|
||||||||
ஒரு மனிதனுக்காகக் காத்திருந்த அன்றைய தினம் |
||||||||
அன்றையக் காலை
கல்விழுந்த குளம்போன்ற முகத்தோடுதான் விடிந்தது.
தெருவெங்கும் வாகனங்கள் சிறகுகட்டிப் பறந்தன.
சில சில்லாட்டு வண்டிகளும்
குடல் தெறிக்க
இருந்த வேகத்தை எல்லாமே ஒன்றுசேர்ந்து
ஓடித் தொலைந்தன புழுதியுடன் புழுதியைப்போல்.
நான் மட்டும்
அந்தக் கடையடியில் காத்திருந்தேன்.
முன்னர் கொடுத்த வாக்குறுதி மீறாது
எனக்குள்ளும் இதயம்
அரிசி அரைக்கின்ற இயந்திரத்தைப் போன்று
சத்தமிட்டு என்னை அச்சப் படுத்தியும்
சொன்னபடி அந்த மனிதன் வருவான்
என்ற நினைப்பில்
சந்தியிலே மேய்கின்ற மாடுகளும் ஓடிய அன்றைய தினத்தில்
என் கண்களை மேயவிட்டுக் காத்திருந்தேன்.
மனிதர்கள்
காலாலே பறந்தார்கள்.
எல்லோர்க்கும்
பிடரியிலே குதி பட்டது.
சில கிழவிகள்
அன்றுதான் வேகமாய் நடந்ததை நான் கண்டேன்.
அன்று ஆமை கூடப்
புலிப்பாய்ச்சல் பாய்ந்திருக்கும்.
அந்த அளவுக்கு பயங்கரமாய் இருந்தது நகரம்.
நானோ
கடையடியில் அவனைக் காத்தபடி.
பால்மணம் மாறாத சூரியன்
கடலுக்குள் இருந்து நடைபழகி வருவதற்குள்
எனது நகரம் கறுத்தது.
இருந்தும் கண்களை மேயவிட்டுக் காத்திருந்தேன்.
எனது நினைவில் வரும்போது உம்மா
பழுக்காத மாங்காய்மாதிரி விறைந்த முகத்தோடு
இன்னொரு தரமும் அகதியாய் போவதற்கு
ஆயத்தங்கள் செய்துகொண்டிருந்த
காட்சிகள் வந்து போயின.
அந்த மனிதன்
வந்தானோ போனானோ
நானறியேன்!
காற்று மட்டும் பொய்யையும் மெய்யையும் கலந்து
எதையோ சொல்லிக்கொண்டு போனது
காதில் விழுந்தது.
அன்றையக் காலை கல்விழுந்த குளம்போன்ற முகத்தோடுதான் விடிந்தது.
தெருவெங்கும் வாகனங்கள் சிறகுகட்டிப் பறந்தன. சில சில்லாட்டு வண்டிகளும் குடல் தெறிக்க இருந்த வேகத்தை எல்லாமே ஒன்றுசேர்ந்து ஓடித் தொலைந்தன புழுதியுடன் புழுதியைப்போல்.
நான் மட்டும் அந்தக் கடையடியில் காத்திருந்தேன். முன்னர் கொடுத்த வாக்குறுதி மீறாது எனக்குள்ளும் இதயம் அரிசி அரைக்கின்ற இயந்திரத்தைப் போன்று சத்தமிட்டு என்னை அச்சப் படுத்தியும் சொன்னபடி அந்த மனிதன் வருவான் என்ற நினைப்பில் சந்தியிலே மேய்கின்ற மாடுகளும் ஓடிய அன்றைய தினத்தில் என் கண்களை மேயவிட்டுக் காத்திருந்தேன்.
மனிதர்கள் காலாலே பறந்தார்கள். எல்லோர்க்கும் பிடரியிலே குதி பட்டது.
சில கிழவிகள் அன்றுதான் வேகமாய் நடந்ததை நான் கண்டேன்.
அன்று ஆமை கூடப் புலிப்பாய்ச்சல் பாய்ந்திருக்கும். அந்த அளவுக்கு பயங்கரமாய் இருந்தது நகரம்.
நானோ கடையடியில் அவனைக் காத்தபடி. பால்மணம் மாறாத சூரியன் கடலுக்குள் இருந்து நடைபழகி வருவதற்குள் எனது நகரம் கறுத்தது.
இருந்தும் கண்களை மேயவிட்டுக் காத்திருந்தேன். எனது நினைவில் வரும்போது உம்மா பழுக்காத மாங்காய்மாதிரி விறைந்த முகத்தோடு இன்னொரு தரமும் அகதியாய் போவதற்கு ஆயத்தங்கள் செய்துகொண்டிருந்த காட்சிகள் வந்து போயின.
அந்த மனிதன் வந்தானோ போனானோ நானறியேன்! காற்று மட்டும் பொய்யையும் மெய்யையும் கலந்து எதையோ சொல்லிக்கொண்டு போனது காதில் விழுந்தது.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|