அண்மை காலமாக தமிழகத்தில் குறிப்பாக தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்டிருக்கும் சம்பவம் குறித்து செய்திகளாக கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி தைரியலட்சுமி என்பவர் கடந்த ஏப்ரல் 17 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலை முடிவுக்கு காரணம், தான் சரியாக படிக்க முடியவில்லை என்று கூறி கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்துள்ளார். இத்தனைக்கும் அவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில், சிவில் என்ஜினீயரிங் படிப்பில் முதலாம் ஆண்டுதான் படித்து வந்தார். முதல் செமஸ்டரில் பல பாடங்களில் தோல்வி அடைந்ததை எதிர்கொள்ள முடியாத, தைரியலட்சுமி, `என்னால் எதையும் சரியாக செய்ய முடியல. நல்லா படிக்க முடியல. நிறைய பாடத்தில் பெயில் ஆயிட்டேன். வீட்ல ரொம்ப கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாங்க. அதுக்கு ஏற்றமாதிரி நான் படிக்கல. எனக்கு படிக்க ரொம்ப கஷ்டமாயிருக்கு. எப்படியும் 2-வது செமஸ்டரில் பெயில் ஆயிடுவேன். நான் படிக்கலனா எங்க வீட்டுக்கு நான் வேஸ்ட். அதான் நான் போறேன். டீச்சர்ஸ் நல்லாதான் நடத்துறாங்க. என்னால்தான் படிக்க முடியல. அதனால் நான் போறேன். இதற்கு நான் மட்டும்தான் காரணம். தப்பா எடுத்துக்காதீங்க' என்று எழுதி வைத்துவிட்டு, தன்னை மாய்த்துக்கொண்டாள். கிராமப்புறங்களில் தமிழ் வழி கல்வியில் படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்து, பொறியியல், மருத்துவ கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், நகர்ப்புறங்களில் உள்ள பாடத்திட்டங்களையும், ஆங்கிலத்தையும் பார்த்து பிரமித்து நிற்கிறார்கள். இதனால், அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மை வருவதோடு, எதிர்கொள்ள திராணியற்று தற்கொலை செய்ய முடிவெடுத்து விடுகிறார்கள். உண்மையில் ஒரு மாணவனுக்கு குறிப்பிட்ட துறையை திணிக்கும் கொடுமையான போக்கை நாம் ஒழித்தாக வேண்டும். இது, அந்த மாணவவின் சுய ஆற்றல், நம்பிக்கை எல்லாவற்றையும் இழக்க செய்கிறது. பல எதிரார்ப்புகளை மாணவர்களிடம் மறைமுகமாக திணிக்கிறோம். அதாவது, ஏழையாக பள்ளி படிப்பை முடித்து வரும் ஒரு மாணவர் அவர் நல்ல மதிப்பெண்ணை பெற்றும் கல்லூரிக்கு செல்ல தயாராகிறார். அப்போது, சமூகம் அவர்களை ஒரு குறிபிட்ட துறைக்குள் திணிக்கிறது. இதனால், குறிப்பிட்ட வரையறைக்குள் அறிவுதளத்தை வைத்து கொண்டு கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்கள், வரையறையற்ற அறிவுதளத்தில் வாழ்ந்து ஊறி கிடக்கும் நகர்புற மாணவர்களுடன் சேர்ந்து கல்லூரியில் படிக்கும் போது.... அங்கு இரு மாணவர்களுக்கு சமமான ஓட்டம் இருக்காது; அங்கு இருவருமே போட்டி போடும் சூழல், பொருந்தாதாகி விடும். அப்போது தான் சிக்கலே உருவாகிறது. இதனால், மதிப்பெண்களை மையப்படுத்தி இருக்கும் கல்வி முறையை மாற்றி, சுயசிந்தனையை ஊக்குவிக்கும் தளத்திற்கு இட்டு செல்லும் கல்வி முறையை வழங்க வேண்டும். கல்லூரி படிப்பு என்பது அதுவும் பொறியியல் போன்ற தொழிற் படிப்புகள் வெறும் தியரிகளை மனப்பாடம் செய்து விட்டு ஒப்புவித்தல் அல்ல, கற்பனை, சிந்தனை, தொலைநோக்கு பார்வை, வெளிப்படுத்தும் முறை, செய்முறை என செயற்தளத்திற்குள் அமைக்கப்பட்டிருக்கும். இதனை வெறுமெனே பாடங்களை புத்தகத்திலிருந்து படித்து கேள்விக்கு பதிலளித்து மதிப்பெண் பெற்றுவிடலாம் என்ற கோணத்தில் அனைவரும் பார்ப்பதாலேயே சிக்கல் உருவாகிறது. இதனை புரிந்துக்கொள்ளாமல், நம் பெற்றோர்கள் எல்லோரும் படிக்கிறார்கள், எல்லாரும் சம்பாதிக்கிறார்கள் என்று தன் பிள்ளைகளையும் அவ்வாறு படிக்க வைக்க விரும்புகிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு என்ன தேவை அதற்கு நாம் வழங்குகிற மூலதனம் என்ன என்பதை சிந்திப்பதில்லை. அதேசமயம், நகர்புற வாய்ப்புகள் இப்போது கிராமங்களை சென்று அடைவதால், கூடுமான அளவு அரசும், கல்வி நிறுவனங்களும் ஏழை எளிய கிராம புற மாணவர்களை மையப்படுத்தி இயங்க வேண்டும். இதனால், தாழ்வுமனப்பான்மை, பயம், இயலாமை என்று எந்த தடையை எதிர்க்கொள்ளும் மன தைரியம் உருவாகும் வாய்ப்பு ஏற்படும். கடந்த 3 1/2 மாதத்தில் மட்டும் 19 மாணவ்ர்கள் சென்னையில் தற்கொலை செய்திருக்கிறார்கள். அவர்களில் 12 பேர் படிப்பு சுமையால் இறந்தவர்கள். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடியில் கடந்த 5 ஆண்டுகளில் 8 பேர் தற்கொலை செய்துக்கொண்டனர். இது நீடிக்கும் நிலையில் தான் உள்ளது ஏனென்றால், இன்னமும் படிக்கவில்லை என்றால், மற்ற மாணவ்ர்கள் முன்னால் அவமானப்படக்கூடாதே.. பள்ளியில் நன்றாக படித்தவன் கல்லூரியில் சரியாக படிக்காமல் அரியர்ஸ் வைத்திருக்கிறானே என்று சமூக பேசுமே என்ற அச்ச உணர்வு வீணாகவே அவர்களை மனம் நோக செய்கிறது. இதற்கு, சமூகம் எந்த சிகிச்சையும் தருவதில்லை. மாறாக காயத்திற்கு இன்னும் வலியை தேடித்தருகிறது. இதற்கு தீர்வெல்லாம் கல்வி நிலையங்களிலேயே உள்ளது. அடிக்கடி மாணவர்களை கண்காணித்து, அவர்களின் நிலையை அவர்களுக்கே உணர்த்தி, வாழ்வில் லட்சியவாதியாக மாற்ற முயல வேண்டும். அதற்குதான் கல்வி நிலையங்கள். இனியும் காலந்தாழ்த்தாமல் கல்வி நிலையங்களும், அரசும், தகுந்த முடிவை வரும் கல்வியாண்டில் செயற்பாட்டிற்கு வருமளவு திட்டமிடவேண்டும்.......!
|