பராசக்தி குழந்தை
அன்றிரவு உமா குழந்தையின் நினைவாகவே இருந்தாள். தூக்கத்தில் சாருவைப் பற்றித்தான் கனவு. மறுநாள் பொழுது விடிந்த பிறகும் அந்த ஞாபகம் மாறவில்லை. இப்படிப்பட்ட குழந்தையைப் பெற்ற பாக்கியசாலிகள் யாரோ என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தாள். 'வக்கீலை விசாரிக்கச் சொன்னோமே, அவர் விசாரித்தாரோ என்னமோ தெரியவில்லையே?' என்று யோசித்தாள். காலை ஒன்பது மணி வரையில் தகவல் ஒன்றும் வராமல் போகவே, டெலிபோனை எடுத்து வக்கீலைக் கூப்பிட்டாள்.
வக்கீல், "யாரு? - ஓஹோ! நீங்களா? - நமஸ்காரம்" என்றார்.
"நேற்று ராத்திரி டான்ஸு பண்ணின குழந்தையைப் பற்றி விசாரிக்கச் சொன்னேனே, விசாரிச்சீர்களா?" என்று உமா கேட்டாள்.
"நீங்கள் ஒரு காரியம் சொன்னால் அதை நான் செய்யாமல் இருப்பேனா?" என்றார் வக்கீல்.
"அப்படின்னா ஏன் உடனே தெரிவிக்கலை?" என்றாள் உமா.
"இல்லை; வந்து... விஷயம் அவ்வளவு அவசரமாகத் தோணலை. அதனாலேதான் மத்தியானம் வந்து நேரில் தெரியப்படுத்தலாம் என்றிருந்தேன்."
"போகட்டும்; இப்பத்தான் சொல்லுங்கள்."
வக்கீல் தொண்டையைக் கனைக்கும் சத்தம் கேட்டது.
"என்ன ஸார்! ஆர்ப்பாட்டம் பலமாயிருக்கே. இதுவும் கேஸ் விசாரணையா என்ன? நிஜத்தைச் சொல்றதுக்கு இவ்வளவு யோசனை என்னத்திற்கு?"
"யோசனை ஒண்ணுமில்லை - வந்து பழம் நழுவிப் பாலிலே விழுந்ததுன்னு கேட்டிருக்கிறீர்களோல்லியோ?..."
"அதுக்கென்ன இப்போ வந்தது?"
"அந்த மாதிரி - நேற்று ராத்திரி நீங்க போனவுடனே தியேட்டரிலேயே விசாரிச்சுட்டேன். விசாரிச்சதிலே, ஒரு கல்லிலே இரண்டு பழம் விழுந்தாப்பலே ஆச்சு."
"விஷயத்தைச் சொல்லுங்கோ, ஸார்!"
"அதுதானே சொல்லிண்டிருக்கேன். நீங்க முன்னே சம்பு சாஸ்திரின்னு ஒருத்தரைப் பத்தி விசாரிக்கச் சொன்னீர்களோ, இல்லையோ?"
"ஆமாம்?" என்று உமா சொன்னபோது அவள் குரல் கொஞ்சம் நடுங்கிற்று.
"குழந்தையைப் பற்றி விசாரிச்சதிலே சம்பு சாஸ்திரியையும் கண்டுபிடிச்சுட்டேன். இந்தக் குழந்தை சாவடிக் குப்பத்திலே சம்பு சாஸ்திரிங்கறவர் வீட்டிலேதான் இருக்காளாம். அவர் தான் கார்டியனாம். வேறே தாயார் தகப்பனார் கிடையாதாம்."
"என்ன, என்ன! வக்கீல் ஸார்! நிஜமாவா சொல்றேள்?"
"நிஜமாத்தான் சொல்றேள். அந்த சம்பு சாஸ்திரிங்கறவரைக் கூடப் பார்த்தேன். நல்ல ஒண்ணாம் நம்பர் மடிசஞ்சிப் பிராமணன்!"
உமா தன் வாய்க்குள், "இடியட்!" என்று அழுத்தந்திருத்தமாய்ச் சொல்லிக் கொண்டாள். அது அந்த மனுஷர் காதில் விழுந்ததோ என்னவோ தெரியாது. உடனே அவள் உரத்த குரலில், "இந்த சமாசாரத்தை நேத்து ராத்திரிலேயிருந்து சொல்லாமலா வச்சிண்டிருந்தேள்? ரொம்ப பேஷ்! அவர் எங்கே இருக்கார்னு சொன்னேள்?" என்று கேட்டாள்.
"சாவடிக் குப்பத்திலே..."
உமா, டக்கென்று டெலிபோன் ரிஸீவரை வைத்துவிட்டு விரைவாகக் கீழே இறங்கினாள். "டிரைவர்! டிரைவர்! வண்டியை எடு ஜல்தி!" என்றாள். வண்டி வந்ததும், "சாவடிக் குப்பத்துக்குப் போ! சீக்கிரம்!" என்றாள்.
டிரைவர் சிறிது தயங்கி "சாவடிக் குப்பம் எங்கேயிருக்குங்க?" என்று கேட்டான்.
|