற்றைப் படித்து அபிப்பிராயங் கூறுவோர் இன்னும் பலர். இந்நிலையில் தமிழ் எழுத்தாளரை மேனாட்டு எழுத்தாளருடன் தொடர்பு படுத்தியும் ஒப்பிட்டும் மட்டுமதிப்பின்றிப் போகும் போக்கிலே பேசுவோர் பலாிருக்கின்றனர். எம்மவர்க்கு ஆங்கிலப் பயிற்சியும் கேள்வியுமே அதிகமாதலால், ஐரோப்பிய இலக்கிய கர்தாக்களுள் ஆங்கிலேயரே முன்மாதிாிகளாய்க் கொள்ளப்படுகின்றனர். எனினும், இடையிடையே பிற ஐரோப்பியர் சிலரும் எடுத்தாளப்படுவதுண்டு. பழைய நாவலாசிாியர் ஸ்கொற், நாடகாசிாியர் பெர்னாட்ஷா, புதுமை எழுத்தாளர்கள் லோரன்ஸ், ஜோய்ஸ், காதாின்மான்ஸ் ஃபீல்ட், ஜெர்மானிய எழுத்தாளர் காப்கா, முதலியோர் அடிக்கடி குறிப்பிடப்படுபவர்கள். உதாரணமாக, கல்கியை வால்டர் ஸ்கொற்றுடன் ஒப்பிட்டுள்ளனர்; ஜெயகாந்தனை டி.எச். லோரன்சுடன் ஒப்பிட்டுளளனர். ஓரளவேனும் திட்டமான ஒப்பாய்வின் பயனாகவன்றி மேலெழுந்த வாாியான மனப்பதிவுகளாகவே இத்தகைய ஒப்பீடுகள் அமைந்துவிடுகின்றன. போலியான இவ்வொப்பீடுகள் குறித்துப் புதுமைப்பித்தன் ஒரு கட்டுரையிற் பின்வருமாறு நையாண்டியாக எழுதியுள்ளார்: 

"ஏன் அது மேல் நாட்டுடன் ஒப்பிட வேண்டிய காாியமோ தொியவில்லை. நம்மூர் நாயர் ஓட்டல் இட்லியையும், பரமசிவம் பிள்ளை ஓட்டல் தோசையையும் ஹட்லின் பாமர்ஸ் பிஸ்கோத்துடன் வெற்றிகரமாக ஒப்பிட்டு வௌிவரும் கருத்துக்களைக் காணப்பெறும் பாக்கியம் எனக்கு இதுவரை சித்திக்கவில்லை."

புதுமைப்பித்தனது வயிற்றொிச்சல் வௌிப்படை. இவ்வாறு எழுதும் "ஆசிாியர்களைத் தமிழ்நாட்டு பெர்னாட்ஷா, தமிழ்நாட்டு மாப்பஸான்" என்று வழங்குபவர்கள் உண்மையில் பிறநாட்டு இலக்கிய கர்த்தாக்களோடு ஒப்பு நோக்குகிறார்கள் அல்லர்; மறைமுகமாகத் தமது தாழ்மையுணர்ச்சியைக் காட்டிக் கொள்கின்றனர். இவர்களிற் பெரும்பாலானோர், இலக்கியத்தைப் பொழுதுபோக்காகக் கொள்பவர்கள். எனவே சுயதிருப்திக்காகவும் வௌிப்பகட்டிற்காகவும் இவ்வாறு ஒப்பிட்டுரைக்கின்றனர். அது இலக்கிய ஒட்டுக்காய்ச்சலாக எமது வாசகரைப் பீடித்து விடுகிறது. 

ஒப்பியல் ஆய்வென்பது கேவலம் பொழுதுபோக்கான ஆய்வு முறையன்று; ஒப்பியல் ஆய்வின் மூலமாகவே ஒரு பொருளின் தனிப்பண்புகளைத் திடமாகக் கூறலாம். ஒற்றுமைக்கு மத்தியிலும் நுண்ணிய வேறுபாடுகள் காணப்படும். அவற்றினை ஆதாரமாகக் கொண்டே ஒரு பொருளின் தனிச் சிறப்புக்களை அறிதல் கூடும். அதாவது இரு இலக்கியங்களை ஒப்பிடும்பொழுது அவற்றின் பொதுப்பண்புகள் யாவை, சிறப்புப் பண்புகள் யாவை என்பது தௌிவாகிறது. இத்தௌிவு, வரலாற்றடிப்படையிலான இலக்கிய ஆராய்ச்சிக்கு ஏதுவாக அமைகின்றது. இன்று தமிழிலக்கிய ஆராய்ச்சியானது பெருமளவிற்குக் கூறியது கூறலாகவே அமைந்து காணப்படுவதற்கும், பழம் பெருமைச் சிறைக்குள் அடைபட்டுக் கிடப்பதற்கும் ஒப்பியல் மனோபாவம் தக்கமுறையில் வளராமையே காரணம் என்று துணிந்து கூறலாம். ஏறத்தாழ ஒரு நூற்றாண்டிற்கு முன்னதாக இக்குறைபாட்டை மேனாட்டுத் தமிழறிஞர் ஒருவர் கண்டுகொண்டார்: 

"ஒப்பியற் கல்வி ஒவ்வோர் அறிவியற்றுறையிலும் ஐரோப்பாவில் பெருநலம் பயந்துள்ளது. திராவிடர்கள் (தமிழர்கள்) தங்கள் மொழிகளைப் பிறவற்றுடன் ஒப்புநோக்க ஒருபோதும் முயன்றதில்லை. இதனால், அவர்கள் தங்கள் மொழியைப் படிப்பதிலே கடைப்பிடித்த அக்கறையானது, மதி நுட்பத்தோடு பகுத்துணர்வோடும் கூடிறயதாயிராமல்; நேர்மையாக எதிர்பார்த்த அளவிற்கு மிகக் குறைந்த பயனை அளித்துள்ளது. 
அத்தியட்சர் கால்டுவெல் அன்று குறிப்பாக மொழியியல் பற்றிக் கூறியது இன்று இலக்கிய ஆராய்ச்சிக்கும் பொருந்தும். இதனை ஓர் உதாரணத்தின் மூலம் விளக்கலாம். பண்டைக்கால மனித வரலாற்றை ஆராய்ந்தவர்கள், வீரயுகம், Heroic Age என்ற காலப் பிரிவைக் குறிப்பிட்டுள்ளனர். அநாகரிக நிலையிலிருந்து நாகரிக நிலைக்குச் சமூகம் மாறும் ஒரு குறிப்பிட்டகால கட்டத்தில், குழுக்களாகவும் குலங்களாகவும் இருந்த வாழ்க்கை அமைப்பைத் தனிமனிதக் கொள்கை உடைத்தெறிந்து, வலுக்கொள்கையினடிப்படையில் அரசுகளை நிறுவும் சண்டைகள் நிறைந்த வரலாற்று நிலையை வீரயுகம் என்றழைப்பர். மேற்கூறிய பண்புகள் பிரதிபலிக்கும் பாக்களை வீரயுகப் பாக்கள் என்றுங்கூறுவர். இப்பாக்கள் ஏட்டிலெழுதா வாய்மொழிப் பாக்களாகவே தோன்றி நிலவுவன. கிரேக்க, கெல்திய, ஜெர்மானிய ஆதிகவிகளை ஆராய்ந்தவர்கள் கண்டறிந்த தரவுகளினின்றும் கணிக்கப்பட்ட இலக்கியக் கொள்கை இது. இக்கொள்கையை ஒரு கருதுகோளாகக் கொண்டே, சித்தாந்தா, வையாபுரிப்பிள்ளை முதலியோர் பழந்தமிழ்ப் பாடல்களும் வீரயுகத்தைச் சேர்ந்தனவாக இருக்கலாம் என ஊகித்தனர். ஆராய்ச்சியின் பயனாகச் சேர்ந்தனவாக இருக்கலாம் என ஊகித்தனர். ஆராய்ச்சியின் பயனாகக் கருதுகோள் சரியெனக் காணப்பட்டுள்ளது. இதுவே ஒப்பியல் நோக்கின் பண்பும் பயனுமாகும். ஒப்புநோக்கிக் கற்காததன் காரணமாக, புறநானூறு, பதிற்றுப் பத்து, புறப்பொருள் வெண்பாமாலை முதலிய நூற்பாடல்கள், "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வாளோடு முன்தோன்றி மூத்தகுடி" யாம் தமிழ் மக்களின் தனிப் பெரும் வீரப்பண்பைக் காட்டுகின்றன என்று, போலிச் சிறப்புப் பேசி திரிகின்றனர் பலர். ஒப்புநோக்கி இலக்கியத்தைப் படிக்கும் போது, "திருந்தாத" மக்களாகக் கருதப்படும் இருண்டகண்டத்து, ஆப்பிரிக்க மக்கள் கூட வீரயுகப் பாக்களை உடையவராயிருப்பது இலக்குவிற் புலனாகும். ஆகவே, "மதி நுட்பமும் பகுத்துணர்வும் ஆராய்ச்சியில் இடம் பெறத் தலைப்படும் எமது அறியாமை காரணமாக, எமக்கே (தமிழருக்கே) உரித்தானவை என்று எண்ணிக் சுயநிறை உணர்வுடன் கருதிக்கொள்ளும் பல விஷயங்கள் பிற சமூக மக்களிடத்தும் காணப்படுகின்றன என்பதை நாம் என்று அறிகின்றோமோ அன்றே உண்மையான அறிவு வளர்ச்சியும் சமூக முன்னேற்றமும் ஏற்படும். யுகக் கவிஞன் பாரதி இதைக் கண்டுகொண்டான்: 

    "மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
    சொல்வதிலோர் மகிமை இல்லை;
    திறமான புலமையெனில் வௌிநாட்டார்
    அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.

நாம் "வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி" என்று எவ்வளவுதான் உரக்கக் கூவினாலும், வௌிநாட்டார் அதற்குச் செவிசாய்க்கப் போவதில்லை. கலை இலக்கியத்துறையைப் பொறுத்த அளவில், மேற்கூறிய ஒப்பியல் இலக்கிய ஆய்வுகள் எமது இலக்கியச் செல்வங்களை உலகறியச் செய்வதுடன், எமது இலக்கியங்களின் சிறப்புப் பண்புகள் யாவை, பொதுப் பண்புகள் யாவை என்பனவற்றை உணர வழிகாட்டுவதுடன், வரலாற்றடிப்படையிலான இலக்கிய ஆராய்ச்சிக்கும் ஏதுவாக அமையும். 

கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக இயங்கிவரும் உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தின் ஆதரவில் இரு கருத்தரங்குகள் நிகழ்ந்துள்ளன. முதலாவது கருத்தரங்கு குவாலாலம்பூரிலும் (ஏப்ரல் 1966) இரண்டாவது கருத்தரங்கு சென்னையிலும் (ஜனவரி 1968) நடைபெற்றன. வளர்ந்து வரும் தமிழியல் (Tamilology) ஆராய்ச்சிக்குத் தலையாய எடுத்துக்காட்டாக இக் கருத்தரங்கு திகழ்கிறது எனக் கொண்டால், இன்றைய தமிழியல் ஆய்வின் முக்கிய துறையாக ஒப்பியல் ஆய்வு விளங்குகிறது எனக் கொள்ளலாம். பொதுவாகத் தமிழ்நாட்டில் ஒப்பியல் நோக்கும், ஆய்வும் வளர்ச்சி குன்றியே காணப்படுவது பலராலும் ஒப்ப முடிந்த செய்தியே. ஆயினும் கருத்தரங்கில் வௌிநாட்டாராய்ச்சியாளரும் பங்குபற்றுவதனால் இத்துறைக்குப் பெருந்தூண்டுதல் கிடைத்துள்ளது. இக் கருத்தரங்குகளிலும், ஒப்பியல் ஆய்வுத் துறையிலே, தமிழகப் பிரதிநிதிகளிலும், பிறநாட்டுப் பிரதிநிதிகளே பெரும்பாலான ஆய்வுரைகளைச் சமர்ப்பித்துள்ளனர். 

கடல்கடந்து வாழும் தமிழாராய்ச்சியாளரைப் பொறுத்தவரையில் மலேஷியப் பல்கலைக்கழக இந்தியவியல் துறை விரிவுரையாளர் திரு.எஸ்.சிங்காரவேலு ஒப்பியல் ஆராய்ச்சியில் பேரூக்கத்துடன் உழைத்து வருகிறார். தென்கிழக்கு ஆசியப் பிரதேசங்களில் இராமாயணம் பரவியுள்ளது. தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேஷியா முதலிய தேசங்களிலெல்லாம் காணப்படும் இராம சரிதங்களை ஒப்பு நோக்கிப் பகுப்பாய்வும் பண்பாய்வும் பரவலை ஆராயும் வகையில் இத்தகைய ஒப்பு ஆய்வும் அமைவன. முதலாவது கருத்தரங்கிலே திரு.எஸ்.சிங்கார வேலு" A comparative study of the story of Rama in South India and South East Asia" என்ற ஆய்வுக் கட்டுரையை அரங்கேற்றினார். சமீப கால நுண்ணாய்வுகளில் இதற்குச் சிறப்பானவோர் இடமுண்டு. இப்பொருள் குறித்து, பேராசிரியர் தொ.பொ. மீனாட்சி சுந்தரனாரும் வேறு இரண்டொருவரும் அவ்வப்போது சில அவசரக் குறிப்புகளைக் கூறியுள்ளரெனினும் திருப்தி தரும் வகையில் முழுமையான ஆராய்ச்சியை செய்து வருபவரும் திரு. சிங்காரவேலு எனலாம். 

இவ்வாராய்ச்சியின் தனிப்பட்ட சிறப்பு ஒருபுறமிருக்க, இத்தகைய ஒப்பியல் ஆய்வுகளைத் தமிழக மாணவரினும் வௌிநாட்டு மாணவர் பயனுள்ள முறையிற் செய்துமுடிக்க பல வசதிகள் உண்டென்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். தமிழியல் செழிப்பதற்கு இவற்றைச் செய்தல் கடன் என்பது ஒரு தலை. பல நூற்றாண்டுக் காலமாகத் தமிழ் நாட்டிற்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் எத்தனையோ தொடர்புகள் இருந்திருக்கின்றன. வரலாற்று மாணவருக்கு இச்செய்தி புதியதல்ல. ஆனால் கலை இலக்கிய மாணவர் இத்தொடர்புகளின் விளைவான வௌிப்பாடுகளைப் போதியளவு - குறிப்பாகத் தமிழரது நோக்கு நிலையினின்று - ஆராய்ந்திருக்கின்றனர் என்பதற்கில்லை. தமிழகத்து அறிஞர் பலர், ' கடாரங் கைக் கொண்டு சிங்காசனத்திருந்த செம்பியன்" பெருமையைக் கூறியும் எண்ணியும் இறும்பூ தெய்துகின்றனரேயன்றி, அக்காலங்களில் நிகழ்ந்த பண்பாட்டுப் பரிவர்த்தனையின் நுணுக்கவிவரங்களைப் பெறுமையுடன் ஆராய்ந்து அறியும் மனவமைதி உடையவராய்க் காணப்படவில்லை. இந்நிலையில் நாகரிகங் கலந்த இடங்களிலே வாழுஞ் சந்தர்ப்பம் வாய்க்கப் பெற்ற தமிழரும் பிறரும் அவ்விவரங்களைப் பகுத்தும் வகுத்தும் தொகுத்தும் ஆராய்வது பாராட்டப்பட வேண்டியதே. 

மலேஷியப் பல்கலைக்கழக இந்தியவியற்றுறை அதிபர், வண தனிநாயக அடிகள் தமது பணியமர்வுத் தொடக்கப் பேருரையிற் கூறிய சில வாக்கியங்கள் இங்கு நினைவுக்கு வருகின்றன: 

"மலாய், இஸ்லாமிய, சீனத் துறைகளோடு நெருங்கி ஒத்துழைத்துப் புதிய விளக்கங்களைக் காண்பதற்கு இப்பல்கலைக் கழகத்தில் இந்தியவியற்றுறையினருக்குப் பல வாய்ப்புகள் உள்ளன. இப்பல்கலைக் கழகத்திலுள்ள இந்தியவியற்றுறையின் வரையறைகளுக்கு இயைப மலாயச் சரித்திரம், பண்பாடு என்பவற்றை மாத்திரமன்றி, சமாத்திராவிலும் ஜாவாவிலுள்ள டியெங் மேட்டுச் சமவௌியிலும், பாலித் தீவிலும், மிசொன், போநகர் ஆகியவற்றின் அழிபாடுகளிலும், வியத்நாமிலுள்ள ஒல்கெயோவிலும் கம்போடியாவிலுள்ள அங்கொர் வாட், அங்கொர்தாம், ஆகியவற்றிலும் தாய்லாந்திலுள்ள புகழ் வாய்ந்த கட்டடங்களிலும் மொழி இலக்கியத்திலும் இந்தியவியல் சார்ந்த ஆய்வுகள் நடாத்த வாய்ப்புண்டு. இப்பெரு முயற்சியில் மேலும் ஒரு படி சென்று, சீனச்சிந்தனையையும், இலக்கியங்களையும் நாம் கற்று, இதுவரை அறியாத மூலங்களையும் ஒப்புமைகளையும் கண்டறிதல் கூடும்; அல்லது இன்னும் வடக்கே சென்று, சப்பானியக் கவிதையிற் காணும் தங்கா, சென்பௌத்தம் ஆகியவற்றுடன் ஒப்புமைகள் காணலாம். இத்துறையில் உழைப்பவர்க்குச் செயற்பரப்பு அகன்றது; வாய்ப்புகள் அனந்தம்." 

மகத்தான இக்குறிக்கோளுக்கிணங்க மலேஷியப் பல்கலைக் கழகத்திலே சில முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய அடிப்படையிலே டில்லிப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையினர் தமது பிரத்தியேகச் சூழமைவுக்கேற்ற சில ஆய்வுகளை வழி நடத்தி வருகின்றனர். தமிழிலக்கியங்களை இந்தி நூல்களுடன் ஒப்பு நோக்கி ஆராயும் வாய்ப்பு அங்கிருக்கிறது. பட்டப் பின்னராய்ச்சியை ஒப்பியல் இலக்கியப் பொருளிலே, அதாவது இந்தி - தமிழ் ஒப்பாராய்ச்சியிலே நடாத்த வாய்ப்பிருப்பதால் சில நன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக நாலாயிர திவ்விய பிரபந்தத்திலும் சூர்சாகரிலும் கிருஷ்ணகதை கையாளப்பட்டிருக்கும் மாற்றை ஒப்பு நோக்கி யாராய்ந்திருக்கிறார். கே.ஏ.யமுனா இவ்வாய்வுக் கட்டுரைக்காக அவருக்கு கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டது. திருவள்ளுவரையும் கபீரையும், கம்பனையும் துளசிதாசையும் ஒப்பு நோக்கி யாராயும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. துளசிதாஸ் படைத்த ராமசரிதமானஸ் இந்திமொழியின் பொக்கிஷங்களிலொன்று. வ.வே.சு.ஐயர், தொ.பொ.மீனாட்சி சுந்தரனார், ஈ.த.இராஜேஸ்வரி அம்மையார் முதலியோர் துளசி இராமாயணத்தைக் கம்பராமாயணத்தோடு தொடர்புபடுத்திச் சிற்சில குறிப்புக்கள் எழுதியிருக்கின்றனரேயன்றி ஆழமான ஆய்வு எதுவும் இதற்கு முன்னர் வௌிவந்ததில்லை.

உலகத் தமிழாராய்ச்சிக் கருத்தரங்கின்போது தமிழியலின் ஒரு பகுதியான ஒப்பியல் ஆய்வு அடைந்து வரும் துரித முன்னேற்றத்தைக் கண்டுணரக்கூடியதாயிருந்தது. எடுத்துக்காட்டுக்கள் சிலவற்றைக் குறிப்பிடுதல் பொருத்தமாகும். சென்னைக் கருத்தரங்கிலே "தமிழிலக்கிய வரலாற்றில் திருப்புமுனைகள்" என்னும் பொருள் பற்றிப் பேருரை நிகழ்த்திய கேரளப் பல்கலைக் கழகமொழியியல் துறைத்தலைவர் வி.ஜ.சுப்பிரமணியம் ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சியின் இன்றியமையாமையை எடுத்து விளக்கினார். 

"மத்தியகாலத்திலும் பிற்காலத்திலும் கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலே எழுந்த இலக்கியங்களுக்குப் பொதுவான இலக்கிய அடிக்கருத்துக்கள் (Themes) காணப்படுகின்றன. இவை முனைப் பான ஒப்புமைகள் - அயற் பிரதேசங்களினது இலக்கிய மரபுகளை அறிவது தமிழ் இலக்கிய மரபை மதிப்பிட உதவும்...அடிக்கருத்துக்கள், யாப்பு, இலக்கிய வகை (வடிவம்) இலக்கிய மரபு முதலியவற்றை ஆராயும் பணி மேற்கொள்ளப்படாமல், தமிழிலக்கிய வரலாற்றிலே இன்னும் தீர்க்கப்படாப் புதிர்களுக்குச் சில அறுதியான சான்றுகள் கிடைத்தல் கூடும்."

கண்ணகி கதை கேரள நாட்டிலும் தமிழ் நாட்டிலும் வளர்ந்தும் தேய்ந்தும் வந்துள்ள வரலாற்றுச் செய்திகளை உதாரண விளக்கமாகக் காட்டினார் பேராசிரியர். வாய்மொழி இலக்கியங்களைப் பொறுத்தவரையிலும், ஆராய்ச்சியாளர் கடைப்பிடிக்கக் கூடிய சில ஒப்பியல் நெறிகளைச் சுட்டிக் காட்டினார் அவர். அன்னாரின் மாணாக்கர் இருவர் (கே.பி.எஸ்.ஹமீத் பி.ஆர்.சுப்பிரமணியன்) இத்துறையில் குறிப்பிடத்தக்க ஆய்வு நடத்தியுள்ளனர். 

பேராசிரியர் சுப்பிரமணியன் குறிப்பிட்ட கண்ணகி கதைப்பரவல் இலங்கையையும் உள்ளடக்குவதே. இதனை அழுத்தந் திருத்தமாகவும் ஆணித்தரமாகவும் கோடிட்டுக் காட்டியது. திரு.நா.சுப்பிரமணியனது ஆய்வுரை. இலங்கையரான திரு.நா.சுப்பிரமணியன் வாசித்த கட்டுரை சிலம்புச் செல்வியும் சிங்கள இலக்கியமும் என்பது. 

இளங்கோவின் சிலப்பதிகாரக் கதை சிங்கள இலக்கியத்தில் எவ்வடிவத்திலே இடம் பெற்றுள்ளது என்பதைக் காட்டுவதே கட்டுரையின் அடிப்படை நோக்கம். அந்த அளவிற்கு அது ஒப்பிலக்கிய நோக்கினால் உந்தப் பெற்றதே. பத்தினி வழிபாடு இலங்கைக்கு இடம் பெயர்ந்ததாகவும், அது காவல் தெய்வவழிபாடாக உருமாற்றம் அடைந்தமையும், புத்த சமயச்சாயல் பெற்றமையும் சமுதாயவியல் சார்ந்த செய்திகள். இச்செய்திகளுக்கு வரலாற்றுப் பின்னணியு முண்டு. இவை யாவுஞ் சேர்ந்து சிலப்பதிகாரச் செய்தியைப் புதிய புதிய பரீசீலனைகளுக்கு ஆதாரமாக்கி விடுகின்றன. சிலப்பதிகாரச் செய்யுளை அசைபோட்டுப் பழகிவிட்ட பலருக்கு இத்தகைய ஆய்வுகளின் முக்கியத்துவம் புலப்படாமலுமிருக்கலாம். ஆயினும் இவையே தமிழியற் பரப்பையும் எல்லையையும் விரிவாக்குவன.

பழங்காலத்திலே தென்னிந்தியாவிற் சிறப்புற்று விளங்கிய சில 'தெய்வங்கள்" கடல்கடந்து பெரும் பெயர் பெற்றன. இராமன், அகத்தியன், கண்ணகி முதலாயின இத்தெய்வங்கள். இவை தமிழர் பண்பாடு பரவிய அயல் நாடுகளிலும் வழிபடலாயின. இவை பற்றிய இலக்கியங்களும் பாடி மாற்றங்களுடன் தோன்றின. மலேஷியக் கருத்தரங்கிலே இராமகாதையின் பரவல் பற்றிச் சச்சிதானந்தம் சிங்கார வேலு கட்டுரை படித்ததை மேலே குறிப்பிட்டோம். நா. சுப்பிரமணியனது கட்டுரை அத்துணை விரிவற்றதாயினும் அதேகரத்தைச் சேர்ந்ததே. ஒப்பியலாய்வின் பயனாகச் சிலப்பதிகாரக் கதை மாறுபட்ட சூழமைவிற்கேற்ப எவ்வாறு உருமாற்றம் பெற்றதென்பதைத் துலக்கியுள்ளார். எஸ்.வையாபுரிப்பிள்ளை, மகாவித்துவான் மு.இராகவையங்கார் முதலியோர் பத்தினி வழிபாட்டைப் பற்றியும், சிலப்பதிகாரக் கதையின் "மறு அவதாரங்கள்" பற்றியும் பயனுள்ள குறிப்புக்கள் கூறியுள்ளரெனினும் சிங்கள இலக்கியச் சான்றுகளை மூலத்திற் படித்துப் பயன்படுத்தியவரல்லர். திரு.நா.சுப்பிரமணியத்தின் கட்டுரை இக்குறைபாட்டை ஓரளவு நிவர்த்தி செய்துள்ளது. பேராசிரியர் வி.ஐ. சுப்பிரமணியன் குறிப்பிட்டது போல, கன்னடம், மலையாளம், தெலுங்கு என்ற மொழிகளிலுள்ள இலக்கியங்கள் மாத்திரமின்றிச் சிங்கள இலக்கியமும் தமிழ் மாணவர் ஒப்பு நோக்க வேண்டியதொன்றாகும். 

தமிழைத் தாய்மொழியாகக் கொள்வோரின் ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சிகள் இவ்வாறிருக்க, மேனாட்டார் சிலரின் முயற்சிகளைக் குறிப்பிடுதல் அவசியம். "தமிழிலக்கியத்திலும் இந்தோ-ஆரிய இலக்கியத்திலும் கார்காலம்" என்ற ஒப்பியற் கட்டுரையைப் படித்தார், ஜோர்ஜ் எஸ்.ஹார்ட் என்னும் அமெரிக்க ஆராய்ச்சியாளர். ஒப்பியல் இலக்கிய ஆய்வுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது அவரது கட்டுரை, தமிழ் பாகதம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிற் காணப்படும கார்காலத்தைப் பற்றிய அகப்பொருட்பாக்களை ஒப்புநோக்கி, அவற்றின் ஒற்றுமை வேற்றுமைக்குக் காரணங்களைக் காட்டி, தமிழிலிருந்தே வட மொழிக்கு இத்துறையைச்சார்ந்த பொருள் சென்றிருத்தல் வேண்டும் எனத் தக்கபடி அவர் விளக்கினார். தொகை நூல்களிற் காணப்படும் அகத்திணைச் செய்யுட்களைச் சிறப்பாகக் கற்க இத்தகைய ஆய்வு வழி காட்டும் என்பதில் ஐயமில்லை. ஹார்ட் போன்ற இளைய தலைமுறையைச் சேர்ந்த மேனாட்டுத் தமிழாராய்ச்சி மாணவரிடத்திற் காணப்படும் சிறப்பியல்பு யாதெனில் தமிழபிமானத்தையும் நிதானத்தையும் ஒருங்கிணைக்கும் உணர்வமைதியாகும். வடமொழியிலக்கியங்களையும் தமிழிலக்கியங்களையும் ஒப்பு நோக்குமிடத்து உணர்ச்சி நிலையில் அன்றி அறிவு நிலையினின்று நோக்கும் சமநிலை அவர்களிடத்துக் காணப்படுகிறது. கார்கால வரவையொட்டிப் பிரிவுத் துயரினால் வாடும் தலைவியரையும் அவர்தம் அகநிலைகளையும் இயற்கையோடு இணைத்துக் காட்டும் கவிப்பொருள் மரபு வடமொழித் தொகை நூல்களிலும் குறிப்பாகப் பாகதச் செய்யுட்களிலும் உள்ளன. இம்மரபு ஏறத்தாழ கி.பி.நான்காம் நூற்றாண்டளவிலேயே தமிழிலிருந்து அவ்விலக்கியங்களுக்குச் சென்றிருத்தல் வேண்டும் என்று திரு.ஹார்ட் கூறிய போது, அது வெறும் தமிழபிமான மாகவன்றி ஒப்பியல் ஆய்வின் வௌிப்பாடாக விருந்தது. கால ஆராய்ச்சியும் குணநல ஆராய்ச்சியும் ஒருங்கிணைந்த பார்வை அவர் ஆய்வை வழிநடத்தியுள்ளது. 

மிகப் பழமையான தமிழ்ச் செய்யுட்களை ஹார்ட் ஒப்பு நோக்கி ஆராய்ந்தது போல, நவீன கவிதைகளால் பாரதி படைப்புக்களை ஒப்பு நோக்கி விளக்கினார் ரஷ்ய இந்தியவியல் ஆய்வாளர், பேராசிரியர் இ.பி.செலிஷெவ், "பாரதி கவிதைகள் - இந்திய இலக்கிய வளர்ச்சியில் தோன்றிய புதிய போக்குகளுக்கு எடுத்துக்காட்டு" என்ற கட்டுரையில் வட இந்திய மொழிகளிலே பாரதிக்கு நிகராகக் கவிபாடிய சிலரை ஒப்பியல் நோக்கில் ஆராய்ந்தார் செலிஷெவ். இந்தியக் கவிஞரை முதலில் மொழியடிப்படையிலோ அன்றிப் பிரதேச அடிப்படையிலோ ஒப்பிடுவதும், அதன் பின்னர் பிற நாட்டுக் கவிஞருடன் ஒப்பிட்டாய்வதும், பயன்தரவல்ல முயற்சியாயிருக்கும் என நினைவூட்டிய அவர், பாரதியை வட இந்தியக் கவிஞருடன் ஒப்பு நோக்கிச் சில முடிவுகளைத் தெரிவித்தார். 

"இவ்வாறு மேற்கூறிய ஒப்பு நோக்கின் அடிப்படையிலே, பாரதியின் தேசபக்திக் கவிதைகளை இந்தியாவின் பிற மொழிக் கவிதைகளுடன் சீர்தூக்கிப் பார்க்குமிடத்து, தமிழகத்தின் மகாகவி தேச விடுதலை இயக்கத்தால் உணர்வூட்டப் பெற்ற இந்திய இலக்கிய மேதைகளின் முதல் வரிசையில் இடம் பெறுகிறார் என்பது உறுதிப்படுகின்றது" 

இம்முடிவிற்குக் காரண காரிய விளக்கங் காட்டிய செலிஷெவ், தாகூர், நஸ்ருல் இஸ்ஸாம், மைதிலிஷரண் குப்தா, சூர்யகாந்த் திருபாதி, பாலகிருஷ்ண சர்மா, மகன்லால் சுதர்வேதி, ஹரியவுதின் முதலிய வங்காள, இந்திக் கவிஞருக்கும் பாரதிக்கும் பொதுவுயல்புகளும் முன்மாதிரிகளும் ஒத்த தன்மையாய் விளங்கியமைக்குச் சரித்திரக் காரணிகளை எடுத்துக் காட்டினார். "இவ்வெழுத்தாளர்களிடையே நேரடித் தொடர்பு இல்லாமல் இவர்களுடைய இலக்கியப் படைப்புக்களில் ஒத்த வடிவங்கள் வளரலாயின. பொதுவியல்புகளுக்கு விளக்கங் கூறியது போலவே, "பாரதியின் தனிச் சிறப்புகளுக்கும் விளக்கம் கூற முயன்றார் செலிஷெவ்." அரசியல் தௌிவுடன் சமுதாயப் பொருட்செறிவு மிக்க கருத்துக்களை, ஏனைய இந்தியக் கவிஞர்களுக்கு முன்னதாக, பாரதி தமது எழுத்துக்களிலே வௌியிட முடிந்ததற்குக் காரணம் என்ன? ஒப்பியல் ஆராய்ச்சியாளனொருவன் அவசியம் கேட்கவேண்டியகேள்வி இது. இத்தகைய தடை விடைகளால் பாரதியின் சிறப்பைச் சான்றுகாட்டி நிறுவிய செலிஷெவ், பாரதியிடம் குடிகொண்டிருந்த வரலாற்றுணர்வே அவரைச் சில விஷயங்களை நன்கு உணர்ந்த முதற்பெரும் இந்தியக் கவிஞராக்கியது என்றார். சமீப காலத்தில் வளர்ந்துவரும் பாரதியாய்வுகளில் இக்கட்டுரை குறிப்பிடத்தக்கது. 

உலகத் தமிழாராய்ச்சிக் கருத்தரங்குகளில் மொழியியற்றுறை பற்றிய ஒப்பியல் ஆய்வுகளே இன்றும் பெருவழக்காயுள்ளன. ஒப்பியல் ஆராய்ச்சியொன்றால் மொழியியல் ஆய்வு என்றே பொதுவான அபிப்பிராயமும் நிலவுகிறது. இந்தியவியலைப் பொறுத்தளவில் ஒப்பியல் ஆய்வானது மொழியியற்றுரையில் ஆரம்பித்தமை இம்மனப்பதிவுக்குக் காரணமாயிருக்கலாம். ஆனால் ஒப்பியல் ஆய்வென்பது உண்மையில் ஓர் ஆராய்ச்சி முறையே யாகும். மேனாட்டிற் சென்ற நூற்றாண்டிலே சமூகவியலும் மானிடவியலும் பெருவளர்ச்சி யுற்றமைக்குக் காரணமே, ஒப்பியல் ஆய்வு முறைதான். ஃபிறேஸர், டைலர், ஹெபட்ஸன்சிமித், தூர்க்கைம் முதலியோர் 'உலகமளாவிய' மானிடவியற் செய்திகளை ஒப்புநோக்கியே சமூகவியக்கத்தின் நியதிகள் பலவற்றையும் பண்டைக்காலச் சமூக நிறுவனங்களின் உண்மையையும் கண்டறிந்து நிறுவினர். புராதன சமுதாயங்களின் வளர்ச்சிப் படிகளை வகுத்துக் கூறிய மோர்கன் என்பார், பல நூற்றுக்கணக்கான சமூகங்களின் இயக்கப்பாடுகளை ஒப்புநோக்கியே அவற்றிற்குப் பொதுவான விதிகளைக் கூற முற்பட்டனர். சமூகவியல் மாத்திரமன்றி, டார்வினது பரிணாமக் கொள்கையும் அடிப்படையில் ஒப்பியல்களைத் துணையாகக் கொண்டதே. 

சென்னையில் நடந்த கருத்தரங்களிலே கலை, இலக்கியத் துறைகளில் ஒப்பியல் ஆய்வு மகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்திருந்தது. மேலே குறிப்பிட்ட முக்கியமான கட்டுரைகளைத் தவிர, திரு.சி.வி.இராஜசுந்தரம் (இலங்கை) எழுதிய "தற்காலத் தமிழ்க் கவிதையில் மேனாட்டுச் செல்வாக்கு" திரு ஆர்.ரமணி (சிங்கப்பூர்) வாசித்த "பண்டைத் தமிழ்ப் பட்டினங்கள் - சில முற்குறிப்புகள்" ஜனாப் கே.பி.எஸ்.ஹமித் வாசித்த "இரு மரபுவழிக் கதைப்பாடல்களின் கட்டமைப்பு" ஹேர்மான் பேர்கெர் (மேற்கு ஜெர்மனி) எழுதிய "ரிஷ்ய சிருங்கர் கதை ஒரு திராவிடப் பழமரபுக் கதை, டாக்டர். என்.வி. ராஜகோபாலன் (ஆக்ரா) சமர்ப்பித்த "பரத நாட்டியத்திலும் சமஸ்கிருதச் செய்யுளிலும் காணும் தொல்காப்பிய அகப்பொருள் செல்வாக்கு" கருத்தரங்கையொட்டித் திரு.பி.ஆர்.சுப்பிரமணியன் (கேரளம்) எழுதிய "மக்கள் பாடல்கள் - இலக்கியத்தின் முன்னோடிகள்" என்ற கட்டுரைகள் பொதுவாகக் கூறுமிடத்து ஒப்பியற் கண்ணோட்டம் உடையனவே. இவை எதிர்கால ஆராய்ச்சி பற்றி நம்பிக்கை தருவனவாக உள்ளன. ஏலவே நான் குறிப்பிட்டுள்ளது போல ஒப்பியல் இலக்கியத்திலும் ஒப்பியல் மொழியியலே கருத்தரங்கில் முக்கியத்துவம் பெற்றது. 'புத்தம் புதிய' கலையாகிய மொழியியல் சிறப்பிடம் பெறுவதில் வியப்பெதுவுமில்லை. சுமார் பத்துக் கட்டுரைகள் ஒப்பு மொழியியற் றுறையைச் சார்ந்தனவாக இருந்தன. இவற்றுள்ளும் பெரும்பான்மை பிற நாட்டு நல்லறிஞரால் எழுதப்பட்டவை. திரு.நா.வானமாமலை ஒரு சந்தர்ப்பத்திற் குறிப்பிட்டிருப்பது போல, "இத்தகைய ஆராய்ச்சிகளை அந்நிய ஆராய்ச்சியாளர்களிடமே விட்டுவிட்டு நாம் வாளாவிருப்பது நமக்குப் பெருமையளிக்காது. நாமே இத்துறையில் முன்னேற வேண்டும். 

மொழியியல், இலக்கியம் என்ற துறைகளில் ஒப்புநோக்கு அத்தியாவசியமாய் இருப்பது போலவே, வாய் மொழி இலக்கியத் துறையிலும் அது மிக முக்கியமானதாகும். நாடோடிப் பாடல்கள், நாட்டார் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், மக்கள் இலக்கியம், கிராமிய இலக்கியம், பாமரர் பாடல்கள், என்றெல்லாம நாம் சரணஞ் செய்யப்பட்டுள்ள வாய்மொழிப் பாடல்கள் ஒப்பியல் ஆய்வினால் புத்தொளியும் புது விளக்கமும் பெறக் கூடியன. திரு.நா. வானமாலை, பேராசிரியர் வி.ஜ. சுப்பிரமணியன், திரு.பி.ஆர். சுப்பிரமணியன், கு.அழகிரிசாமி முதலியோர் இத்துறையில் அவ்வப்போது முயற்சிகள் கைக்கொண்டிருக்கின்றனர். இவர்களோடு செக் நாட்டு ஆராய்ச்சி மாணவரான ஜான் பிரிப்ஸ்கியையும் குறிப்பிடலாம். தமிழ் நாட்டிற் காணும் கட்ட பொம்மன் பாடற்பிரதிகளை ஒப்பு நோக்குவதில் ஈடுபட்டுள்ளார் பிலிப்ஸ்கி. 

செம்மை சான்ற இலக்கியங்களிலே பொதுவியல்புகள் காணப்படுவதிலும் பார்க்க வாய்மொழிப்பாடல்களிலே உலகப் பொதுவான முனைக் கருத்துக்கள் (Motifs) காணப்படும். புராதனவியற் பண்பு வாய்ந்த இக்கருத்துக் கூறுகள் சமுதாயப் பொருண்மை உடையன. இவற்றையும் இவை தோன்றக் காரணமாக இருந்த சமூக அமைப்பையும் வரையறை செய்யவும் நுண்ணாய்வு செய்யவும் ஒப்பு நோக்குப் பேருதவியாயிருக்கும். அது மட்டுமல்லாது இவ்வாய்வுகள் இலக்கிய ஆராய்ச்சிக்கும் துணையாயமைவன. விபுலாநந்த அடிகள், வ.குமாரசாமி, காலஞ்சென்ற பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் முதலியோர் தமிழிலக்கியங்களிற் காணப்படும் வாய்மொழிப் பாடற் செல்வாக்கினையும், மேலே கூறிய முனைக்கருத்துக்களையும் அங்கங்கே சுட்டிக் காட்டியிருக்கின்றனர். இவருள் முதல் மூவரும் இலங்கையர், சென்னைக் கருத்தரங்களிலே பேராசிரியர் வி.ஜ.சுப்பிரமணியன் தமது உரையிலே பின்வருமாறு கூறினார்: 

"வாய்மொழிப் பாடல்களின் முக்கியத்துவத்தை எமது இலக்கிய வரலாற்றாசிரியர்கள் காலங் கடந்தே உணர்ந்துள்ளனராயினும், பரந்துபட்ட முறையிலே தமிழிலக்கிய வரலாற்றை எழுத இவ்வுணர்வு உதவுமெனலாம்... தமிழ் நாட்டில் வழங்கி வரும் பழமொழிகள், நல்லுரைகள் என்பனவற்றை யொத்தவை திருக்குறள். பழமொழி நானூறு முதலிய அற நூல்களிலும் வேறு சில நூல்களிலும் காணப்பெறுகின்றன. சிலவற்றை வாய்மொழியாகவே கேட்கலாம். சிலவற்றை இலக்கிய நூல்களிற் பார்க்கலாம். இவற்றை ஒப்பு நோக்கி யாராய்ந்தால், அவை மக்களிடமிருந்து பெறப்பட்டனவா அன்றி, பாகதம், சமஸ்கிருதம் முதலிய பிறமொழிகளிலிருந்து கடன் வாங்கப்பட்டனவா என்னுங் கேள்விக்கு விடை காண உதவியாயிருக்கும்." 

உலகத் தமிழாராய்ச்சிக் கருத்தரங்கு தனது பெயருக்கியை உலக மளாவியதாயிருப்பதற்கு ஒப்பியல் ஆய்வு இன்றியமையாதது என்பதை இதுவரை நடந்தேறிய இரு கருத்தரங்குகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இவ்வுணர்வு நல்ல சகுனம். அவை நழுவ விடுவது எம்மவர்க்கு ஏற்றதாகாது.

 


3. தமிழ் வீரயுகப் பாடல்கள் 

1911-ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற் பேராசிரியராக இருந்த எச்.எம்.சாட்விக் என்பார் (Heroic Age) வீரயுகம் என்ற நூலை வௌியிட்டார். பழம் ஜெர்மானியரது காவியப் பாடல்களை ஆராய்ந்த அவர், அவற்றைக் கிரேக்க ஆதிகவியாம் ஹோமருடைய காவியங்களுடன் ஒப்பு நோக்கி, இரு மொழியிலெழுந்த வீரகாவியங்களும் வாய்மொழியிலக்கியமாகத் தோன்றியவை என்று பல சான்றுகாட்டி நிறுவினார். அவரது அம்முயற்சி, பல மொழிகளிலுமுள்ள காவியங்களையும் பாடல்களையும் ஒப்பு ஆராய்ச்சி செய்வதற்கு வழிகாட்டியது. சாட்விக் காட்டிய வழியைப் பின்பற்றி அவரது மேற்பார்வையில் ஆராய்ச்சி நிகழ்த்திய என்.கே.சித்தாந்தா என்பார் வடமொழி இதிகாசங்களாம் ராமாயணம், பாரதம் ஆகியன வீரகாவியங்களென்றும், வாய்மொழியிலக்கியங்கள் என்றும் கூறியதோடமையாது, அவற்றைப் பிற வீரகாவியங்களுடன் ஒப்பு நோக்கியும் ஆராய்ந்தனர். சாட்விக் காட்டிய பாதையில் சிலாவிக் வீரப் பாடல்களும் ஐஸ்லாந்து ஐதிகக் கதைகளும், நன்கு ஆராயப்பட்டன. அதன் பின்னர் சுமேரியப் பாடல்களும் வீரகாவியங்களாக நிரூபிக்கப்பட்டன. அண்மைக்கா

by uma   on 02 Nov 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.