காஷ்மீரில், இந்திய எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், தீவிரவாதிகள் உதவியுடன் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த, ஐந்து இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், ஒரு வீரர் படுகாயமடைந்துள்ளார். இதையடுத்து, பாகிஸ்தான் தூதரக அதிகாரி, மன்சூர் அகமது கான், மத்திய வெளியுறவு அமைச்சக அலுவலகத்துக்கு நேரில் வரவழைக்கப்பட்டார். அவரிடம், வெளியுறவு அமைச்சக இணை செயலர், ருத்ரேந்திரா தாண்டன், பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு, கடும் கண்டனத்தை தெரிவித்தார். அடுத்த மாதம் இரு நாட்டு பிரதமர்களும், நியூயார்க்கில் நடக்கும், ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தின் போது, சந்தித்து பேசுவர் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த திடீர் தாக்குதல் அமைதி பேச்சை சீர்குலைக்கும் விதமாக அமைந்துள்ளது.
|