ஒரு பெரிய பணக்காரரின் பங்களாவில் பல வேலைக்காரர்கள் இருந்தார்கள் . அதில் ஒருவனுக்குத் தோட்டத்தை கவனிக்கும்வேலை . நன்றாக மழை பெய்து கொண்டிருந்ததால் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் வேலையை செய்யாமல் உட்கார்ந்திருந்தான் . இதைக் கவனித்து விட்ட முதலாளி “ ஏன் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலையை நீ செய்யவில்லை ” என்றார் . “ மழை பெய்கிறதே அய்யா ” என்றான் அவன் . “ அதைப்பற்றி நீ யோசிக்கக் கூடாது . குடை பிடித்துக் கொண்டாவது தண்ணீர் ஊற்றும்வேலையைச் செய்ய வேண்டும் ” என்று கட்டளை இட்டார் அவர் . இப்படி அறிவின்மையும் குரூரத்தனமும் கொண்டவர்கள் பணியாளர்களை வாட்டி வதைப்பார்கள் .
பெருந்தலைவர் காமராசர் தன்னிடம் பணியாற்றிய பணியாளர்களைக் கூட தன்னைப்போல் பாவித்த பண்பாளர் . 1975 ஆம் வருடம் வடஆற்காடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் . இரவு 9-30 மணியிருக்கும் . ஆலங்காயம் என்ற சிற்றூர் . நிகழ்ச்சிக்காக காரில் சென்று கொண்டிருக்கிறார் தலைவர் . மணி என்பவர் காரை ஓட்டி வருகிறார் . ஆறுமுகம் , சிவசாமிபோல் இவர்களும் திறமைமிக்க டிரைவர்கள் . இவர்கள் வெறும் டிரைவர்கள் மட்டுமல்ல . தலைவரின் தாயாகவும் சகோதரியாகவும இருந்து கண்ணை இமை காப்பதுபோலக் காத்தவர்கள் .
அன்று தங்கும் விடுதியிலிருந்து புறப்பட்டதிலிருந்தே டிரைவர் மணியை பெருந்தலைவர் கவனித்துக்கொண்டே வந்தார் . இன்று இவன் வழக்கம்போல் இல்லை . ஏதோ மாறுதல் தெரிகிறது என்பதைக் கவனித்து அவர் காரை நிறுத்தப்பா என்றார் . பிறகு உனக்கு என்ன செய்கிறது என்று கேட்டார் . “ அய்யா ! வயிறு கோளாறு செய்கிறது . குமட்டிக்கொண்டு வருகிறது . ” என்ற டிரைவர் காரை விட்டு இறங்கிப்போய் குபீரென்று வாந்தி எடுத்தார் . பித்தக் கோளாறு அதிகமாக கண் விழிக்காதேன்னா கேட்கிறியா என்று செல்லமாகக் கடிந்துகொண்டார் தலைவர் . முகத்தைக் கழுவிக்கொள் . காற்றாட அப்படியே கொஞ்சநேரம் இரு . நிகழ்ச்சிக்குக் கொஞ்சம் தாமதமாகக்கூட போலாம் என்று கனிவாகச்சொன்னார் .
நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது தலைவருக்கு நிறைய ஆரஞ்சப் பழங்கள் கிடைத்திருந்தன . அவைகளை மணியிடம் கொடுத்து வேறு எதையும் சாப்பிடாதே . ஆரஞ்சுப் பழத்தை உரித்துச் சாப்பிட்டுவிட்டு நன்றாக ஓய்வு எடுத்துக்கொள் என்று கனிவோடு கூறினார் . இப்படி பணியாளரையும் மதிக்கும் பண்பு மிக்கவர் பெருந்தலைவர் . ஏழைகளை மதிப்பவர்களே இறைவனால் மதிக்கப் படுகிறார்கள் .