LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki )- தியாக பூமி

நான்காம் பாகம் - இளவேனில் - புனர் ஜன்மம்

                                       புனர் ஜன்மம்

 அன்று சாயங்காலம் சாரு சாவடிக் குப்பத்துக்குத் திரும்பியபோது குதித்துக் கொண்டு வீட்டுக்குள் போனாள். "தாத்தா! தாத்தா! இன்னிக்கு ஒரு சமாசாரம் நடந்தது; உனக்கு அதைச் சொல்லவே மாட்டேன்" என்றாள்.

     "நீ சொல்லாமே போனா, நானும் கேட்கவே மாட்டேன்" என்றார் சாஸ்திரி.

     "நீ கேக்கா போனா, நான் அழுவேன்" என்றான் சாரு.

     அவரது மடியில் உட்கார்ந்து கொண்டு, "தாத்தா! இன்னிக்கு ஒரு மாமியைப் பார்த்தோம். ரொம்ப ரொம்ப நல்ல மாமி" என்று சொல்லிவிட்டு, சற்று மெதுவான குரலில், "அந்த மாமி வந்து என்னைக் கட்டிண்டு முத்தமிட்டா, தாத்தா!" என்றாள்.

     "அந்த மாமி யார், சாரு? அவள் பேர் என்ன?" என்று சாஸ்திரி கேட்டார்.

     "அவ ரொம்பப் பணக்கார மாமி தாத்தா! பணக்காரா நல்லவாளா இருக்க மாட்டான்னு நீ சொல்லுவயோன்னோ? அது சுத்தப் பொய்!" 

     "நான் அப்படி எங்கேயம்மா சொல்லியிருக்கேன்? நல்ல மனுஷாளைக் கூடப் பணம் கெடுத்துடும்னுதானே சொன்னேன்? அதனாலே, பணக்காரா எல்லாம் கெட்டவான்னு அர்த்தமா!"

     "அதென்னமோ, நாங்க இன்னிக்குப் பார்த்த மாமி ரொம்ப நல்ல மாமி. எங்க கிட்ட இருந்த டிக்கெட் அவ்வளவையும் வாங்கிண்டு, 'அலையாமே வீட்டுக்குப் போங்கோ' அப்படின்னா, தாத்தா! முப்பது ரூபாய் டிக்கெட், தாத்தா!"

     "யாரம்மா, அவ்வளவு தாராள மனஸுடையவாள் இந்த ஊரிலே? அவ பேரென்ன?"

     "அவ பேரு ஸ்ரீமதி உமாராணியாம்."

     இந்தப் பெயர் சம்பு சாஸ்திரி காதிலும் விழுந்திருந்தது. ஒரு தர்மத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்த பெண்மணியின் பெயர் காதில் படாமல் இருக்க முடியுமா?

     "ஓஹோ! சரிதான்; அந்த அம்மா பம்பாயிலிருந்து வந்திருக்கிறவள். அதனாலே தான் அவ்வளவு தாராளம். இந்த ஊரிலே அந்த மாதிரி யார் இருக்கா? அவ்வளவு பணந்தான் யாரிடத்திலே இருக்கு" என்றார்.

     பிறகு, சாரு அன்று நடந்ததெல்லாம் விவரமாகச் சொன்னாள். அவள் கூறியதில் சாஸ்திரியின் மனத்தில் நன்கு பதிந்த விஷயம், உமாராணி குழந்தையை அணைத்து முத்தமிட்டது தான். குழந்தை அதைத் திருப்பித் திருப்பிச் சொல்லிச் சந்தோஷப்பட்டாள். 'ஐயோ! இந்தக் குழந்தை, அம்மாவுக்காக எப்படி ஏங்கிப் போயிருக்கிறது?' என்று சாஸ்திரி எண்ணினார். ஒரு வேளை தான் செய்ததெல்லாம் தவறோ? தான் இந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தது பிசகோ? உடனே போலீஸிலே கொண்டுபோய்க் கொடுத்து அதன் தாயாரைக் கண்டு பிடித்துச் சேர்க்கும்படி சொல்லியிருக்க வேண்டுமோ?

     இந்தக் குழந்தையின் காரணமாகத் தம்முடைய வாழ்க்கையிலே ஏற்பட்ட மாறுதலைச் சாஸ்திரி எண்ணிப் பார்த்தார். தேச யாத்திரை செய்ய வேண்டும், ஊர் ஊராய்ப் போய் இந்தப் புண்ணிய பூமியிலுள்ள க்ஷேத்திரங்களையெல்லாம் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஒரு காலத்தில் அவர் உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்தது. அந்த ஆசை நிறைவேறும் என்று தோன்றிய சமயத்தில், இந்தக் குழந்தையைப் பராசக்தி அளித்தாள். அதன் காரணமாக அவர் சாவடிக் குப்பத்திற்கு வரவும் இங்கேயே தங்கவும் நேர்ந்தது.

     இது மட்டுமா? இந்தக் குழந்தை காரணமாகவே, அவர் நெடுங்கரையையும், கல்கத்தாவையும் அடியோடு மறந்திருந்தார். சாவித்திரி குழந்தையாயிருந்த போது அவளை வளர்ப்பதற்கென்று மங்களத்தைக் கல்யாணம் செய்து கொண்டதும், பிறகு, 'ஐயோ! எப்படிப்பட்ட தவறு செய்தோம்?' என்று பல முறை வருந்தியதும் அவர் ஞாபகத்தை விட்டு அகல முடியாதல்லவா? எனவே, இந்தக் குழந்தையை அந்தக் கதிக்கு ஆளாக்கக் கூடாதென்று தீர்மானித்திருந்தார். 'வேண்டாம்; மங்களமும் அவள் தாயாரும் சௌக்கியமாயிருக்கட்டும். நாம் இல்லை என்பதற்காக அவர்கள் ஒன்றும் உருகிப் போக மாட்டார்கள். நல்ல வேளையாய், அவர்கள் நிராதரவாக இல்லை; சாப்பாட்டுக்குத் துணிக்குப் பஞ்சமில்லாமல் வைத்திருக்கிறோம். எப்படியாவது அவர்கள் சௌக்கியமாயிருக்கட்டும்.'

by C.Malarvizhi   on 01 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.