பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான மின்பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து விவாதிக்க, அந்நாட்டு மின்துறை அமைச்சர் முகமது ஆசீப்பை இந்தியாவுக்கு அனுப்ப உள்ளதாக பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறை காரணமாக கிராமப்புறங்களில் பதினைந்து மணிநேர மின்வெட்டு அமலில் உள்ளது. இந்த மின் பற்றாக்குறையை தீர்க்கும் பொருட்டு இந்தியாவிடமிருந்து 500 மெகா வாட் மின்சாரத்தை பாகிஸ்தான் கோரியுள்ளது. இதற்காக, பஞ்சாப் மாநிலத்திலிருந்து லாகூருக்கு மின் இணைப்பு சாதனங்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய - பாகிஸ்தான் வர்த்தக குழுவினர் கடந்த வாரம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்தனர். அப்போது நவாஸ் ஷெரீப் குறிப்பிடுகையில், பாகிஸ்தானின் மின் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து விவாதிக்க, மின் துறை அமைச்சர் முகமது ஆசீப்பை டில்லிக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தார். மேலும் மின் திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
|