திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி பிரிந்தவரின் பின் செல்கின்றாய் பேதை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது) என் நெஞ்சு - என் நெஞ்சே; அவர் பிரிந்து நல்கார் என்று - அவர் இவ்வாற்றாமையை அறியாமையின் நொந்து வந்து தலையளி செய்யாராயினார் என்று கருதி; பிரிந்தவர்பின் ஏங்கிச் செல்வாய் பேதை- அறிவித்தற் பொருட்டு நம்மைப் பிரிந்து போயவர்பின் ஏங்கிச் செல்லலுற்ற நீ யாதும் அறியாய் (ஆற்றாமை கண்டு வைத்தும் நல்காது போயினாரைக் காணா வழிச்சென்று அறிவித்த துணையானே நல்க வருவர் என்று கருதினமையின் 'பேதை' என்றாள்.)
மணக்குடவர் உரை:
என்னெஞ்சே! நீ வருத்தமுற்று அவர் அருளுகின்றிலரென்று இரங்கி நம்மைவிட்டுப்போனவர் பின்னே போகாநின்றாய், பேதையா யிருந்தாய். இது தலைமகள் தலைமகனிருந்த தேயத்தை நினைத்துக்கவன்ற நெஞ்சிற்குச் சொல்லியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(இதுவுமது) என் நெஞ்சு- என் உள்ளமே! அவர் பிரிந்து நல்கார் என்று- அவர் இவ்வாற்றாமையை அறியாமையின் இரங்கி வந்து இன்பந் தரார் என்று கருதி, பிரிந்தவர் பின் ஏங்கிச் செல்வாய்- அதை அறிவித்தற்பொருட்டு நம்மைவிட்டுப் பிரிந்துபோனவர்பின் ஏக்கங்கொண்டு செல்கின்றாய்; பேதை நீ என்ன பேதையாயிருக்கின்றாய்! ஆற்றாமையைக் கண்ணாரக் கண்டும் இரங்காது பிரிந்துபோனவர் இதைச் சென்றறிவித்தவுடன் திரும்பி வந்து இன்பந்தருவாரென்று கருதினமையின், 'பேதை' என்றாள்.
கலைஞர் உரை:
நம்மீது இரக்கமின்றிப் பிரிந்து விட்டாரேயென்று ஏங்கிடும் அதே வேளையில் பிரிந்தவர் பின்னாலேயே சென்று கொண்டிருக்கும் என் நெஞ்சம் ஓர் அறிவற்ற பேதை போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
என் நெஞ்சே! நம் பிரிவுத் துன்பத்தை அவர் அறியார். அதனால் வருந்தி அவர் நம்மீது அன்பு காட்டாமல் இருக்கின்றார் என்று எண்ணி, நம் நிலையை அவர்க்குக் கூறுவதற்காக, அவர் பின்னே ஏங்கிச் செல்லும் நீ ஏதும் அறியாத பேதையே!.
Translation
Thou art befooled, my heart, thou followest him who flees from thee;
And still thou yearning criest: 'He will nor pity show nor love to me.'.
Explanation
You are a fool, O my soul! to go after my departed one, while you mourn that he is not kind enough to favour you.