|
||||||||
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : யோசிக்காதே? ஓடிக் கொண்டேயிரு! - அத்தியாயம் 5 |
||||||||
யோசிக்காதே? ஓடிக் கொண்டேயிரு! சென்ற அத்தியாயத்தில் ஒரு ஆய்த்த ஆடையின் உருவாக்கத்திற்கான முதல் உழைப்பு எங்கிருந்து தொடங்குகின்றது? என்பதைப் பார்த்தோம். ஒரு ஆடை முழு உருவமாகி ஏற்றுமதி ஆகின்ற வரையில் இந்த துறையில் என்ன நடக்கின்றது? எவரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதனை இந்தத் துறையில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற சில கதாபாத்திரங்கள் மூலம் படிப்படியாக இந்த துறையைப் பற்றி புரிந்து கொள்ள முயற்சிப்போமா? இதனுடன் தொழிலாளி மற்றும் முதலாளி என்ற வர்க்கபேதத்தில் உள்ள வினோத முரண்பாடுகளைப் பற்றியும் வரப் போகின்ற அத்தியாயத்தில் பேசுவோம். இத் துறையில் 22 வருடங்கள் அனுபவங்கள் உள்ள நான் கற்றதும் பெற்றதும் ஏராளம். நான் இத்துறையில் நிலையான பதவி அமையவே ஏழு வருடங்கள் போராட வேண்டியிருந்தது. அதன் பிறகு தான் என்னைச் சுற்றிலும் என்ன நடக்கின்றது என்பதே என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. காரணம் அதுவரையிலும் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்த காட்டாறு வெள்ளத்தில் சிறு துரும்பாக தத்தளித்துக் கொண்டிருந்தேன். எதையும் கவனிக்க நேரமில்லாமல் எவர் எவரோ இடும் கட்டளைகளை நேரம் மறந்து நிறைவேற்றிக் கொடுப்பவனாக இருந்துள்ளேன். 20 மணி நேர பணியென்பது கடந்து போன என் வாழ்க்கையில் பல மாதங்கள் இயல்பானதாகவே இருந்தது. உடலும் மனதும் அதற்கு தகுந்தாற்போலவே உருமாறத் தொடங்கியது. வாழ்க்கையை ரசித்தே வாழ்ந்து பழகியவனுக்கு இது நரக வேதனையாக இருந்தது. உழைத்து விட்டு ஒதுங்கி விட அதன் பலன்கள் எல்லாம் எவர் எவருக்கோ கிடைத்துக் கொண்டிருந்தது. நான் தேடிக் கொண்டிருந்த ‘அங்கீகாரம்’ என்ற வார்த்தை அர்த்தமற்று சிரிக்கத் தொடங்கியது. எனக்கான நேரம் வந்தது. வந்த நேரத்தை முயற்சியுடன் கூடிய தன்னம்பிக்கை வழிநடத்தியது. இந்தத்துறையில் நின்று ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் உருவானது. உள்ளுற வைத்திருந்த வன்மத்தை வரி வரியாக பிரித்து வைத்திருந்தேன். அப்போது தான் நான் பணியாற்றி வந்த பல நிறுவனங்களைப் பற்றி, அங்கு நடந்த சம்பவங்களைப் பற்றி யோசிக்கத் துவங்கினேன். தன் சுய விருப்பு வெறுப்புக்காக நிறுவனங்களை கவிழ்த்தவர்கள், குறுகிய காலத்திற்குள் நிறுவன வளர்ச்சியை விட தங்களது பொருளாதார வளர்ச்சியை பெருக்கிக் கொண்டவர்கள், உண்மையான உழைப்பாளிகளை உதாசீனப்படுத்தியவர்கள், தங்களது பலவீனங்களுக்காக வளர்ந்து கொண்டிருந்த நிறுவனத்தை வேரோடு வெட்டி சாய்த்தவர்கள் என்று பலவற்றையும் பார்த்த காரணத்தால் எல்லா நிகழ்வுகளுமே இயல்பான தொழில் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எனக்குத் தெரிய தொடங்கியது.
காரணம் எல்லாநிலையிலும் எல்லோருக்கும் பணம் தான் பிரதானமாக இருந்தது. ஒருவர் பணத்தை முதலீடாக போட்டு விட்டு பெரிய லாபத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார். மற்றொருவர் குறுக்கு வழியில் பணத்தை துரத்திக் கொண்டிருக்கின்றார். மொத்ததில் இருவருக்குமே தூக்கம் தேவையில்லாமல் போய்விடுகின்றது. முதலீடு செய்தவர் முதலாளி. ஆனால் அவரின் லாபத்தை தவறான வழியில் அடையக் காத்திருப்பவர் பணியாளர். ஐம்பது ரூபாய் திருட்டு முதல் மாதம் ஐந்து லட்சம் திருட்டுத்தனம் வரைக்கும் அவரவர் பதவிக்கு தகுந்தாற் போல நடந்து கொண்டேயிருப்பதால் கடைசியாக பாதிக்கப்படுவது நிறுவனத்தின் வளர்ச்சியே. கடைசியில் ஒரு நாள் நிறுவனம் வங்கியில் போய் சிக்கிவிடுகின்றது. இப்படி சிக்கிய நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் கதையென்பது அவலத்தின் உச்சமாக இருக்கும். வெளிநாட்டுக் கார்களில் பவனி வந்த பல முதலாளிகள் இன்று வெளியே தலைகாட்ட முடியாத நிலைக்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நான் தன்னிலை மறந்ததே இல்லை. எனக்கென்று ஒரு நோக்கம் இருந்தது. அதற்கு மேலாக அந்த நோக்கத்திற்குள் ஒரு சிறப்பான வாழ்வியல் தத்துவம் இருந்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மனதிற்குள் உருவாகும் காயங்கள் அதிகமாக இருந்தாலும் சீழ்பிடிக்காத அளவிற்கு நான் வாசித்த புத்தகங்கள் எனக்கு மருந்தாக இருந்து உதவியது. வாழ்ந்து காட்டுதலை விட மிகச் சிறந்த பழிவாங்குதல் வேறேதும் உலகில் உண்டா? இங்கு எல்லோருமே தொடக்க நிலையில் கஷ்டப்படத்தான் செய்கின்றார்கள். தனது வளர்ச்சியை நோக்கி சிந்தித்து மேலே வரத் துடிக்கின்றனர். தன்னை வளர விடாமல் தடுக்கும் காரணிகளை நினைத்து புலம்புவதோடு நிறுத்திக் கொள்கின்றனர். ஆனால் அதற்கான காரணங்களைப் பற்றி யோசிக்கும் போது மட்டும் தன் நிலை என்ன? தற்போதைய தன் தகுதி என்ன? என்ற கேள்வி பிறக்கும் என்பதை உணர மறுக்கின்றனர். எதை முதன்மையாக வளர்த்துக் கொள்ள வேண்டும்? எந்த சமயத்தில் அதனை வெளிப்படுத்த வேண்டும் என்பதை உணராமல் தான் பெற்றுள்ள வன்மத்தை மட்டுமே மனதிற்குள் வைத்து புழுங்கிக் கொண்டிருப்பவனால் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேலே வளர முடிவதில்லை. வாழ்க்கை முழுக்க புலம்புவனாகவே வாழ்ந்து பழகியவனுக்கு அவன் பார்க்கும் அத்தனை பேர்களும் எதிரியாகத் தான் தெரிவார்கள். கேவலமான எண்ணங்கள் தான் மேலோங்கும். அதன் பிறகே ஒருவனின் சுய புத்தி மழுங்கிப் போய்விடத் தொடங்கின்றது. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று தவறான பாதையில் சென்று கடைசியில் வாழ்க்கை அலங்கோலத்தில் முடிகின்றது. கிராமத்து வாழ்க்கை, கிராமம் சார்ந்த சிந்தனைகள் எதுவும் தொழில் நகர வாழ்க்கைக்கு ஒத்துவராது என்பதை உணர்ந்து கொள்ளவே எனக்கு ஐந்து வருடங்கள் தேவைப்பட்டது. புதிய மாற்றங்கள் என்னை நோக்கி வரத் தொடங்கியது. நிலையான உயர் பதவியை நோக்கி என் வாழ்க்கை நகரத் தொடங்கியது. அடுத்தடுத்து நிறுவனங்கள் மாறினாலும் மேலே உயர முடிந்தது. வசதிகளும் வாய்ப்புகளும் அதிகமானது. நிர்வாக அறிவு சார்ந்த விசயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிய போது தான் மனிதர்களின் உள் மன விகாரத்தைப் பற்றி ஆராய முடிந்தது. ஒவ்வொருவரின் எண்ணத்திற்கும் சொல்லுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடிந்தது. முதலாளிவர்க்கம் என் தனித்தன்மையாக இருக்கின்றார்கள். ஏன் எப்போதும் தொழிலாளிவர்க்கம் உழைப்பவர்களாகவே மட்டும் இருந்து விடுகின்றார்கள் போன்ற பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கத் தொடங்கியது. என்னைச் சுற்றிலும் உள்ள மனிதர்களின் மனவோட்டத்தை அறியத்துவங்கினேன். ஒவ்வொரு தனிமனிதர்களின் எண்ணங்கள், செயல்கள், வித்தியாசங்கள் என ஒவ்வொன்றும் எனக்குப் புரியத் தொடங்கியது. உழைப்பு, திறமை என்பதற்கு அப்பாற்பட்டு இங்கே பல விசயங்கள் உள்ளது. ஆய்த்த ஆடை துறை மட்டுமல்ல. இந்தியாவில் நீங்கள் காண்கின்ற எந்தத்துறையிலும் நூறு சதவிகிதம் திறமைசாலிகள் இல்லை. அதே போல நூறு சதவிகித உழைப்பாளிகளும் இல்லை. ஆனால் இங்கே குறிப்பிட்ட சிலர் மட்டுமே சாதனையாளர்களாக மாறுகின்றார்கள். ஏன்?பள்ளி, கல்லூரிகளில் படிப்பில் சுட்டியாய் இருந்தவர்கள் வாழ்க்கையில் முழுமையாக ஜெயித்து விடுகின்றார்களா என்ன? எந்த நாட்டில், எந்த இடங்களில் வாழ்பவராக இருந்தாலும் சமயோஜித புத்தியுள்ளவர்களால் மட்டுமே பல துறைகளில் உச்சத்தை தொட முடிகின்றது. ஒரு ஆய்த்த ஆடைத் தொழிற்சாலையின் உள்ளே நுழைந்தால் ஆயிரக்கணக்கான பேர்கள் இருப்பார்கள். உச்சகட்ட பதவி என்பது ஏழெட்டு பேர்களுடன் முடிந்து விடும். அதற்கு கீழே வருகின்ற அத்தனை பேர்களும் அல்லக்கை, நொள்ளக்கை, நொந்தகை வகையினராக இருப்பர். அதிலும் குறிப்பாக உழைப்பதற்கென்றே பிறப்பெடுத்தவர்கள் போல தினசரி தன் வாழ்க்கையை நொந்தபடியே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கான பேர்கள் உள்ளனர் என்பதை நீங்கள் எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? இந்த வகை உழைப்பாளிகள் திருப்பூரில் ஒவ்வொரு நிறுவனத்திலும் நூற்றுக்கணக்கான பேர்கள் உள்ளனர். ஆய்த்த ஆடைத்துறையில் உள்ளுற இருக்கும் துறைகள் வெவ்வேறானதாக இருக்கலாம். ஆனால் இவர்களுக்கு வியர்வை என்ற பெயரில் இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருக்கும். இவர்களின் உழைப்பு நம்மை சிந்திக்க வைக்கும்.
இந்திய ஜனநாயகத்தில் எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. எவர் வேண்டுமானாலும் என்ன தொழில் என்றாலும் தொடங்கலாம். ஆனால் தொழில் தொடங்கிய அத்தனை பேர்களும் ஜெயித்து விடுவதில்லை. ஜெயித்தவர்களும் நிலையாக நீண்ட காலம் நிலைத்திருப்பதும் இல்லை. தொடர்ச்சியாக ஜெயித்து நீண்ட காலம் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்த அந்த நிறுவனத்தில் அவனை சந்தித்தேன். அவன் பெயர் மாடசாமி. பெயர் பொருத்தமோ? ராசிப் பொருத்தமோ தெரியவில்லை, அந்த நிறுவனத்தில் அவன் மாடு போலத் தான் நேரம் காலம் தெரியாமல் உழைத்துக் கொண்டிருந்தான். யோசிப்பதை மறந்து காலை முதல் நள்ளிரவு வரைக்கும் வாரம் முழுக்க உழைத்தவனின் கதையைக் கேட்டால் அவலத்தின் உச்சமாக இருக்கும். காரணம் அவனின் சொந்த ஊரில் செயல்பட முடியாத நிலையில் படுத்த படுக்கையாக உயிருள்ள பிணமாக இருக்கின்றான். |
||||||||
by Swathi on 28 Aug 2014 8 Comments | ||||||||
Tags: Oru Tholitchalaiyin Kurippugal ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்... ஜோதிஜி திருப்பூர் | ||||||||
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|