பெருநிலத் தேவர்கள் மறைநீர் உகுப்ப மற்றவர் மகத்துள் வளர்அவி மாந்த விடையோன் அருச்சனைக்கு உரிமையன் முன்னவன் அன்னவன் தன்னுடன் கடிகைஏழ் அமர அன்றியும் இமையவர் கண்எனக் காட்ட (5)
ஆயிரம் பணாடவி அரவுகடு வாங்க தேவருண மருந்துடல் நீடநின் றுதவ உடல்முனி செருவினர் உடல்வழி நடப்ப நாரணன் முதலாம் தேவர்படை தோற்ற தண்மதிக் கலைகள் தானற ஒடுங்க (10)
எறிந்தெழும் அரக்கர் ஏனையர் மடிய மறையவன் குண்டம் முறைமுறை வாய்ப்ப அவன்தரும் உலகத்து அருந்தொழில் ஓங்க பாசுடல் உளைமா ஏழணி பெற்ற ஒருகால் தேர்நிறைந்து இருள்உடைத்து எழுந்த (15)
செங்கதிர் விரித்தசெந் திருமலர்த் தாமரைப் பெருந்தேன் அருந்திஎப் பேர்இசை அனைத்தினும் முதல்இசைச் செவ்வழி விதிபெறப் பாடிஅத் தாதுடல் துதைந்தமென் தழைச்சிறை வண்டினம் பசுந்தாள் புல்இதழ்க் கருந்தாள் ஆம்பல் (20)
சிறிதுஉவா மதுவமும் குறைபெற அருந்தி அப் பாசடைக்கு உலகவர் பயிலாத் தாரியை மருளொடு குறிக்கும் புனல்அணி ஊர! தானவர்க்கு உடைந்து வானவர் இரப்ப உழல்தேர் பத்தினன் மகவுஎன நாறி (25)
முனிதழற் செல்வம் முற்றிப் பழங்கல் பெண்வரச் சனகன் மிதிலையில் கொடுமரம் இறுத்து அவன் மகட்புணர்ந்து எரிமழு இராமன் வில்கவர்ந்து அன்னைவினை உள்வைத்து ஏவ துணையும் இளவலும் தொடரக் கான்படர்ந்து (30)
மாகுகன் நதிவிட ஊக்கி வனத்துக் கராதி மாரீசன் கவந்தனுயிர் மடித்து இருசிறைக் கழுகினர்க்கு உலந்தகடன் கழித்து எறிவளி மகனைநட் டேழு மரத்தினுக்கு அரிக்கு கருங்கடற்கு ஒரோஒரு கணைவிடுத்து (35)
அக்கடல் வயிறுஅடைத்து அரக்கனுயிர் வௌவி இலங்கைஅவ் அரக்கற்கு இளையோன் பெறுகஎனத் தமதூர் புகுந்து முடிசுமந் தோர்க்கும் நான்முகத் தவர்க்கும் இருபால் பகுத்த ஒருநுதல் கண்ணவன் உறைதரு கூடல் (40)
தெளிவேற் கண்குறுந் தொடியினர் காணின் நின்பால் அளியமும் நீங்கி இன்பும்இன்று ஒழிக்கும்எம் கால்தொடல் சென்மே. (43)
|