LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : து.மு - து.பி - அத்தியாயம் 4

து.மு  -  து.பி


என் அறையை விட்டு வெளியே வந்தேன். 25000  சதுர அடி கொண்ட பெரிய தொழிற்சாலையின் தொடக்கம் முதல் குறிப்பிட்ட பகுதி வரைக்கும் இயந்திரங்களால் நேர்த்தியாக வரிசையாக  இருந்தன. 


பல இயந்திரங்களில் தொழிலாளர்கள்  (TAILORS)இல்லை. அங்கே பணிபுரிந்து கொண்டிருந்தவர்களிடத்தில் அதிக அளவு சுறுசுறுப்பு இல்லாமல் தைத்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.  


தொழிற்சாலையின் உள்ளே பரவியிருந்த  உஷ்ணக்காற்று என்னைத் தாக்கியது. எந்திரங்களின் சப்தமும்,  தொழிலாளர்களின் உழைப்பையும் கவனித்தப்படியே ஒவ்வொரு பகுதியாக நகர்ந்து கொண்டிருந்தேன்.  ஒவ்வொரு இடத்திலும் பெயர் பலகை மாட்டப்பட்டு இருந்தது. 


STITCHING SECTION. CHECKING SECTION, FINAL CHECKING, AQL AREA, IRON SECTION, PACKING SECTION என்று தனியாக இருந்தது. 


மற்றொரு பகுதியில் LOT SECTION, CUTTING SECTION, STORE ROOM செயல்பட்டுக் கொண்டிருந்தன.  


SAMPLES SECTION மற்றொரு புறம் இருந்தது. அங்கிருந்த சிலர் என்னை சுட்டிக்காட்டி பேசிக் கொண்டிருந்தனர். 


அங்கே பணிபுரிந்து கொண்டிருந்த எவரும் என்னை கண்டு கொள்ளவில்லை.

Oru Tholitchalaiyin Kuripugal

 

ஒரு ஆயத்த ஆடை உருவாக்கத்தில் தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் பலதரப்பட்ட துறைகள் சம்மந்தப்பட்டுள்ளன. 


ஒவ்வொரு துறையும் ஒரு உலகம். ஒவ்வொரு உலகமும் ஒரு நாடு போன்றது. அந்த நாட்டிற்கு ஒரு மன்னர், ஒரு மந்திரி, ஒரு சேனாதிபதி போன்ற படை பட்டாளங்கள் இருக்கும். அந்தந்த துறையில் பணிபுரியும் பெண்கள் பல சமயம் மகுடம் சூட்டாத ராணியாகவும் சிலரோ அந்தப்புற இளவரசியாக இருப்பார்கள். அவற்றை நாம் படிப்படியாக பார்க்கலாம்.


ஆயத்த ஆடைத்துறையைப் பற்றி நீங்கள் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த  இடத்தில் இத்துறையின் மொத்த அடிப்படை விசயங்களை பார்த்து விட வேண்டும்.  அப்போது தான் ஒரு ஆடை உருவாக்கத்திற்குப் பின்னால் உள்ள ஏராளமான உழைப்பை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.


வரலாற்றை விருப்பமாக படிப்பவர்களுக்கு கி.மு. கி.பி என்ற வார்த்தை தெரிந்து இருக்கக்கூடியதே. இதைப் போல இத்துறையில் இரண்டு வார்த்தை முக்கியமானது. து.மு என்றால் துணிக்கு முன். து.பி என்றால் துணிக்குப் பின் என்ற இரண்டு பிரிவுகளுக்குள் மொத்தத்தையும் நம்மால் கொண்டு வந்து விட முடியும்.


ஆயத்த ஆடைகளை ஆங்கிலத்தில் கார்மெண்ட்ஸ் (GARMENTS) என்கிறார்கள். திருப்பூர் என்றாலே பலரும் பனியன் கம்பெனி தானே? என்று தான் சொல்கிறார்கள்.  இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் குறித்தோ, அதன் செயல்பாடுகளைப் பற்றியோ, பெரும் பதவியில் இருந்து வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் போல பெருந்தொகையை சம்பளமாக வாங்கிக் கொண்டிருப்பவர்களைப் பற்றி திருவாளர் பொதுஜனத்திற்கு தெரிய வாய்பில்லை.

Thread

 

இந்த துறை சார்ந்த பலவற்றை பலராலும் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. பனியன், ஜட்டி என்பது தனியான உலகமது.  இந்தத்துறை இந்தியா முழுக்க உள்ள உள்நாட்டுச் சந்தையை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டு வருகின்றது.  இந்த வியாபாரம் இந்திய ரூபாயில் நடக்கின்றது.  


ஆனால் ஏற்றுமதித்துறை வெளிநாட்டு வர்த்தகத்தை சார்ந்தே இயங்குகின்றது. உலகில் உள்ள பலதரப்பட்ட கரன்சியில் பரிவர்த்தனைகள் நடந்து கொண்டிருந்த போதிலும் அமெரிக்காவின் டாலர் என்பதே இன்று வரையிலும் முக்கியமானதாக உள்ளது. இரண்டாவது இடத்தில் ஐரோப்பாவின் யூரோ உள்ளது.


இப்போது து.மு. து.பியைப் பற்றி சுருக்கமாக பார்த்து விடலாம்.


துணிக்கு முன் என்ற உலகத்தில் மூன்று வார்த்தைகள் முக்கியமானது.  பஞ்சு, நூல், துணி. பஞ்சு குறித்து நாம் தெரிய வேண்டுமென்றால் விவசாயத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.


தற்பொழுது இந்தியாவில் விவசாயம் என்பது தேவையற்ற ஒன்று என்று ஆட்சியாளர்கள் கருதுவதால்  விளைவிக்கும் பஞ்சு பொது சந்தைக்கு வருகின்றது. அதன் பிறகு அதன் பயணம் தொடங்குகின்றது என்பதோடு அந்த துறைக்கு முற்றும் என்பதோடு நிறுத்திக் கொள்வோம். காரணம் தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவின் அடிப்படை ஆதாரமான விவசாயத்தினால் எந்த காலத்திலும்  இந்தியா முன்னேற முடியாது என்று ஆட்சியாளர்கள் கருதுவதோடு இன்றைய சூழ்நிலையில் மக்களும் அதையே நம்பத் தொடங்கி விட்டனர்.  


பழைய சரித்திர குறிப்புகளை படிக்க வாய்ப்பிருந்தால் தேடிப்பிடித்து படித்துப் பாருங்கள். இந்தியாவிற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் வந்த யவனர்கள், ரோமபுரி மக்கள் தொடங்கி கடைசியில் உள்ளே வந்து நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்கள் வரைக்கும் இங்கு வந்ததற்குக் காரணம் இங்கு கொழித்துக் கொண்டிருந்த விவசாயத்தை வைத்துத்தான். 


மிளகை வாங்கிக் கொண்டு பண்டமாற்றாக தங்கத்தை கொடுத்து விட்டுச் சென்றார்கள் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். ஆனால் இன்றோ பஞ்சு முதல் அத்தனை முக்கியமான பொருளையும் ஏற்றுமதி செய்து விட்டு பெட்ரோலை இறக்குமதி செய்ய முனைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். நம் வாழ்க்கையும், விலைவாசிகளும் பஞ்சு போல பறந்து கொண்டிருக்கின்றது. 


பஞ்சு நூலாக மாற நூற்பாலைக்கு (TEXTILE MILL)  வருகின்றது. லட்சக்கணக்கான எளிய மக்களின் காமதேனு பசுவாக இந்தத் துறை உள்ளது.


இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்து தற்பொழுது குப்பைக் கூடைக்கு போய் சேர்ந்து விட்ட காங்கிரஸ் அரசாங்கம் உருவாக்கிய கொள்கையின் காரணமாக தங்கம் போல மாதத்திற்கு மாதம் விலை உயர்ந்து எட்டாக் கனியாக மாறிவிட்டது.  


குறிப்பாக ஆன் லைன் வர்த்தகம் என்ற வார்த்தையின் மூலம் சூதாட்டம் போல இந்தத்துறை மாற்றப்பட்டு பஞ்சை விளைவித்த விவசாயிக்கு எதுவும் கிடைக்காத அளவுக்கு இடைத்தரகர்களின் ராஜ்ஜியமாக உள்ளது.


இந்தியாவில் தற்பொழுது இந்தத்துறை மிக நவீன தொழில்நுட்பத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.  இந்த உலகம் இரண்டு விதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.  ஒன்று, நூறு சதவிகிதம் ஏற்றுமதி மற்றொன்று உள்நாட்டு சந்தை.  


இந்தியாவில் பல மாநிலங்களில் பலதரப்பட்ட வசதிகள் கொண்ட நூற்பாலைகள் இருந்த போதிலும் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான நூற்பாலைகள் உள்ளன.  அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் இதமான காற்று இந்த தொழிலுக்கு முக்கியமானது.


இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பஞ்சு மற்றும் நூல் தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். விளைந்த பஞ்சை பதப்படுத்தி, ரகம் வரியாக பிரித்து, சுத்தம் செய்து நூலாக மாறும் வரையிலும் தனித்தனி உலகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. நூல் தான் திருப்பூரில் உள்ள ஏற்றுமதி தொழிலுக்கு ஆதாரம்.  


நூலில் பல ரகங்கள் உள்ளது.  இதனை எளிமையாக புரிந்து கொள்ள நீங்கள் இரண்டு காலத்தை யோசித்துப் பார்த்தாலே போதுமானது.  கோடை காலம். குளிர் காலம்.   கோடை காலத்தில் நாம் போடும் உடைகள் குளிர் காலத்திற்கு உதவுமா?  இந்த இரண்டு காலத்திற்கும் பயன்படுத்தும் நூலின் தன்மையும் வெவ்வேறாக இருக்கும் என்பதை எப்போதும் மனதில் வைத்திருக்கவும்.  அதே இந்த ஆடை உருவாக்கத்தில் ஒவ்வொரு நிலையிலும் செயல்படுத்தும் விதங்கள் எதிரெதிர் துருவமாக இருக்கும். 

Clothதிருப்பூருக்குள் உள்ளே வரும் நூல் ஆய்த்த ஆடைக்கான துணியாக மாற எத்தனை படிகளை கடக்க வேண்டும்? 


YARN (நூல் ), KNITTING ( துணி அறவு  ), BLEACHING & DYEING ( சலவை மற்றும் சாயப்பட்டறை ) COMBACTING (வண்ணமேற்றிய துணியை நாம் விரும்பும் அளவிற்கு வெட்ட மாற்றித்தரும் எந்திரம். இதற்குப்பிறகே துணியாக உருவம் பெறுகின்றது. நீங்கள் எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ள நம்முடைய சட்டையை மடிப்பு கலையாமல் தேய்த்து தருகின்றார்கள் அல்லவா? அதைப்போல இந்த எந்திரங்கள் அந்தப் பணியை செய்து கொடுக்கின்றது )  


கோடை கால ஆடைகளுக்கும் குளிர் கால ஆடைகளுக்கும் சம்மந்தம் இருக்காது. 


இன்னும் எளிமையாக உங்களுக்கு புரிய வேண்டுமென்றால் குளிர்காலத்திற்கு நாம் பயன்படுத்தும் ஸ்வெட்டர் ஆடையை கோடை காலத்தில் பயன்படுத்த முடியுமா? 


இனி எங்கிருந்து இந்த தொழில் தொடங்குகின்றது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? 


எனக்கு இந்த வடிவமைப்பில், இது போன்ற பிரிண்ட் அடித்து இந்தந்த அளவுகளில் இத்தனை ஆயிரம் ஆடைகள் தேவை? என்று ஒரு வெளிநாட்டுக்காரர் திருப்பூரில் இருக்கும் ஏற்றுமதியாளரிடம் கேட்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவர் உடனே அந்த வெளிநாட்டுக்காரர் மின் அஞ்சல் வாயிலாக கொடுத்த  விபரங்களை ஒன்றன் பின் ஒன்றாக கவனமாக குறிப்பு எடுத்துக் கொள்வார். 


வெளிநாட்டுக்காரர் ஆடையில் எதிர்பார்க்கும் பிரிண்ட்டிங் மற்றும் எம்பிராய்ட்ரி டிசைன் வேலைகள் சார்ந்து, அதற்கு ஆகும் செலவுகளை கணக்கில் எடுத்துக் கொண்டு, அந்த ஆடைக்கு உத்தேசமாக எந்த அளவுக்கு துணி தேவைப்படும் என்று தனது கணக்கீடுகளை போடத் தொடங்குவார். தொடர்ந்து தேவைப்படுகின்ற நூல் மற்றும் வண்ணமேற்றிய ஒரு கிலோ துணி உருவாக்க என்ன செலவு என்பதனையும் கணக்கில் எடுத்துக் கொள்வார். 


தைத்து முடித்து அவர் கேட்கும் அலங்கார PACKING வசதிகளோடு மொத்த ஆடைகளையும் கப்பல் அல்லது விமானம் வழியே அவர்களுக்கு அனுப்பி வைக்க என்ன செலவாகும் என்பதோடு தன் லாபத்தை சேர்த்துக் கொள்வார்.


மொத்தமாக இந்த துணியாக்கத்தில் மற்றும் உருவாக்கத்தில் (PROCESS LOSS & PCS. REJUCTION) எத்தனை சதவிகிதம் இழப்பு ஒவ்வொரு நிலையிலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதையும் இந்த கணக்கில் சேர்த்துக் கொள்வார். 


இறுதியாக ஒரு ஆடையின் விலை தெரிய வரும்.   


YARN COST

KNITTING COST

DYEING/BLEACHING COST

COMBACTING/STENDER COST

PROCESS LOSS PERCENTAGE

CLOTH COST (PER KGS. CLOTH)

STITCHING TO PACKING COST

ACCESSORIES COST

FREIGHT COST

REJUCTION COST

PROFIT PERCENTAGE

 

இதற்குப்பிறகு தான் ஆலமரம் தேவைப்படாத பஞ்சாயத்து மேடை அறிமுகம் ஆகின்றது. அதாவது பேரம் தொடங்கும்.  


அந்தப்பக்கம் நீ சொல்லும் விலை எனக்கு கட்டுபிடியாகாது?. சீனாவில் இந்த விலைக்கு கிடைக்கும்? 


வேறு நாட்டில் இதைவிட குறைவாகவே எனக்கு கிடைக்கும்? என்று முறுக்குவார். இல்லையில்லை நீ எதிர்பார்க்கும் விலையில் நான் கொடுத்தால் என் கம்பெனியை ஒரு வருடத்திற்குள் இழுத்து மூட வேண்டும்? என்று இவர் திமுறுவார்.  


மாட்டுச் சந்தை போல பேரம் நடக்கும். கூச்சல் இல்லாமல் மின் அஞ்சல் வழியே தொடர்ச்சியாக அடிதடி நடந்து இறுதியாக இரண்டு கைகளிலும் துணியைப் போட்டுக் கொண்டு விரலைத் தொட்டு இறுதி விலை உறுதியாகும்.


ஒரு ஆய்த்த ஆடை உருவாக்கத்தின் முதல் உழைப்பு இங்கிருந்தே தொடங்குகின்றது.


                                                                                                                                           - தொடரும் 





by Swathi   on 21 Aug 2014  6 Comments
Tags: Oru Tholitchalaiyin Kurippugal   ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்   ஜோதிஜி திருப்பூர்              
 தொடர்புடையவை-Related Articles
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்... ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்...
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : கொள்ளையடிப்பது தனிக்கலை - அத்தியாயம் 12 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : கொள்ளையடிப்பது தனிக்கலை - அத்தியாயம் 12
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : காற்றில் பறக்கும் கௌரவம் -  அத்தியாயம் 11 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : காற்றில் பறக்கும் கௌரவம் - அத்தியாயம் 11
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பாறைகளைப் பிளக்கும் விதைகள் -  அத்தியாயம் 9 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பாறைகளைப் பிளக்கும் விதைகள் - அத்தியாயம் 9
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பலி கொடுத்து விடு -  அத்தியாயம் 8 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பலி கொடுத்து விடு - அத்தியாயம் 8
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : உழைத்து (மட்டும்) வாழ்ந்திடாதே - அத்தியாயம் 7 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : உழைத்து (மட்டும்) வாழ்ந்திடாதே - அத்தியாயம் 7
கருத்துகள்
19-Sep-2014 04:29:19 ரஞ்சனி நாராயணன் said : Report Abuse
நாம் உடுத்தும் ஆடையின் உற்பத்தியில் ஒவ்வொரு அடியிலும் எத்தனை உழைப்பு. பிரமிக்க வைக்கும் உண்மைகள். வெகு சுவாரஸ்யமாகச் சொல்லிக்கொண்டு போகிறீர்கள். பாராட்டுக்கள்!
 
01-Sep-2014 10:43:00 வா. இளங்கோ said : Report Abuse
நானும் திருப்புாில் ஆசிரியராக இருந்துள்ளேன். அடிமாட்டு சம்பளத்திற்கு . மே மாதம் எங்களுக்கு வயிறு பசிக்காததால் சம்பளம் இல்லை-அந்த சாமி சொன்னது. என் ஏழ்மையை எப்படியெல்லாம் காசாக்கி, காாில் போயிருக்கான். பாவி
 
31-Aug-2014 19:07:56 ரத்னவேல் நடராஜன் said : Report Abuse
தொழில் சம்பந்தமான விளக்கமான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு ஜோதிஜி.
 
24-Aug-2014 22:09:02 தினேஷ்குமார் P said : Report Abuse
நான் வெகு நாட்களாக தேடி கொண்டிருந்த தொழில் அறிவை கொஞ்சம் கொஞ்சமாக பெற்றுக்கொண்டு இருக்கிறேன். முதல் பொக்கிஷம் உங்களின் முதல் புத்தகம் "டாலர் நகரம்". இரண்டாவதை ரசித்து கொண்டு இருக்கிறேன். உங்களின் தெளிவான உரைநடையை படிக்கும் போது உங்களின் தொழில் அறிவு வியப்பை ஏற்படுத்துகிறது... வாழ்த்துக்கள்! நன்றி! வேண்டுகோள்: படித்த இளைங்கர்களுக்கான தொழில் வாய்ப்புகளை தெரிய படுத்துமாறு கேட்டுகொள்கிறேன்.
 
24-Aug-2014 08:20:07 முரளிதரன் said : Report Abuse
உடுத்தும் ஆடையின் பின்னணியில் எவ்வளவு விஷயங்கள் உள்ளன என்பதைஉணர முடிகிறது.
 
22-Aug-2014 07:51:51 krishnamoorthy said : Report Abuse
சந்தேகமே இல்லை இந்த ஆக்கத்தின் பலன் - ஆயத்த ஆடைபிரிவிர்க்கு பாட புத்தகமாகம் .ஆனால் யோசிக்கவே பயமாக இருக்கிறது மிக பெரிய முயற்சி இது .இன்று இருக்கும் உங்கள் வேளைபளுவுக்கிடையே இந்த கட்டுரை சவாலாக அமைவது உறுதி .அற்புதமாக வந்து கொண்டு இருக்கிறது .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.