தமிழகத்தில் 2,323 ஊராட்சிகளில், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைக்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறபித்துள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு, தமிழகத்தில், உலக வங்கி நிதியுதவியுடன் புது வாழ்வு திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் சிறப்பான செயல்பாட்டை தொடர்ந்து, 2012 13ல், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் துவக்கப்பட்டது. தமிழகத்தில், ஊரகப் பகுதிகளை உள்ளடக்கிய, 31 மாவட்டங்களில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு, ஐந்து முதல், ஏழு ஆண்டுகளுக்கு, நீடித்த தன்மையுடைய, வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவது, இயக்கத்தின் நோக்கம். மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்ட மாவட்டங்களான, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் உள்ள, 2,323 ஊராட்சிகளில், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ஆய்வுகள் மூலம் ஏழை, மிகவும் ஏழை, நலிவடைந்த பிரிவினர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கண்டறியப்பட்டு, நிதியுதவி வழங்க, இச்சங்கங்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக ஊராட்சி ஒன்றுக்கு 10 லட்சம் வீதம் 232 கோடியே 30 லட்சம் நிதியை முதல்வர் ஒதுக்கி உள்ளார்.
|