சிலைநுதல் கணைவிழித் தெரிவையர் உளம்என ஆழ்ந்தகன் றிருண்ட சிறைநீர்க் கயத்துள் எரிவிரிந் தன்ன பல்தனத் தாமரை நெடுமயல் போர்த்த உடல்ஒரு வேற்கு குருமணி கொழிக்கும் புனல்மலைக் கோட்டுழி (5)
நின்பதி மறைந்த நெட்டிர வகத்துள் குருகும் புள்ளும் அருகணி சூழ தேனொடும் வண்டொடும் திருவொடும் கெழுமி பெருந்துயில் இன்பம் பொருந்துபு நடுநாள் காணூம்நின் கனவுள் நம் கவர்மனத் தவரைக் (10)
கொய்யுளைக் கடுமான் கொளுவிய தேரொடு பூவுதிர் கானல் புறம்கண் டனன்என சிறிதொரு வாய்மை உதவினை அன்றேல் சேகரம் கிழித்த நிறைமதி உடலம் கலை கலை சிந்திய காட்சியது என்ன (15)
கடுமான் கீழ்ந்த கடமலைப் பல்மருப்பு எடுத்தெடுத் துந்தி மணிக்குலம் சிதறி கிளைஞர்கள் நச்சாப் பொருளினர் போல சாதகம் வெறுப்ப சரிந்தகழ்ந் தார்த்து திரள்பளிங் குடைத்துச் சிதறுவ தென்ன (20)
வழியெதிர் கிடந்த உலமுடன் தாக்கி வேங்கையும் பொன்னும் ஓருழித் திரட்டி வரையர மகளிர்க்கு அணியணி கொடுத்து; பனைக்கைக் கடமா எருத்துறு பூழி வண்டெழுந் தார்ப்ப மணி எடுத்து அலம்பி (25)
மயில்சிறை ஆற்ற வலிமுகம் பனிப்ப எதிர்சுனைக் குவளை மலர்ப்புறம் பறித்து வரையுடன் நிறைய மாலையிட் டாங்கு நெடுமுடி அருவி அகிலொடு கொழிக்கும் கயிலைவீற் றிருந்த கண்ணுதல் விண்ணவள் (30)
நாடகக் கடவுள் கூடல் நாயகன் தாமரை உடைத்த காமர் சேவடி நிறைவுளம் தரித்தவர் போல குறைவுளம் நீங்கி இன்பா குவனே. (34)
|