LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 735 - அரணியல்

Next Kural >

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பல்குழுவும் - சங்கேத வயத்தான் மாறுபட்டுக் கூடும் பல கூட்டமும்; பாழ் செய்யும் உட்பகையும் - உடனுறையா நின்றே பாழாகச் செய்யும் உட்பகையும்; வேந்து அலைக்கும் கொல் குறும்பும் இல்லது நாடு - அளவு வந்தால் வேந்தனை அலைக்கும் கொல்வினைக் குறும்பரும் இல்லாததே நாடாவது. (சங்கேதம் - சாதி பற்றியும் கடவுள் பற்றியும் பலர்க்கு உளதாம் ஒருமை. உட்பகை - ஆறலைப்பார், கள்வர், குறளை கூறுவார் முதலிய மக்களும், பன்றி,புலி, கரடி முதலிய விலங்குகளும். 'உட்பகை, குறும்பு' என்பன ஆகுபெயர். இம்மூன்றும் அரசனாலும் வாழ்வாராலும் கடியப்பட்டு நடப்பதே நாடு என்பதாம்.)
மணக்குடவர் உரை:
பலபலவாய்த் திரளுந் திரட்சியும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தனை யலைக்கின்ற கொலைத் தொழிலினையுடைய குறும்பரும் இல்லாதது நாடு.
தேவநேயப் பாவாணர் உரை:
ஞா. தேவநேயப் பாவாணர் பல்குழுவும் - நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் பல்வேறு மாறுபாட்டுக் கூட்டங்களும்; பாழ்செய்யும் உட்பகையும் - அரசன் குடும்பத்துள்ளும் குடிகளுள்ளுமிருந்து நாட்டைப் பகைவர்க்குக் காட்டிக்கொடுத்துக் கேடுசெய்யும் அகப்பகைவரும்; வேந்து அலைக்கும் கொல் குறும்பும் - நாட்டிற்குள்ளிருந்து சமையம் வாய்க்கும் போதெல்லாம் போராலுங் கொள்ளையாலும் அரசனையும் குடிகளையுந் துன்புறுத்தும் அடங்காச் சிற்றரண் தலைவரும்; இல்லது நாடு - இல்லாததே (அமைதிக் கேற்ற) நல்ல நாடாவது. பல்குழுக்களாவன: அரச அரியணையேறற்குரிய பழவிறல்தாயம் பற்றிய பல்வேறு பிரிவினைக் கூட்டங்களும் குலவியலும் மதவியலும் பற்றிய பல்வேறு பகை வகுப்புக்களுமாம். உட்பகையாவார் தந்நலம் பற்றித் தாமாக நாட்டைக்காட்டிக் கொடுப்பாரும் பகைவராற்கீழறுக்கப்படுவாருமாம். குறும்பர் காட்டரணும் மலையரணுங்கொண்ட சிற்றரசர் போன்ற கொள்ளைத்தலைவர். குறும்பு - சிற்றரண். குறும்படைந்த வரண்கடந்து (புறம். 79) 'உட்பகை', 'குறும்பு' என்பன ஆகுபெயர். ஆறலைப்பார், கள்வர், குறளை கூறுவார் முதலிய மாந்தர் குடிகளைச் சேர்ந்த குற்றவாளிகளேயன்றி உட்பகைவராகார். மேலும், அவர் மாக்களே யன்றி மக்களுமாகார். பன்றி இறைச்சியும், புலி தோலும்,கரடி கம்பளியும், உதவுவதாலும்; அவையும் அவை போன்ற காட்டு விலங்குகளும், விலங்கினச்சாலைக்கும் (zoo) மறவட்டக் (Circus) காட்சிக்கும் விலங்குநூற்(Zoology) கல்விக்கும் பயன்படுவதாலும் அவற்றுள் யானை பல்வேறு வகையில் மாந்தனுக்குப் பணி செய்வதாலும்; காட்டுவிலங்குகள் மிக்க விடத்து அவற்றை வேட்டையாடிக் கொல்ல முடியுமாதலாலும்; அவற்றையெல்லாம் உட்பகையென்று கொள்வது பொருந்தாதென்றும், அவற்றினுங் கொடியவை சுரமண்டலம், நண்டுத்தெறுக்கால், நச்சுப்பாம்பு, கடந்தை (கதண்டு), வெறிநாய் முதலிய பிறவென்றும், அறிந்துகொள்க.
கலைஞர் உரை:
பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும், அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததே சிறந்த நாடாகும்.
சாலமன் பாப்பையா உரை:
சாதி, சமய, அரசியல், கருத்து முரண்பாடுகளால் வளரும் பல்வேறு குழுக்கள், கூட இருந்தே குழி பறிக்கும் சொந்தக் கட்சியினர், அரசை நெரக்கடிக்கு உள்ளாக்கும் சிறு கலகக்காரர்கள் (ரௌடிகள், தாதாக்கள், வட்டாரப் போக்கிரிகள்) ஆகியோர் இல்லாது இருப்பதே நாடு.
Translation
From factions free, and desolating civil strife, and band Of lurking murderers that king afflict, that is the 'land'.
Explanation
A kingdom is that which is without various (irregular) associations, destructive internal enemies, and murderous savages who (sometimes) harass the sovereign.
Transliteration
Palkuzhuvum Paazhseyyum Utpakaiyum Vendhalaikkum Kolkurumpum Illadhu Naatu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >