LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki )- தியாக பூமி

நான்காம் பாகம் - இளவேனில் - மங்களத்தின் மரணம்

                                மங்களத்தின் மரணம்

சம்பு சாஸ்திரி நெடுங்கரையை அடைந்ததும், தீக்ஷிதர் மங்களத்தைப் பற்றிச் சொன்னது உண்மைதானென்று அறிந்தார். அப்போது, பகவானுடைய கருணையின் ஒரு முக்கியமான அம்சம் அவருக்குப் புலப்பட்டது. இந்த உலகத்தில் சம்பு சாஸ்திரி யாராவது ஒரு மனிதரை வெறுத்தார், தம்முடைய சத்துருவாகக் கருதினார் என்றால், அந்த மனிதர் சங்கர தீக்ஷிதர்தான். அப்பேர்ப்பட்ட சங்கர தீக்ஷிதர் மூலமாக ஈசன் தம்மை மங்களத்தின் மரணத்தறுவாயில் அவளிடம் கொண்டு சேர்த்ததை நினைத்து நினைத்துச் சாஸ்திரி மனம் உருகினார். இந்த ஓர் உதவி செய்ததன் பொருட்டு, தீக்ஷிதர் தமக்கு ஏற்கெனவே செய்துள்ள அபசாரங்களையெல்லாம் அவர் மன்னித்துவிடவும், அவரிடம் நன்றி பாராட்டவும் தயாராயிருந்தார். ஆறு ஏழு வருஷமாக மங்களத்தைத் தாம் கை விட்டுவிட்டு இருந்ததே பிசகு. ஐயோ! இந்தச் சமயத்திலாவது தாம் வந்திராவிட்டால், அவள் கதி என்ன ஆகியிருக்கும்? தமக்குத்தான் அப்புறம் அடுத்த ஜன்மத்திலாவது மனச்சாந்தி உண்டாக முடியுமா?

     தாம் பட்டணத்துக்குப் போன பிறகு மங்களத்தின் வாழ்க்கை எப்படி நடந்தது என்பதைப் பற்றி அவளே சொல்லிச் சாஸ்திரி தெரிந்து கொண்டார். சாஸ்திரியின் வாழ்க்கை எவ்வளவு விசேஷ சம்பவங்கள் நிறைந்ததோ, அவ்வளவு மங்களத்தின் வாழ்க்கை விசேஷமற்றதாயிருந்தது. நாலைந்து மாதத்துக்கெல்லாம் அவள் தன் தாயாருடனும் செவிட்டு வைத்தியுடனும் நெடுங்கரைக்குத் திரும்பி வந்தாள். அப்போதிருந்து நெடுங்கரையில் தான் வசித்தாள். தான் இல்லாதபோது சாவித்திரி பூரண கர்ப்பவதியாய் நெடுங்கரைக்கு வந்து வீடு பூட்டியிருப்பதைப் பார்த்துவிட்டுத் திரும்பிய செய்தியை ஊரார் சொல்லத் தெரிந்து கொண்டபோது அவள் மனம் ரொம்பவும் புண்பட்டது. சாஸ்திரியிடமிருந்தும் கடிதம் ஒன்றும் வராமல் போகவே, தானும் தன் தாயாருமாகச் சேர்ந்து செய்த சதியை அவர் தெரிந்து கொண்டு தான் அடியோடு தன்னை வெறுத்து விட்டார் என்று மங்களம் எண்ணத் தொடங்கினாள். அது முதலே, மங்களத்துக்கும் அவள் தாயாருக்கும் ஒத்துக் கொள்ளாமல் போயிற்று. "பாவி! பழிகாரி! நீதானே அவரை ஊரைவிட்டு விரட்டினாய்!" என்று மங்களம் அடிக்கடி அம்மாவை வைவதும், "நன்றியற்ற நாயே! எல்லாம் உனக்காகத்தானேடி செய்தேன்?" என்று அம்மா திருப்பி வைவதும் நாளுக்கு நாள் அதிகமாயிற்று. இந்த மாதிரி சண்டையினால், சொர்ணம்மாள் சில சமயம் மங்களத்தினிடம் கோபித்துக் கொண்டு ஊரைப் பார்க்கப் போய்விடுவதும் உண்டு. அந்த மாதிரியே இந்தச் சமயமும் அவள் கோபித்துக் கொண்டு ஊருக்குப் போயிருந்தாள். செவிட்டு வைத்தி மட்டுந்தான் அக்காவுக்குத் துணையாயிருந்தான்.

     சாவித்திரி நெடுங்கரைக்கு வந்து வீடு பூட்டியிருப்பதைப் பார்த்துவிட்டுத் திரும்பினாள் என்னும் செய்தி சம்பு சாஸ்திரியைக் கதிகலங்கச் செய்தது. ஆனாலும், சாவித்திரியைப் பற்றி நினைக்க இப்போது தருணமில்லை என்பதை அவர் உணர்ந்திருந்தார். படுத்த படுக்கையாய்க் கிடக்கும் மங்களத்தைப் பராமரிப்பதுதான் இப்போது தம்முடைய முதன்மையான கடமை என்று கருதி, அந்தக் கடமையில் பூரணமாய் ஈடுபட்டார்.

     மங்களம் சென்ற இரண்டு வருஷ காலமாக மிகக் கொடிய தலைவலியினால் அடிக்கடி பீடிக்கப்பட்டு வந்தாள். அதற்குச் செய்து கொண்ட நாட்டு வைத்தியங்கள் ஒன்றும் பிரயோஜனப்படவில்லை. தான் செய்த கர்மத்தினால் தான் இந்த வியாதி தன்னைப் பீடித்திருக்கிறது என்று அவள் நம்பியபடியால், வைத்தியம் சாதாரணமாய்ப் பலிக்கக்கூடிய அளவுகூடப் பலிக்கவில்லை. இப்போது தலைவலியுடன் சுரமும் சேர்ந்து அவளைப் பீடித்திருந்தது. ரொம்பவும் துர்பலமாயுமிருந்தாள்.

     அந்த நிலைமையில் தன் கணவர் வந்து சேர்ந்தது அவளுக்கு எவ்வளவோ சந்தோஷம் அளித்தது. சாஸ்திரியும் மிகவும் சிரத்தையுடன் அவளுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்தார். ஆனால், இதனாலெல்லாம் அவளுடைய வியாதி குணப்படவில்லை; அதிகமே ஆயிற்று.

     "சாகிறதற்கு முன்னால் அவரை ஒரு தடவை பார்க்கும்படி கிருபை செய்யவேணும், ஸ்வாமி!" என்று மங்களம் பகவானை அடிக்கடி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள். அந்தப் பிரார்த்தனைக்குப் பகவான் மனமிரங்கித்தான் இப்போது சாஸ்திரியைக் கொண்டு வந்து சேர்ந்ததாக அவள் நினைத்தாள். ஆகவே, இனிமேல் தான் பிழைக்கப் போவதில்லையென்றும், சீக்கிரம் மரணம் நேர்ந்துவிடும் என்றும் அவளுக்கு நம்பிக்கை உண்டாயிற்று.

     சம்பு சாஸ்திரி வந்ததிலிருந்து அவளுடைய அலட்டலும் அதிகமாயிற்று. ஓயாமல் தான் சாவித்திரிக்குச் செய்த கெடுதலைச் சொல்லிச் சொல்லிப் புலம்பினாள். அப்போதெல்லாம் சாஸ்திரி அவளுக்குக் கூடியவரையில் சமாதானம் சொல்ல முயன்றார்.

by C.Malarvizhi   on 01 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.